Saturday, February 27, 2010

பெரியார் 25


தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!

தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!

தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!

தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!

தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!

இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!

'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!

அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!

'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!

நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!

95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

-ப.திருமாவேலன்

Monday, February 15, 2010

வன்னியர்கள் மீது பாய்ந்த கைவிரல் ரேகைப் பதிவு ஆணை

விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆணை, கள்ளர் சமூகத்தினருக்கு மட்டுமல்லாது, வன்னியர் சமூகத்தினருக்கும் இருந்தது. குறிப்பாக தென்னாற்காடு மாவட்டத்தில் ‘படையாட்சி’ என்று அழைக்கப்பட்ட வன்னியர் சமூகத்தினர் காவல் நிலையங்களில், அன்றாடம் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று சில பார்ப்பன போலீஸ் அதிகாரிகள், அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்ற அவசர தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இதை காங்கிரசார், தங்களின் சாதனைபோல அப்போதே பொய் பிரச்சாரம் செய்துள்ளனர். இந்த வரலாற்றுச் செய்திகளை 1935 ஆம் ஆண்டு ‘விடுதலை’ ஏட்டிலும், ‘குடிஅரசு’ இதழிலும், ‘தென்னாற்காடு ஜில்லா படையாட்சிகள்’ எனும் தலைப்பிலும் பதிவாகியுள்ளது. செய்தியை இங்கு வெளியிடுகிறோம்.

சமீபத்தில் நடக்கப் போகும் தென்னாற்காடு ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரியார்கள், மற்ற இடங்களில் உண்மையை மறைத்தும், உள்ளதைக் குறைத்தும் கூறிப் பொய்ப் பிரச்சாரம் செய்த மாதிரி, தங்களுடைய ஒழுங்கீனமான சுயநலப் பிரச்சாரம் செய்ய முற்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் செய்த சூழ்ச்சிகளைக் குறித்து நமது நிருபர் எழுதிய விவரங்களை வேறொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம். அவற்றால், சுயநலக் கூட்டத்தார் ஜஸ்டிஸ் கட்சியினரைத் தோற்கடிக்க எவ்வளவு தூரம் முயற்சி செய்கிறார்களென்பது விளங்கும். தம்முடைய பிரச்சாரத்திற்காக, எவ்வளவு கேவலமான முறைகளையும் அனுசரிப்பார்களென்பது, அவர்களுடைய முழுப் பொய்ப் பிரச்சாரத்தினால் புலப்படுகின்றது. சில வாரங்களுக்கு முன், படையாட்சி வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் குற்ற பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அரசாங்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

க்ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களான படையாட்சிகள் ஏன் குற்றஞ் செய்யும் வகுப்பினரோடு சேர்க்கப்பட்டார்கள்? அதற்குக் காரணமென்ன? காரணம் சில பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்கள். அவர்களுடைய ‘ரிப்போர்ட்டு’களில் அவ்வகுப்பினரை குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டு வருதல் மிக அவசியம் என்று எழுதியதனால், அரசாங்கத்தார், தவறாக அப்படிப்பட்ட உத்தரவை வெளியிட்டார்கள். அந்த உத்தரவு படையாட்சி வகுப்பினரிடையே பெருத்த பரபரப்பை உண்டு பண்ணியது. அவர்களுடைய சுயமரியாதைக்கும், கௌரவத்திற்கும், அரசாங்க உத்தரவு இடையூறு செய்ததைக் கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் கண்டிக்கப்பட்டது. அந்த அவமரியாதையான உத்தரவை ரத்து செய்வதற்குத் தென்னாற்காடு ஜில்லா போர்டு தலைவர், ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் அவர்கள் பிரயாசைப்பட்டு வெற்றி பெற்ற விஷயம் அந்த ஜில்லாவாசியான படையாட்சிகளுக்குத் தெரிந்திருக்குமென்று நம்புகின்றோம்.

