Friday, August 15, 2014

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா?

1947 ஆகஸ்டு 15 இந்தியா,  பாகிஸ்தான் பிரிவிற்குப் பிறகான ஒரு தனி நாடாக கட்டமைக்கப் பட்ட பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், தேசிய இனங்கள், ஏழைகள், திருடர்கள், எளிய மக்கள் , ஏமாற்றும் கடவுள்கள், அவர்களை பயன் படுத்தும் மூடர்கள், அவர்களின் வயிற்றில் அமிலத்தை வார்த்த இடதுசாரிகள், திராவிட சித்தாந்த பேரலைகளை உண்டாக்கிய பெரியார்கள், இந்துக்களின் முகத்திரையை முடிந்த அளவுக்கு கிழிக்க முற்பட்ட பேராசான் அம்பேத்கர்.... இதற்கெல்லாம் மேல் இவரால் தான் இதனால்தான் என்று இன்று மோடியை கட்டமைத்த மீடியா பிம்பங்களின் ஒரே உருவமான திருவாளர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி.

இத்தனை சிக்கல்களுக்கும் மத்தியில்தான் இந்தியா இங்கிலாந்து என்ற ஒரு பேரரசில் இருந்து விடுபட்ட ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டது,  குண்டூசி முதல் குண்டி கழுவும் காகிதம் வரை பாகப் பிரிவிணைகள். சேர்களும் நாற்காலிகளையும் விட மனிதர்கள் அத்தனை மதிப்பு பெற்று பாகம் பிரிக்கப் படவேண்டிய பொருளாய் இல்லாத காலம்.

ஜவஹர்லால் நேருவும், இரும்பு மனிதர் படேலும் இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வர முயன்று தங்களை பிரபல்யம் செய்துகொண்டிருந்தபோது ஒரு கோவணாண்டி மனிதர் கல்கத்தாவில் வழக்கம் போல முதல் தர உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அவரி நாடகத்தை வழக்கம் போல பேராசான் பெரியார் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருந்தார். பேரறிஞர் அண்ணா சில கோப தாபங்களால், கருத்து வேறுபாடுகளால் கருப்புக் கொடி தேவையில்லை எனக்கென்று கலகம் செய்து கொண்டிருந்தார், தமிழகம் ஒரு திரிசங்கு நரகத்தில் ராஜாஜியின் இந்தியாவின் முதல் கவர்னர் ஆட்சியின் கீழ் தொங்கிக் கொண்டிருந்தது.

போனவை போனதாகட்டும் நிகழ்காலத்திற்கு வருவோம், இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்  அப்துல் கலாம் என்ற ஒரு புனித பிம்பம், இன்றைக்கு ஆளும் இதே பாஜகவால்,  உண்டாக்கப் பட்டு கட்டமைக்கப் பட்டும் அதன் பின்  கீதையும் ராமாயணமும்,  குரானிலும் பைபிளும் சொல்லாத புதிய அத்தியாயமான 2020 என்ற முழு ஹிந்திய தேசத்திற்கு வித்திட முயற்சித்த  அண்ணார் அப்துல் கலாம் . ஒரு இந்துவாக இருக்க நீ பிறப்பால் இந்துவாக இருந்தால் போதும் , இந்தியனாக இருக்க பிறப்பால் முசல்மானாகவும், வாழகையால் இரண்டு பங்கு இந்துவாகவும் இருக்க வேண்டும் என்று காஞ்சி காமகோடி  பீடத்தில் மண்டியிட்டு , நிரூபித்த மகான்.

இந்த கருமங்கள் எல்லாம் போய் சேர்ந்துவிட்டது என்று நானும் நீங்களும் கனவுகொண்டிருந்த வேளையில் , அன்னா ஹசாரே என்றொரு புனித பிம்பம் தன்னைத்தானே சுயம்புவாக உருக்கொண்டு, ஒரு புதிய அலையை உருவாக்கி,  தன்னை ஒரு நவீன உலக பெருமகன், தன் சீடர்கள் எல்லாம் எந்த கட்டுப் பாடுகளுக்குள்ளும் அடங்காத பிறவிகள் என்ற புதிய சட்டம் படைக்க முயன்று முற்றும் தோல்வி அடந்த அரவிந்த் கேஜ்ரிவால்களும்,  டெல்லியில் மண்ணைக் கவ்வியபோது பாபா ராம் தேவ்கள் ராக்க்கி சாவந்துகளுக்கு கங்கனம் கட்டவா இல்லை ராக்கி கட்டவா என்று சிந்தனை செய்துகொண்டிருந்தார்கள்.

