Friday, February 13, 2015

வெற்றிவேல் வீரவேல். சீமானின் தமிழ் தேசியப் புரட்டுக்கள். 1/2

அப்போது  நான் காதலில் விழுந்து கவிழ்ந்து என் கல்லூரிப் படிப்பை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு விவசாயிக்கு கைய்யும் காலும் போதுமடா கல்லூரிப் படிப்பு ஏதுக்கடா என்று படு தீவிரமாய் விவசாயம் பார்க்க ஆரம்பித்திருந்தேன்.  பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் வரும் ஓன் ஒதட்டோர சிவப்பஏஏ... அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும் என்று மதுபாலாவின் இடைத் தேர்தலில் டெப்பாசிட்டுகளை இழந்துகொண்டிருந்தேன் அப்போதெல்லாம் இந்த சீமானை யாரென்று யாருக்குமே தெரிந்திருக்காத போது எனக்கு மட்டும் என்ன தெரிந்திருக்கவாப் போகிறது? இருந்தாலும் அந்த பாடலை அப்போதைய உச்ச கட்ட தொழில் நுட்பமான டிடிகே 90 கேசட்டு ஒன்றில் இரண்டு பக்கமும் இந்த ஒதட்டோர சிவப்பை மட்டுமே பதிவு செய்து ஓடவிட்டு என் பிபிஎல் ஆடியோ சிஸ்டத்தை அலறவிட்டு தனிமையில் காதலித்துக் கொண்டிருந்தேன்.



நம்பினால் நம்புங்கள் அதற்குப் பின் சீமானை தம்பி படத்தில் இயக்குனராக கண்ட போதுதான் அவர் ஒரு ஈழப் போராளி என்றும் சாக்லேட் பாய் மாதவனை சண்டைக் கார மாதவனாக சைலண்டைக் கூட வயலண்டாகக் காட்டித்தான் சாதிக்க முடியும் என்ற உலகப் புகழ் பெற்ற காவியத்தில் நடிக்கவைத்து காணாமல் போக வைத்தவர் என்றும் கண்டுகொண்டேன்... என் சிங்களத்து கண்ணுக்குட்டீ பூஜா என்று வலையுலகம் எல்லாம் கொண்டாடும் பூஜாவுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டும் இருந்தேனோ என்னவோ. 

ஆனால் அந்த செபஸ்டியன் சீமான், பகுத்தறிவாளார். (விக்கி பீடியா இப்படித்தான் சொல்கிறது அய்யன்மீர்) அப்போதும் அதன் பிறகும் கவிஞர் அறிவுமதியின் நிழலில் நின்று கொண்டு திராவிட இயக்க மேடைகளில் பேராசான் பெரியாரின் படம் தாங்கிய தேனீர் ஆடைகளில் (அட டீ சர்ட்டுதான் மக்களே) தோன்றி உங்க ராமன் எங்கடா பொறந்தான் என்று பொங்கிப் பொங்கிப் பேசியபோது அடடா எங்கேயப்பா இருந்தாய் என் பகுத்தறிவு போராளியே இத்தனை நாளாய் உன்னை ஒரு சாதாரண சினிமாக்காரன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்துவிட்டேன் என்று என்னை நானே குட்டிக் கொண்டேன்.  வந்தாலும் வந்தது ஈழப் போரின் இறுதிக் காட்சிகள்.

அதற்கு முன்போ அதற்கு பின்போ சந்தித்தோ சந்திக்காமலோ போட்டோ ஷாப்போ இல்லை ஒரிஜினல் ஷாட்டோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு எடுத்துக் கொண்டதாக ஒரு ஒற்றைப் புகைப்படத்தை வைத்தே தமிழ் தேசியப் போராளிகளின் ( அப்படித்தானே?) ஒற்றைத் தலைவனாய் தன்னை முன்னிறுத்திக் கொள்ள பட்ட பாடென்ன உயர்த்திய கைகள் என்ன? 2009ன் ஜனவரி மாதத்தில் தீக்குளித்த முத்துக்குமார் கொளுத்திப் போட்ட தீக்குச்சியின் நெருப்புக்களால் உண்டான சிறு துளிகளை ஒன்றாக்கி இயக்கமாக்கி  கைதாகி சிறை சென்று கலைஞரை துரோகியாக்கி மகிழ்ந்து கொண்டிருந்த சீமான் உண்மையில் ஒரு கும்பலை தனக்குப் பின்னால் இழுக்கத்தான் செய்தார்.