சென்னை சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியினர் ஒருவரால் அவசரத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவ்வுத்தரவை ரத்து செய்யும் விஷயமாக அரசாங்கத்தார் கவனிப்பதாக வாக்குறுதியளித்ததின் பேரில், தீர்மானம் ‘வாப்பீஸ்’ வாங்கிக் கொள்ளப்பட்டது. பின்னர், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களின் முயற்சியால், அரசாங்கத்தார் பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்களுடைய ‘ரிப்போர்ட்’டுகளின் மேல் தாங்கள் அம்மாதிரி உத்தரவிட்டது தவறென்று உணர்ந்து, படையாட்சிகளின் கிளர்ச்சியின் உண்மையை அறிந்து, உத்தரவை ரத்து செய்தார்கள்.

இவ்வுத்தரவு ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது. காங்கிரஸ்காரர்கள் தான் சட்டசபையில் இதை விவாதித்து ரத ்து செய்வதற்கு உதவி செய்தார்கள் என்று சுயநலக் கூட்டப் பத்திரிகைகள் சில கூறுவது எவ்வளவு பொய்யான விஷயம் என்பதை படையாட்சிகள் அறிவார்கள் என்று நம்புகிறோம். படையாட்சிகள் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களில் மிகப் பழங்குடி மக்கள். அவர்களைப் பற்றிப் பார்ப்பனர்கள் பரிந்து பேசுவதும், அவர்களுடைய நன்மைக்காகப் பாடுபடுவது போலப் பாசாங்கு செய்வதும், மக்களை ஏமாற்றி ‘ஓட்’டுப் பறிப்பதற்கேயாகும். காங்கிரஸ் என்ற போர்வையை மேல் போர்த்திக் கொண்டால், படையாட்சிகளை ஏமாற்றிவிடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

சதாகாலமும் பொய், ஏமாற்றுதல், மானக்கேடான செயல்களைச் செய்து, வேலை சம்பாதித்தல், புல்லிய செய்கைகளின் மூலம் வயிறு வளர்த்தல் முதலிய குற்றங்களை இரவு பகலாகச் செய்து வரும் பார்ப்பனர்களை, குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டியிருக்க, தமிழ்நாட்டின் விவசாய விருத்திக்குக் கற்றூண் போல் விளங்கி, பழமையும் பெருமையும் பொருந்திய க்ஷத்திரிய வீரத்தையும், தேக பலத்தையும் நாட்டின் செழுமைக்கு உபயோகிக்கும் படையாட்சிகளைக் குற்ற பரம்பரை வகுப்பினராகச் சேர்த்தது எவ்வளவு தவறான விஷயம். இத்தவறுதலுக்குக் காரணம் பார்ப்பனர்கள் என்பதை யுணர்ந்து, அவ்வுத்தரவு ரத்து செய்ததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சி என்பதறிந்து, சமீபத்தில் நடைபெறப் போகும் தேர்தலில் சுயநலக் காங்கிரஸ் கூட்டத்தை முறியடிப்பார்கள் என்று நம்புகிறோம்.

‘விடுதலை’

