Monday, December 07, 2009

முதல்வருக்கு கோவணாண்டி உசுப்பல் கேள்வி...


தமிழகத்தின் தன்னிகரற்ற ஒரே தலைவர், நிரந்தர அரசியல் சாணக்கியர், தமிழக முதல்வர், கலைஞரய்யாவுக்கு... மறுபடியும் வணக்கம் போடுறான், இந்த கோவணாண்டி!

'என்னடா இவன், போன தடவைதான் சுத்திச்சுத்தி அடிச்சான். மறுபடியும் நம்மளையே சுத்தறானேனு கோவப்படாதீங்க. அதுக்கான அவசியத்தை உண்டாக்கினதே நீங்கதான். எங்க கோவணாண்டிக பாஷையில சொல்றதுனா... 'வினையை விதைச்சவன் வினையை அறுக்கணும், தினையை விதைச்சவன் தினையை அறுக்கணும்'.

'எங்க பொழப்பு பொசுங்கப் போகுது, காப்பாத்துங்க... காப்பாத்துங்க'னு ஆரம்பத்துல இருந்தே கதறுனோம். அப்பயெல்லாம் கண்டுக்காம இருந்துட்டு, கடைசியில கருமாதிக்கு வந்து மவுனமா அழுகுற கதையா... 'கேரள முதல்வர் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை'னு முல்லை-பெரியாறு விஷயத்துல அற்புதமா ஒரு அறிக்கை விட்டிருக்கீங்க பாருங்க... அங்கதாங்கய்யா... நீங்க நிக்கறீங்க... அடச்சே, உக்கார்ந்திருக்கீங்க (என்ன சரியா?).


'அணையோட நீர்மட்டத்தை உயர்த்தச் சொல்லி, உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், அதை நிறைவேற்றாம... சட்டசபையைக் கூட்டி ஒரு சட்டத்தைப் போட்டிருக்கார் கேரள முதல்வர்'ங்கறதுதானே அவரோட தைரியம்னு நீங்க சொல்றது?

அவரும் ஒங்கள மாதிரி மனுஷன்தானே... ஒங்கள மாதிரி ஒரு முதல்வர்தானே... அவருக்கு மட்டும் எங்கிருந்துங்கய்யா வந்துச்சு.. அத்தனை தைரியம்? அது ஏன்... இங்க மட்டும் இல்லாம போச்சு?

இத்தனைக்கும் கூட்டணி ஆட்சிங்கற பேருல பல வருஷமா மாத்தி மாத்தி காங்கிரஸ§ம் கம்யூனிஸ்டும் ஆண்டுக்கிட்டிருக்கற மாநிலம்தான் கேரளா. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்கிற மாதிரி, ஒரு எம்.எல்.ஏ. ஸீட் இருந்தாலே அங்கெல்லாம் பெரிய ஆளு. ஒடனே அமைச்சராயிடலாம். அந்த அளவுக்கு கோஷ்டி கானம் நிறைஞ்ச ஊரு. ஆனா, ஒரு பிரச்னைனு வந்துட்டா... அதெல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு, 'எண்ட தேசம், கேரள தேசம்'னு ஒரே குரல்ல கூவ ஆரம்பிச்சுடறாங்க.

ஆனா, இங்க என்ன நிலைமை?

'இலங்கைத் தமிழனுங்களுக்காக பதவியை ராஜினாமா பண்ணுவோம்... பாம் போடுவோம்... பட்டையைக் கிளப்புவோம்...'னு சொல்லிக்கிட்டே இருந்தோமே ஒழிய... ஒரு நாளும் துணிச்சலான நடவடிக்கையில இறங்கல.

''காவிரித் தண்ணிக்காக கர்நாடகாவை ரெண்டுல ஒண்ணு பார்ப்போம்...''

''முல்லை- பெரியாறு விஷயத்துல கேரளவுக்கு மரண அடி கொடுப்போம்''

இப்படி மூலைக்கொருத்தரா கூவிக்கிட்டிருக்கீங்களே தவிர, ஒரு நாளாச்சும் இங்க இருக்கற அரசியல் கட்சிங்கள்லாம் ஏதாவது ஒரு பிரச்னையில ஒண்ணா நின்னிருக்கோம்னு நெஞ்சுல கையை வெச்சு சொல்லுங்க பார்ப்போம்.

சமீபத்துல வந்த பார்லிமென்ட் எலக்ஷனப்ப... 'தமிழ்நாடு ஒட்டுமொத்தமா தேர்தல புறக்கணிப்போம். அதன் மூலமா நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவோம். அதுக்குப் பயந்து இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாத்தும்'னு அருமையா ஒரு யோசனை வெச்சாரே 'கறுப்பு எம்.ஜி.ஆர்.' விஜயகாந்த். அதுக்கு காது கொடுத்திருந்தா... இன்னிக்கு இலங்கையில இப்படியரு ரத்த ஆறு ஓடியிருக்குமா?

ஆனா, பதவி ஆசையில ஆளாளுக்கு ஓடியாடி, கடைசியில இலங்கைத் தமிழனுங்களுக்கு சாவு மணி அடிச்சுட்டீங்க எல்லாருமா சேர்ந்து!

கிட்டத்தட்ட அதே கதைதான் இப்பவும். ஏற்கெனவே காவிரிப் பிரச்னையில எல்லாமே காலியாகிடுச்சு. இந்த முல்லை-பெரியாறு விஷயத்துலயாவது எல்லாரும் கைகோத்து நிப்பீங்னு பார்த்தா... ஆளாளுக்கு தெற்கயும் வடக்கயும் அரசியல் பண்ணிக்கிட்டு நிக்கறீங்க.

இப்படிப்பட்ட கேவலமான அரசியலையே பார்த்துப் பார்த்து வளர்ந்ததால சூடு-சொரணை, மானம்-மரியாதை இதையெல்லாம் எப்பவோமூட்டைக்கட்டி வெச்சுட்டான் தமிழ்நாட்டுக் குடிமகன். கறிக்கும்-பிரியாணிக்கும், காசுக்கும்-சரக்குக்கும் எதையும் விக்க துணிஞ்சுட்டான். ஒரு கன்னத்துல அறைஞ்சா, மறு கன்னத்தை மட்டுமில்ல... ஒடம்பு மொத்தத்தையும் காட்டிக்கிட்டு நிக்கறான்!

இவங்களையெல்லாம் இப்படி மாத்துனது யாரு? மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க. அந்தப் புண்ணியத்துல உங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கு.

முல்லை-பெரியாறு அணையை அழிக்குறதுக்கு திட்டம் போடுறாங்க மலையாளிகனு தெக்க இருக்க சனங்க, சம்சாரிக, அரசியல் கட்சிக, பொதுநல அமைப்புக அறிக்கை, ஆர்ப்பாட்டம்னு அலறுனதை மௌனமா பாத்துகிட்டிருந்தீங்க. முப்பது வருஷ போராட்டத்தை உச்ச நீதிமன்றத்தோட ஒரே உத்தரவு மறுபடியும் ஆரம்ப நிலைக்கே கொண்டு வந்தப்பவும் மௌனமாத்தான் இருந்தீங்க.

செய்றதெல்லாம் செஞ்சுட்டு, 'ஜனநாயக நாட்டுல உச்ச நீதிமன்றம்தான் பெருசு. அதோட தீர்ப்பைத் தடுத்து தடைச் சட்டம் போட்டு தண்ணிய தடுக்கறாரு அச்சுதானந்தன். நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பாக்குது. கண்டிக்க வேண்டிய உச்ச நீதிமன்றம் மௌனம் சாதிக்குது. இனி யாருகிட்ட போயி முறையிடுறதுன்னே தெரியலை'னு உடன்பிறப்புக்கு உருக்கமா கண்ணீர் வுடுறீங்க.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா..? அதைப்படிச்சுட்டு ஒங்க ஒடம்பிறப்புகளே நக்கலா சிரிச்சு, சிரிச்சு வயிறே புண்ணாப்போச்சாம்.

'கேரள அரசு புதுசா சட்டம் போட்டதைக் கண்டிக்காம, பிரச்னையை அஞ்சு நீதிபதிங்க விசாரிச்சு முடிவெடுப்பாங்க'னு சொல்லிடுச்சே உச்ச நீதிமன்றம்னு கொதிச்சு போய் சொல்லியிருக்கீங்க. ஆனா, நவம்பர் 10-ம் தேதியன்னிக்கு உச்ச நீதிமன்றத்துல இப்படியரு உத்தரவு கொடுக்குறதுக்கு முன்ன, தமிழ்நாடு அரசு சார்பா வாதாடுன வக்கீல் பராசரன்கிட்ட, 'இந்த உத்தரவுக்கு ஒப்புக்கிறீங்களா’னு நீதிபதிக கேட்டிருக்காங்க. அவரு மறுத்திருக்காரு. இடையில எங்கிருந்து உத்தரவு வந்துச்சோ தெரியல... மத்தியானம் நீதிமன்றம் கூடுனதும் 'ஒப்புக்குறோம்'னு சொல்லி, முல்லை-பெரியாறு விஷயத்துக்கு மங்களம் பாடியிருக்காங்க நம்ம ஆளுங்க. காலையில, 'ஒப்புக்க மாட்டேன்'னு சொன்னவரு, மதியம் எப்படி ஒப்புக்கிட்டாரு?

இப்ப இவ்வளவு வேதனைப்பட்டு முழம் நீளத்துக்கு அறிக்கையை விட்டுக்கிட்டிருக்கற நீங்க, அன்னிக்கே 'ஒப்புக்க முடியாது'னு சொல்லியிருக்க வேண்டியதுதானே..? அதைவிட்டுட்டு, இப்ப அழுது புலம்புறது யாரை ஏமாத்த..?

'விட்டு கொடுத்தவங்க, கெட்டுப் போறதில்லை’னு சொலவடை சொல்வாங்க. ஆனா, விட்டுக் கொடுத்ததால கெட்டுப் போன வரலாறுதான் தமிழகத்தோட வரலாறு. 1956- ல தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரா இருந்த காமராஜர் இந்திய தேசியம் பேசிகிட்டிருந்ததால தமிழ்நாட்டுல இருந்த தேவிகுளம், பீர்மேடு இதெல்லாம் நம்மை விட்டு போயிடுச்சு. இப்படி கைவிட்டு போன பகுதியில மட்டும் சின்னதும், பெருசுமா இருபதுக்கும் மேல வற்றாத ஆறுக இருக்கு. இப்ப இந்த தண்ணி முழுசும் வீணா அரபிக் கடலுக்குத்தான் போகுது.

1980-ல முதலமைச்சராயிருந்தா எம்.ஜி.ஆர்., தமிழ்நாட்டு போலீஸ்கிட்டயிருந்த முல்லை-பெரியாறு அணை பாதுகாப்பு பொறுப்பை, கேரள போலீஸ§க்கு தாரை வார்த்தாரு. இப்ப என்னாச்சு..? நம்ம இன்ஜினீயரையே அணைக்குள்ள நுழைய விடாம துரத்தியடிக்குது கேரளா.

உச்ச நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் அணையோட மட்டத்தை உயர்த்தறதுக்குண்டான வேலைகளைப் பார்க்காம, தேர்தல்ல ஜரூரா இருந்தாங்க கொடநாட்டு அம்மா. இப்ப என்னடான்னா... 'எல்லாத்துக்கும் காரணம் கருணாநிதிதான்' விடிஞ்சா, பொழுதுபோனா கூப்பாடு போடுறாங்க.

'பிறக்கும் குழந்தை இறந்து பிறந்தால், அதை வாளால் கீறி புதைக்கும் வீரம் செறிந்தது தமிழர்களின் வரலாறு’’னு சொல்லுவாங்க. அந்தத் தமிழர்களோட தலைமகன்னு சொல்லிக்கறீங்க... ஆனா, கேரளாவுக்கு இருக்குற துணிச்சல்ல கால்வாசிக்கூட இல்லாம, வாளெடுக்கறதுக்கு பதிலா தாள்ல புலம்புறீங்களே... இதுதான் தமிழனோட வீரமா..?

இப்படி எல்லா அரசியல்வாதிகளாலயும் இருக்கற ஒவ்வொண்ணையும் இழந்துகிட்டே இருக்கறதுதான் எங்களோட புதிய வரலாறு.

'வந்தாரை வாழவைக்கும் தமிழனமே... நீ சொந்த நாட்டானையே சுரண்ட ஆரம்பித்தது எப்போது'னு சினிமா வசனம் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். அப்படித்தான் இப்ப எல்லா அரசியல்வாதிகளையும் பார்த்து கதற ஆரம்பிச்சுருக்கான் அப்பாவி தமிழன். அவனோட வயித்தெரிச்சலும், விவசாயிகளோட வேதனையும் இதுக்குக் காரணமானவங்களை நிச்சயம் சும்மா விடாது. வரலாற்றுல 'கருப்புப் பக்கங்கள்'லதான் ஒங்க எல்லாரையும் குறிக்கப்போகுது காலம்.

ஆனா... 'வந்தவனும் சரியில்ல... வாய்ச்சவனும் சரியில்ல'னு சொல்ற மாதிரி எதுவுமே சரியில்லாத நாட்டுல நாதியத்த விவசாயிக... யாருகிட்ட போயி முறையிடுறதுனுதான் தெரியல.

இப்படிக்கு
கோவணாண்டி

Tuesday, September 29, 2009

பன்றி காய்ச்சல் Vs மகாவிஷ்ணு


பன்றியை இந்து புராணங்கள் - மகா விஷ்ணுவின் அவதாரம் என்று புகழ் கின்றன. ஆனால், ஒரு சக ‘இந்து’வை ‘பன்றி’ என கூறி விட்டால் அதற்காக எந்த இந்தும் மகாவிஷ்ணுவுக்கு ஒப்பிட்டதாக பெருமைப்படுவது இல்லை. திருப்பி அடித்து விடுவான். பன்றி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு பன்றி விரும்பி சாப்பிடும் “உணவை”யே படைக்கலாமா என்று கேட்டால், உடனே மதத்தைப் புண்படுத்துகிறார்கள் என்று ஓலமிடத் தொடங்கி விடுவார்கள்.





இப்போது பத்திரிகைகளில் கதா நாயகன் ஒவ்வொரு நாளும் மகாவிஷ்ணு தான்! உலகம் முழுவதும் ‘மகாவிஷ்ணு’ வைக் கண்டு நடுங்கிக் கொண்டிருக்கிறது. மகாவிஷ்ணு, காய்ச்சல் அவதாரம் எடுத்து மக்களின் உயிரோடு திருவிளையாடல் நடத்து கிறான். அதற்காக மக்கள் பகவான் வந்து விட்டார் என்று கூறி மகிழ்ச்சிக் கூத்தாட தயாராக இல்லை. ‘மகாவிஷ்ணு’ காய்ச்சலை அதாவது, பன்றி காய்ச்சலை விரட்டி அடிப்பதற்கு மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாவிஷ்ணு (பன்றி) காய்ச்சல் - தொற்று நோய். இந்தத் தொற்று நோய்களையெல் லாம் தடுப்பதற்கு நமது முன்னோர்களே பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்திருந்த தாகவும், அதுதான் ‘நமஸ்தே’ என்று கும்பிடு போடும் பழக்கம் என்றும் ஒரு பார்ப்பனர் ‘இந்து’ ஏட்டில் (ஆக. 23) ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

“மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான” இந்துவும் அதை வெளியிட்டிருக்கிறது. ஒருவருக் கொருவர் கை குலுக்காமல், கும்பிடு போடும் பார்ப்பன கலாச்சாரம் ‘தீண்டாமை’யின் மறுவடிவம்தான். நாட்டில் தொற்று நோய்கள் பரவா திருக்க ‘தீண்டாமை’யைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவதன் மூலம் ‘தீண்டாமை nக்ஷமகரமானது’ என்று சங்கராச்சாரி கூறுவதை நியாயப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். எப்போதோ வந்து போகும் தொற்று நோய்களுக்காக சமூகம் ஒருவரையொருவர் ‘தீண்டாமல்’ வாழ்வதே சிறந்த தத்துவம் என்று கூறி, இந்து பார்ப்பனியத்தை நியாயப்படுத் தும் எல்லைக்குப் போய் விடுகிறார்கள்.

எங்கேயாவது விமான விபத்துகள் நடந்தால் கூட அதற்காகத்தான் ‘கடல் தாண்டக் கூடாது’ என்று, ‘இந்து தர்மம்’ ஏற்கனவே கூறியிருக்கிறது என்று இவர்கள் கூறினாலும், வியப்பதற்கு இல்லை. தகாத உறவுகளால் ‘எய்ட்ஸ்’ பரவுகிறது என்பதால்தான் நமது முனிவர்கள் இல்லறத்தையே வெறுத்தார்கள் என்று கூறி, இனி, திருமண மில்லாத வாழ்க்கையே சிறந்தது என்று இவர்கள் கூறுவார்களா, என்று எவரும் கேட்டுவிடக் கூடாது. ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளாமல் தூர நின்று, ‘கும்பிடு போட்ட’ காலங்களில் பிளேக் நோயும் காலராவும் பரவி, ஊர் ஊராக பிணங்கள் விழுந்தனவே. அதற்கு என்ன காரணமாம்! இத்தகைய அபத்தங் களை கட்டுரையாக வெளியிடும் மவுண்ட் ரோடு ஆங்கில “பன்றி”கள் (அதாவது மகாவிஷ்ணுவின் மாற்றுப் பெயர் என்று அறிக!) ‘தீண்டாமை’யை நியாயப்படுத்துகின்றனவா? இதற்காக ‘தீண்டாமை’ தடுப்புச் சட்டத்தின் கீழ் எவராவது இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதற்கு நாம் பொறுப்பு அல்ல. தன்மானமுள்ளவர்கள் நாட்டில் இல்லாமலா போய் விடுவார்கள்?

Saturday, September 12, 2009

அவதூறுகளை அள்ளி வீசூம் சீர்குலைவு சக்திகள்


ஈழத்தமிழினம் ஒரு மிகப்பெரிய அழிவை சந்தித்திருக்கிறது. 2.85 லட்சம் மக்கள் சிங்கள இனவெறி அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழினம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது. தமிழகத் தமிழர்கள் புழுங்கிச் சாகின்றனர். இத்தகையச் சூழலில், ஈழத்தமிழர்களின் இந்த அவல நிலைக்குக் காரணமான சிங்கள இனவெறி அரசையோ, அதற்கு முழு உதவிகள் புரிந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளையோ கண்டிக்க வக்கில்லாத ஒரு கூட்டம், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும், போராட்ட இயக்கத்தையும், இயக்கத் தலைமையையும் வேண்டுமன்றெ கொச்சைப்படுத்தியும், அவதூறு செய்து எழுதியும் பேசியும் மகிழ்ச்சி கொள்கிற மனசாட்சி இல்லாதவர்களாக இன்றைக்கும் உலவி வருகின்றனர்.