சாதி, திராவிட அரசியலைத் தாண்டி வெளிவராத அரியலூர் மாவட்டம் செந்துறையில் என் அக்கா வீட்டுக்குப் போகும் போதுதான் கண்டேன் ஒரு பயங்கர பதாகையை. அவர் நாம் தமிழர் என்றொரு இயக்கத்தை தொடங்கியிருப்பதையையும் அதை வைத்து அவர் மற்றும் ஒரு அரசியலை அல்ல மாற்று அரசியலை தொடங்கி வைத்து அதில் குதிக்கவும் போகிறார் என்பதையும்.  இருப்போம் தமிழாய் நெருப்பாய் என்ற எல்லா தமிழ் படங்களுக்குக் கீழும் வரும் அந்த ஒன்றரைச் சொல் அடிவரி போல. அப்போது பல பேருக்கு என் நண்பர்களைப் போலவே இந்திய அரசியலும், சாதி அரசியலும், தேசியம் பற்றிய புரிதலும் இல்லாதிருந்தது. தமிழ் தேசியம் என்பதும் நாம் தமிழர் என்பதும் ஏதோ வானத்தில் இருந்து வல்லூரு தூக்கி வந்து போட்ட குயில் குஞ்சின் கீதம் என்றே நம்பிக் கொண்டிருந்தனர். பாவம் அவர்களுக்கு சி.பா ஆதித்தனாரையோ நாம் தமிழர் இயக்கத்தையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாம் 2009க்குப் பின் அரசியல் பால பாடத்தை சீமானின் அடிச்சுவட்டில் தேடிய பிள்ளைகள். 

ராஜீவ் கொலைவழக்கில் கைதாகி தூக்குத் தண்டணைக்காய் காத்திருக்கும் மூன்று பேர் விடுதலைக்காக பிணமான செங்கொடியின் பிணத்தின் மேல் தங்கள் அடித்தளைத்தை அதி தீவிரமாய் கட்டத் தொட்டங்கிய கட்சியின் தலைவர் அல்லவா எம்மான் சீமான்?. பாவம் அதற்குப் பின் கலைஞர் ஆட்சிக்கு வராமல் போனது எம் மக்கள் செய்த புண்ணியம், இல்லையென்றால் இன்னும் இன்னும் நெஞ்சடைக்கப் பேசி பல உயிர்களை பலி வாங்கி மக்கள் முதல்வருக்காய் மாண்டு போன மக்களின் ஓரங்க கின்னஸ் ரெக்கார்டுகளில் கை வைத்திருப்பார்.

2011 தேர்தலில் தமிழகத்தில் பல பத்தாண்டுகளாய் மாற்றம் வேண்டிய  மக்கள் அய்யாவையும் அம்மாவையும் தேடிய அலையில் வாகாய் வந்து வண்டிக்குள் ஏறி என் தொப்புள் கொடி ஒறவுகளை கொன்றழித்த கயவர்களே என்று ஆக்ஸ், பாண்ட்ஸ், ரெக்ஸோனா பாடி ஸ்ப்ரே விளம்பர அம்பாசிடர்களுக்கு போட்டியாய் காங்கிரஸை கருவறுப்போம் என்றெல்லாம் பஞ்ச் டயலாக்குகள் பேசி காக்காய் உட்கார பணம் பழம்(பணம் -எழுத்துப் பிழை இல்லை) விழுந்ததில் பார்த்தீர்களா மக்களே என் பராக்கிரமத்தை என்று கதறியவாரே அம்மையாரின் பாதம் தொட்டு வணங்கி தன் அரசியல் பயணத்தை 2016ல் துவக்கி பாய்வோம் அதுவரை பதுங்குவோம் என்ற ஸ்பார்டகஸின் தத்துவத்தை தமிழுக்கு பெயர்த்து ஈழத்தாய் அம்மையார் பொரட்சி தலைவி வாழ்க, போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் அதற்காக அம்மையாருக்கு எதிராக என் அரசியல் இருந்துவிடுமா என்று உலகமே இதுவரை கண்டிடாத ஒரு அரசியல் அரிச்சுவட்டியை கண்டெடுத்தார்.

