Thursday, July 17, 2014

நாத்திகம், பகுத்தறிவு பேசாமல் சமூக நீதி சாத்தியமாகுமா?

சில வாரங்களாகவே முகநூலெங்கும் தோழர்கள் குறிப்பாக திமுக உடன்பிறப்புகள் உட் கட்சி மோதலோ என்னவோ என்று நினைக்கும் அளவுக்கு நாத்திகம், பகுத்தறிவு,சமத்துவம், சமூக நீதி என்ற தளத்தில் தொடர்ச்சியாக ஒரு விவாதத்தில் ஈடுபட்டுக் கொள்ளுகின்றனர்.
இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. அடிப்படை சமூக நீதிகள் மறுக்கப்பட்டு அதற்கெதிராக கிளர்ந்தெழுந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமான நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக திராவிடர் கழகமும், கேட்கும் இடத்தில் இல்லாமல் சமூக நீதியை கொடுக்கும் இடத்தில் இருந்தால் தான் எதுவும் எளிதில் சாத்தியமாகும் என்ற அண்ணாவின் ஏற்பாட்டுக்கு இணங்க ஆரம்பிக்கப் பட்ட திமுக என்று இது ஒரு சமூக நீதிக்கான தொடர்ச்சி மட்டுமே.
சமூக நீதி சமத்துவம் எல்லாம் ஏன் மறுக்கப் பட்டன ? அவற்றுக்கான தீர்வு என்ன என்று தேடித்தேடி தேய்ந்த சமூக சமத்துவ முன்னோர்களான டி.எம்.நாயர், பி.டி தியாகராயர், முனுசாமி நாயுடு, போன்றவர்களும் அவர்களின் தொடர்ச்சியான தந்தை பெரியாரும் வளர்த்தெடுத்த தத்துவார்த்தமான சிந்தனைகளே திராவிடச் சிந்தனைகளானது. பின்னர் திராவிடர் கழகமான பின் தேர்தல் அரசியலில் இருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்ட தி.க சமத்துவம் சமூக நீதி ஆகியவற்றை வெல்ல வேண்டுமானால் முதலில் இவற்றுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் சாதிய கட்டுப் பாடுகளையும் அதை மிகக் கவனமான ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து மனு தர்ம ஆட்சியை நிலை நாட்டும் பார்ப்பனீயத்தையும் ஒழிப்பதே ஆகும் என்றனர். இதே கொள்கைகளை சமூக நீதியை கொள்கை அளவில் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதை ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே அடிமக்களுக்கும் படிப்பறிவு என்ற ஒற்றைக் காரணத்தாலே மட்டுமே பெரியாரால் காமராஜ் கொண்டாடப் பட்டார்.
கருத்து வேறுபாடுகளால் பிரிந்தாலும் , சமத்துவம் சமூகநீதிக் கொள்கை அளவில் ஒன்றாகவே இருந்த திமுக ஆட்சிக்கு வந்ததும் அண்ணா திராவிடக் கொள்கைகளையே ஆட்சி அதிகாரங்களில் செயல் படுத்தினார். அதன் நீட்சியாக வந்த கருணாநிதியும் பெரியார் அண்ணா வழியில் நின்றே அதனை செயல்படுத்த முனைந்தார்.
"சாதி மதப் பித்து என்னும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் எனும் ஞாயிறு பிறக்கும் " என்ற கலைஞரின் தொண்டர்களான நாம் இன்றும் அதனை கடைபிடிக்கிறோமா?
எனக்கென்னவோ இல்லை என்றே தோன்றுகிறது.
சமூக நீதி கிடைக்காமல் போனதன் அடிப்படையே சாதியும் மதமும்தான் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது அந்த சாதியும் மதமும் இன்றும் கட்டிக் காக்கப் படுவது கடவுளின் பெயரால் சமத்துவமாக இல்லாத சாமிகளால் என்ன சமூக நீதியை படைத்துவிட முடியும் ?, இந்த சாமிகளின் பெயரால் சாதிகளையும் அதன் வழிபாட்டு நெறிகளையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனீயம் என்று இது ஒரு விஷ வலைப் பின்னல். 
சமூக நீதியை நிலை நாட்டவே திமுக, பகுத்தறிவு பேச்சால் மட்டுமே தன்னை வளர்த்துக் கொண்ட ஒரு இயக்கம் அதற்க்காக போராடியே ஆட்சியை அடைந்த கழகம்,