ஒரு இனவாத அரசு தன்னால் ஒடுக்கப்படுகின்ற ஓர் இனம், அதன் விடுதலைக்காகப் போராடும் பொழுது அந்த இனத்தில் உள்ள பலவீனமான குழுக்களை முதலில் அடையாளம் காணும் வேலையைச் செய்யும். அப்படி அடையாளம் காணும் குழுக்களை நேரடியாக ஒடுக்குகின்ற இனத்தின் ஆளும் வர்க்கம், தன்னுடன் இணைத்துக் கொள்வதும் உண்டு. மாறாக, அவர்களை இருக்குமிடத்தில் அப்படியே வைத்துக் கொண்டு அங்கிருந்து நீங்கள் எங்களுக்கான வேலையை செய்யுங்கள் என உத்தரவிடுவதும் உண்டு. டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றவர்கள் முதல் வகையறா. “இந்து வெறி” அ.தி.மு.க., பார்ப்பனீய பா.ச.க., பூணூல் கம்யுனிஸ்ட்கள் மட்டுமின்றி முற்போக்கு முகமூடி போட்டுத் திரியும் ம.க.இ.க, உள்ளிட்ட அமைப்புகள், “துக்ளக்” சோ, சு.சுவாமி, “இந்து” என்.ராம், அ.மார்க்ஸ், இரயாகரன், சோபாசக்தி உள்ளிட்ட முற்போக்கு முகமூடிகள் அணிந்த தனிநபர்கள் என இரண்டாம் வகையறா பட்டியல் நீள்கிறது.

அ.தி.மு.க., பா.ச.க., பார்ப்பனக் கம்யுனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளையும், சோ, சு.சுவாமி, இந்து ராம் போன்றவர்களைப் பற்றி நாம் விவாதிக்கத் தேவையில்லை. அவர்கள் நேரடியாக எதிரி முகாமில் எச்சம் தின்பவர்கள் என்பது வெளிப்படை. ஆனால், ம.க.இ.க., இரயாகரன், அ.மார்க்ஸ், சோபா சக்தி உள்ளிட்டவர்கள் அப்படியானவர்கள் அல்ல. அதாவது சிங்கள அரசின் வெளிப்படையான சேவகர்கள் அல்ல. மறைமுக சேவகர்கள் அவ்வளவே. ம.க.இ.க.வினரின் அரசியலைக் கேள்விக்குட்படுத்தி எழுதப்பட்ட எமது முந்தைய கட்டுரைக்கு “கீற்று” இணையதளத்தில் சிலர் எதிர்வினை புரிந்திருந்தனர். கேள்விகளுக்கு பதில் கேட்டால் அதற்குப் பதிலளிக்காமல் அக்கேள்விகளை மறுபடியும் கேள்விக்குட்படுத்துவதும், “நக்கல்” அடித்து பேசி கேள்வியை திசைமாற்றுவதும், வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு “நாங்கதான்டா புரட்சியாளர்கள்.. நீங்களெல்லாம் துரோகிகள்/எதிரிகள்" என்று நகைச்சுவை செய்வதும் இவர்களுக்கு கைவந்த கலை என்பதனை இவர்களது கமெண்ட்டுகள் நமக்கு உணர்த்தியது.

விமர்சனம் என்ற போர்வையில் ம.க.இ.க., இரயாகரன் உள்ளிட்டோர் செய்து வரும் வேலைகளை மென்மையான முறையில் அ.மார்க்ஸ், சோபா சக்தி வகையறாக்கள் “முற்போக்கு” முகமூடியில் ஒளிந்து கொண்டு செய்கின்றனர்.

ஈழவிடுதலைக்கு உதவ முடியாமலும், தம் இரத்த சொந்தங்களை போர் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாமலும் போய் விட்டதே என்ற வருத்தம் தமிழ்நாட்டுத் தமிழர் மனதில் ஆறாக் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிங்கள அரசிற்கு உதவிகளை வாரி இறைத்து சிங்களனுடன் “நட்புறவு” பேணும் இந்தியாவின் இவ்வகை போக்கால், இந்த வருத்தம், இந்திய அரசின் மீதான கோபத்தை கிளறிவிட்டிருக்கிறது. இந்திய அரசின் மீது மட்டுமல்ல, தமிழ்நாட்டை இந்திக்காரர்களுக்குக் காட்டிக் கொடுத்து லாபம் பெறும் தமிழ்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் மீதும் தமிழக மக்களுக்கு இயல்பானதொரு கோபமும் இருக்கின்ற நிலையில், இவற்றைத் தணிக்க பெருந்திட்டம் தீட்டி வருகின்றது, ஆரிய இந்திய அரசு. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் தமிழ்நாட்டில் எழுந்து வரும் தமிழ்த் தேசியம், ஈழவிடுதலை குறித்த கருத்தியல்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றது, இக்கூலிக் கும்பல.

விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள்

“புலிகள் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. வடதுசாரிய சிந்தனையுள்ளவர்களாக இருந்தனர். சாதி ஒழிப்பைப் பற்றி எங்கும் அவர்கள் பேசவில்லை. புலிகள் முஸ்லிம்களை விரட்டினார்கள். சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து புலிகள் செயல்படவில்லை. மாற்று இயக்கத்தினருடன் இணைந்து பணியாற்றவில்லை. தமிழ் மக்களை புலிகள் அழித்தொழித்தனர்”

- மேற்கண்டவை தாம் புலிகள் மீதான இக்கூலிக்கும்பலின் பிரதான குற்றச்சாட்டுகள். இந்தக் குற்றச்சாட்டுகளை எழுப்புவதால் இவர்கள் எல்லோரும், ஏதோ சனநாயகவாதிகள் என்றோ, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்றோ கருத முடியாது. என்.ஜி.ஏ. அமைப்புகள் செய்யும் பணிகளுக்கு பின்னால் ஏகாதிபத்தியம் எப்படி ஒளிந்து கொண்டுள்ளதோ அதே போன்று தான் இவர்களது நடவடிக்கைகளுக்குப் பின்னால், ஆரியம் ஒளிந்து கொண்டுள்ளது. இவர்களது செயல்பாடுகளை உற்று நோக்கினால், சிங்களப் பேரினவாதம் செய்யும் வேலையை இவர்கள் நம்முடன் இருந்து கொண்டே செய்கிறார்கள் என்பது புலப்படும். இன்னும் சரியாக சொல்லப் போனால், சனநாயகம், மார்க்சியம் போன்ற முற்போக்கு கருத்தியலின் சொல்லாடல்களைக் கொண்டு, அவதூறுகளை அள்ளி வீசும் அற்பத்தனங்களை திறம்பட செய்பவர்கள் இவர்கள் என வரையறுக்கலாம்.

புலிகள் என்றுமே விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர்கள் கிடையாது. அவர்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தான். அந்த விமர்சனத்தை அவர்கள் மீது எழுப்புகின்றவர்களின் நோக்கமும், விதமும் தான் விமர்சனங்களை எழுப்புபவர்களின் அரசியலைத் தீர்மானிக்கிறது. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கம், தன் மீதான விமர்சனங்களுக்கு ஏற்ப தன்னை திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும் என்று இவர்கள் எண்ணுவதில்லை. மாறாக, அப்போராட்ட அமைப்பு மீது சேறடித்து வீழ்த்துவதன் மூலம், சிங்களப் பேரினவாதத்திற்கு மறைமுகமாக துணை போவது தான், இந்த எழுத்துப் போர் “ஏகாம்பரங்களின்” வேலைத்திட்டம்.

கீற்று இணையதளக் கட்டுரையின் பின்னூட்டத்தில் ம.க.இ.க. தோழர் ஒருவர் எழுதியிருந்தார், ”நல்ல நண்பன் குறைகளை சுட்டிக் காட்டுவான்” என்று. நான் திருப்பிக் கேட்கிறேன், “நீங்கள் என்றைக்கு புலிகளுக்கு நண்பனாக இருந்தீர்கள் என்று சொல்லுங்கள் முதலில்”. வாய்த்திறந்தாலே “புலிகள் பாசிஸ்ட்கள்” என்று சொல்வதும், எழுதுவதும் தவிர தமிழ்நாட்டில் இவர்களது ம.க.இ.க.வும் அதன் தலைமையும் ஈழத்திற்காக செய்த வேலை தான் என்ன? “பிரபாகரன் ஒரு பாசிஸ்ட்டு” - “புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கம்” என்று வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் இவர்கள் முழங்காமல் அடக்கி வாசித்ததும், புலிகள் சர்வாதிகாரிகள் என்று சொல்லி விட்டு பின்னர், அவர்களுக்கே ”வீரவணக்கம்!” போட்டுக் கொண்டதும் தானே இவர்களது ”வீரதீர” நடவடிக்கைகள்.

விமர்சனம் என்ற பெயரில் தான் மேற்கொண்டுவரும் காட்டிக்கொடுப்பு வேலைகளையும், அவதூறுகளையும் இதுவரை யாருமே அங்கீகரித்தில்லை என்பது தெரிந்தும் அதனை மட்டுமே தொடர்ந்து செய்து வரும் இவர்களது “வீரதீர” நடவடிக்கைகள் வேடிக்கையாக இருக்கிறது. ஈழப் போராட்டம் பற்றி இவர்கள் எழுதுவதை கண்டாலே இதனை தெரிந்து கொள்ளலாம். இவர்களைப் போன்ற சிங்கள இனவெறி அரசின் துணைக்குழுக்கள் எழுப்பும் கேள்விக்கெல்லாம் நாம் பதிலெழும் பட்சத்தில் அவர்கள் திருந்திவிடப் போவதில்லை. மாறாக, அப்படிப்பட்ட துரோகக் குழுக்களில் உண்மை தெரியாமல் சிக்கியிருக்கும் அப்பாவி தமிழ் இளைஞர்களை மீட்டெடுப்பதற்கும், அவர்கள் மீது கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களை உடைத்தெறியவுமே அவை உதவும்.

