Saturday, June 16, 2012

கிழிந்து தொங்கும் தமிழ் தேசிய முகமூடிகளும் அதை ஒட்டித் தையல் போட முயலும் அண்ணனின் தம்பியின் தம்பிகளும்

புரட்சி என்பது போராட்டம், இதை சொன்ன பெருமகனார் இறந்து போனாலும் அந்த புரட்சிக்கான காரணமும், தேவையும் இன்னும் இருக்கிறது, இருக்கும். நாளைக்காலை ஏழு முப்பத்தைந்துக்கு புரட்சி சிற்றுந்தேறி வந்து நம் கதவைத் தட்டப் போகிறது என்றுதான் சில ஆண்டுகளாய் அண்ணனின் தம்பியின் தம்பிகள் காத்திருக்கிறார்கள்.

கருப்பு உடையும் கையுயர்த்திய பேச்சும் ஒலிபெருக்கியின் ஓசை மீறிய குரலுமாய் பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட அண்ணனின் தம்பியாய் வன்னி பிரதேசத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களூடே புரட்சி பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த புரட்சி இப்படியொரு அரசியல் புரட்டை சில நாட்களில் ஆரம்பிக்கப் போகிறதென்று.

என் அன்பு மக்களே என பேச்சை தொடங்கிய போதெல்லாம் ஒவ்வொரு தமிழனும் உள்ளம் குளிர்ந்து நரம்புகளும் மயிர்க்கால்களும் முருக்கேற ஒரு உண்மத்த நிலையில் அந்த பேச்சை கேட்ட போதெல்லாம் நான் எள்ளிநகையாடினாலும் ஒரு சந்தேகம் எனக்கிருந்தது, "ஒரு வேளை நமக்கு மட்டும்தான் இது நகைச்சுவையோ" உண்மையிலேயே ஆள் தமிழுணர்வாளரோ என்று.

கடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பு வரை, தோழர் வைகோ, பழ.நெடுமாறன், அவரை ஊட்டி வளர்த்ததாக அவரே இன்றுவரை சொல்லிககொள்ளும் திருமாவளவன் எல்லோரும் நல்ல ஒற்றுமையோடுதான் இருந்தனர். ஈழத்தாய்க்கு ஆதரவாகவும் காங்கிரசையும் திமுகவையும் ஒழிப்பதே தனது குறிக்கோள் என முழங்கும் வரை.

ஓட்டுப் பொருக்கி அரசியல் எமக்கு வேண்டாம் இது மற்றுமொரு அரசியல் கட்சியல்ல மாற்று அரசியல் என சினிமா பட பெயருக்கு பின்னாலோ அல்லது சிறிய எழுத்துக்களிலோ "கேப்சன்" போட்டு போட்டே பழக்கப்பட்ட திரப்பட இயக்குனரின் புத்திசாலித் தனம் அவரின் எல்லா மேடைகளிலும் முழக்கமிட்ட போதும், நான் பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி என்றபோதும் , கண்டிப்பாக நாளைக் காலை புரட்சி வெடித்துவிடும் என நம்பிய ஆயிரக் கணக்கான அண்ணனின் தம்பியின் தம்பிகள் எனக்கு பக்கத்து வீட்டில்
அதுவரை இருக்கத்தான் செய்தார்கள்,

சில நாட்களுக்கு முன்னாள் வரை,

நாம் தமிழர் இயக்கப் பெயரே கடன் வாங்கிய பெயரென்று தெரியாத தம்பிகள் மட்டுமே அவரின் பலம், கொள்கை கிலோ என்ன விலை என்பதும் மீனவனைத் தாக்கினால் மாணவனை அடி என்னும் ஒரு பெரிய புரட்சித் தத்துவமும் மட்டுமே தனது பலமாகவும் கொண்ட அண்ணனின் தம்பி சீமானுக்கு தம்பி என்ற புரட்சிப் படம் இயக்கிய மாபெரும் "களமாடிய" அனுபம் இருப்பதால் அரசியல் கட்சியாக தன் இயக்கத்தை மாற்றிக் கொள்ள அதுவே போதுமானதாகவும் இருந்தது.