பாவம் பிடித்தது பாம்பை அல்ல அந்த பாம்புகளை ஆட்டி வைக்கும் பிடாரியை என்று அறிந்த உடன் பழைய ஓய்வு பெற்ற ஈழப் போராளிகளான வைகோ, பழைய நெடுமாறன் ஆகியோரோடு சேர்ந்து முள்ளி வாய்க்கால் முற்றத்திலாவது கலந்து கொண்டு மீண்டும் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கலாம் என்று பார்த்தால் அண்ணன் வைகோ அவருக்கும் முந்தி "அங்க ராஜபக்‌ஷே கொல்றான் இங்க இவ கொல்றாளா ஜனநாயகத்த" என்று அம்மையாரை ஒருமையில் அழைத்து கன்னி வெடியை காலடியில் கொளுத்திப் போட்டதில் காளிமுத்துவின் மருமகனுக்கு சகல நாடிகளும் நொருங்கிப் போயின. பாவம் என்னதான் செய்வார் என் அன்பான ஒறவுகளே? கலைஞர் ஆட்சியாய் இருந்திருந்தால் கடற்கரை ஓரம் ஒரு கண்ணீர் அஞ்சலிக் கூட்டம் போட்டு கலைஞர் ஒழிக என்று கொள்கைப் பிரச்சாரமாவது செய்திருக்கலாம்.

நாடாளுமன்ற தேர்தலில் அம்மையாருக்கு ஆதரவாகவெல்லாம் இல்லை காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் எதிர் என்ற போர்வையில் மோடி அலையில் நாடே தத்தளித்து பல இடங்களில் பல் பிடுங்கப் பட்ட காங்கிரஸை ஒழிக்கக் கிளம்பி அதிமுக செலவில் சில பல பொதுக்கூட்டங்கள் பேசி ஒறவுகளை உசுப்பி விட்டதாக தனக்குத்தானே கதையளந்துகொண்ட சீமானின் அட்ராசிட்டிகளை அண்ணனின் தம்பியான அய்யநாதன் சொன்ன கதைகளை எல்லாம் தமிழ் கூறும் நல் உலகம் பார்த்து வாயாலா சிரித்தது? பாவம் பங்காளிச் சண்டை என்பது மஹாபாரதத்துக்கு பட்டும் சொந்தமா என்ன?

நமக்குத்தான் இருக்கவே இருக்கிறதே இலங்கை தமிழர்கள் (வாய்லயே போடுவேன் ஈழத் தமிழர்கள் என்று சொல்லுடா என்கிற ஆட்கள் அம்மையார் பற்றிய பயம் இல்லாத ஆட்களாய் இருக்கவேண்டும்) என்கிற பொன் முட்டையிடும் வாத்துக்கள் அவர்களை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்றால் யாரோ விக்னேஸ்வரனாம் இலங்கை வடக்கு மாநில முதல்வராகி "தமிழக அரசியல் வாதிகள் எங்கள் விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டாமல் இருப்பதே நல்லது " என்கிற ரீதியில் ஒரு வார்தை சொல்ல அதெப்படி அவர்  என்னைக் கேட்காமல் சொல்லலாம் என்று தந்தி டீவியின் ரங்கராஜ் பாண்டேவின் மைக்கைக் கடிக்காத குறையாய் ஈழத் தமிழர்களின் அடுத்த தேசியத் தலைமையேற்க இருக்கும் சீமான் குமைந்ததை நாடே அறியும். 

சரி அதுதான் போகட்டும் என்றால் பொங்கலுக்கு முன் இலங்கையில் தேர்தல் வைத்து ஈழத் தமிழர்களை ஏமாற்றப் பார்கிறார்கள் தமிழினமே தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சீமான், வைகோக்கள் சொன்னதைக் கேட்காமல் குத்துங்க எஜமான் குத்துங்க என்று வடக்கும் கிழக்கும் சேர்ந்து குத்தியதில் மைத்திரி பால சிறி சேன  மகிந்த ராஜபக்‌ஷேவை தோற்கடித்து தேர்தலில் ஜெயித்துவிட மைத்திரிபால அம்மையார் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்களை வடை போச்சே என்று வருந்தியஆட்களை பேஸ்புக்கில் நாம் காண நேர்ந்தது மார்க் ஸுக்கர்பெர்க்கின் புண்ணியம், இன்றுவரை நாம் தமிழர்களின் பல அதி தீவிர தொண்டர்களுக்கு மைத்திரி என்ற பெயர் கொண்ட ஒரு ஆள் எப்படி ஆணாக இருக்க முடியும் எனற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. 