புலிகள் அரசியலை முன்னெடுக்கவில்லையா?

புலிகள் அரசியலை முன்னெடுக்கவில்லை என்று இக்குழுக்கள் கூறுகின்றன. இதற்கான பதிலை புலிகளே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு வெளியிட்ட “சோசலிச தமிழீழம்” என்று தலைப்பிடப்பட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் வேலைத் திட்டம் குறித்த நூலில் இதற்கான பல விளக்கங்கள் உள்ளன. அதன் முதற்பகுதி விடுதலைப்புலிகள் இயக்கமும், தேசிய விடுதலைப் போராட்டமும் என்று தலைப்பிடப்பட்டது. இரண்டாம் பகுதி அரசியல் வேலைத்திட்டமும் கொள்கை விளக்கமும் என்று தலைப்பிடப்பட்டதாகும். இந்நூலை தற்பொழுது எடுத்துக்காட்டுவதன் நோக்கம், புலிகள் இயக்கம் வீரியமுடன் செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்தே மேற்கொண்டு வந்த பல கொள்கைகளும், வரையறுப்புகளும் தற்பொழுது பெரும்பாலானோர்க்கு தெரிந்திருப்பதில்லை. அதனால் இதனை இப்பொழுது எடுத்துக் காட்டுகிறேன்.

அதே நேரத்தில், தொடக்கத்தில் லட்சிய உறுதியுடனும் போர்க் குணத்துடனும் செயல்படத் தொடங்கியவர்களில், இறுதி வரை அதே போர்க்குணத்துடனும் லட்சிய உறுதியுடனும் நீடித்தவர்கள் சிலரே. ஆனால், புலிகள் அவ்வாறல்லாமல், தனது தொடக்க காலத்தில் தனக்கென வரையறுத்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் இறுதி வரை கடைப்பிடித்தனர். அதனால் தான் அவர்களது இயக்கம் இன்று வரை உலகத் தமிழர் மனதில் நீங்கா இடத்துடனும், உலக வரலாற்றில் வேறு எந்த கெரில்லா விடுதலைப் போராட்ட இயக்கமும் செய்திராத மாபெரும் சாதனைகளை செய்தும் உள்ளது.

“எமது இயக்கம் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியல் இலட்சியமே ஆயுதப் பாதையை வழிநடத்த வேண்டும் என்பதில் நாம உறுதியாக இருக்கிறோம்.

ஆரம்பகாலத்திலிருந்து எமது இயக்கம் அரசியல் பிரிவிலிருந்து இராணுவ அமைப்பை வேறுபடுத்தவில்லை. பதிலாக, இரு பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்ட அரசியல் - இராணுவ வேலைத் திட்டத்தின் அடிப்படையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டம் ஆயுதப் போராட்டத்தை ஒரு அதியுயர்ந்த அரசியற் போராட்ட வடிவமாகவே கொள்கிறது."

(பக்கம் 9 பத்தி 2இன் பிற்பகுதி முதல் பத்தி 3 வரை, முதல் பகுதி)

இது 1980களில் புலிகளால் எழுதப்பட்டது. ஒரு அரசியல் சக்தியாக இல்லாவிட்டால், புலிகள் அம்மண்ணில் கடந்த 35 வருடங்களாக காலூன்றி நின்றிருக்க முடியாது. மக்களை அரசியல்மயபடுத்தியதன் காரணமாகத்தான், புலிகள் கைகாட்டியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள். மக்களை அரசியல்படுத்தியதால் தான், “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற பிரகடனம் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று இன்றைக்கு உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகின்றது. புலம் பெயர் மக்களை புலிகள் அரசியல்படுத்தியதால் தான் அவர்கள் புலம் பெயர் நாடுகளில், அந்தந்த நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் மக்கள் திரளாக அவர்களால் வளர முடிந்திருக்கிறது. இவ்வாறு, ஈழத்தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தனது இராணுவ நடவடிக்கைகளின் மூலமாகவே அரசியல்படுத்தியவர்கள் புலிகள். இவர்களைப் பார்த்து மக்களை அரசியல்படுத்தவில்லை என்ற குற்றம் சாட்டுகின்றது, இக்கூலிக் கும்பல்.

புலிகள் மீது மட்டுமின்றி, தமிழகத்தில் ஆயுததாங்கியப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மாவோயிஸ்டுகள் மீது ம.க.இ.க. - புதிய ஜனநாயகக் கும்பல் அவதூறுகளை அள்ளி வீசின. புதிய ஜனநாயகத்தின் இந்த அவதூறுகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தனர். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக புதிய ஜனநாயகமும் ஒரு வெளியீட்டைக் கொண்டு வந்தது. அவ்வெளியீட்டில், புதிய ஜனநாயகம் தானே அம்பலப்பட்டது.

“அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம்தான் ஆயுதப் போராட்டம் என்பதையும், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணரச் செய்யவேண்டும்” என்று நாம் கூறுவதையும் மாவோயிஸ்டு அமைப்பினர் ஏளனத்துடன் மறுக்கிறார்கள்.”

(மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் கருவிலே சிதைவது ஏன்?, பு.ஜ.வெளியீடு, சனவரி 2008, பக்கம் 63, பத்தி 3 தொடக்கம்)

அரசியல் போராட்டத்தின் முதிர்ந்த வடிவம் தான் ஆயுதப் போராட்டம் என்று தானே கூறும் ம.க.இ.க. - புதிய ஜனநாயகக் கும்பல், அதனை புலிகளோ, மாவோயிஸ்டுகளோ செய்தால் தூற்றுவார்களாம். அவதூறு செய்வார்களாம். அதனை அவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமாம். மற்ற யார் செய்தாலும், அது சாகசவாதம் என்பார்களாம். நக்சல்பாரிகளின் ஆயுததாங்கிய எழுச்சி மிக்க போராட்டத்தைப் பற்றி புகழ்ந்தும் இவர்கள் எழுதுவார்கள், அதே சமயம் அதனை சாகசவாதம் என்றும் வாதாடுவார்கள். இவர்களது துண்டறிக்கைகள் பலவற்றில், “ஆயுதாங்கிய பாதையில் அணி திரள்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், 30 வருடங்களாக தன்னை நம்பியுள்ள தோழர்களிடம் அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் காட்டியது கிடையாது. இது தான் இவர்களின் அரசியல் லட்சணம். அப்பாவித்தனமாக இவர்களிடம் சிக்கியிருக்கும் இளைஞர்களின் நிலை தான் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

புலிகள் வலதுசாரிச் சிந்தனையுள்ளவர்களா?

தனது இலக்கு சுதந்திர சோசலிச தமிழீழத் தனியரசே என்று முதலிலேயே தனது அரசியலை பிரகடனப்படுத்தியவர்கள் புலிகள். தேசிய இன விடுதலைப் பற்றிய மார்க்சியப் புரிதல்களுடன் தான் அவர்களது போராட்ட இயக்கம் கட்டமைக்கப்பட்டது. தேசிய விடுதலையும், சோசலிச சமூகப் புரட்சியுமே தமது இயக்கத்தின் அடிப்படை அரசியல் இலட்சியங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்டவை.

உலகமயம் அழித்து வரும் தேசிய இன அடையாளங்களை பாதுகாப்பதன் மூலமும், தேசிய இன அடையாளத்தை மீட்டெடுப்பதன் மூலமும், தேசிய இன விடுதலைக்குப் போராடுவதன் மூலமும் உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் புலிகள். ஈழ மண்ணில் எந்தவொரு ஏகாதிபத்தியமும் காலூன்ற முடியாத படி தனது இராணுவத்தைக் கட்டமைத்தது புலிகள் இயக்கம். ஏகாதிபத்தியம், காலனித்துவம், நவ-காலனித்துவம், இனவாதம் ஆகியவையே உலக மக்களின் பொது எதிரிகள் என்று புலிகள் வரையறுத்திருந்தனர்.

“தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. அதே சமயம், எமது சமூகத்தை பிரபுத்துவ சமூக வடிவமாகவும் சித்தரிக்க முடியாது. தமிழீழ சமுதாய அமைப்பானது தனக்கேயுரிய ஒரு தனித்துவமான பொருளுற்பத்தி வடிவமாகத் திகழ்கிறது. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு சிக்கலான பொருளாதா அத்திவாரத்தில் எமது சமுதாயம் கட்டப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் எமது சமுதாயத்திற்கு அத்திவாரமாக விளங்கும் பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்குமுறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது.

எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்.”

(பக்கம் 11 பத்தி 8 மற்றும் 9, இரண்டாம் பகுதி)

1980களில் எழுதப்பட்ட மேற்கண்ட வரிகள், புலிகளின் தமிழ்ச் சமூகத்தின் மீதான புரிதல்களையும், மார்க்சிய இயங்கியல் கண்ணோட்டத்திலேயே தமிழர் பிரச்சினையை புலிகள் அணுகியதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

சாதி ஒடுக்குமுறை பற்றி புலிகள் பேசவில்லையா?