வன்னிக் காட்டில் பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும், தன் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு வேலுப் பிள்ளை என பெயர் வைத்ததும் மட்டுமே தனக்கு போராளி என்ற பட்டத்தையும் ஒரு இயக்கத்துக்கு தன்னை ஒரு தலைவனகாவும் முன்னிலைப் படுத்துவதற்கு போதுமான தகுதிகள் என்ற மிக உச்ச பட்ச கொள்கைகளுடன் இயக்கம் ஆரம்பித்து எல்லோரிடமும் ஒரு உச்சகட்ட வெறுப்புணர்வு தமிழக அப்போதைய ஆட்சியாளர்களிடம் வாக்காளர்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை தனக்கான உழைப்பின் கூலியாய் நினைத்து கனவுகளில் மிதந்துகொண்டு ஒரு இயக்கத்தின் கொள்கைகளை கடந்த மாதம் வெளியிடும் வரை கூட அவர் ஒரு சாதாரண புரட்சியாளராக தன்னை நிலைநிருத்திக் கொள்ள பெரியாரும் சேகுவேராவும் தனது உடைகளாக அணிந்துகொண்டு, எம்ஜிஆர் என்னும் பிம்பத்தை தனது முகமூடிகளில் ஒன்றாக அணிந்து கொண்ட சாதாரண தொண்டர்தான்.

ஈழ விடுதலை என்னும் அட்சய பாத்திரம் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற தமிழக அரசியல் கட்சிகளின் எல்லா முகமும் அவரிடம் இருந்து வெளிப்பட்டது திமுக எப்போதும் ஆதரித்து வரும் ஈழ ஆதரவு நிலை என்னமோ நேற்று மாலைதான் கலைஞர் டெசோவை ஆரம்பித்தார் என்பதும் அது தனக்கு மாற்றாக "வளர்ந்து" தனது இருத்தலியம் பிழைப்புவாதம் ஒடுக்கப் படும் என்ற ஒரு சந்தேகம் வந்த பின்னால்தான்.

அவரின் உட்சபட்ச கொள்கை என்பதே ஈழ விடுதலை என்பதால் ஈழத் தாயோடு உறவாடி"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என டைமிங்காக ரைமிங் பேசிய போதெல்லாம் நமக்கு "சீனப் படையெடுப்பின் போது பெரியார் சொன்ன , என் மக்களின் சூத்திரப் பட்டம் சீனாக்காரன் வருகைக்குப் பிறகு ஒழிந்து போகுமென்றால் நான் சீனாவை ஆதரிப்பேன்" என்ற ஒடுக்கப் பட்ட எல்லோர் மேலும் அன்பை மட்டுமே பாராட்டிய ஆசான் பெரியாரின் உண்மையான கொள்கைப் பேரன் இவர்தான் என்பதில் பேருவகை கொண்ட கோடிக்கணக்கான வாக்காளர்களின் உணர்வை மதித்துக் கிடந்த பலர் என் நண்பர்களாய் இருந்தனர், ஈழத்தை வென்றெடுக்க அம்மையாரோடு கூட அன்பு பாராட்டி ஈழத் தாய் என்ற பாராட்டுக் கூட்டம் நடத்தி காங்கிரசை ஒழிப்பேன் என்ற பெரியாரின் கொள்கைகளை வென்றெடுத்ததாக பேசிய செந்தமிழன் சீமான், சில நாட்களாக வாய்மூடி மவுனமாய் இருப்பதும் வாயைத் திறந்தால் திராவிட இயக்கங்களை அதன் தலைவர்களை மட்டுமே வசவுச் சொற்களாலும், விமர்சன அம்புகளாலும் துளைத்தெடுப்பதன் காரணம் ஒன்றும் சிதம்பர ரகசியமில்லை.

ஆதிகாலம் தொட்டு பயங்கர வாதி பிரபாகரன் என்பதில் கிஞ்சித்தும் மனதளவில் கூட மாற்றமில்லாத ஜெயலலிதாவோடு உறவாட தன் தலைவனாக அண்ணனாக பிரபாகரணைக் கொண்ட அண்ணனின் தம்பிக்கு மனம் வரும் போது கருணாநிதி டெசோவை ஆரம்பிக்கும் போது மட்டும் போதும் கலைஞரே உங்கள் உதவி எங்களுக்கு தேவையில்லை என்பதில் இருப்பது தன் இருத்தலியம் குறித்த கேள்விக் குறியே தவிற வேரென்னவாக இருக்க முடியும்.?

பெரியார் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல என்ற ஒரே பெரியாரின் கொள்கையை மட்டும் பற்றிக் கொண்டு அதையே தனது வேதவாக்காக எடுத்துக் கொண்டு தனது நிஜமுகத்தை காட்டும் ஆணவமாகவே நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தை பார்க்கவேண்டியிருக்கிறது.