‘குடி அரசு’ மறு பிரசுரம் - 08.12.1935

Saturday, February 13, 2010

தங்கர்பச்சான்,சீமான்:தமிழ்ப்பாசிஸ்ட்கள்



தமிழ் நடிகைகள் குறித்த தங்கர்பச்சானின் ‘அரிய’ கருத்து, திருமணத்திற்கு முன்னான பாலுறவு குறித்த குஷ்புவின் கருத்து போன்றவைகளுக்கு அடுத்தபடியாக ஜெயராமின் பேச்சு இப்போது தமிழ் ‘இன உணர்வைக்’ கிளப்பியிருக்கிறது. இன்று காலையில் ஒரு தமிழ்த்தேசிய நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது, ‘ஜெயராமுக்கு மன்னிப்பு, சீமானுக்குக் கைது - இதுதான் திராவிட நீதியா?’ என்று. ஜெய்ராம் பேசிய கருத்துக்காக தமிழகக் காவல்துறை அவரைக் கைதுசெய்யமுடியாது, ஜெய்ராம் மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் (தொடரப்பட்டிருக்கிறது). ஆனால் நாம் தமிழர் இயக்கம் ஜெய்ராம் வீடு புகுந்து நிகழ்த்திய வன்முறைக்கு நிச்சயம் காவல்துறை கைதுநடவடிக்கை எடுத்துத்தானாக வேண்டும். ஆனால் இந்த வித்தியாசங்களைக் கூட உணர முடியாதளவு நிதானத்தை இழந்துள்ளனர் தமிழ்த்தேசியவாதிகள். நிதானம் இழப்பதும் எதார்த்தங்களைப் பரிசீலிக்கத் தவறுவதும் அவர்களுக்கு ஒன்றும் புதியதல்லவே!

'தாக்கரே பெருமகன்' என்று மும்பையில் சீமான் பேசியதற்கு மேலும் அர்த்தத்தின் அடர்த்தியைக் கூட்டியிருக்கின்றனர் அவரது தம்பிமார்கள். ஜெயராமின் கருத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று எதுவுமேயில்லாது எடுத்தவுடனே வீடு புகுந்து அடிப்பது ஒன்றுதான் வழி என்றால் அந்த வன்முறை யார் மீது வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்பதை நாம் உணரவேண்டும். பெரியாரைக் கைவிட்ட சீமான் சிவசேனாவின் வழி நோக்கி அடியெடுத்து வைப்பது கருத்தியல் இயல்புதான்.

நிச்சயமாக இந்த கட்டுரை ஜெயராமின் கருத்துக்களை நியாயப்படுத்தவில்லை; ஆனால் ஜெயராமின் சொற்களுக்குப் பின்னாலிருந்தது வெறுமனே இனவாதத் திமிரல்ல என்பதை அடையாளப்படுத்த முனைகிறது. மேலும் ஜெயராமுக்கு எதிராய்க் குரலுயர்த்தும் இனவாதிகள் மற்றும் ஊடகங்களின் அறிவுநாணயம் மற்றும் அரசியல் யோக்கியதை குறித்துக் கேள்வி எழுப்ப விரும்புகிறது.

ஜெய்ராம் மலையாளச் சேனலில் அளித்த நேர்காணலை வைத்து முதன்முதலாகப் பரபரப்பைக் கிளப்பியது குமுதம்தான். வேலைக்காரிகள் குறித்த ஜோக்குகளையும் படங்களுக்கான கமெண்டில் நடிகைகள் குறித்த அருவெறுப்பான வார்த்தைகளையும் உதிர்க்கும் குமுதத்திற்கு இதுகுறித்து எழுதுவதற்கு ஏதாவது யோக்கியதை உண்டா? குமுதம் திடீரென்று பேசும் இனவாதத்தின் பின்னுள்ள லாபம் என்ன?

ஜெய்ராம் குறித்து முதலில் கண்டனத்தைத் தெரிவித்தவர் வழக்கம் போல், ‘என்ன சார் நடக்குது இங்க?’ தங்கர்பச்சான்தான். ஆனால் இதே தங்கர்பச்சான்தான் ‘நடிகைகள் விபச்சாரிகள்’ என்ற ‘முற்போக்குக் கருத்தை’ச் சொன்னவர். அவர் சொன்னது நவ்யா நாயர் என்னும் மலையாள நடிகை குறித்துத்தான். ‘எம்மினப் பெண்ணை எப்படி வேசி என்று சொல்லலாம்?’ என்று கேரளா அன்று கொதித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? குமுதத்தின் வேலைக்காரி ஜோக்குகளில் அவமானப்படுத்தப்படுபவர்கள் எல்லாம் ‘தமிழ் வேலைக்காரிகள்’தானே? சீமான், பச்சான் மாதிரியான தமிழ்த்தேசிய இயக்குனர்களின் படங்களில் தமிழ்ப்பெண்களுக்கான இடமென்ன? எப்போதாவது பெண்களின் உரிமைகள் குறித்தும் சுயமரியாதை குறித்தும் அங்கீகாரம் குறித்தும் அவர்களின் படங்கள் பேசியிருக்கின்றனவா? ‘என் சேலைக்கு அவிழ்ந்து விழ நேரம் என்னைக்கு?’ என்பதுதானே அதிகபட்சம் இவர்கள் படத்துப் பெண்கள் ஆண்களை நோக்கி கேட்ட கேள்வி?