மகிந்த, பசில்,கோத்தபாய ராஜபக்‌ஷேக்களை ஒழித்தாயிற்று இனி நமக்கென்னடா வேலை அடுத்தது தமிழ் மண் விடுதலைதான் அதற்கு ஒரே வழி வெற்றிவேல் வீரவேல் என்று கிளம்பி கோவனாண்டியாய் குன்றத்தில் குத்துக்காலிடாமல் நிற்கும் பழனி முருகனை கவணிப்போம் என்று பச்சை சட்டையில் கிளம்பிவிட்டார் அண்ணன் சீமான். 

பெரியாரியக்க மேடைகளில் முழங்கி சேகுவேரா படம் கொண்ட உடைகள் அணிந்து பிரபாகரனுக்கு அடுத்த தேசியத் தலைவராய் வந்திருக்க வேண்டிய ஒரு ஆள் வெற்றிவேல் வீரவேல் என்று முழங்கி குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா கண்கள் எல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் என்று குத்துப் பாடலுக்கு நடனம் ஆடி வரப் போகும் பகுத்தறிவாளன் சீமானைக் காண கண் கோடி வேண்டும்.

#இரண்டு பகுதிகளில் முதல் பகுதி முற்றும்.
(தொடரும்)


Sunday, February 01, 2015

ஊற்றிக் கொடுக்கிற அரசாங்கம்.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு பள்ளி மாணவன் மது  போதையில் மயங்கிக் கிடந்ததை காரணம் காட்டி அவனை பள்ளியில் இருந்தே விலக்கி இருக்கிறது பள்ளி நிர்வாகம். குடித்து போதையில் கிடந்த மாணவனுக்கு தண்டனை கொடுக்கும் சமூகம் ஊற்றிக் கொடுப்பதை, குடிப்பதை ஊக்குவித்து பண்டிகை நாட்களில் இலக்கு வைத்து சாராயம் விற்பதை ஒரு சமூகக் கடமையாகவே செய்து வரும் அரசாங்கங்களை என்ன செய்யப் போகிறது?.



முன்பும் அரசாங்கம் கள்ளுக்கடைகள் சாராயக் கடைகள் என்று நடத்தத்தான் செய்தது ஆனால் அது இப்போதிருப்பது போல தெருவுக்கு மூன்றாகவோ இல்லை எளிதில் சிறுவர்களால் எட்டப்படும் தூரத்திலோ இல்லை. நான் முதன் முதலாய் மது அதுவும் கிங்ஃபிஷர் பியர் அருந்தியது என் 19ம் வயதில். 1997 சென்னையில் கல்லூரி காலத்தில். இப்போதுபோல அப்போதும் மது கிடைக்கத்தான் செய்தது ஆனால் வளசரவாக்கத்தில் இருந்த நாங்கள் வடபழனி அல்லது சாலிகிராமம் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்கு முன்னால் இருக்கும் கடைக்குப் போனால்தான் கிடைக்கும். இதற்கு மலைத்தே அதை பல நாட்கள் தவிர்த்து வந்திருக்கிறோம். இப்போது நிலை அப்படியில்லை.

முன்பெல்லாம் சிறு நகரங்களில் மட்டுமே இருந்த ஒயின் ஷாப்புகள் டாஸ்மாக்கின் வருகைக்குப் பின்னால் பட்டி தொட்டியெங்கும் படையெடுத்து ஒரு தலைமுறை இளைஞர்களின் வாழ்வையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. என்னதான் குடிப்பதும் கும்மாளம் போடுவதும் தனிமனித சுதந்திரம் என்றாலும் எந்த வயதில் அதை அனுமதிப்பது என்ற ஒரு பெருங் கடமை அரசாங்கத்துக்கு உண்டு, சமூகத்துக்கும் உண்டு . கடந்த பத்தாண்டுகளில் அரசின் முக்கால் வாசி வருமானம் சாராயத்தில் இருந்தே வருகிறது. இலவசத் திட்டங்களை கொடுத்து ஒரு பக்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டே அரசாங்கம் இன்னொரு பக்கம் பல்லாயிரக் கணக்கான கோடிகளை நம் பாக்கெட்டில் இருந்து உருவிக்கொண்டிருக்கிறது.

குடியை ஊக்குவிக்கும் அரசாங்கம் மதுவிலக்குத் துறை என்ற ஒன்றை என்னவோ கள்ளச் சாராய சாவுகளை தடுக்கவென்றே உருவாக்கப்பட்ட ஒரு துறையாக மாற்றி வைத்திருக்கிறது. சிறார்கள் மத்தியில் குடியின் கேட்டை விளக்கும் எந்த செயல்பாடும் அரசாங்கம் செய்யவில்லை, செய்ய விருப்பமில்லை. பாட்டில் மேலும் கடையின் முகப்பிலும் "குடிப்பழக்கம் உடல் நலத்துக்குக் கேடு" என்று எழுதி வைப்பதோடு தன் கடமையை முடித்துக் கொள்கிறது. அரசு மதுக் கடைகள் இல்லாவிட்டால் கள்ளச் சாராய சாவுகள் அதிகரிக்கும் என்று அக்கரையோடு விபரம் சொல்லும் அரசாங்கம் கள்ளச் சாராயத்தால் இறந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையை விட நாள்தோறும் அரசாங்கத்தின் நல்ல சாராயத்தால் நடக்கும் சாவுகளை மூடி மறைக்கிறது.

போதைப் பழக்கத்துக்கு அடிமையான சிறுவர்கள் என்பதை நம் கண்முன்னே ஒரு சமூகம் மிக மோசமாக வளர்த்து வார்த்தெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து போகிறது அரசாங்கம். பத்தாவது தேர்வில் வெற்றி பெற்றதற்காக , தோல்வி அடைந்ததற்காக என்றெல்லாம் கும்பல் பார்ட்டிகள் நடத்துவது என்பது வெகு சாதாரணமாகப் போயிருக்கிறது இப்போது. 18 வயதுக்கும் மேல் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் வயதை கண்டிப்போடு கடை பிடிக்கும் நாம் தன் வாழ்கையின் பாதையை தேர்வுசெய்யும் படிப்பை இழக்கச் செய்யும் மதுவை எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் படி வைத்திருக்கிறது.  18 வயதுக்கு மேலா என்று சான்றிதழ் கேட்டு விற்பனை செய்ய முடியாதுதான் ஆனால் விற்பனையாளருக்கு ஆளைப் பார்த்தாலே வயதைக் கண்டுகொள்ளும் பக்குவம் இல்லாமலா போகும்?

மதுக்கடைகளை முறைப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. பொன் முட்டையிடும் வாத்துதானே அது?. கண்டிக்கப் பட வேண்டியது அரசாங்கத்தை மட்டும் அல்ல இந்த சமூகத்தையும்தான். கூட்டம் சேர்க்க குவாட்டரும் கோழிபிரியாணியும் கிடைத்தால் போதும் என்று வண்டியேறிப் போய் கட்சிகளிடம் தங்களை அடகு வைப்பதில் ஆகட்டும் ஓட்டுக்கு பணம் என்று தங்கள் உரிமைகளை அடகு வைப்பதாகட்டும் நாம் தானே நம்பர் ஒன்?.

ஐந்தாம் வகுப்புக்கு மேலே மாணவர்களுக்கு மதுவின் தீமை குறித்தும் சமூகத்தில் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்தும் அப்படி ஒருவன் விரும்பும் பட்சத்தில் அவனின் 18 வயதுக்கும் மேல் அளவாக அதை அருந்துவது குறித்தும் பாடம் நடத்தலாம், அரசு சாரா தொண்டு நிறுவனங்களை விட சாராயக் கடைகளை நடத்தும் அரசுக்கே இதில் முழுப் பொறுப்பும் உண்டு. ஆனால் பரிதாபம் வாத்தியார்களே மாணவர்களை குவார்ட்டர் வாங்க அனுப்பிக் கொண்டிருக்கும் பள்ளிக் கூடங்கள் இருக்கும் மாநிலத்தில் எதுவுமே சாத்தியமில்லை.

கள்ளச்சாராய சாவுகளை விட அதிகமான மரணங்கள் போதையின் விளைவால் ஏற்படுகின்றன என்பது எவ்வளவு உண்மை?.  குடிக்கப் பணம் கொடுக்காத தாய், மகன், மகள், கணவன், என்று நாள் தோறும் நடக்கும் கொலைகள் மட்டுமே பல நூறுகள், இது மட்டுமில்லாமல் போதையில் அடித்துக்கொண்டு சாகிற ஆட்கள்தான் எத்தனை?  போதைக்கு அடிமையாய் உடல் நலம் பாதிக்கப் பட்டு நிகழ்கிற சாவுகள் கணக்கில் அடங்காதவை . சாராயத்தை அரசாங்கம் முறைப் படுத்தாதவரை இதெல்லாமே நடக்கும்.

இளம் சிறுவர்கள் போதைக்கு அடிமையாவதென்பது சமூகத்தால் மட்டுமோ இல்லை அரசாங்கத்தால் மட்டுமோ இல்லை, குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அப்பன், அம்மாவிடம் குடித்துவிட்டு சண்டை பிடிக்கும் மகன், தந்தையிடம் குடித்துவிட்டு தகராறு செய்யும் மகன் என்று குடும்பத்துக்குள்ளேயேதான் எத்தனை குடிகாரர்கள்?  1997க்கு முன்னர் என் குடும்பத்தில் சாராயம் கள்ளு என்ற எந்த போதையின் வாசனை கூட அறிந்தவர்கள் இல்லை. என் தாத்தா, அப்பா உட்பட, நான் அவ்வப்போது கொண்டாட்ட மன நிலைகளில் மட்டும் அளவாக அல்லது யாருக்கும் தொந்தரவு இல்லாமல்.

நான் குடிக்கிறேன் என்பது என் வீட்டில் அப்பா,அம்மா,மனைவிக்கு மட்டும் தெரியும் ஆனால் ஒரு நாளும் அவர்கள் முன் நான் குடித்துவிட்டு நின்றதில்லை ஆனால் இப்போது சிறுவர்கள் அப்பனுக்கு வாங்கிக் கொடுப்பதும், அப்பன் ஆம்லேட் போட்டுக் கொடுப்பதும் சர்வ சாதாரணமாய் ஆகியிருக்கிறது. மகனுக்கும் மகளுக்கும் முன்னால் குடித்துவிட்டு போவதற்கும் பேசுவதற்கும் வெட்கப் பட்ட காலம் போயே போய் விட்டது போலும்.

டாஸ்மாக் விற்பனையில் சக்கை போடு போடும் தமிழக அரசாங்கமே தொழில் துறை வளர்ச்சி முடங்கிப் போய் இரண்டு லட்சம் கோடி கடனில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இது எதுவும் தெரியாமல் நாமும் தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறோம். இளம் சிறார்களின் மதுப் பழக்கத்தை காரணம் காட்டி அவனை பள்ளியில் இருந்து விலக்கும் பள்ளிக் கூடம் என்பது சமூகக் கேடு ஒரு இளம் குற்றவாளியைத்தான் அது உருவாக்க முடியும்!. மாறாக அவனுக்கான மது பற்றிய புரிதல்களை ஏற்படுத்தி அவனுக்கான கல்வியை சரிவரக் கொடுப்பதே நல்ல பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் அழகு.  ஊருக்கு ஊர் பள்ளிக் கூடங்களில் வாத்தியார் வருகிறாரா இல்லை பள்ளிக் கூடம் நடைபெறுகிறதா என்பதைக் கவனிக்கத் தவறும் அரசாங்கம் டாஸ்மாக்கில் மட்டும் விற்பனை சரிந்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதென்பது வெட்கக் கேடு.

சாராயக் கடைகளை மூடுவதென்பது சாத்தியமில்லாத ஒன்று என்கிற அளவுக்கு மது அடிமைகளை உண்டாக்கி வைத்திருக்கிறோம் நாம், குடிக்கட்டும் அவன் அவன் சம்பாத்தியத்தில் அவன் அவன் சுய முடிவெடுக்கும் வயதில் குடிக்கட்டும் யாருக்கும் தொந்தரவில்லாத குடியை.
கல்யாணத்துக்கும், காதலுக்கும் வயது வேண்டும், சாதி, மதம் வேண்டும் என்கிற ஆட்கள் எல்லாம் ஒன்று கூடம் இடம் டாஸ்மாக்தான் அங்கேதான் சாதிச் சண்டைகள் இல்லை. அதற்காக ருசியாக இருக்கிறதே என்று விஷத்தையா குடிக்க முடியும்?

மதுவை, குடியை முறைப்படுத்துங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் அரசுகளே இந்த சமூகத்துக்கு குறைந்தபட்சம் ஏதேனும் நல்லது செய்ய விரும்பினால். மாணவர்களிடையே விழிப்புணர்வைத் தொடங்குங்கள், எதிர்காலச் சமூகத்தையே குடியில் ஆழ்த்தி கொலை செய்துவிட்டு நீங்கள் யாரைத்தான் ஆளப் போகிறீர்கள்?

குடிக்கிற எல்லா அப்பன்களுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் நீங்கள் குடிப்பதை குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகளுக்குத் தெரியாத அளவிலாவது பார்த்துக் கொள்ளுங்கள்.




உமாசங்கர். IAS or ISIS ?

அரசுப் பதவியில் இருப்பவர்கள் மத மாற்றங்களில் ஈடுபடுவது என்பது இன்றோ நேற்றோ தொடங்கியது இல்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் தொடர்ந்துவரும் ஒரு சமூக அயோக்கியத்தனம். இதில் கட்டாய மத மாற்றம், தானே விரும்பி ஏற்றுக் கொண்ட மத மாற்றம் இல்லை வேறென்ன பெயர் வைத்து வேண்டுமானாலும் அழைத்துக் கொள்வோம்.

ஈரானில் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமியர்களின் கட்டாய மத மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்ஸிக்களின் வெளியேற்றத்தில் இருந்து இன்று ISIS இன் மத்திய கிழக்கில் தாங்கள் வென்ற இடங்களில் தொடரும் மத மாற்றம் வரை தொடர்ந்த அயோக்கியத் தனமான வரலாறு.  சைவர்களால் கழுவில் ஏற்றப்பட்ட சமனர்கள் தொட்டு இந்துக்கள் அல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்ற பாஜக/ஆர்.எஸ்.எஸ்/பெருந்தலைகளின் அரைகூவல் என்று  இன்றும் தொடர்கிறது அந்த அவலம்.

மதத்தின் பெயரால் மனிதம் இழப்பவர்கள் மத்தியில் கல்விக்கொடுக்கிறோம் என்று வணிகம் செய்யவந்த கிருஸ்துவம் ஆண்ட சமூகத்தில் இருந்து அடிமைப் பட்டவர்கள் என்றும் தாழ்த்தப் பட்டவர்கள் என்றும் மீட்கவந்த மேய்ப்பர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் செய்த மத மாற்றம் இன்று வேர்விட்டு ஒரு குறிப்பிட்ட வெற்றியும் பெற்றிருக்கிறது.

கல்வியும் பதவியும் மட்டுமே ஒரு மனிதனின் மத விருப்பு வெறுப்புகளையோ இல்லை அவனின் மதம் குறித்த முட்டாள் தனங்களையோ தெளிவுபடுத்துவதில்லை என்பதற்கு அரசியல்வாதிகள் முதற்கொண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை ஏகப் பட்ட உதாரணங்கள் கிடைக்கின்றன.

காஞ்சி சங்க்கராச்சாரியாரை ஆட்சிக்கு வந்ததும் பதவிக்கு வந்ததும் பார்க்காத ஆட்களே இல்லை அது ஜெயலலிதாவோ அப்துல் கலாமோ இல்லை டி.என் ஷேசனோ. அவர்களின் தனிப்பட்ட விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியாது. பதவியில் இல்லாத போது அவர்கள் பரதேசிக் கோலத்தோடு பரமனை தரிசிக்கப் போனாலும் இல்லை நிர்வாண கோலம் கொண்டு சன்யாசம் போனாலும் நமக்கு அது குறித்த கவலை இல்லை.ஆனால் மக்களுக்கான சேவை செய்யப் போகிறோம் என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டும், மக்களாட்சியின் பெயரால் பதவியை ஏற்றுக் கொண்டும் செயல் படும் ஆட்கள் மதத்தின் பின்னால் போவதென்பது பைத்தியக்காரத்தனம் இல்லையா?


பாஜக ஆட்சியில் இந்துத்துவாக்கள் ஆடுகிற ஆட்டத்தை கண்டிக்கும் நாமே இந்த இஸ்லாமியத்தின் பெயரால், கிருஸ்துவத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை மக்களிடையே பரப்பும் ஆட்களின் முகத்திரையையும் கிழிக்கவேண்டி இருக்கிறது. உமாசங்கர் விவகாரமும் அப்படியான ஒன்றே. தந்தி தொலைக்காட்சியில் பேட்டியின் போது உமா சங்கரின் பேச்சு உளரல்களின் உச்சம் விட்டால் சாத்தானே அப்பால் போ என்று ரங்கராஜ் பாண்டே என்ற பாஜக அடி வருடியை அடித்து துரத்தி விடுவாரோ என்று பயந்து போகிற அளவு.

ஏன் உமா சங்கரை மட்டும் கண்டிக்க வேண்டும்? அரசாங்க அலுவலகங்களில் இருக்கும் ஆயுத பூஜைக் கடவுள்களை வழிபடும் ஆட்கள் மட்டும் என்ன யோக்கியம்? படு விமரிசையாக ஆயுத பூஜையில் தங்களின் ரைஃபில்களை பூஜையில் வைத்து விட்டு இஸ்லாமியத்தில் பிறந்த குற்றத்துக்காக முஸ்லிம்  தீவிரவாதிகளை தேடுகிறோம் என்ற பேரில் அப்பாவிகளை  காவல் நிலையத்துக்குள்ளேயே  சையது முகமதுக்களை சுட்டுக் கொன்றொழிக்கும் காளிதாஸ்கள் இருக்கும் நாடுதானே இது?

அரசு அலுவலகங்களில் அரசுத்துறை வளாகங்களில் எந்த மதக் கடவுளின் படமும் சிலையும் கோவிலும் இருக்கக் கூடாதென்பதெல்லாம் வெறும் ஏட்டளவில் மட்டும்தானே இருக்கிறது? ஆயுத பூஜை தீபாவளி பொங்கல் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடும் காவல் நிலையங்கள் ஏகப்பட்டது உண்டு இந்தியாவில். ஏன் எந்த காவல் நிலையத்திலும் ரம்ஜான், கிருஸ்துமஸ் கொண்டாடப் படுவதில்லை? நாம் தான் மத சார்பற்ற இந்தியா ஆயிற்றே? ஆனால் செய்தி அது அல்ல.

தங்களின் பதவிக்காலத்திலேயே ஃபயர், ஃபயர் ஃபயர் என்று கிருஸ்த்துக்களை பயமுண்டாக்கி மயங்கி விழச் செய்யும் எல்லை வரை மெத்தப் படித்த மேதாவிகள் போய்விடக் கூடாது என்பதே நம் கவலை. பாஜக மந்திரிகள் ஆளுக்கு 15 லட்சம் என்ற கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவரும் திட்டத்தை எல்லாம் கைவிட்டு ஆளுக்கு ஐந்து குழந்தைகள் என்ற இந்து ராஸ்டிரீய திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் வேளையில் மக்களுக்கான ஆட்சிப் பணியில் இருக்கும் ஒருவரிடம் இப்படி ஏசு கிருஸ்து நேரடியாக இறங்குவார் என்று நான் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லைதான்.

பதவியில் இருக்கும் ஆட்கள் மதம் இனம் சார்ந்த பற்றோடு இருப்பதென்பது உலகமெங்கும் இருக்கும் நச்சு, இஸ்ரவேலர்கள் முதல் இசிஸ் வரை உதாரணங்கள் கோடி உண்டு.கூன்பாண்டியன், மோடி, ராஜபக்‌ஷே, ஹிட்லர், இடி அமீன், சதாம் ஹூசேன்,  என்று வரலாறு ஏகப்பட்ட அத்தியாயங்களை நமக்குமுன் விரித்தே வைத்திருக்கிறது. நாம்தான் மதத்தின் மேல் இருக்கும் பற்றால் கண்களை குருடாக்கிக் கொள்கிறோம்.

மக்களுக்கான பதவியில் இருக்கும் ஆட்களின் மதச் சார்பு என்பது ஒரு வித மறைமுக மிரட்டல் என்று சொன்னால் அது எத்தனை உண்மை?. பாஜகவை விமர்சிக்கும் ஆட்கள் இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது சிறுபான்மை மக்களின் ஓட்டுவங்கியை மட்டும் குறிவைத்து என்பது வெட்கக் கேடு இல்லையா?

உதாரணத்துக்கு தான் சார்ந்த மதத்தின் மேல் இத்தனை பற்று வைத்திருக்கும் ஒரு ஆள் நாளெயே ஒரு மதம் சார்ந்த கிருஸ்துவ மதத்துக்கு எதிரான நிலையில் இருக்கும் ஒரு நபர் ஏதாவது மனுகொடுத்தால் என்ன ஆகும் இந்த கேள்வி உமாசங்கருக்கு மட்டும் இல்லை, காஞ்சி சங்கராச்சாரியாரை தரிசிக்கப் போகும் அப்துல்கலாம்களுக்கும் பொருந்தும்.

58 வயதுக்கும் மேல் நீங்கள் உங்கள் பதவிகளைத் துறந்தபின் செத்தவனைப் பிழைக்க வைய்யுங்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் இல் சேருங்கள் இல்லை ஜெயேந்திரருக்கு வாழை இலை எடுக்கவோ நித்தியானந்தாவின் படுக்கை அறையில் ஸ்பை கேமரா செட் செய்யவோ போங்கள்.

கொஞ்சமாவது மக்கள் பணியாற்ற விரும்பும் ஆட்கள் மதத்தில் இருந்து தள்ளி இருங்கள். இல்லை மதப் பணியாற்றப் போங்கள். மக்கள் பிழைத்துப் போகட்டும்.