//இந்திய அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகியனவற்றில் உண்மையான நம்பிக்கை கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி வலிமைப்படுத்தக் கட்சி உறுதி ஏற்கிறது//

இந்திய அரசியல் சாசனத்தை கொளுத்துவோம் என முழங்கிய பெரியார் கடைசி வரை தனது இயக்கத்தை அரசியல் சார்ந்த மக்கள் இயக்கமாகவே அவர் வளர்த்தெடுத்தார், ஒரு அடிமைத் தனத்துக்குள் சிக்கிக் கொண்டு அதனை கேள்விகேட்கும் எந்த உரிமையையும் அவர் விட்டுத் தர தயாராக இல்லை. அதனால்தான் அவர் சீமானே முன்னர் முழங்கியது போல ஓட்டுப் பொருக்கி அரசியல் எமக்கு வேண்டாம் என்றார்.

சீமானும் ஓட்டுப் பொருக்கி அரசியலுக்கு வந்ததற்கு எமது வாழ்த்துக்கள் ஆயினும் மாற்று அரசியல் என்னும் போர்வையில் வரலாற்றின் திரிபுகளான பக்கங்களை மட்டும் எழுதிச் செல்வதென்பதான தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாத வரை, நாம் தமிழர்கள் ஒரு இயக்கமாகவோ கட்சியாகவோ இல்லை ஒரு கூட்டமாகவோ கூட இருந்திட லாயக்கற்றவர்களாகிறார்கள்.

ஆன்றோர் அவையினரால் உருவாக்கப் பட்ட ஆவணம் தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளும் என்ற ஒரு வரி இருப்பதிலேயே அதன் உண்மைத் தன்மை கேள்விக்குள்ளாக்கப் படாவிடினும். " ஒரு கடிதம் எழுதி அதன் கடைசி வரியில் தவறுகள் இருப்பின் மன்னித் தருள்க என்பது " எனக்கு என் மகன் எழுதும் கடிதத்தில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப் படலாமே தவிர லட்சோப லட்சம் அண்ணனின் தம்பிகள் ஒரு தவறான அரசியலைப் படித்து, தவறான வாக்கு வாதங்களில் படக் கூடாத இடத்தில் எல்லாம் அடிபட காரணமாய் இருக்குமே என்பதை அந்த ஆன்றோர் பேரவை சிந்தித்ததா என்பதை அப் புத்தகத்தின் எந்த வரியிலிருந்தும் நாம் அறியக் கிடைக்கவில்லை.

"இந்திய அரசியலை எதிர்த்து இந்திய இறையான்மைக்கு உட்பட்டு இந்தியர்கள் மட்டுமே இணைந்து போராடி ஈழத்துக்கு விடுதலை வாங்கித்தருவோம் " என்ற ஒற்றை வரிக் கொள்கைக்காய் பல ஆன்றோர்களும் சொல்விளக்க அதிகாரமும், கொண்டு விளக்கு விளக்கென்று வெளக்குவதையும், திராவிட இயக்கம் இல்லாவிட்டால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும்  குன்றில் இட்ட விளக்கு போல் பளீரென்ற ஒளியோடு பார் போற்றும் தேசமாகி இன்று எல்லோரும் இன்புற்று இருப்போம் என்றும் அப்படி இல்லாமல் போன காரணத்தால் எமது :"இந்த கொள்கையால் மட்டுமே குன்றத்தில் விளக்கேற்றி வைத்திட முடிம்" என்ற முழக்கத்தை பக்கம் பக்கமாக வெவ்வேறு வார்த்தைகளில் நீட்டி முழக்குவதைத் தவிற ஒரு......மண்ணும் அவர்களில் ஆவணப் புத்தகத்தில் இல்லை.

என்னமோ அவர்களின் கொள்கை ராம்ராஜ் வேட்டி என்றும் அதை திராவிடத் தோழர்கள் கிழித்துவிட்டதால் அண்ணனின் தம்பியின் த்ம்பிகள் ஒட்டுத் தையல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஆவேசத்தோடு படிக்க ஆரம்பித்த எனக்கு முடிவில் அவர்களின் ஆவணத்தில் இருந்து சில வரிகளைக் கூட மேற்கோள் காட்டி அதை மறுதலிக்கும் பேறு கிடைக்காத அளவிலேயே கம்பெனியின் தரம் இருப்பதால் இப்போதைக்கு ஒரே வரி விமர்சணம்.

"இது தயாரிப்புக் கோளாறு ( மானுஃபாக்சரிங் டிஃபெக்ட்) சரிசெய்யவெல்லாம் முடியாது முடிந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.

ஆவணத்தை குறித்த எந்த குறிப்புகளும் கொடுத்தெல்லாம் அவர்களின் கொள்கைகளை, மறுக்கும் அளவுக்கு அங்கே ஒன்னுமில்லை என்பதே என் புரிதல்.