சாதிய ஒடுக்குமுறை பற்றி புலிகள் எங்குமே பேசவில்லை. யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்தினரின் மனநிலையே புலிகள் இயக்கத் தலைமையின் மனநிலை என்று ஒரு பெரும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த அவதூறுகளுக்கும் புலிகளின் முதல் அரசியல் அறிக்கையே பதில் அளிக்கிறது.

“எமது சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு சாபக்கேடாகவும் சமூக சமத்துவத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாகவும் இருந்துவருவது சாதியக் கொடுமையாகும். சாதிய அமைப்பு எமது கிராமியப் பொருளாதார வாழ்வுடன் ஒன்று கலந்திருக்கிறது. வர்க்க அமைப்புடன் இணைப்பெற்றிருக்கிறது. தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருள் உற்பத்தி உறவுகளுடன் பின்னிப்பிணைந்திருக்கிறது. மத சித்தாந்த உலகிலிருந்து வேரூன்றி வளர்ந்திருக்கிறது.

தொழிலின் மகத்துவத்தை இழிவுபடுத்தி, மனிதனை மனிதன் வேறுபடுத்தும் இந்த மூட வழக்குமுறையை முற்றாக ஒழித்துக்கட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திடசங்கற்பம் பூண்டிருக்கிறது. சாதியத்தின் பெயரால் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து நசுக்கப்பட்டுவரும் தமிழீழப் பாட்டாளி வர்க்கத்தின் விடிவிற்காக எமது இயக்கம் அயராது உழைக்கும். உழைப்பின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச பொருளாதாரத் திட்டத்தை அமுலாக்குவதன் மூலமும், புரட்சிகரமான கல்விமுறை வாயிலாகவும் இந்த சமூக தீமையை எமது இயக்கம் ஒழித்துக்கட்டும்.”

(பக்கம் 12 பத்தி 1 மற்றும் 2, இரண்டாம் பகுதி)

சாதியைப் பற்றி எங்குமே புலிகள் பேசவில்லை என்ற அவதூற்றை, 1980களிலேயே எழுதப்பட்ட புலிகளால் எழுதி வெளியிடப்பட்ட அரசியல் அறிக்கையின் மேற்கண்ட வரிகள் தோலுரித்துக் காட்டுகின்றன. சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் உடனடியாக அதனை ஒழிக்க முடியாது என்பதையும் அதற்கு தொடர்ச்சியான நீண்டகாலத் திட்டங்கள் தேவை என்பதனையும் புலிகள் உணர்ந்திருந்தனர் என்பதனை இவை காட்டுகின்றன. புலிகள் இயக்கத் தோழர்கள் அவரவர் சொந்த சாதியிலேயே திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்ததை இச்சமயம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

முஸ்லிம்கள் மீதான அணுகுமுறை

இலங்கை வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தனித்துவமான ஒர் இனக்குழு என்றும் முஸ்லிம்களின் தாயகம் வடகிழக்குப் பிரதேசமே என்றும் புலிகள் அங்கீகரித்திருந்தனர்.

“வடகிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் பொதுவான தாயகத்தையும், பொதுவான மொழியையும், பொதுவான பொருளாதார வாழ்வையும், பொதுவான நலன்களையம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதம் ஒன்றிணைந்த சமூகப் பொருளாதா வாழ்வு காரணமாக ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் தங்கியிருப்பதால் தமிழரும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்ட சக்தியாக ஒருங்குசேர்ந்து தமது உரிமைக்காகப் போராடுவது அத்தியாவசியமானதாகும். முஸ்லிம் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால், தமது நலன்களை அடைந்து நல்வாழ்வு காண வேண்டுமென்றால், முக்கியமாக, தமது இன, மத, கலாச்சார தனித்துவத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றால் தமிழருடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, தமிழருடன் ஒருங்கிணைந்து போராடுவதே சாலச்சிறந்ததாகும்.”

(பக்கம் 13 பத்தி 7, இரண்டாம் பகுதி)



“தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தைக் குலைத்து, தமிழ்த் தேசிய ஒன்றியத்திணை சிதறடிக்கும் நோக்கத்துடன் சிங்கள இனவாத அரசானது தமிழர் முஸ்லிம் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டிவிடும் நாசகார முயற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு எமது பொதுத் தாயகப் பூமியையும் படிப்படியாக விழுங்கி வருகின்றது. பொதுவான எதிரியையும், பொதுவான இலட்சியங்களையும் எதர்கொள்ளும் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.”

(பக்கம் 14 பத்தி 1, இரண்டாம் பகுதி)


புலிகள் முஸ்லிம் மக்களுடன் உறவு பேண விரும்பியதையும், அவர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற ஈடுபாட்டையும் புலிகள் கொண்டிருந்தனர் என்பதனை மேற்கண்ட வரிகள் தெளிவுபடுத்துகின்றன.

காலப்போக்கில், முஸ்லிம் மக்கள் சிங்கள இனவெறியர்களுடன் உறவு பேணியதால், சில உரசல்கள் ஏற்பட்டன. முஸ்லிம் மக்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில், புலிகளின் முதல் முஸ்லிம் போராளியின் படத்தைத் தாங்கியபடி “ஒன்றிணைந்து போராடுவோம்” என்று புலிகளின் அரசியல் பிரிவு ஒரு புத்தகத்தையும் இந்நேரத்தில் வெளியிட்டது. அந்த புத்தகத்தில் புலிகள் முஸ்லிம் மக்களுக்கும் தமிழர்களுக்குமான பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை முறியடிக்க ஒன்றிணைந்து போராடுதல் அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தி இருந்தார்கள்.

சிங்களப் பேரினவாதம் தமிழ் - முஸ்லிம் மக்களிடையிலான உறவை சீர்குலைத்து, பகைமையைக் கட்டமைக்கும் வழிமுறைகளில் ஈடுபட்டிருந்ததையும் புலிகளின் வெளியீடுகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தன. ஆனால், முஸ்லிம் இனவாதக் குழுக்கள் பல உருவாக்கப்பட்டு, சிங்கள இனவெறி சக்திகளுடன் இணைந்து கொண்டு ஆயுதம் தரித்து தமிழர்களை வேட்டையாடிதை வரலாறு கண்டது.

சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து நடவடிக்கைகளில் பல முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் ஈடுபட்டு வந்தன. இவர்களுக்கு எதிராக புலிகளின் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட சிலரை வைத்துக் கொண்டு, ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிரானவர்கள் புலிகள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. மூதூர் வெளியேற்றம் குறித்து மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுகின்ற பலரும், அந்த வெளியேற்ற நடவடிக்கைக்காக புலிகள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டது குறித்து வாய்த்திறக்காமல் முடிக்கொள்வதற்கு, பின்னணியில் பேரினவாதம் தான் ஒளிந்து கொண்டுள்ளது.

சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடவில்லையா?

“சிறீலங்காவின் பாசிச அரசானது தமிழ் பேசும் மக்களது விரோதி மட்டுமின்றி ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் சிங்களப் பாட்டாளி மக்களதும் பிரதான எதிரியாகும். இந்தப் பாசிச அரச இயந்திரத்தை இயக்கிவரும் ஆளும் வர்க்கமானது தமிழருக்கு எதிரான இனவெறியைக் கிளறிவிட்டு தனது ஆட்சி அதிகாரத்தை நீடித்து வருகிறது. பேரினவாத சித்தாந்தத்தைப் பரப்பி தமிழ் - சிங்கள பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டையும் சிதறடித்து வருகிறது. இந்தப் பேரினவாத பாசிச அரசையே விடுதலைப் புலிகள் இயக்கம் தனது எதிரியாகக் கருதுகிறதே தவிர, சிங்களப் பொது மக்களை அல்ல. சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தோழமை சக்தியாகவே எமது இயக்கம் செயல்படும். சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக நாம் முன்னெடுக்கும் சுதந்திரப் போராட்டம் சி்ங்களப் பாட்டாளி வர்க்கத்தின் சுபீட்சத்திற்கும் வழி வகுக்கும் என்பது திண்ணம்.

.... சுதந்திர தமிழீழத்தில் தமிழ் பேசும் மக்களோடு ஐக்கியமாக வாழவிரும்பும் சிங்கள மக்களை தமிழீழப் பிரஜைகளாக ஏற்று, அவர்களுக்கு சகல சனநாயக சுகந்திரங்களையும், உரிமைகளையும் வழங்க எமது விடுதலை இயக்கம் முடிவு செய்திருக்கிறது.”

(பக்கம் 14 பத்தி 1, இரண்டாம் பகுதி)

தனது முதல் கொள்கை அறிக்கையிலேயே தெளிவுடன் சிங்களப் பாட்டாளி வாக்கத்துடன் இணைந்து போராட தயாராக இருந்ததாக புலிகளின் மேற்கண்ட வரிகள் தெரிவிக்கின்றன. புலிகளின் இம்முடிவை அங்கீகரித்து தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து போராட முற்பட்ட சிங்கள பாட்டாளி வர்க்க சக்திகள் ஏதேனும் ஒன்றையாவது இந்தக் கூலிக்கும்பல் அடையாளம் காட்ட முடியுமா?

முடியாது. சிங்கள இனத்தில் அப்படிப்பட்ட பாட்டாளி வர்க்க சக்திகளே இல்லாத நிலையில், தமிழ்த் தேசிய இனம், தனது விடுதலைப் போராட்டத்தை ஒத்தி வைத்து விட்டு, சிங்கள இனத்தின் பாட்டாளி வர்க்கம் எழுந்து நிற்கிற வரை சிங்கள இனவெறிக் கும்பலின் ஒடுக்குமுறைகளை தாங்கிக் கொண்டு அப்படியே அழிந்து போக வேண்டுமாம். இது தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்று புளுகுகிறது, சோபாசக்தி, அ.மார்க்ஸ், ம.க.இ.க. கும்பல். இது தான் இந்திய சிங்கள ஆரியக் கும்பலின் ஆசையும் கூட..