இந்த கால கட்டங்களில் தான் ஈழப் போரும் அதற்கு ஆதரவாளர்களாக ஊடக பிம்பங்களால் கட்டமைக்கப் பட்ட லொட்டு லொசுக்கு இவர்களுக்கு ஆதரவாக உயிகளை இழந்த முத்துக் குமார்கள். இவர்களின் ஒரே எதிரியான தென் இந்திய திராவிட சித்தாந்தங்களின் ஒரே கடை ஆளான கருணாநிதியை நோக்கி திரும்பின. வெற்றி பெற்ற பக்கம் இருப்பதாக தங்களை கருதிக் கொண்டன.

அதுவும் போகட்டும் என்றுதான், தமிழகத்தில் திராவிடத்தை வீழ்த்தவென்றே ஊடக ரவுடிகளால் உண்டாக்கப் பட்ட சீமான்களும் சீமாட்டிகளும் பெரும் வெளிச்ச வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள், அப்போது அலைகளில் ஒதுங்கிய வைகோக்கள், பழ மாறன்கள் , சீமான்கள் , மணியன்கள், எல்லாவற்றுக்கும் மேல் கோட நாடு சீமாட்டி.

சீமாட்டிகளுக்கு சேவகம் செய்ய வந்த பிரவீன் குமார்கள், தேர்தல் ஆணையர்கள் வேடத்தில் வந்த தே...............................ர்தல் ஆணையர்கள்...  ஆனாலும் என் பேராசான் பெரியார் சொன்னது போல, ஒரு அடிமையிடம் இருந்து ஒன்னொரு அடிமையிடம் தானே நாம் சுதந்திரத்தை அடகு வைத்திருக்கிறோம்?

 ஆனால் இத்தனை இழிவுகளுக்கும் பின்னால் எனக்கு இந்தியா என்ற ஒரு உடோப்பியா தேசத்தை கொண்டாட ஆயிரம் காரணங்கள் உண்டு,  நான் வைக்கும் விமர்சனங்கள் என்பவை என் சக மனிதம் கொண்டாடும், மிக முட்டாள்தனமான கடவுள் மேல், அந்த கடவுளின் மூன்றாம் தர தரகர் மேல் இந்த தரகர்கள் மேல் அளவு மீறிய பற்று வைக்கும் முட்டாள் மாக்களும் வைக்கும் அன்புமேல் எனக்கும் ஒரு கோபம் இருக்கும். இதை எதைக் கொண்டு தீர்க்க?. மோடிகளும் காவிகளும் அரசாளும் நாடாக இருந்தாலும், எங்காவது ஒரு மூலையில் ஜனநாயகம் என்ற பேரால் சக மனிதர்கள் மேல் கொஞ்சமாவது துளிர்த்து நிற்கும் அன்பு.

இன்றும்  நாளையும் , இதைப் போலவே எழுதும் ஆயிரத்து சொச்சம் எழுத்தர்களும் இதுபற்றி எழுத ஆயிரம் காரணங்கள் உண்டு முற்றுப்பெறாத இந்த வியாக்கியானங்களை, விமர்சனங்களை என்னால் புறக்கணிக்க முடியாமல் இந்த அகண்ட தேசம் எனக்கும் ஒரு இடம் கொடுத்தது வெறும் இயல்பல்ல. நாளையே நான் முன் எப்போதோதோ இப்போதைய தமிழக முதல்வருக்கு எதிராக எழுதிய நிலைத் தகவல்களுக்காக கைது செய்யப் படலாம், இதே தமிழக முதல்வர் என் விடுதலைக்காக போராடவும் செய்யலாம், பிரபாகரனை கைது செய்து தூக்கில் இடுவோம், போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள், என்ற பித்தலாட்டம் போல, இதுவும் கடந்து போகும். இதே முதல்வர்,  தனித் தமிழ் ஈழம் ஒன்றே தமிழர்களின் நிரந்தர விடிவுகாலம்  இதை அடைவதே எமது குறிக்கோள் என்று போர் முழக்கம் செய்வதையும், அதை, நம் 56" மார்பகம் கொண்ட மோடிகளின், மார்புகளில் பார்ப்பதுவும்,  விதியா இல்லை இந்த பாமர மக்களின் மதியில் கொண்டு வந்து சுதந்திரம் என்ற  பெயரால் விவாதிக்கும் சதியா என்று தேடி தேடி பேசித் தீர்ப்போம் வா,