தமிழ்த்திரைப்படங்கள் தமிழ்ப்பெண்களைச் சித்தரித்தது ஒருபுறமிருக்கட்டும். தமிழ்ச்சினிமா மலையாளப் பெண்களை எப்படி சித்தரித்திருக்கிறது? இடுப்பு வரை முண்டு கட்டிய பாலுணர்வு தீனிப்பண்டங்களாகத்தானே அவர்களைச் சித்தரித்திருக்கிறது. ‘தாராளமா மனசு இருந்தா கேரளான்னு தெரிஞ்சுக்கோ’ (ரன் படப் பாடல்) என்ற வரிகள் மலையாளப் பெண்களை இழிவுபடுத்தவில்லையா? எத்தனை படங்களில் மலையாளப் பெண்களுக்கான கேரக்டர்களில் ஷகீலாவும் மும்தாஜிம் வந்து ‘கவர்ச்சி விருந்து’ படைத்திருக்கிறார்கள்? இதற்குப் பெயர் இனவாதமில்லையா? மலையாள சினிமா எப்படி தமிழர்களையும் தமிழ்ப்பெண்களையும் இழிவாகப் பார்க்கிறதோ அதேபோல்தான் தமிழ்ச் சினிமாவும். ‘மற்றமை’ குறித்த வெறுப்புணர்ச்சியும் இனவாத அடிப்படைவாதமுமே இதற்குக் காரணம்.

அரசியல் தெளிவும் அறிவுநாணயமும் உடைய யாரும் தங்கர்பச்சான், சீமான் வகையறாக்களோடு கைகோர்த்து ஜெயராமை எதிர்க்க முடியாது. இப்படி ஒரு கேள்வியை எழுப்பிப் பார்ப்போம். ‘ஜக்குபாய் திருட்டு விசிடியாக வெளியானதை ஒட்டி நடந்த கண்டனக்கூட்டத்தில்’ கமல்ஹாசன் இப்படிப் பேசினார், "திருட்டு விசிடி மூலம் கிடைக்கும் பணம்தான் மும்பை குண்டுவெடிப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது". ஏன் ‘நாம் தமிழர்’ இயக்கம் முஸ்லீம்களை இழிவுபடுத்தியதைக் கண்டித்து கமல்ஹாசனுக்கு எதிராகப் போராடவில்லை? 'முஸ்லீம்கள் நாம் தமிழர் இல்லை' என்கிறாரா சீமான்?

இப்போது ஜெயராமின் கருத்துக்கு வருவோம். ஜெயராமின் கருத்துக்களில் நிச்சயம் இனவாதம் இருந்தது. ‘கேரளப்பெண்களின் தாராள மனசைச் சொன்ன’ தமிழ் இனவாதத்தைப் போன்றதொரு மலையாள இனவாதம்; மேலும் பெண்களைப் பாலியல் நுகர்வுப்பண்டமாய்ப் பார்க்கும் ஆணாதிக்கத் திமிர்; உழைக்கும் பெண்களை இழிவாய்க் கருதும் வர்க்கத்திமிர் - இவையெல்லாம் சேர்ந்துதான் ஜெயராமின் வார்த்தைகளாக உருமாறின. ஆனால் தமிழினவாதிகள் மற்ற இரண்டு திமிர் குறித்துப் பேசமாட்டார்கள். ஏனென்றால் அந்த திமிர் அவர்களுக்கும் சொந்தமானது. ஜெய்ராம் வேலைக்காரிகளை அவமானப்படுத்தினார் என்றால் ஹேர்டிரஸ்ஸர் என்னும் உழைக்கும் பெண்ணிற்கான பேட்டா பிரச்சினையை முன்வைத்த நடிகையை ‘விபச்சாரி’ என்றவர்தானே தங்கர்பச்சான்?

ஜெய்ராம் வீட்டின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கும் சிவசேனாவின் பாசிச நடவடிக்கைகளுக்கும் இடையேயான ஒப்புமைகள் என்ன? மராட்டியத்தில் சிவசேனாவின் வன்முறைகள் தமிழர்கள், தொழிலாளிகள், முஸ்லீம்கள் என்று தொடர்ந்து விரிந்து இப்போது மராட்டியர் அல்லாதோரான வட இந்திய கூலித் தொழிலாளர்கள் வரை வந்து நின்றிருக்கின்றது. இந்தப் பாசிசத்தின் அடிப்படை, தொடர்ச்சியாக எதிரிகளைக் கட்டமைப்பதும், அவர்களின் மீதான வன்முறையை உணர்ச்சிகரமான வெகுமக்கள் அரசியலாக்குவதும்தான். அதற்கு இடையூறான மாற்றுக்குரல்கள் தமது சொந்தப் பிரிவினரிடம் இருந்து வந்தால் கூட (உதாரணம் சச்சின் டெண்டுல்கர்) அவர்களின் மீதான வன்முறையாகக் கூட மாறக்கூடும்.

இரண்டாவதாக இந்தப் பாசிசத்திற்கு எப்போதும் கருத்தியல் பலம் இருப்பதில்லை. மாறாக உணர்ச்சிவயப்பட்ட சொல்லாடல்களும், வெறுப்பின் அரசியல் மட்டுமே இவற்றின் நடவடிக்கைகளுக்கு பலம் கூட்டும்; மார்க்சியம், பெரியாரியம் மாதிரியான எல்லாவிதக் கருத்தியல் அடிப்படைகளை நீக்கம் செய்த தூய இனவாதத்தை இந்தப் பாசிசம் ‘வெற்றிகரமாக’ முன்வைக்கும். மேலும் பாசிசம் ஒரு சில கருத்தியல் அடிப்படைகள் இருப்பதாக பாவனை செய்தபோதும் கூட, தன் வன்முறைக்கு நியாயம் சேர்க்கும் கூறுகள் தனக்கு முற்றிலும் எதிரான ஒரு தளத்தில் இருப்பதாக நம்பினால் கொஞ்சமும் வெட்கமின்றி அதை உயர்த்திப் பிடிக்கும். பால்தாக்கரே புலிகளை ஆதரித்ததையும், சீமான் பசும்பொன் முத்துராமலிங்கத்தை ஆதரித்ததையும் இங்கு ஒப்பு நோக்கலாம். மேலும் பாசிசத்தின் பிரதான கூறு ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று மனித குலப்போராட்டங்கள் இதுவரை கண்டடைந்த எல்லா வழிமுறைகளையும் புறங்கையால் நிராகரித்துவிட்டு, நேரடி வன்முறைக்கு முன்னுரிமை அளிப்பதுதான். இதுதான் ஜெய்ராம் வீட்டின் மீதும் நிகழ்ந்தது.

ஆனால் இங்கே இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இதேநாட்களில் சென்னையில் நடைபெற்ற ‘அனைத்து இந்திய வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கான மாநாட்டில்’ ஜெயராமின் கருத்துக்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டன. ஜெயராமுக்கான கண்டனமும் தெரிவிக்கப்பட்டன. நமது குரல் இந்த கண்டனங்களோடு இணையவேண்டுமே தவிர, நமது கைகள் உழைத்துச் சோர்ந்த இந்த கரங்களோடு இணைய வேண்டுமே தவிர தங்கர்பச்சான், சீமான் மாதிரியான தமிழ்ப்பாசிஸ்ட்களோடு அல்ல.
- அங்குலிமாலா