“ஒன்றுபட்ட இலங்கை” என்ற பெயரில் ஓலமிடும் இந்திய சிங்கள ஆரியக்கும்பலின் முழக்கத்திற்கும் “சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுங்கள்” என்று முழக்கமிடும் ம.க.இ.க., சோபாசக்தி உள்ளிட்ட ஆரியக் கூலிக்கும்பலின் முழக்கத்திற்கும் வித்தியாசம் இது தான். ஆசியக் கும்பல் “தேசிய ஒருமைப்பாடு” என்று கூச்சலிடுவதை, இந்தக் கூலிக்கும்பல் மார்க்சிய சாயம் புசி வாந்தி எடுக்கிறது. அவ்வளவு தான் வித்தியாசம். இந்தியாவின் போலிக் கம்யுனிஸ்டுகளின் “ஒன்றுபட்ட இலங்கை” முழக்கத்தையே அதிலிருந்து பிறந்த ம.க.இ.க.வும் வலியுறுத்துகிறது. பாட்டாளி வர்க்க சர்வதேசிய சாயமடித்து பார்ப்பனியத்தை திணிக்கும் கலையில் ம.க.இ.க.விற்கு நிகர் அவர்களே தான்.

முதலில் தமிழ் இனம் ஒர் அங்கீகரிக்கப்பட்ட தேசத்தை பெற வேண்டும் அதற்குப் பிறகு தான் சிங்கள உழைக்கும் மக்களுடன் இணைந்து சர்வதேசியத்தைப் பற்றி சிந்திக்க முடியும் என்று இக்கும்பல் சொல்வதற்கு வக்கில்லை. ஆனால், தனித்தமிழ் ஈழத்திற்காக போராடும் புலிகளை மட்டும் சிங்களர்களைப் போலவே இவர்களும் சேர்ந்து இழிவுபடுத்துவதை மட்டும் தவறாமல் செய்வார்களாம். என்னே இவர்களது சர்வதேசியம்..!

ஒரு பாட்டாளி வர்க்கம் தனக்கான ஒரு நாடு, வரையறுக்கப்பட்ட எல்லைகள் கொண்ட இறையாண்மையுள்ள ஒர் ஆட்சிப் பகுதி இருந்தால் தான் அங்குள்ள அதிகார வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தையும், உலகு தழுவிய உலகமயமாக்கலுக்கு எதிரான சர்வதேசியப் போராட்டத்திலும் பங்கெடுக்க இயலும். தனக்கருககில் உள்ள அண்டை தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து போராடவும் இயலும். இதுவே மார்க்சிய அடிப்படை.

ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் தேசிய விடுதலைக்கான தீர்வை இன்னொரு நாட்டின் பாட்டாளி வர்க்கம் வரையறுக்கக் கூடாது என்றும் சிலர் சொல்கிறார்கள். தனித்தமிழ் ஈழக் கோரிக்கை தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை என்பது போல அரைவேக்காட்டுத் தனமாக புரிந்து கொண்டிருக்கும் ம.க.இ.க. கும்பலின் கூற்று இது. ஈழசிக்கலுக்கு தமிழ்த் தேசிய இன மக்கள் நாடிய தீர்வே தனித்தமிழ்ஈழம் என்பது. இதனை அவர்கள் 1977இல் நடந்த தேர்தலில் மெய்ப்பித்தார்கள். இதனடிப்படையில் தான் புலிகளும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான தனித்தமிழ் ஈழமே தமது இலட்சியம் என கொண்டனர். இது ம.க.இ.க.விற்கு நன்கு தெரியும். ஆனால், அதை அவர்கள் எவ்வாறெல்லாமோ மழுப்பி கடைசியில் “ஒன்றுபட்ட இலங்கை” குட்டைக்குள்ளும் “பாட்டாளி வர்க்க சர்வதேசிய” சொல்லாடல்களிலும் விழுந்து விடுவார்கள்.

ஒடுக்குகின்ற இனத்தின் பாட்டாளி வர்க்கம் தனது விடுதலைக்காக முன்னெழுந்து போராடுகின்ற நிலையில், ஒடுக்கப்படும் இனத்தின் பாட்டாளி வர்க்கம் அதனுடன் சேர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒடுக்கும் இனத்தில் அவ்வாறான பாட்டாளி வர்க்க சக்திகள் இல்லாத நிலையில், ஒடுக்கப்படும் இனம் எவ்வாறு அவர்களுடன் சேர்ந்து செயல்பட இயலும்?

ஜனதா விமுக்தி பேரமுனா கட்சி சிங்கள இனத்தின் பாட்டாளி வர்க்கக் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டு, இன்று சீரழிந்த இனவாதக் கட்சியாக உள்ளது. இது போன்ற சிங்களப் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இனவாதத்தில் விழுந்து போவதற்குக் காரணம் என்ன? சிங்கள உழைக்கும் மக்களின் உளவியல் தான் காரணம். இவ்வாறான உளவியலைக் கொண்ட சிங்கள உழைக்கும் மக்கள், தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்தின் விடியலுக்காக இதுவரை செய்தது தான் என்ன? செய்யப் போவது தான் என்ன? ஒன்றுமில்லை.. ஆனால் இவை பற்றி எண்ணாமல், சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் உறவு பேணவே புலிகள் விரும்பினர். எழுச்சியுடன் ஜே.வி.பி. வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர்களுடன் உறவு பேண புலிகள் முயற்சி எடுத்தனர். “ஹீரூ” -HIRU என்ற ஜே.வி.பி. ஆதரவு பத்திரிக்கை புலிகளின் முயற்சியை வரவேற்று, புலிகளின் கொள்கைகளையும் அங்கீகரித்து எழுதியது. பின்னால், அப்பத்திரிகையின் ஆசிரியர் துரத்தியடிக்கப்பட்டு அம்முயற்சி ஜே.வி.பி.யாலேயே உடைத்தெறியப்பட்டது. இது மறுக்க முடியாத உண்மை.

புலிகள் மாற்று இயக்கத்தினருடன் இணைந்து செயல்படவில்லை என்கிறார்கள். மாற்று இயக்கத்தினர் என்று இக்கூலிக்கும்பல் சொல்லும் அனைத்து இயக்கங்களையும் அவர்களே “ஒட்டுக்குழுக்கள்” என்று தான் விமர்சிப்பார்கள். சிங்கள பேரினவாதத்துடன் இந்திய ஆரியத் தலைமையுடனும் சமரசம் செய்து கொண்ட அது போன்ற ஒட்டுக்குழுக்களுடன் புலிகளும் இணைந்து தமிழ் மக்களுக்கு “சேவகம்” புரிய வேண்டுமாம். இதைத் தான் இந்தக் கூலிக்கும்பல் விரும்புகிறது. அதாவது, சிங்கள பேரினவாதத்துடனும், இந்திய உளவுத்துறையினருடனும் சமரசம் செய்து கொண்டு புலிகள் இருக்க வேண்டுமாம். இந்த ஒரு வாதமே இந்தக்கூலிக்கும்பலை யாரென அம்பலப்படுத்துகின்றது. தமிழ் மக்களை புலிகள் கொல்லுகிறார்கள் என்று சிங்களர் குரலில் பேசும் இந்தக் கூலிக்கும்பலுக்கும், அந்தக் கூலிகளே “சதியாளர்கள்” என விமர்சிக்கும் இந்து என்.ராம், பார்ப்பன செயா, சோ, சு.சுவாமி போன்றவர்களுக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தும் இந்தத் துரோகக் குழுக்கள், இந்த விமர்சனங்களை எழுப்புகின்ற போர்வையில் ஒளிந்து கொண்டு நீங்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினால் மட்டும் இருந்த இடம் தெரியாமற் காணாமற் போய்விடுவார்கள். புலிகளின் மீது இந்த ஆரியக் கூலிக்கும்பலுக்கு இருக்கும் வன்மம், புலிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ்த் தேசிய சக்திகளையும் விட்டுவைப்பதில்லை.

இந்தியாவின் ராஜதந்திரம் தோற்றுவிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அய்யா கூறிவருகிறார். இன்னும் இந்தியத் தேசிய மனநிலையிலிருந்து முற்றிலும் விடுபடாத அவரது இக்கருத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் இந்தியத் தேசியததை ஏற்பவர்கள் தாம் என்று முழங்கி வரும் ம.க.இ.க.வின் பார்ப்பனீய செயல்பாடுகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.

உண்மையான தமிழ் உணர்வாளர்கள், இந்தியத் தேசியத்தை ஏற்கவில்லை என்பது இந்த கும்பலுக்கு நன்கு தெரியும். இருந்தாலும், அவ்வப்போது நெடுமாறன் போன்ற பலவீன சக்திகளை மய்யப்படுத்தி தமிழ் உணர்வாளர்களை, இனவாதிகள் எனறு சேறடிக்க வேண்டும் என்று செயல்படுவது இவர்களது தமிழ்நாட்டு வேலைத்திட்டத்துள் ஒன்று. இது தனது எஜமானர்களிடமிருந்து ம.க.இ.க. கற்றுக் கொண்ட பார்ப்பனிய ராஜதந்திரம் போலிருக்கிறது. இதன் ஒரு பகுதியாகத் தான், புலிகள் மீது எப்படி யாழ்ப்பாண வெள்ளாளர் மனநிலை உள்ளவர்கள் என்று முத்திரைக் குத்தப்படுகின்றதோ அதே போல, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்கள் மீது தொடர்ந்து ஆதிக்க சாதி வெறி முத்திரை குத்தப்படுகின்றது. புலிகளுக்கு சோபாசக்தி போல, தமிழ்நாட்டு தமிழ்த் தேசியர்களுக்கு மதிமாறன் போன்றவர்கள் இதற்கேற்ப செயல்படுகின்றனர்.

வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் குறிப்பிட்டது போல, தமிழர் என்ற ஒற்றுமை உணர்வை சீர்குலைக்கவே உளவுத்துறையினர் சட்டக்கல்லூரி சாதி மோதலை தூண்டியிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். இது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. ஈழத்தில் ஏற்பட்டுள்ள இன அழிவால் தமிழகத்தில் தற்பொழுது ஓரு தமிழ்த் தேசிய அலை மெல்ல எழுந்து வருகின்றது. அனைத்துத் தரப்பிலிருந்தும் “நாம் தமிழர்” என்ற முழக்கம் சாதி வேறுபாடின்றி, மத வேறுபாடின்றி மெல்ல அரும்பி வருகின்றது. இச்சூழல் ஆரிய இந்தியத் தலைமைக்குத் தலைவலியைக் கொடுத்துள்ளது. இதனை சீர்குலைக்க மற்றொரு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழர் என்ற அடையாளத்தை அழித்து சாதி வேற்றுமையை முதன்மைப்படுத்துவது தான் அது. இல்லையெனில், எப்பொழுதோ எழுந்த ஒரு விவாதத்தை “நாம் தமிழர்” என்று எல்லோரும் உணர்ந்து வரும் இவ்வேளையில் வெளியிட்டு, தமிழ்ச் சமூகத்தின் சாதி வேற்றுமைகளை வெளிச்சமிட்டுக் காட்ட வேண்டும் என்று எண்ணுகிற “குமுதம்” இதழ் குசும்பிற்கு சற்றும் சளைக்காத மதிமாறன்கள் தற்பொழுது வேகமாக செயல்படவேண்டிய அவசியம் என்ன?

நட்பு சக்திகள் போல் வேடமிட்டு வரும் சீர்குலைவு சக்திகளை நாம் அடையாளம் கண்டு கொண்டால் தான் நாம் எதிரியை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும் என்ற புரிதலை நாம் பெற்றாக வேண்டும். இது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. இந்தக் கூலிக்கும்பலில் சிக்கியிருக்கும் இளைஞர்கள், இனியாவது சிந்திக்க வேண்டும்.

- அதிரடியான் ( athiradiyaan@gmail.com

Tuesday, August 25, 2009

பண்டார வன்னியனும் காக்கை வன்னியனும்


ஆங்கிலேயப்பிரபுவின் அரண்மனை நோக்கி
நடந்துபோகிறான் எட்டப்பன்
அவன் காலடியில் கொட்டுகின்றன
தங்க நாணயங்கள்
ஆனால் அதன்பால் ஓடிய இரத்தஆறு
பின்னர் வரலாறு

பண்டாரவன்னியனின் பரணிபாடும்
வன்னிக்காடுகளின் மரப்பட்டைகளுக்குள்
இன்னும் காக்கைவன்னியன் ஒளிந்திருக்கிறான்

வரலாற்றை மெல்லத்தடவிப் பார்க்கிறேன்
அதன் நியாயத்தராசு இன்றுவரை
ஏனோ சரியாய் இருந்ததில்லை


சரித்திரத்தில் ஒரு மாவீரனை
பிரசவிக்கும் வரலாறு
பின்பக்கமாய் ஒரு புழுவையும் துப்பிவிடுகிறது
அதன் வலி துளித்துளியாய் சிதறிக்கிடக்கிறது.

இது காலக்காகிதத்தில்
ஆங்காங்கே தெறித்திருக்கும் கறுப்பு மை
ஒரு இன முரண்பாட்டின்மேல் திணிக்கப்பட்ட
மைய இழை
வரலாற்றின் வீதிவழியே
மெல்ல சுவாசித்தால்;
காலம் புரிந்த பலாத்காரத்தின் வடு புரியும்
துரோகத்தனங்கள் நெருஞ்சிகளாய்
துருத்திக்கொண்டிருப்பது
தெரியும்
யார் இவர்கள்
இழிதொழில்தொங்கும் மரங்காய்ச்சிகள்
மரணக்காற்றோடு கைகோர்த்து நகர்வலம் வருவார்கள்
இரத்தக்கறைகளிலிருந்து வெள்ளிக்காசை எண்ணுகிறார்கள்
தமிழ் பக்கங்கள் ஒவ்வொன்றிலும்
ஒரு சிவப்புச்சாயம் பூசப்பட்டிருக்கிறது
இந்த மொழி விபச்சாரர்களின் கைகளினால்
பூமி சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது

இதோ
இந்த நூற்றாண்டின் துரோகம்
அந்தத் தீவிற்குள் மெல்ல நுழைகிறது
கூடு அறுக்கப்பட்டது
அடுத்தடுத்து நடந்தவை காலத்தின் கண்ணாடி

மரபறுந்த அணுக்களுடன் வரலாறு புணரும்போது
இந்த நீலிகள் ஜனிக்கிறார்கள்
அதனால் பிறப்பு வேரறுந்துபோகிறது

வரலாற்றுப் புத்தகத்தில் பின்நோக்கி மெல்ல நடக்கிறேன்
சதைகளும் பிணங்களுமே பக்கங்களில் கிடக்கிறது
போர் முழக்கம் இல்லாத காற்றழுத்தம் இல்லையங்கே
காலப்பூதத்தின் மார்பை
என் கூரிய நகங்களால் கிழித்தெறிந்தபடி நடக்கிறேன்
வரலாறே
நீ படைப்பதை நிறுத்திவிடு
இல்லையேல் சரித்திரத்தை அழித்துவிடு



-சாமிசுரேஷ்



Thursday, April 09, 2009

சுயநலமற்றவர்கள்

கடவுளைப் பற்றி நான் எதிர்ப்பாய் இருக்கிறேன் என்றால், ஏனப்படி இருக்கிறேன் என்று ஒரு கடவுள் பக்திக்காரரும் சிந்திப்பதில்லையே, நான் ஏன் கடவுள்களை ஒழிக்கவேண்டுமென்கிறேன்? கடவுளை உண்டாக்கிக் கொண்ட எவருமே யோக்கியமான அல்லது யோக்கியத்தன்மையுடைய கடவுளை ஏற்படுத்திக் கொள்ளவில்லையே!

அவரவர் சுய நலத்திற்கேற்ப, முட்டாள் தனத்திற்கேற்ப, ஒழுக்கமற்ற, நேர்மையற்ற, சக்தியற்ற கடவுள்களையும், தங்கள் தங்கள் சுயநலத்திற்கேற்ற கடவுளையும், தன் எதிரிகளை ஒழிக்க வேண்டுமென்கிற ஆவலுக்கேற்ற கடவுள்களையும் உண்டாக்கிக் கொண்டால் - அவற்றை, அதை - அவற்றால் பாதிக்கப்படுபவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ள முடியுமா? சுயநலமற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

உலக மனித சமுதாயத்திற்கு ஒருவன் தொண்டு செய்ய வேண்டுமானால், முதல் தொண்டாக இப்படிப்பட்ட கடவுள்கள் ஒழிப்பு வேலையில் இறங்கினால் தானே அவன் உண்மையான, யோக்கியமான - அறிவாளியான தொண்டனாக இருக்கமுடியும்.

கவலையும் - துன்பமும் கடவுள் சித்தமா?

உதாரணமாக ஒரு மனிதன், தான் மற்ற மனிதனை விட மேலான, மேல் பிறவியான உயர்சாதி மனிதன் என்று சொல்லிக் கொண்டு, அதற்காகவென்று ஒரு கடவுளையோ, பல கடவுளையோ கற்பித்துக் கொண்டு, அதுவும், அயோக்கியத்தனமான - ஒழுக்கங்கெட்ட கடவுள்களைக் கற்பித்துக்கொண்டு, “அவைகள் தான் என்னை - எங்களை உயர்சாதியாய்ப் பிறப்பித்தது’’ என்றால், அந்த உயர் சாதியல்லாத மற்றவன் அதனால், அவற்றால் இழிசாதி - கீழ்சாதியாக ஆக்கப்பட்டவன் அந்த அவற்றிற்கு ஆதாரமாகக் காட்டப்படும் கடவுளை - கடவுள்களை ஒழிக்க - அழிக்க பின்னப்படுத்த முன்வராதவன் அறிவாளியாவானா? மனிதனாவானா? மானமுள்ளவனாவானா? தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ளத் தகுதியுடையவன் ஆவானா?

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் யாராகத்தான் இருக்கட்டுமே? அவர்களை எதற்காக கடவுள் ஏற்பட்டது - அதனால் உனக்கு என்ன பலன் என்று கேட்டால் என்ன பதில் சொல்வான்? அவன் ஏதாவதொரு பதிலைச் சொல்வானானால் அதனால் எல்லா மக்களும் பயனடைகிறார்களா - மகிழ்ச்சியடைகிறார்களா? யாராவது துக்கம், வேதனை, இழிவு, கவலை அடையாமல் இருக்கிறார்களா என்றால் என்ன பதில் சொல்வான்? மகிழ்ச்சி, நலம் மேன்மையடைந்திருக்கும் எவனும் “கடவுள் சித்தத்தால்” என்பான். அவை இல்லாதவன்

அவற்றிற்கு நேர்மாறான துன்பம், தொல்லை, கவலை அடைந்து கொண்டிருப்பவன் முட்டாளாய் இருந்தால் கடவுள் சித்தம் என்பான். ஏனப்படியென்றால் என் கர்மம் என்பான். இப்படிப்பட்ட அயோக்கியர்களுக்காக, மடையர்களுக்காக நாமும் இவர்களோடு சேர்ந்து கொண்டு இந்தக் கடவுளைக் காப்பாற்றுவதா?