அந்த நாள் வரை... ஹேப்பி இன்டிபெண்டன்ஸ் டேய்ய்ய்ய்ய்ய்ய் !!

Tuesday, August 12, 2014

அம்மான்னா சும்மா இல்லடா!!!

எங்கள் இதயமே,
குருதியில் ஓடும் ரத்தமே,
நடுவில் இருக்கும் சென்டரே,
ஓரத்தில் இருக்கும் சைடே,
நதியில் ஓடும் ஆறே,
கடலில் இருக்கும் ஆழியே,
காற்றில் மிதக்கும் வாயுவே,
மூச்சில் இருக்கும் சுவாசமே,
கண்ணில் தெரியும் பார்வையே
இப்படி எல்லாவற்றிலும்
இரண்டிரண்டாக இருக்கும்
இரட்டை இலையின்
இயற்கை காட்சியே.
குதிரைக்கு ரெக்கை முளைக்க
வைத்த கோமகள் ஆட்சியே
எங்கள் தங்கத் தலைவியே
தன்னிகரற்ற முதல்வியே
மாண்புமிகு இதய தெய்வமே
எங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும்
பயமே....17 ஆண்டுகளாய் வாய்தா
வாங்கி சாதனை படைக்கப் போகும்
எங்கள் பெண் கஜினியே.

ஃப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பஆ ஆ ஆ மூச்சு விட்டுக்கொள்கிறேன். ஒரு முறை எழுதுவதற்கே நாக்கு தள்ளி விடுகிறது ஆனால் சலிக்காமல் மலைக்காமல் சட்டமன்றத்தில் எல்லா எதிர் கட்சிகளையும் கவனமாக கலாட்டா என்ற பெயரில் வெளியேற்றிவிட்டு ஆளுங்கட்சி நடத்தும் காமெடி தர்பார் மேலே நீங்கள் படித்த கவிதையை (?) விட மரண மொக்கையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

110 விதி என்பதே இன்னொரு நாள் அவகாசம் இல்லாத அப்போதே அவையில் சொல்லிவிட வேண்டிய அறிவிப்புகளை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்ற என்றே ஆட்சியாளார்களுக்கு ஒரு அவசரத் தேவைகளுக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது.

அம்மையார் ஆட்சியில் 110 விதி என்பதை எப்படி எல்லாம் பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு நகைச்சுவையாக ஒரு உதாரணம் சொல்ல ஆசைதான் ஆனால் அம்மையாரின் 100க்கும் மேற்பட்ட 110 அறிவிப்புகள் எல்லாம் நகைச்சுவைதானே? ஒரு அறிவிப்பு, இன்று முதலமைச்சர் ஆணைப்படி

//Statement No.036 of the  Chief Minister as per Tamil Nadu Legislative Assembly Rule 110 on new schemes for the development of Courts - 11.8.2014:

"ஜனநாயகத்தின் தூண்களுள் முக்கியத் தூணாக விளங்கிக் கொண்டிருக்கின்ற நீதித் துறை நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், நீதிமன்றங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், நீதிபதிகளுக்கு தேவையான குடியிருப்பு வசதிகளையும் எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தித் தருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்காக, 225 கோடியே 19 லட்சம் ரூபாய் நிதியினை எனது தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.//


மனசாட்சி இருப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு மாநில முதல்வர் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக தன் மேல் நடக்கும் வழக்குகளை எப்படியெல்லாம் இழுத்து வளைத்து ஒடித்து வாய்தா மேல் வாய்தாக்களை வாங்கி இன்று வரை சட்டத்தை தன் கைப்பாவையாக்கி வைத்திருக்கிறார்.? அவர் ஆணைப்படி ஒதுக்கப் பட்ட தொகை குறித்தோ நீதி பாதிகளுக்கு ( எழுத்துப் பிழை இல்லை) வழங்கப் படும் சலுகைகள் குறித்தோ எனக்கு எந்த ஆதங்கமும் இல்லை.

ஆனால் சட்டத்தை தன் போக்கில் வளைத்து ஒரு மாமாங்கமாக நீதியில் இருந்து தப்பித்துக் கொண்டே இருக்கும் ஒரு முதல்வர் இருக்கும் மாநிலத்தில் ஏழைகள் நீதி என்பது எட்டாக் கனியாக அல்லவா இருக்கிறது?

மனல் கொள்ளையை தடுக்கப் போகும் காவலர், கொல்லப் படுகிறார். அரசு அறிவிப்பு இப்படி வருகிறது கடமையை செய்ய டிராக்டர் வண்டியில் ஏறிய காவலர் தவறி விழுந்து வண்டி ஏறியதில் அதே இடத்தில் மரணமடைந்தார். காவலரின் குடும்பத்துக்கு சில லட்சங்கள் உதவி.

சில காவலர்களால் சில பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப் படுகிறார்கள், அரசு அறிவிக்கிறது, சில லட்சங்கள் உதவி, இங்கே உயிருக்கும் மானத்துக்கும் நீதிக்கும் நீதிபாதிகளுக்குமே சில லட்சங்கள்தானே மதிப்பு?
இல்லையென்றால் ஒரு வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவர்களை கண்டறிந்து கைது செய்வதற்குப் பதிலாக இரவோடு இரவாக போட்டுத் தள்ளி புகழ் பெற்ற அமையார் காவல் துறையை கைய்யில் வைத்திருப்பது வெறும் வேடிக்கை விளையாட்டுக்காகவா என்ன? இந்த அழகில் எல்லா கொள்ளையர்களும் ஆந்திர மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டார்கள் என்று அறிக்கை விட்டிருப்பாரா? கொள்ளையர்களை கோட்டை விட்டதைத்தான் எத்தனை நாசூக்காக சொல்கிறார் பாருங்கள்.

ஆனால் ஆட்சியில் அமர்ந்தது முதல் ஆயிரத்தை நெருங்கும் கொலைகள், சில ஆயிரங்களை நெருங்கும் பாலியல் வன்முறைகள் பல்லாயிரங்களை தொட்ட பகல் கொள்ளைகள், என்று சட்டமும் ஒழுங்கும் சந்தியல்லவா சிரிக்கிறது?, யாரைப் பார்த்து வாக்களித்து சொந்த செலவில் வாய்க்கு அரிசியும் போட்டுக் கொண்ட அப்பாவி வாக்காளர்களான நம்மைப் பார்த்து.

1200த்தி சொச்சம் பள்ளிக் கூடங்களை மாணவர் எண்ணிக்கை குறைவால் அம்மையார் மூடப் போவதாக ஒரு செய்தி வந்தது. நமக்கு அதெல்லாம் எதற்க்கு அம்மா திரையரங்குகள் திறந்தால் அதில் எஜிஆர் படம் பார்த்தால் போதுமல்லவா? மக்கள் பயனுற அம்மா மருந்தகங்கள். ஆரம்பித்த நாளில் கேள்விப் பட்டதோடு சரி இப்போதும் அதில் மருந்துகள் கிடைத்தால் ஒரு நல்ல தலைவலி மாத்திரை வாங்கி போட்டுக் கொண்டு உறங்கி விடுங்கள்.

அரசன் எவ்வழி மக்களும் அவ்வழி என்று முட்டாள் தனமாக எவனோ சொல்லி வைத்தான் டாஸ்மாக்கை தெருவுக்குத் தெரு திறந்து வைக்கும் அரசாங்கம் ஆண்டுக்கு 20000 கோடிகளுக்கும் மேல் லாபமாக ஈட்டுகிரதாம் கேட்டால் நலத்திட்ட உதவிகளை இதன் மூலம் தான் நிறைவேற்றுகிறதாம். இதைவிட ஒரு நல்ல தொழில் இருக்கிறது , ஆணுறைகளை மட்டும் இலவசமாகக் கொடுத்து ஆட்களை வெளிநாட்டில் இருந்து தருவித்து விட்டால் போதும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்.

அதில் கிடைக்கும் லாபத்தில் அம்மா எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டுக் கழகம் என்று ஒன்றை 110 விதியின் கீழ் ஆரம்பித்து விட்டால் போகிறது.

எத்தனையோ திட்டங்கள் அறிவிப்போடு கிடக்கின்றன பள்ளித் திட்டம் எதுவும் இல்லை , சட்டம் ஒழுங்கு சரியில்லை, ரேஷன் அரிசிகள் அளவை குறைக்கிறார்கள், பஸ் கட்டணம் பால் விலை உயர்கிறது. பள்ளிக் கூடங்கள் மூடப் படுகின்றன லாப் டாப் கிடைக்கிறது மின் வெட்டு உயர்கிறது பேனும் மிக்ஸியும் பரண் ,மேல் பூணைக் குட்டிகளோடு உறங்கிக் கொண்டிருக்கிறது.

டாஸ்மாக் தமிழன் ஒரு க்வாட்டரும் அம்மா இட்லி கடையும் இருந்தால் போதுமென்று முழு போதையில் வெயிலுக்கு இதமாக மரத்தடியில் மல்லாந்து கிடக்கிறான்.





பின் குறிப்பு : இனையக் குற்றங்களை குண்டர்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவருகிறார்களாம். இப்போது தெரிகிறதா? ஆரம்பத்திலேயே ஏன் அபிராமி அந்தாதி பாடினேன் என்று?

Tuesday, August 05, 2014

ஆப் கி பார்..... அரசாங்கமா இல்லை ஆர்.எஸ்.எஸ் சாங்கமா?

மோடியின் அரசாங்கம் பதவியேற்ற இத்தனை நாட்களில் குறைந்த பட்சம் மக்கள் நலத் திட்டங்கள் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் கூட ஒரு திட்டத்தை வகுக்கும் அளவுக்கு வக்கில்லாமல் மோடி தர்பாரில் காற்றாடிக் கிடக்கிறது.

சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் அளவுக்கு மோடியை, ஆஞ்சநேயர் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்களும் பாஜக தலைவர்களும் வாயைத் திறந்தாலே முத்துக்களை உதிர்க்கும் மோடிகளும் கூட மூடிக்கொண்டு கிடப்பது காலத்தின் கோலம் மட்டுமல்ல அவர்கள் மட்டும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்?

தேர்தலுக்கு முதல் நாள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோதே தெரிந்து விட்டது மோடியின் அரசாங்கம் எப்படி இருக்கப் போகிறது என்பது. இத்தனை நாட்களில் மோடியின் குஜராத் மாடல் ஃபேக் அரசாங்கம் கிழித்ததெல்லாம் காங்கிரசின் கொள்கைகளை இவர்கள் காப்பி அடித்தது மட்டுமல்லாமல் அதை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், ஈழ விவகாரம் முதல் கட்சத் தீவு வரை, சுவிஸ் வங்கியின் கருப்புப் பணம் முதல் ரயில்வே கட்டணம் வரை, பெட்ரோல் முதல் மரபணு மாற்றப் பயிர் வரை என்று ஏகபோகமாய் விளையாடிக் கொண்டே ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது.

அன்னிய முதலீட்டில் அவர்கள் படிப்படியாக உள்ளே விட்டார்கள் என்றால் பாஜக ஒட்டு மொத்தமாக கதவைத் திறந்து விட்டிருக்கிறது. ராணுவம் முதல் இன்ஸூரன்ஸ் வரை, ரயில்வே தொடங்கி, கக்கூஸ் கழுவுவது வரை, ரீடெய்ல் மார்கெட்டிங்கில் 100 சதவீதத்துக்கு பொங்கிய பாஜக இப்போது அதைத்தானே செய்து கொண்டிருக்கிறது?

இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை அமீரக திர்ஹம் 1= ரூ14+ ல் இருந்தது இப்போது அது 16+க்கு எகிறி இருக்கிறது என்ன ஒரு முன்னேற்றம்?

கம்யூனிஸ்டுகள் பேசுவதற்கும் வழியில்லை காங்கிரஸ் பேசவே பேசாது.

அரசாங்கம் நஷ்டப் பட்டால் மக்களைத்தானே பாதிக்கும் என்ற பாஜக சொல்வதில் ஒரு கார்ப்பொரேட் தனம் இருக்கிறது. கார்பொரேட் முதலாளிகளின் அரசாங்கமாகத்தானே இது வரை மோடியின் அரசு இருக்கிறது?, அதானிகளும் அம்பானிகளும் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மோடி காட்டிக் கொண்டிருப்பது மட்டும் தான் உண்மை.. இது கார்பொரேட்களின் அரசாங்கம் என்பதை வாரா வாரம் உயர்த்தப் படும் பெட்ரோல் டீசல் விலையேற்றம் காட்ட வில்லையா?

வெளியுறவுக் கொள்கைகளில் அகன்ற 56 " மார்பு கொண்டவரின் கொள்கைகளைத்தான் பார்த்தோமே. இலங்கை விவகாரத்தில் மோடி வந்தால் எல்லாம் சுபிட்சம் ஆகும் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை முட்டாளாக்கி பாஜகவின் வாக்கு வங்கி கூடிப் போனதாக பேசிய தரகர் தமிழருவி மணியன் 45 ஆண்டுகால (?) அரசியல் வாழ்வில் பாஜகவின் அடிப்படைக் கொள்கைகள் கூட தெரியாத அளவுக்கு மதி மயங்கிப் போனது உச்ச கட்ட காமெடி.

மக்களாட்சி என்பது அதிகாரம் ஒருவரிடம் குவிந்து போகாமல் பரவலாக்கப் பட வேண்டுமே தவிர இப்படி ஒட்டு மொத்தமாக எல்லா மட்டத்திலும் ஒரு கட்சியே ஆட்சியில் இருப்பதனால் ஏற்படப் போகும் விளைவுகளை இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

அதற்கான அறிகுறிகள் தான் ஹிந்தியை அலுவல் மொழியாக்க முயற்சி சமஸ்கிருத வாரம் என்று ஆர் எஸ் எஸ் ன் அகண்ட பாரதம் என்ற கொள்கையை சத்தமே இல்லாமல் நிறைவேற்ற தயார் ஆகிறது மோடியின் அரசு. அதை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் படிப்படியாகச் செய்யும் படேலுக்கு சிலை வைக்க பல நூறு கோடிகளை ஒதுக்கும் அரசாங்கம் கழிவரை வசதிகளுக்கும் கல்விக்கும் ஒதுக்கும் தொகை என்பது மிகச் சொற்பம்.

 காங்கிரஸ், அதிமுக. இரண்டுமே மக்களுக்காக இனி நாடாளு மன்றங்களில் பேசப் போவது இல்லை. அதிமுகவுக்கு நாடாளு மன்றத்தில் நரேந்திர மோடியை காய்ச்சி எடுப்பதை விட அம்மா புராணம் பாடினாலே போதும். அதைத்தான் அவர்கள் செய்யப் போகிறார்கள்

காங்கிரசுக்கு உள்ளுக்குள் மகிழ்வாகக் கூட இருக்கும்! அது பாஜக செய்யப் போகும் தவறுகளை சுட்டிக் காட்டாமல் காத்திருந்து அடுத்த தேர்தலின் போது கூடாரம் கலகலக்கும் நேரத்தில் உள்ளே புகுந்து கொள்ளலாம் என்று காத்திருக்கிறது அதற்குள் இருக்கிற குட்டி குட்டி மாநில கட்சிகளை மறுபடியும் ஓரணியில் திரட்ட வேண்டிய அவசியமும் தேவையும் அதற்கு இருப்பதால் மக்கள் பிரச்சினைகளை பேசும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இல்லை.

மக்கள் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான் ஓட்டுப் போடும் முன்பாவது ஒரு நிடம் சிந்தித்து பார்க்க வேண்டும் இல்லையென்றால் இப்போதும் இன்னும் வரப் போகும் 4 ஆண்டுகளிலும் அனுபவிக்கப் போவதை அனுபவிக்க தயாராய் இருக்க வேண்டும்.

#ஆப் கி பார்.......ஆர்.எஸ்.எஸ் சர்கார்