//என் உடல் நிலைமை மிக மோசமாகி விட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம். இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்.காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக் கட்டாததால் சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவைகளைச் சிந்தித்தால் தெரிய வரும்.
ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சிவரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளை சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. // பெரியார் -1972 விடுதலை மலரில்.
ஆக சமூக மாற்றங்களுக்காகவும் சமத்துவ நீதிக்காகவும் உண்டான ஒரு இயக்கத்தின் தொண்டர்கள் நாத்திகம் பேசுவதையும் சாதி மத வேறுபாடுகளை பேசுவதையும் ஊக்குவிக்கத்தான் வேண்டுமே ஒழிய இவற்றால் நாம் ஓட்டு வங்கியை இழக்கிறோம் என்பதோ இல்லை இதனால் ஆட்சியை இழக்கிறோம் என்பதோ அறிவானதல்ல.
யாருக்கும் சுயமரியாதை கிடைக்க பாடுபடுவதே திமுகவின் அடிப்படைக் கொள்கை என்பதை உணரவேண்டுமே ஒழிய பகுத்தறிவு பேசாதே என்பது அல்ல. நாத்திகமும் பகுத்தறிவும் பேசாமல் எந்த நீதியும் சாதியின் கட்டுப்பாட்டால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் சாத்தியம் இல்லை. 
நாத்திகம் பேசாதே என்பதை விட கடவுள் நம்பிக்கை உள்ள திமுக ஆத்திகவாதிகள் ஏன் கலைஞரின் அணைவருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்காகவும், கருவறை நுழைவுக்கான உரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்க்காகவும், ஆத்திகவாதிகளால் மக்களை மூட நம்பிக்கைக்களுக்குள் தள்ளப் படும் கொடுமைகளைப் பற்றியும் பேசக் கூடாது? பகுத்தறிவை பேச நாத்திகவாதியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாத்திகம் பேச கடும் பகுத்தறிவு வாதம் தேவைப் படுகிறது.
தேர்தல் அரசியலை மீறி அதில் அடையும் வெற்றி தோல்விகளை தாண்டி திமுக என்னும் கட்சியை அதன் கொள்கைகள் மட்டுமே இந்திய அளவில் மாறுபடுத்துகின்றது. அது நாத்திகமா பகுத்தறிவா என்பதெல்லாம் அவர் அவர் சிக்கல். ஆனால் நாத்திகமும் பகுத்தறிவும் பேசாமல் , சமத்துவம் சமூக நீதிக்கான பெண்ணுரிமைக்கான எந்தக் கல்லையும் புரட்டிவிட முடியாது. அடிப்படைத் தத்துவங்கள் இல்லாமல் போனால் திமுக ஒரு அதிமுகவாக ஆகிவிடும் அபாயம் இருப்பதை உணர வேண்டும். அதை விட பாஜக கொள்கைகளே மேல்.
அதற்க்காக சிலை உடைப்பு போராட்டம் நடத்த வேண்டாம், அந்த சிலைகளை வழிபடும், அர்ச்சிக்கும் உரிமைகளை பேசுவோம்.


Wednesday, July 16, 2014

ஓடு காலியும் ஓடு காலியும்.

சட்டமன்ற கூட்டத் தொடரில் ஒரு அசிங்கம் அரங்கேறியுள்ளது. அசிங்கங்களே ஆட்சியில் இருக்கும் நாட்டில் இது என்ன ஒரு பெரிய அதிசயம் என்று கேட்டுவிடாதீர்கள் ஆனால் அந்த அசிங்கத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் இலக்கியச் சுவை வேறெந்த இலக்கியவாதிகளாலும் புரிந்துகொள்ள முடியாதது.

ஓடுகாலி என்று எதிர்கட்சியை பார்த்து ஆளுங்கட்சியின் ஜிங் ஜக் மேஜை தட்டும் மங்குனிப் பாண்டியன்கள் சொல்கிறார்கள், வானளாவிய அதிகாரம் கொண்ட பதவியில் இருப்பவரும் அந்த ஓடு காலி வார்த்தை ஒன்றும் அப்படி ஒரு கெட்ட வார்த்தை அல்ல என்று சபைக் குறிப்பில் அனுமதிக்கிறார், இதைக் கேட்ட வானளாவிய அதிகாரம் கொண்டவரின் அதிகாரத்தை நள்ளிரவில் கூட குட்டி  எழுப்பி தட்டிப் பறிக்கும் வல்லமை கொண்ட மாண்பு மிகு அதிகாரம் கொண்டவரும் 'குலுங்கி, குலுங்கி" சிரிக்கிறார்.

(இதுவே கலைஞராய் இருந்திருந்தால் நாங்கள் சொன்னது கஜானாவை , அதிமுக ஆட்சியை விட்டுப் போகும் போது ஓடு காலியாகத்தான் இருந்தது என்று நச் பஞ்ச் அடித்திருப்பார். அதெல்லாம் இவர்களுக்கு கலைஞரிடம் வாங்கிக் குடித்தாலும் வராது.)

சட்டமன்றம் முற்றாய் சந்தைக் கடையாய் மாறிப் போகிறது. இது ஜனநாயக நாடய்யா அப்படித்தான் இருக்கும் என்று வாதிடவேண்டாம் நண்பர்களே உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். அப்படி ஒரு வஸ்து இங்கே இருக்கிறதா என்ன?

ஜனநாயகத்தின் தூண்கள் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் இந்த நாட்டின் முதுகெலும்பில்லாத விளம்பர வருவாயைக் கொண்டே வயிறு வளர்க்க வெறும் வாயைக் கூட மென்று கொண்டே இருக்கும் எந்த மானமுள்ள பத்திரிகையும் இது பற்றி வாயே திறக்கவில்லை என்பது தற்செயலானதா என்ன?

நயன் தாரா யாரோடு லவ்வுகிறார், விஷால் திருட்டு விசிடியை தட்டிக் கேட்டார், என்று விளக்கு பிடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாய் இருக்கிறது. இந்த லட்சனத்தில் மவுலி வாக்கம் கட்டிட விபத்து வேறு 61 பேர்தானே போனார்கள் நல்லவேளை என்று எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பத்திரிகைகள் அடைந்துவிட்டன.

எங்கோ பெயர்தெரியாத நிர்பயாவுக்கு ஒன்றென்றதும் மாதக் கணக்கில் மைக்கில் புலம்பிய பாண்டேக்கள் ஒரு நாளாவது தமிழ்நாட்டில் தினம் நடக்கும் இதுபோன்ற செயல்களை வாய் திறந்து பேசுகிறார்களா?

இந்த லட்சணத்தில் இருக்கும் ஊடகங்கள் எதைத்தான் மக்களுக்கு சொல்ல வருகின்றன என்பதை விட எதற்க்காக எவர்களால் நடத்தப் படுகின்றன?
அதுவும் சரிதான் வாரம் ஒருமுறை உங்களை சந்திப்பேன் என்றவரிடம் ஏனம்மா எங்களை மாதம் ஒரு முறைக் கூட சந்திக்கவில்லை என்று கேட்க திராணியற்ற வீராதி வீரர்கள் தானே .

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னுக்கு வந்தால் விளம்பரத்தை கூட்டி வருமானம் பார்க்கலாம் அவ்வளவுதான் நமக்கான  ஊடகங்களாக நம்மை நாமே மாற்றிக் கொள்ளாத வரை ஆண்ட கட்சியின் ஆளும் கட்சியின் சொந்த ஊடகங்களும் அவற்றின் சொம்பு ஊடகங்களும் விளம்பர வருவாய் டிஆர்பி ரேட்டிங் மட்டும் குறிக்கோளாய் கொண்டு  நம் வாயில் தொடர்ந்து பாலூற்றிக் கொண்டே இருக்கும் நாம் லட்ஷ்மிமேனன் பத்தாவது பாஸாம்ல ? நஸ்ரியாவுக்கு கல்யாணமாம்ல என்று வலைத் தளங்களில் மொக்கை போட்டுக் கொண்டிருப்போம்.

பின் குறிப்பு: மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கிறேன் இனி இங்குதான் இருப்பேன்.