யார் மனமும் புண்படாது

“உயர்” சாதிக்காரன் நலன் அனுபவிப்பவன், கடவுளைக் காப்பாற்றினால் - "தாழ்ந்த” சாதிக்காரன் கேடு அனுபவிப்பவன், கடவுளை ஒழிப்பது என்பதுதானே நியாயமும் நேர்மையும் ஆகும்; அறிவும் ஆகும்.

அப்படிக்கில்லையானால் அவன் அடிமை, மானமற்றவன், கூலி, சுயநலக்கார மடையன் என்றுதானே சொல்லப்படவேண்டும்.

ஆகவே தோழர்களே!

கவலையும், துன்பமும், இழிவும் உள்ளவர்களே சிந்தியுங்கள்.உங்களுக்கு விமோசனம், விடுதலை, மனிதத்தன்மை, கடவுள் ஒழிப்பிலும், அழிப்பிலும், இழிவுப்படுத்துவதிலுந்தான் இருக்கிறது.

இதனால் யோக்கியமான, அறிவாளியான யார் மனமும் புண்பட இடமில்லை. சுயநலத்திற்காக சிலர் ஆத்திரப்படலாம். மனம் புண்படுகிறது என்று சொல்லலாம். அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்; சிறிதும் அச்சப்படாதீர்கள்; நாம் யாரையும் மனம் புண்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை; செய்யவில்லை; இதற்காக அறிவற்றவர்களால், சுயநலக்கார்களால், கூலிகளால் நமக்குத் தொல்லை ஏற்பட்டால், மகிழ்ச்சியோடு ஏற்று மானத்தோடு பாய்ந்தெழுங்கள். யார் மீதும் வெறுப்பு - குரோதம் கொள்ளாதீர்கள்.

தந்தை பெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-36 -37

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா (oviyathamizh@gmail.com)

Saturday, March 07, 2009

கற்பழிக்க உதவுங்கள்!


தோழர்களே! நான் ஏதோ எனக்குத் தெரிந்தவரை சீர்திருத்தம் பேசி வருகிறேன். நான் ஒருவனே சொல்லிக் கொண்டிருந்தால் முடியுமா? மேல்நாட்டில் நான் பிறந்திருந்தால் பெர்னாட்ஷாவைவிட மேலாகக் கொண்டாடுவார்கள், இங்கு பார்ப்பன ஆதிக்கம் இருக்கின்ற காரணத்தால், என்னை அப்படியே இருட்டடிப்பு செய்து வருகிறார்கள். இதை ஏன் கூறுகிறேன் என்றால், இந்த நாட்டில் அவ்வளவு அநீதிகள் நடந்து வருகின்றன.

ஒரு நாள் பிர்லா மகனின் கனவில் காந்தி மகான் தோன்றினாராம். உடனே தூக்கம் கலைந்த மகன் தன் தந்தையிடம் சொல்ல அதற்கு அவர், வேறு எதற்கு வந்திருப்பார், எல்லாம் பணத்திற்குத்தான் என்று கூறி, தொகை போடாத ஒரு செக்கை கையெழுத்து மட்டும் போட்டு அனுப்பி விட்டார். இம்மாதிரி பெரிய வியாபாரிகளிடத்தில் கொள்ளையடித்து கட்சி வளர்த்து அவர்களின் அரசாங்கமாக உருவாயிற்று. காந்தி பிர்லா வீட்டில்தான் இறந்தார்; பட்டேலும் அப்படித்தான்.

இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு 5,6 துணிமணிகள் உடுத்துகிறார்கள். 150 வருடங்களுக்கு முன் மார்பின் மேல் துணியைப் போடாமலே இருந்திருக்கிறார்கள். பெரிய பணக்கார வீடுகளில் மார்புக்குக் கச்சை மாத்திரம்தான் கட்டியிருப்பார்கள். திருமலை நாய்க்கன் வீட்டுப் பெண்களைப் படத்தில் பார்த்தால் தெரியும். தொப்புள் நன்றாகத் தெரியும். மார்பகம் ஒன்றைத்தான் கச்சை கட்டி நன்றாக இழுத்து கட்டியிருப்பார்கள். பிறகு கலெக்டர் உத்தரவு போட்ட பிறகுதான் நாமெல்லாரும் துணி போட ஆரம்பித்தோம். நம் கொடுமைகளை அறிந்து அதற்குப் பரிகாரமாக ஏதாவது புரட்சி செய்தால்தான் முடியுமே தவிர, வாயிலேயே பேசிக் கொண்டிருந்தால் ஒன்றும் காரியத்தில் நடக்காது.

தமிழனைச் சூத்திரன் என்று ஒரு கூட்டம் கூறுகிறதே! அதை எதிர்க்க நமக்குத் துணிவு இல்லை என்றால் என்ன அர்த்தம்? எதற்காக நமக்கு 3000 வருடங்களாக ஆயிரக்கணக்கான கடவுள்களும், கோடிக்கணக்கான கோயில்களும் இருக்க வேண்டும்? குழவிக் கல்லைக் கும்பிட வேண்டும்? மாட்டு மூத்திரத்தை எதற்காகக் குடிக்க வேண்டும்? 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்ன செய்தார்கள்? அவர்களுக்கு எப்படி அந்தப் பட்டம் கிடைத்தது? புத்தர்களை, ஜைனர்களைத் திட்டினார்கள், தீ வைத்தார்கள், பவுத்தப் பெண்களைக் கற்பழித்தார்கள். பார்ப்பான் சொற்படி வேத, புராண, மனுதர்மங்களை மக்களிடையில் பிரச்சாரம் செய்தார்கள். அதனால் பட்டம் கிடைத்தது.

நம் கருத்துக்குத் தகுந்தபடி 2000 வருடங்களுக்கு முன்பு புத்தர் கொள்கைகள் தோன்றின. பார்ப்பனர்கள், பவுத்தர்களைக் கொன்று, பள்ளி மடங்களுக்குத் தீயிட்டு, பண்ணக்கூடõத வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார்கள், அன்பே சிவம் என்று சொல்கின்ற சைவர்கள், திருவத்திபுரத்தில் போய் பார்க்க வேண்டும் - இன்றைக்கும் சமணர்களைக் கழுவிலேற்றிய பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை! திருவத்திபுரத்தில் சைவர்கள், வேதம் பெரிது என்றார்கள். சமணர்கள், அறிவுதான் பெரிது என்று சொன்னார்கள். இரு பெயரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி நதியில் விட்டார்கள். அதில் வேதம் என்று எழுதியிருந்த சீட்டு நீரை நோக்கி எதிர்த்துப் போனதாம். ஆகவே, அறிவுதான் பெரியது என்று சொன்ன 100க்கும் மேற்பட்ட சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றனர். மேற்கண்ட நிகழ்ச்சிகளை, சதுரம் கருங்கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

இப்படி ஆரிய மூடப்பழக்கங்களை எதிர்த்து யார் கூறியிருக்கிறார்கள்? எல்லோரும் டாலர் முதல்கொண்டு போட்டு வணங்கி வரும் சாயிபாபா, ராமகிருஷ்ணர், விவேகானந்தர், யாராவது ஒருவர் கூறினார்களா? புத்தர் ஒருவர்தான் ஆரியத்தின் இந்து மதத்தின் மண்டையைப் பார்த்து ஓங்கியடித்தார். “மனிதன் தன் வாழ்க்கையில் துன்ப இன்பங்களை அனுபவிக்கிறான். தெரியாத ஆத்மாக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதைவிட "தெரிகிற ஆத்மாக்களாகிய' மனிதர்களின் துன்பத்திற்கு வழி தேட வேண்டும்'' என்றார் புத்தர்.

தேவாரம் திருவாசகம் படித்துப் பாருங்களேன். திருஞான சம்பந்தன் என்னும் பார்ப்பனன் 3 ஆம் வயதிலேயே பாட்டுப் பாடினானாம்! இவன், பவுத்தர், சமணர்களை சண்டாளர்கள், அயோக்கியர்கள் என்று கூறி, அவர்கள் பெண்களைக் கற்பழிக்க உதவ வேண்டுமென்று கடவுளை வேண்டினானாம். இந்தப் பாட்டுக்களை மடாதிபதிகள் தங்கள் பள்ளிகளில் வைத்து, பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்!

நன்றாக யோசித்துப் பாருங்கள்! புத்தர் தன் கொள்கைகளை வகுத்து சுமார் 2500 ஆண்டுகளாகின்றன. இதுவரை யாரும் அவர் பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடியதில்லை. ஆனால் இப்பொழுது நாடெங்கும் கொண்டாடுகிறார்கள். காரணம் என்ன? புத்தர் இந்த பார்ப்பனர்களுக்காக தம் கொள்கையை மாற்றிவிட்டாரா, பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்களா என்றால் இல்லை. மக்கள் புத்தரின் கொள்கைகளை ஒத்துக் கொண்டார்கள். மக்களுக்குப் புத்தி வந்து விட்டது. மக்கள் முன்னேற்றமடைந்து வருகிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது.