Thursday, July 17, 2014

நாத்திகம், பகுத்தறிவு பேசாமல் சமூக நீதி சாத்தியமாகுமா?

சில வாரங்களாகவே முகநூலெங்கும் தோழர்கள் குறிப்பாக திமுக உடன்பிறப்புகள் உட் கட்சி மோதலோ என்னவோ என்று நினைக்கும் அளவுக்கு நாத்திகம், பகுத்தறிவு,சமத்துவம், சமூக நீதி என்ற தளத்தில் தொடர்ச்சியாக ஒரு விவாதத்தில் ஈடுபட்டுக் கொள்ளுகின்றனர்.
இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. அடிப்படை சமூக நீதிகள் மறுக்கப்பட்டு அதற்கெதிராக கிளர்ந்தெழுந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமான நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக திராவிடர் கழகமும், கேட்கும் இடத்தில் இல்லாமல் சமூக நீதியை கொடுக்கும் இடத்தில் இருந்தால் தான் எதுவும் எளிதில் சாத்தியமாகும் என்ற அண்ணாவின் ஏற்பாட்டுக்கு இணங்க ஆரம்பிக்கப் பட்ட திமுக என்று இது ஒரு சமூக நீதிக்கான தொடர்ச்சி மட்டுமே.
சமூக நீதி சமத்துவம் எல்லாம் ஏன் மறுக்கப் பட்டன ? அவற்றுக்கான தீர்வு என்ன என்று தேடித்தேடி தேய்ந்த சமூக சமத்துவ முன்னோர்களான டி.எம்.நாயர், பி.டி தியாகராயர், முனுசாமி நாயுடு, போன்றவர்களும் அவர்களின் தொடர்ச்சியான தந்தை பெரியாரும் வளர்த்தெடுத்த தத்துவார்த்தமான சிந்தனைகளே திராவிடச் சிந்தனைகளானது. பின்னர் திராவிடர் கழகமான பின் தேர்தல் அரசியலில் இருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்ட தி.க சமத்துவம் சமூக நீதி ஆகியவற்றை வெல்ல வேண்டுமானால் முதலில் இவற்றுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் சாதிய கட்டுப் பாடுகளையும் அதை மிகக் கவனமான ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து மனு தர்ம ஆட்சியை நிலை நாட்டும் பார்ப்பனீயத்தையும் ஒழிப்பதே ஆகும் என்றனர். இதே கொள்கைகளை சமூக நீதியை கொள்கை அளவில் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதை ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே அடிமக்களுக்கும் படிப்பறிவு என்ற ஒற்றைக் காரணத்தாலே மட்டுமே பெரியாரால் காமராஜ் கொண்டாடப் பட்டார்.
கருத்து வேறுபாடுகளால் பிரிந்தாலும் , சமத்துவம் சமூகநீதிக் கொள்கை அளவில் ஒன்றாகவே இருந்த திமுக ஆட்சிக்கு வந்ததும் அண்ணா திராவிடக் கொள்கைகளையே ஆட்சி அதிகாரங்களில் செயல் படுத்தினார். அதன் நீட்சியாக வந்த கருணாநிதியும் பெரியார் அண்ணா வழியில் நின்றே அதனை செயல்படுத்த முனைந்தார்.
"சாதி மதப் பித்து என்னும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் எனும் ஞாயிறு பிறக்கும் " என்ற கலைஞரின் தொண்டர்களான நாம் இன்றும் அதனை கடைபிடிக்கிறோமா?
எனக்கென்னவோ இல்லை என்றே தோன்றுகிறது.
சமூக நீதி கிடைக்காமல் போனதன் அடிப்படையே சாதியும் மதமும்தான் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது அந்த சாதியும் மதமும் இன்றும் கட்டிக் காக்கப் படுவது கடவுளின் பெயரால் சமத்துவமாக இல்லாத சாமிகளால் என்ன சமூக நீதியை படைத்துவிட முடியும் ?, இந்த சாமிகளின் பெயரால் சாதிகளையும் அதன் வழிபாட்டு நெறிகளையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனீயம் என்று இது ஒரு விஷ வலைப் பின்னல். 
சமூக நீதியை நிலை நாட்டவே திமுக, பகுத்தறிவு பேச்சால் மட்டுமே தன்னை வளர்த்துக் கொண்ட ஒரு இயக்கம் அதற்க்காக போராடியே ஆட்சியை அடைந்த கழகம்,

//என் உடல் நிலைமை மிக மோசமாகி விட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம். இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்.காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக் கட்டாததால் சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவைகளைச் சிந்தித்தால் தெரிய வரும்.
ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சிவரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளை சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. // பெரியார் -1972 விடுதலை மலரில்.
ஆக சமூக மாற்றங்களுக்காகவும் சமத்துவ நீதிக்காகவும் உண்டான ஒரு இயக்கத்தின் தொண்டர்கள் நாத்திகம் பேசுவதையும் சாதி மத வேறுபாடுகளை பேசுவதையும் ஊக்குவிக்கத்தான் வேண்டுமே ஒழிய இவற்றால் நாம் ஓட்டு வங்கியை இழக்கிறோம் என்பதோ இல்லை இதனால் ஆட்சியை இழக்கிறோம் என்பதோ அறிவானதல்ல.
யாருக்கும் சுயமரியாதை கிடைக்க பாடுபடுவதே திமுகவின் அடிப்படைக் கொள்கை என்பதை உணரவேண்டுமே ஒழிய பகுத்தறிவு பேசாதே என்பது அல்ல. நாத்திகமும் பகுத்தறிவும் பேசாமல் எந்த நீதியும் சாதியின் கட்டுப்பாட்டால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் சாத்தியம் இல்லை. 
நாத்திகம் பேசாதே என்பதை விட கடவுள் நம்பிக்கை உள்ள திமுக ஆத்திகவாதிகள் ஏன் கலைஞரின் அணைவருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்காகவும், கருவறை நுழைவுக்கான உரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்க்காகவும், ஆத்திகவாதிகளால் மக்களை மூட நம்பிக்கைக்களுக்குள் தள்ளப் படும் கொடுமைகளைப் பற்றியும் பேசக் கூடாது? பகுத்தறிவை பேச நாத்திகவாதியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாத்திகம் பேச கடும் பகுத்தறிவு வாதம் தேவைப் படுகிறது.
தேர்தல் அரசியலை மீறி அதில் அடையும் வெற்றி தோல்விகளை தாண்டி திமுக என்னும் கட்சியை அதன் கொள்கைகள் மட்டுமே இந்திய அளவில் மாறுபடுத்துகின்றது. அது நாத்திகமா பகுத்தறிவா என்பதெல்லாம் அவர் அவர் சிக்கல். ஆனால் நாத்திகமும் பகுத்தறிவும் பேசாமல் , சமத்துவம் சமூக நீதிக்கான பெண்ணுரிமைக்கான எந்தக் கல்லையும் புரட்டிவிட முடியாது. அடிப்படைத் தத்துவங்கள் இல்லாமல் போனால் திமுக ஒரு அதிமுகவாக ஆகிவிடும் அபாயம் இருப்பதை உணர வேண்டும். அதை விட பாஜக கொள்கைகளே மேல்.
அதற்க்காக சிலை உடைப்பு போராட்டம் நடத்த வேண்டாம், அந்த சிலைகளை வழிபடும், அர்ச்சிக்கும் உரிமைகளை பேசுவோம்.


No comments: