Friday, April 18, 2008

-பெரியார் 7

ஆழ்ந்து யோசித்தால், காதலின் சத்தற்ற
தன்மை, பொருளற்ற தன்மை,
உண்மையற்ற தன்மை, நித்யமற்ற தன்மை
அதைப் பிரமாதப்படுத்தும் அசட்டுத் தன்மை
ஆகியவை எளிதில் விளங்கிவிடும்!

-பெரியார்



தொண்டுள்ளம் என்பது மனிதருள் அரிதாகக் காணப்படும் ஒரு விஷயம். அப்படியே சிலரிடத்தில் அது காணப்பட்டாலும் சோறு, தண்ணீர், தூக்கம் போல் அது அவர்களது வாழ்வின் மற்றொரு காரியம். ஆனால், ராமசாமியாருக்கோ அது ரத்தமும் சதையுமாக பிறக்கும்போதே உடலோடு ஒட்டிப் பிறந்த ஒன்று. அதனால்தான் ராஜாஜி மூலமாக காந்தியைப் பற்றியும் அவரது கொள்கைகளைப் பற்றியும் கேள்விப்பட்ட உடனேயே அவரது உள்ளம் நெருப்பலைகளாகப் பொங்கிப் பிரவகித்தன. காந்தி அவருக்குள் ஒரு கதாநாயகனாக உருவெடுத்தார். அதுவரை தன்னைப் பீடித்து வந்த சிகரெட், புகையிலை போன்ற பழக்கவழக்கங்களுக்கு ஒரே நாளில் நிரந்தர முடிவு கட்டினார்.

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, ராஜாஜி சேலம் நகர் மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த அதே நாளில், ராமசாமியாரும் தனது ஈரோடு நகர் மன்றத் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்தார். அப்போது தீவிரமாக இருந்த காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்துக்குக் கட்டுப்படும் வகையில் கோர்ட் நடவடிக்கை மூலம் தனக்கு வர வேண்டியிருந்த ரூபாய் 50,000 பணத்தையும் நிராகரித்தார். தான் வகித்து வந்த 29 முக்கியப் பதவிகளையும் ஒரே நாளில் துறந்து, கதர் வேட்டி சட்டை, கதர் குல்லா, தோளில் பை எனச் சாதாரணத் தொண்டனாக மாறி ஈரோட்டையே அதிசயிக்கவைத்தார்.

மனைவி நாகம்மையை அழைத்தார்.

வீட்டில், பெட்டியில் அடுக்கடுக்காக இருந்த பட்டுப் புடவைகள், வேட்டி சட்டைகள் அனைத்தையும் சேகரிக்கச் சொன்னார். அப்போது நாடகத்துக்காக ஈரோட்டில் முகாம் போட்டு இருந்த அவ்வை சண்முகம், டி.கே.பகவதி, ஆகியோரை வரவழைத்து, ''இனி இந்தத் துணிகள் உங்களது நாடகத்துக்குப் பயன்படட்டும்'' எனத் துணிகள் அனைத்தையும் கொடுத்ததோடு, ''இனி, இந்த வீட்டில் கதராடை மட்டும்தான் உடுத்த வேண்டும்'' என உத்தரவிட்டார். ஆரம்பத் தயக்கங்களுக்குப் பின் ஒட்டுமொத்த குடும்பமும் ராமசாமியின் கட்டளையை ஏற்றுக்கொண்டு கதராடைக்கு மாறியது.

ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால், எத்தனை தடை வந்தாலும் அதன் இறுதி எல்லை வரை தொட்டுப் பார்த்துவிடும் சுபாவமும், அதன் பொருட்டு எதனையும் இழக்கும் துணிச்சலும் இயல்பாகக்கொண்டு இருந்த ராமசாமியாரின் மூர்க்கத்தைக் கண்டு காங்கிரஸார் மலைத்து நின்றனர். ஒரு தோளில் ராட்டையும் மற்றொரு தோளில் கதர் துணி மூட்டையுமாக வீதியில் இறங்கி, ஊர் ஊராகக் கதர் வியாபாரம் செய்ய அவர் புறப்பட்டபோது, அதுவரை அவரைச் சுற்றி வந்து வயிறு வளர்த்த கும்பல்கள் அதிர்ந்தன. 'உட்கார்ந்து சாப்பிட்டாலே ஏழு தலைமுறைக்குச் சொத்து இருக்கும்போது, இந்த மனிதனுக்கு இது என்ன வேண்டாத வேலை?' எனப் புலம்பினர். நட்பும் உறவும் எச்சரித்தன. ஆனால், ராமசாமியார் அந்தக் கூச்சல்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. மனைவி நாகம்மையையும் தங்கை கண்ணம்மாவையும் அழைத்துக்கொண்டு கதர் பிரசாரத்தில் அவர் ஈடுபட்ட தீவிரத்தைக் கண்டு ராஜாஜியே ஆடிப் போனார்.

பொதுக் கூட்டங்களில் ராமசாமியாரின் பேச்சுக்கு பலத்த கைதட்டல்கள் கேட்டன. இதுநாள் வரை தொண்டைத் தண்ணி வறள தாங்கள் மணிக்கணக்கில் மைக்கில் பேசியும் மசியாத கூட்டம், ராமசாமியாரின் பேச்சில் மகுடிப் பாம்பாய் மயங்கி, கதர் சட்டைக்கு மாறுவது கண்டு ஆச்சர்யப்பட்டனர். இத்தனைக்கும் அவரது பேச்சில் மணிப்பிரவாள மொழி நடை கிடையாது. சாக்ரடீஸ், பிளாட்டோ என மிரளவைக்கும் பிரமாண்டங்கள் துளியும் இல்லை. ஆனால், 'உண்மை' இருந்தது. அந்த ஒன்றுதான் பாமரர்களையும் அவரை நோக்கிச் சுண்டி இழுத்தது. தீண்டாமை, மதுவிலக்கு, கதர் என எதைப் பற்றி அவர் பேசினாலும் பேச்சில் நெருப்புத் துண்டங்கள் தெறித்து விழுந்தன. கேட்போரின் மடமையை அவை அடித்து நொறுக்கி அறிவின் பெரு வெளிச்சத்தையும் தேசப் பற்றையும் ஊட்டி வளர்த்தன. ராமசாமியாரின் இந்த அபாரப் பேச்சுத் திறமையால் தமிழ்நாட்டில் ஆமையாக இருந்த காங்கிரஸ், சிங்கமாக வீறுகொண்டு எழுந்தது. எங்கு கூட்டம் நடத்தினாலும் 'முதலில் ராமசாமியாரைக் கூப்பிடுங்கள். அவர் பேரைச் சொன்னால்தான் கூட்டமே கூடுகிறது' எனுமளவுக்கு அவரது புகழ் தமிழ்நாடு முழுக்கப் பரவியது. ராமசாமியாரின் இந்த அபரிமிதமான வளர்ச்சியில் அவருக்குப் பின்னிருந்து ராஜாஜி முழு முனைப்பாகச் செயல்பட்டார். அதற்குக் காரணமும் இருந்தது.

அப்போதைய அரசியல் சூழலில் தன் முக்கிய எதிரிகளான அன்னிபெசன்ட், தீரர் சத்தியமூர்த்தி, ஆகியோரை வீழ்த்த முடியாமல் ராஜாஜி திணறிக்கொண்டு இருந்தார். இந்தச் சூழலில் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட ராமசாமியாரின் வளர்ச்சி அவரை மிகவும் சந்தோஷப்படுத்தியது. இதன் விளைவாகத்தான் திருச்செங்கோட்டில் தன்னால் துவக்கப்பட்ட காந்தி ஆசிரமத்தை ராமசாமியாரின் கைகளால் திறக்கச் செய்தார். தன் அழைப்பின் பேரில் திருச்செங்கோடு ஆசிரமத்துக்கு காந்தி வருகை தந்தபோது, அப்படியே ஈரோட்டில் ராமசாமியாரின் வீட்டுக்கும் அவரை அழைத்துச் சென்றார் ராஜாஜி. அங்கே கள்ளுக் கடை மறியல் குறித்த உரையாடலின்போது ராமசாமியாரிடம் காணப்பட்ட செயல் தீவிரம் காந்தியை ஆச்சர்யப்படுத்தியது. தனது குடும்பத்துப் பெண்களை வீட்டில் பூட்டி சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு பெரும்பாலான தலைவர்கள் மேடைகளில் வீராவேசம் முழங்கி வந்த காலத்தில், தனது மனைவி நாகம்மையையும் தங்கை கண்ணம்மாவையும் களத்தில் இறக்கிப் போராடவைத்த ராமசாமியாரின் துணிச்சல் காந்தியை மலைக்க வைத்தது.

1921 நவம்பரில் கள்ளுக்கடை மறியல் ஈரோட்டில் பொறி பறந்தது. எதைச் செய்தாலும் முதலில் அதைத் தன்னிடத்திலிருந்து துவங்கும் அருங்குணத்தைப் பெற்றிருந்த ராமசாமியார் சேலம் தாதம் பட்டியில் தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை ஒரே இரவில் வெட்டிச் சாய்த்துவிட்டு போராட்டக் களத்தில் குதிக்க, ஆங்கில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.



ராமசாமியார் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாத சிறைத் தண்டனை. போராட்டம் நின்றுவிட்டது என்ற நினைப்பில் இருந்த போலீஸாருக்கு நாகம்மை, கண்ணம்மாள் என இரண்டு வீர மங்கைகள் இன்னும் களத்திலிருப்பது தெரியாது. அவர்களுக்குப் பின்னால் பெண்கள் அணி அணியாக வீதியில் இறங்கினர். கிட்டத் தட்ட 10,000க்கும் அதிகமானோர் தடையை மீறி தெருவில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராகக் கோஷமெழுப்பினர்.

'நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கிறது' என ஈரோட்டிலிருந்து சென்னைக்குத் தந்தி பறந்தது. அதைக் கண்டு பயந்த அரசு உடனடியாக 144 தடை உத்தரவை நீக்கியது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கள்ளுக் கடை மறியலைக் கைவிடும்படி ஆங்கில அரசாங்கம் ,காந்தியிடம் கோரிக்கை வைத்தது. 'அது என்னிடத்தில் இல்லை. ஈரோட்டில் இரண்டு பெண்களிடத்தில்தான் இருக்கிறது. அவர்கள்தான் அதனை முடிவு செய்ய வேண்டும்!' என்று காந்தி கூறுமளவுக்கு, நாகம்மை கண்ணம்மாள் இருவரின் போராட்டம் சரித்திரத்தில் இடம் பிடித்தது.

இந்த நேரத்தில் காங்கிரசுக்குள் சாதித் துவேஷங்கள் தீவிரமாக இருந்தன. ஒருபக்கம் மேடையில் தீண்டாமைக்கு எதிராக ஆவேச கோஷங்கள். மறுபக்கம் மாநாடுகளில் பிராமணர்களுக்கெனத் தனிப் பந்தி. உள்ளம் குமுறும் இந்த நடவடிக்கைகள் காரணமாக பலர் புழுங்கித் தவித்தனர். இந்த சமயத்தில்தான் ராமசாமியார் எதிர்பார்த்த திருப்பூர் மாநாடு வந்தது. மாநாட்டில் தனக்கு முன்பு வாக்கு கொடுத்தது போல, பிராமணர் அல்லாதவருக்கு 50 சதவிகிதம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ராஜாஜி முன்மொழிந்து செயலாக்கிவிடுவார் என ராம சாமியார் நம்பினார்.

ஆனால், சரித்திரச் சக்கரம்?



-சரித்திரம் தொடரும்

-பெரியார் 6

பொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுத்திக்கொள்பவரே ஆவார்!

-பெரியார்

இருபதாம் நூற்றாண்டின் தமிழக அரசியல் வரலாற்றில் நட்பு எனும் அத்தியாயத்தை எழுதப்போனால், உலகின் தலைசிறந்த நாவல்களும் தோற்றுப்போகும்! கோப் பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு போல, பெரியார் ராஜாஜியின் நட்பும் ஆழமானது!

அன்று, சேலம் நகர மன்றத் தலைவராக இருந்த ராஜ கோபாலாச்சாரியார் என்றழைக்கப்பட்ட ராஜாஜி, ஈரோடு வந்து ராமசாமியாரைச் சந்தித்தது ஆரம்பம். தொடர் சந்திப்புகளில், காங்கிரஸில் சேருமாறு அழைப்பு விடுத்தார் ராஜாஜி. ராமசாமியாரும் அதனை ஏற்றுக்கொண்டு காங்கிரஸில் சேர்ந்து தமிழக அரசியலில் அடியெடுத்துவைத்தார். தமிழ்நாட்டில் அப்போது நிலவிவந்த அரசியல் சூழ்நிலையைத் தெரிந்துகொண்டால்தான், ராமசாமியாரின் அரசியல் வருகை யில் உள்ள முக்கியத்துவத்தை நம்மால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியும்.

முந்தைய பகுதிகள்

சென்ற இதழ்...







1914 உலக வரலாற்றில் பல மாறுதல்களை ஏற்படுத்திய ஆண்டு. முதல் உலகப் போர், ரஷ்யாவில் லெனின் தலைமையில் சோஷலி சத்தின் எழுச்சி, தென் ஆப்பிரிக் காவிலிருந்து காந்தியின் இந்திய வருகை எனப் பல முக்கிய நிகழ் வுகள் அந்த ஆண்டில்தான் நிகழ்ந் தன. தமிழ்நாட்டிலும் அதிசயிக்கத் தக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. படித்த இளைஞர்கள் சிலர் அந்த ஆண்டு சென்னை, திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி யில் கூடி விவாதித்தனர். அவர் களது பேச்சில் உணர்ச்சியும் உஷ் ணமும் அதிகம் இருந்தன. அவர் களின் கோபத்துக்குக் காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிமட்டு மல்ல; அதன் அரசாங்கப் பதவி களும்கூட!



சப் கலெக்டர், ஜட்ஜ், தாசில் தார், வக்கீல், ரெவென்யூ இன்ஸ் பெக்டர் போன்ற உயர் பதவிகள் பலவற்றில் பிராமண சமூகத்தினரே பரவலாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். டெபுடிகலெக் டர்கள், சப் ஜட்ஜுகள், மாவட்ட முன்சீப்கள் என அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் அவர் களே அதிக எண்ணிக்கையில் பதவியில் இருந்தனர். மற்ற சாதி களில் இருந்த படித்த இளைஞர் கள் அரசாங்கப் பதவிகளுக்கு வருவதற்கு இது பெரும் தடையாக இருந்தது. இதுதான், அன்றுகூடிப் பேசிய இளைஞர்களின் விவாதத் தின் சாராம்சம். விளைவு, 1916 நவம்பர் 20ல், சென்னை பூந்த மல்லி நெடுஞ்சாலையில் வக்கீல் எத்திராஜ் என்பவர் வீட்டில் டாக்டர் நடேசன், சர்.பி.டி.தியா கராயர், டி.எம்.நாயர், பனகல் அரசர் போன்றோர் தலைமையில் சுமார் 30 பேர் ஒன்று கூடினர். புதிய இயக்கம் ஒன்று உதயமானது. 'தென்னிந்திய உரிமை நலச் சங்கம்' என்ற பெயரில் அன்று உருவான அந்த இயக்கம், தனது அடுத்தடுத்த மாநாடுகளால் தென்னிந்தியா முழுக்கப் பெரும் எழுச்சியையும் அலையையும் மக்கள் மத்தியில் உண்டாக்கி யது. அவர்கள் தங்களைத் 'திரா விடர்' என அடையாளப்படுத்திக் கொண்டனர்.

அரசாங்கப் பதவிகளில் பிராமணர் அல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் வகுப்புவாரி முறையில் பிரநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாநாடுகள் தோறும் முழங்கினர். இதையட்டி தங்களது கருத்துக்களை மக்களிடத்தில் கொண்டுசெல்லும்விதமாகப் பத்திரிகைகளையும் துவக்கினர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் அவை மக்களிடையே பரபரப்பாக விற்பனையாகி, கட்சிக்குப் புதிய அந்தஸ்தையும் கௌரவத்தையும் ஏற்படுத்தின. அவர்கள் நடத்திய 'ஜஸ்டிஸ்' எனும் ஆங்கிலப் பத்திரிகையின் பெயரே நாளடைவில் மக்களிடையில் அதிகமாகப் புழங்கத் துவங்கி, பிற்பாடு அக்கட்சியின் பெயரையும் மக்கள் ஜஸ்டிஸ் கட்சி என்றே அழைத்தனர். இந்த 'ஜஸ்டிஸ்'தான் தமிழில் 'நீதி'யாகி பின்னர் 'நீதிக்கட்சி' என்ற பெயருடன் அரசியல் வரலாற்றில் தன் னைப்பதிந்துகொண்டது.



இந்தச் சூழலில்தான் பிரிட்டிஷ் அரசாங்கம், முதல் உலகப் போரில் தனக்கு ஒத்துழைத்த இந்தியாவுக்குத் தனது நன்றியைக் காட்டும் விதத்தில், மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளப் பயிற்சி அளிக்கும் விதமாக மாகாணங்களில் சுய ஆட்சி வழங்கத் திட்டமிட்டது.

1919ல் சென்னையில் நடந்த முதல் மாநகராட்சித் தேர்தலில் 'நீதிக் கட்சி' பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நீதிக் கட்சியின் தலைவரான சர்.பி.டி.தியாகராயர் சென்னை மாநகராட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் மற்றொரு பிரிவான அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையிலான சுயராஜ்யக் கட்சி படுதோல்வி அடைந்தது.

இத்தனைக்கும் வட நாட்டில் காட்டுத் தீயென தேச பக்தி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்த நேரம் அது. காந்தி மகான் மக்களிடையே புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருந் தார். அங்கு காங்கிரஸ், மக்கள் போற்றும் மகத்தான கட்சியாக மாறி இருந்தது. ஆனால், தென் னாட்டில் காங்கிரசுக்கு மக்க ளிடத்தில் போதிய செல்வாக்கு இல்லை என்பதைத் தேர்தல் நிரூபித்துவிட்டது.

காந்திக்கு இந்த விஷயம் தெரிந்து, தென்னாட்டில் காங்கிரஸைப் பலப்படுத்துவது குறித்து தீவிரமாக யோசிக்கத் துவங்கினார். இது சம்பந்தமாக அப்போதைய காங்கிரஸ் பேரியக்கத்தின் தென்னாட்டுத் தலைவர்களில் ஒருவரான ராஜாஜியிடம் அவர் தெளிவாக ஒரு விஷயத்தை எடுத்துரைத்தார். இனி, தென்னாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்க்க வேண்டுமானால், அதைப் பிராமணரல்லாத ஒருவரை வைத்துதான் செய்ய முடியும்; நல்ல பேச்சு வன்மையும் தேச பக்தியும்கொண்ட தலைவராக இருந்தால், நீதிக் கட்சியை முழுவதுமாக ஓரங்கட்டிவிடலாம் என்பதே அது!

இச்சமயத்தில்தான் ராஜாஜிக்கு ஈரோட்டில் ராமசாமி எனும் தலைவரின் சாகசங்களும் அருமை பெருமைகளும் தெரிய வந்தன. ராமசாமியாருக்கு காங்கிரஸ் மீது, எப்போதும் ஒரு அபிமானம் உண்டு. ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதுமே துடித்துப்போன ராமசாமியார், வ.உ.சி. உட்பட 50க்கும் மேற்பட்டவர்களை ரயிலில் அழைத்துச்சென்று அந்த இடத்தில் கண்ணீர் மல்க நின்றிருக்கிறார். தன்னைத் தேடி வரும் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் பொருளுதவியும் பலமுறை செய்திருக்கிறார். என்றாலும், அப்போதெல்லாம் காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர் பதவியைக்கூட அவர் ஏற்றிருக்கவில்லை. எனினும் ராஜாஜியின் மீது கொண்டிருந்த நட்பால், அவரது அழைப்புக்கு உடனே ஒப்புக்கொண்டார். தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, விதவைத் திருமணம், கதராடை இயக்கம் என இந்த நான்கு கொள்கைகளையும் கேட்ட மாத்திரத்திலேயே ராமசாமி அவர்களுக்கு காந்தியின் மேல் அளவற்ற மதிப்பும் மரியாதையும் உண்டாகிவிட்டது.

''இனி கண நேரமும் நாம் தாமதிக்கக் கூடாது. இந்தத் தேசத்தை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க, காந்தியின் கரத்தை வலுப்படுத்த இதுவே சரியான தருணம். உங்களது நகராட்சி மன்றப் பதவியை ராஜினாமா செய்யுங்கள். நானும் சேலம் நகர மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்'' என ராஜாஜி துரிதப்படுத்த, ராமசாமியார் முழு மனமின்றித் தயங்கினார்.

''நாயக்கரே! உங்களுக்கு என்னதயக்கம் இருந்தாலும் வெளிப்படையாகக் கேளுங்கோ!''

''இல்லை... தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சின்னாலே அது உங்க சாதிக்காரங்க கட்சியாதான் இருக்குது.''

''அதனாலதான் உங்களைக் கூப்பிடறேன். நீங்க வந்து அந்த அவப் பேரை மாத்திடுங்கோ!''

''அது போதாது! எனக்கு நீங்க ஓர் உத்தரவாதம் தரணும். கட்சி யிலேயும் உத்தியோகத்திலேயும் உங்க சாதிக்காரங்க இல்லாத மத்த சாதிக்காரங்களுக்கு 50 சதவிகிதம் நீங்க விட்டுக்கொடுத்து டணும். அதுக்குச் சம்மதம்னா சொல்லுங்க, இப்பவே காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்துடறேன். அதுக் கப்புறம் வெள்ளைக்காரனுக்கு பூட்ஸ் துடைக்கிற ஜஸ்டிஸ்கார னுங்களை உண்டு இல்லைன்னு பண்ணிப்புடலாம்!''

ராஜாஜி தயங்கவும், ''யோசிக்கிறீங்க பாத்தீங்களா! உங்களால அது முடியாது!'' என்றார் ராமசாமி.

''அதில்லை நாயக்கரே! நான் மட்டும் எடுக்கிற முடிவில்லை அது. சரி, கவலையை விடுங்க. அடுத்து நடக்கப்போற திருப்பூர் மாநாட்டுல நானே இதுக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேத்துறேன். கையைக் கொடுங்கோ, இதைப் போய்ப் பெரிசா எடுத்துக்கிட்டு...'' நண் பர்கள் கைக் குலுக்கிக்கொண் டனர்.

அந்த வாக்குறுதியை நிறை வேற்றுவது அத்தனை எளிதல்ல என்பது ராஜாஜிக்கு நன்றாகத் தெரியும். அப்போதைக்கு வேறு வழி தெரியாமல் வெறுமனே ஒப் புக்குத் தலையை ஆட்டிவிட்டார். பின்னால் பிரச்னை வரும்போது எப்படியாவது பேசி நாயக்கரைச் சமாளித்துவிடலாம் என்பது ஆச்சாரியாரின் கணக்கு.

ஆனால், அது தப்புக் கணக்கு என்பது ஆறு வருடங்களுக்கு பிறகுதான் அவருக்கு உறைத்தது.



-சரித்திரம் தொடரும்

பெரியார் 5

என்னைப் பொறுத்தவரையில் ஒரு மனிதர் யாராக இருந்தாலும், அவர் தமிழ்ப் பற்று உடையவர் என்று கருதினால், நான் அவருக்கு அடிமையே ஆவேன்!

- பெரியார்

சந்தடிகள் மெள்ள ஓய்ந்துகொண்டு இருந்த ஈரோடு நகர சந்தையின் இரவு நேரம்.

கடைகள் ஒவ்வொன்றாக அடைக்கப்பட, கணக்குப் பிள்ளைகளுடன் வியாபாரிகள் வெளியேற, சாவிக்கொத்துடன் வெளியே வந்தார் வெங்கட்ட நாயக்கர். மனசு முழுக்கக் கலக்கம்.

'சே... எப்பேர்ப்பட்ட அவமானம்! மண்டி நாயக்கர் மகன் கடன் வாங்குவதா?'

விஷயம் வேறொன்றுமில்லை. சித்த வைத்தியம் படித்துக்கொண்டு இருந்த அவரது மூத்த மகன் கிருஷ்ணசாமி யாரிடமோ ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, அதைத் திருப்பித் தரவில்லையாம். கடன் கொடுத்தவர்கள் நாயக்கரிடம் புகார் கொடுத்துவிட்டர்கள். இதுதான் அவரது உளைச்சலுக்குக் காரணம்.

ஆனால், அதேசமயம் இளைய மகன் ராமசாமியை நினைத்தபோது, அவருக்கு ஆச்சர் யம்! என்ன சிக்கனம்! என்ன சாமர்த்தியம்! காசியில் சோறு தண்ணி இல்லாமல் தெருவில் பிச்சை எடுத்துச் சாப்பிட்ட போதுகூட, ராமசாமி கையோடு எடுத்துச் சென்ற நகை நட்டில் ஒரு குண்டுமணிகூட விற்கவில்லை. அவனது புத்தி சாதுர்யத்தை நினைத்துப் பார்த்தால், அவருக்கு ஒருபக்கம் சிரிப்பாகவும், இன்னொரு பக்கம்சந்தோஷமாகவும் இருந்தது.



அதனால்தான் ராமசாமியை திரும்ப ஈரோடுக்கு அழைத்து வந்தபோது, அவன் துணி மூட்டையில் பொத்திவைத்திருந்த அத்தனை நகைகளையும் பேருந்து நிலையத்தில் வைத்தே உடம்பு முழுக்கப் போட்டுக்கொள்ளச் செய்து, 'பார், என் மகனை! ஓடிப்போனாலும் ஊதாரித்தனமாக இல்லாமல் போட்ட நகைகளுடன் திரும்ப வந்திருக்கிறான்!' என ஊருக்குச் சொல்லும்விதமாக வீதியில் பெருமையுடன் நடத்திக் கூட்டி வந்தார்.

'ஒரு மகன் சிக்கனத்தின் சிகர மாக இருக்க, இன்னொருவனோ ஊரில் கடன் வாங்கித் தன் மானத்தை வாங்கிவிட்டானே... நாளைக்கு அவனுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!' என யோசித்தபடியே கால்களை வீசி நடை போட்டார்.

மறுநாள், வீட்டில் வெங்கட்ட நாயக்கர் நாற்காலியில் வீற்றிருக்க, அவரைச் சுற்றிப் பெரும் கூட்டம். ஒருபுறம் மூத்த மகன் கிருஷ்ணசாமி வெட்கத்துடன் தலை குனிந்து நின்றிருக்க, வேலைக்காரர்கள் ஒற்றை ரூபாய் நாணயங்களை வரிசையாக நீளமாக அடுக்குவதில் மும்முரமாக இருந்தனர். கிருஷ்ண சாமிக்குக் கடன் கொடுத்த நபர், இந்தக் காட்சியை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.நாணயங்கள் முழுவதுமாக அடுக்கி முடிக்கப்பட்டபோது, அந்த வரிசை கூடத்தைத் தாண்டி, வாசலைத் தாண்டி, தெரு வரை நீண்டிருந்தது.

வெங்கட்ட நாயக்கர் கிருஷ்ண சாமியை அழைத்து, ''மகனே... நீ கடன் வாங்கிச் செலவழித்த தொகை எத்தனை பெரியது என் பதை உணர்த்தத்தான் இப்படி வரிசையாக அடுக்கச் சொன்னேன். இனியாவது, பணத்தின் அருமையை உணர்ந்துகொள்!'' என அறிவுறுத்தினார். பின்பு,கடன் கொடுத்தவரிடம் அந்த நாணயங்களை மொத்தமாக அள்ளிச் செல்லும்படி உத்தரவிட்டார். அன்று முழுக்க அவருக்கு நிம்மதி இல்லை. இனியும் இந்தக் கதை தொடர்ந் தால், மண்டி நாயக்கர் மற்றவர் களிடம் மண்டியிட வேண்டி வந்துவிடுமோ எனும் கவலை அவரைப் பீடித்திருந்தது.

அன்று இரவே அதிரடியாக ஒரு முடிவு எடுத்தார் நாயக்கர். மைனர் மகாதேவனாக வலம்வந்து கொண்டு இருந்த ராமசாமியை ஈரோட்டின் மதிப்பு மிக்க மனித னாக மாற்றிய முடிவு அது.

தன் வியாபாரம், தனது வெளிவட்டாரப் பழக்கவழக்கம், வகித்துவந்த ஊர்ப் பதவிகள் அனைத்துக்கும் ராமசாமிதான் வாரிசு என சம்பந்தப்பட்ட ஆட்களிடம் தெரிவித்தார் நாயக்கர். தந்தை தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து ராமசாமிக்குப் பெரும் வியப்பு. கூடவே உள்ளத் தில் உறுதியும் பொறுப்பு உணர்வும் சேர்ந்துகொண்டன.

''மகனே, துட்டுதான் வாழ்க்கை. கையில் காலணா காசு இல்லைன்னா, ஒரு பய உன்னை மதிக்க மாட்டான். அதே போல, உன்னை நம்பி யாராவது பொறுப்பு கொடுத்தால், அதை உயிரைக் கொடுத்தாவது செய்து முடி. மத்தபடி எல்லாம் உன் இஷ்டம்!''

அந்த வார்த்தைகள் ராம சாமியின் இதயத்தில் கல்வெட்டுகளாகப் பதிந்தன.

அடுத்த நாளே, ஈரோடு பலசரக்குச் சந்தையில் பரபரப்பு! அதுவரை வெங்கட்ட நாயக்கர் மண்டி என இருந்த பெயர்ப் பலகை, 'ராமசாமி நாயக்கர் மண்டி'யாக மாறியது. கூடவே ராமசாமியின் வேஷமும் மாறியது. கணக்குப்பிள்ளை, பட்டாமணியக்காரர், ரெவின்யூ இன்ஸ்பெக்டர், டாக்டர், வக்கீல், டெபுடி கலெக்டர், முன்சீப்,மாஜிஸ்திரேட் போன்ற பதவியாளர்கள் இப்போது ராமசாமிக்கு வணக்கம் போட ஆரம்பித்தனர். வெள்ளைக்கார அதிகாரிகளின் பழக்கமும் ஏற்பட்டது. அவர்களைப் பார்க்க போகும்போதெல்லாம் வெங்கட்ட நாயக்கர் தன் மேல் சட்டையைக் கழற்றிச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால், ராமசாமிக்கு அது எதுவும் பிடிக் காதே! ஒருமுறை வெங்கட்ட நாயக்கரே பதற்றத்துடன் வெள்ளை அதிகாரிகள் முன்பு ராமசாமியின் சட்டையைக் கழற்றும்படிசொல்ல, ''நீ வண்டி நாயக்கர் மகனாப் பிறந்ததால், இவனுங்களுக்கெல்லாம் கூழைக் கும்பிடு போடலாம். நான் ஈரோடு மண்டி நாயக்கர் மகன். எவனுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை!'' என அழுத்தமாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராமசாமி.

1911-ல் ஒரு நாள், வெங்கட்ட நாயக்கர் தனது உலக வாழ்க்கை யைத் துறந்தபோது, ஈரோட்டின் சகல காரியங்களையும் தீர்மானிக் கும் மகத்தான சக்தியாக மாறி யிருந்தார் ராமசாமி.

மக்களிடத்திலும் அதிகாரிகளிடத்திலும் அவரது மதிப்பும் செல்வாக்கும் பன்மடங்கு உயர்ந்திருந்தது. அவரது சிக்கன குணமும் நேர்மையும் வியாபாரத்தில் அவரைச் சிகரத்துக்கு இட்டுச் சென்றன. பிளேக் நோய் வந்து ஈரோடு நகரமே மரண பயத்தில் திணறியபோது, பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தமது தோளில் சுமந்து மருத்துவமனைகளுக்கு அவர் ஓடிய காட்சி, மக்கள் மனங் களில் ராமசாமியை ஒப்பற்ற நாயகனாக மாற்றியது.

''முதல்ல நாயக்கர் வரட்டும், அதுக்கப்புறம்தான் எல்லாம்!'' என நகரத்தில் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் ராமசாமியை எதிர்பார்த்தனர். கோர்ட் வழக்கு களிலும் தீர்ப்பு சொல்வதற்கு முன், 'எதுக்கும் ராமசாமிகிட்ட ஒரு தடவை கேட்டுட்டுத் தீர்ப்பு சொல்வோம்' என மாஜிஸ்திரேட் டுகளே மண்டிக்கு ஆள் அனுப்பிய அதிசயமும் நடந்தது.

ஈரோடு மாவட்ட தேவஸ்தான கமிட்டிக்கு ராமசாமி தலைவரான போது, ''ஏற்கெனவே சாஸ்திர சம்பிரதாயத்தை எல்லாம் ராம சாமி மதிக்க மாட்டான். இவன் பதவிக்கு வந்தா, கோயிலெல்லாம் என்ன கதிக்குள்ளாகப் போகுதோ?'' என ஆத்திகர்கள் பதறினர். ஆனால், அதே ஆத்திகர்கள் வாயடைத்து நிற்கும்விதமாக, கடனில் தவித்த கமிட்டியை மீட்டு, கோயில்களில் ஆறு கால பூஜைகள் நடத்தி, 45,000 ரூபாய் லாபத்துக்கு மாற்றி, தனது தனிப் பட்ட கொள்கைகளுக்கும் பொது நலச் செயல்பாட்டுக்கும் இடையி லான வித்தியாசத்தை உலகுக்குத் தெரியப்படுத்தினார் ராமசாமி.



இப்படியாக மக்கள் சேவை, மண்டி வியாபாரம் என ஈரோடு நகரத்தையே எண்ணமும் உடலு மாகச் சுற்றிச் சுழன்றவருக்கு, புதிதாக ஒரு பெரும் பதவி தேடி வந்தது. ஈரோடு நகராட்சி மன்றத் தலைவராக ராமசாமி பொறுப்பேற்றுக்கொண்டதும், நகரம் துரிதமாகப் புதுப்பொலிவு பெற ஆரம்பித்தது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஆக்கிர மிப்புக் கட்டடங்கள் இடிக்கப் பட்டன. பணக்கார வியாபாரிகள் சிலர் வயிற்றெரிச்சலில் புலம்ப, நகரத்து மக்கள் ராமசாமியின் புகழை வாயாரப் பாடியபடி சுதந் திரமாகச் சாலையைக் கடந்தனர். குடிநீர்க் குழாய்கள் இணைக்கப்பட்டு, வீடுகளுக்குள் முதன்முறையாகத் தண்ணீர் கொட்டத் தொடங் கியது.

இந்த மகிழ்ச்சியின் அலை பக்கத்து நகரான சேலத்தை எட்டியது. அப்போதைய சேலம் நகராட்சிக்குத் தலைவராக இருந்த காங்கிரஸ் தலைவர் ஒருவருக்குப் பயங்கர ஆச்சர்யம்! 'யார் இந்த ராமசாமி? சொல், செயல், தொண் டுள்ளம் என எல்லா விஷயங்களி லும் இப்படியரு நிகரற்ற தனித் தன்மையுடன் நின்று விளையாடு கிறாரே... ஆளை எப்படியாவது இழுத்து காங்கிரசுக்குள் போட்டால் காந்திஜி சந்தோஷப் படுவாரே!' என நினைத்தபடி தனது நண்பர் டாக்டர் வரத ராஜுலு நாயுடுவிடம் விசாரிக்க, அவரும் ராமசாமியின் ரசிகராக இருந்தார்.

அடுத்த நாளே, ஏதோ கோர்ட் விஷயமாகக் காரியம் பண்ணிக் கொண்டு இருவரும் ராமசாமியைச் சந்திக்க, ஈரோடு புறப்பட்டுச் சென்றனர்.

ராஜாஜி என்றும் ராஜகோபா லாச்சாரியார் என்றும் பிற்காலத் தில் மக்களால் அறியப்பட்ட அந்த சேலம் நகராட்சி மன்றத் தலைவர், தன் நண்பரோடு புறப் பட்ட அந்தப் பயணம், இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றின் பிரமாண்டமான மாற்றங்களை உள்ளடக்கியது என்பதை நிச்சயமாக அவர்களாலும் அப்போது ஊகித்திருக்க முடியாது!

பெரியார் 4

பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.இவை தமிழ்ச் சொற்களும் அல்ல!

-பெரியார் (451973, விடுதலை)

எல்லாக் காலத்திலும் இழப்புகள்தான் ஞானத்தின் பிறப்பிடம். எதுபற்றியும் கவலைப்படாமல் சலங்கை பூட்டிய காளை போல் உல்லாசமாய் குதித்தோடிக்கொண்டிருந்த ராமசாமியின் வாழ்வில், பிறந்து ஐந்தே மாதத்தில் இறந்துபோன அவரது பெண் குழந்தையின் இழப்பு சொல்ல முடியாத துக்கமாக அவரது தொண்டைக்குழியை அடைத்துக்கொண்டது. கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி போன்ற குணங்கள் சட்டென அவரை விட்டு விலகி நின்றன. சோகம் அவரைச் சூழ்ந்து கொண்டது. துக்கம் அவரது தூக்கத்தைப் பறித்தது. பின்னாளில் தந்தை இறந்தபோதும், தாய் இறந்தபோதும் தன் இணைநிழலாக வாழ்ந்த மனைவி நாகம்மை இறந்த போதும், அதுகுறித்துக் கடுகளவும் சோர்ந்துபோகாமல் அடுத்த நிமிடமே இடுப்பில் வேட்டியை இறுக்கிக்கொண்டு தொண்டு செய்யப் புயலெனப் புறப்பட்டுச் சென்ற அதே ராமசாமிதான், தன் இளம் வயதில் எதிர்கொண்ட முதல் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனையில் துவண்டார்.

முந்தைய பகுதிகள்

சென்ற இதழ்...







காலங்கள் நகர்ந்தன. வழக்கம் போலக் காலையும் மாலையும் மண்டிக்கும் வீட்டுக்குமாக கால்கள் தூரத்தை அளந்துகொண்டு இருந்தாலும், மனம் என்னவோ சோகத்தில் தோய்ந்திருந்தது. மகனது இந்த மனநிலையை வெங்கட்ட நாயக்கரால் சரியானபடி புரிந்துகொள்ள முடியவில்லை. ராமசாமி முன்பு போல வேலையில் அத்தனைச் சுறுசுறுப்பாக இல்லாதது கண்டு அவருக்கு அடிக்கடி கோபம் தலைக்கேறியது. பலர் முன்னிலையில் மகனைத் திட்டினார். கல்யாணமான 25 வயது வாலிபன் என்றுகூடப் பாராமல், வெற்றிலைச் சாற்றை ராமசாமியின் முகத்தில் துப்பி அவமானப்படுத்தினார். ''தறுதலை... தறுதலை..! உன்னால எனக்கு என்ன புண்ணியம்!'' என்றுஆத்தி ரத்தோடு தன் செருப்பைக்கழற்றிப் பலர் முன்னிலையில் மகன் மீது வீசும் அளவுக்கு வெங்கட்ட நாயக்கரின் கோபம் கட்டுக் கடங்காத நிலைக்குச் சென் றது. ஏற்கெனவே குழந்தை இறந்த சோகத்தில் தடு மாறிக்கொண்டு இருந்த ராமசாமிக்குத் தந்தையால் ஏற்பட்டு வந்த இந்தத் தொடர் அவமானங்களைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வீடு வெறுத்தது; வாழ்க்கையும் வெறுத்தது. எங்காவது கண்காணாத தேசத்துக்குப் போய் பிச்சை எடுத்தாவது வாழலாமே தவிர, இனி இந்த வெங்கட்ட நாயக்கரின் முகத்தில் விழிக்கவே கூடாது என முடிவெடுத்தார் ராமசாமி.



நாயக்கரின் வீடு அன்றைய இரவுப்பொழுதில், மறுநாளின் களேபரத்தை முன் கூட்டி அறிந்துவைத்திருந்தது போல அமைதியாக உறங்கிக்கிடந்தது. மறுநாள் காலையில் நாகம்மை அழுதுகொண்டே மாமியாரை எழுப்பி, தன் கணவனைக் காணாத விவ ரத்தைச் சொல்ல, அடுத்த நொடி நாயக்கர் வீடே அல்லோல கல்லோலப்பட்டது. வேலைக்காரார்கள் கூச்சலும் குழப்பமுமாக ஆளுக்கொரு திசையில் ஓடினர். வெங்கட்ட நாயக்கர் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்தார். அதே நேரம், வடக்கு நோக்கிப் பயணித்த ரயில் ஒன்றின் ஒரு கூபேயில், பயணிகள் தங்களுடன் பயணிக்கும் ஒரு சாமியாரை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். இத்தனை சின்ன வயதில் சாமியார் கோலமா? இதுதான் அவர்களின் ஆச்சர்யப் பார்வைக்குக் காரணம். அந்தப் பயணி களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இந்தச் சாமியார்தான் பின்னாளில் சாமியார் களையும் அவர்களது போலி கூடாரங்களையும் விரட்டியடிக்கும் பெரும் புரட்சியாளராகவும் தமிழ்நாட்டின் விடிவெள்ளியாகவும் மாறப் போகிறார் என்று!

காசி. எங்கு பார்த்தாலும் மடங்கள், கோபுரங்கள், மணியோசைகள், வேத உச்சாடனங்கள் என 24 மணி நேரமும் பக்தி பூசிய நகரம். தங்களது பாவங்களைப் போக்க, இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் வந்து குவியும் பக்தர்களும், அந்த அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் போலிச் சாமியார்களுமாக நிறைந்து வழியும் நகரம். கொலை, கொள்ளை செய்யும் கொடூர மனம் படைத்தவர்களும், நர மாமிச பட்சிணிகளும் கூட அங்கே மலிந்திருந்தனர். மதமும் மனிதர்களும் ஒரு சேரக் கைகோத்து சீரழித்துக்கொண்டிருந்த அந்த நகரின் வீதிகளில் சாமியார் கோலத்தில் வந்திறங்கினார் ராமசாமி. அங்கே அவருடன் இரண்டு பிராமண நண்பர்களும் வந்திறங்கினர்.

வழியில், பெஜவாடாவில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டபோது, அவர்கள் ராமசாமிக்குப் பழக்கமாகியிருந்தனர். பெஜவாடாவில் முருகேச முதலியார் என்பவர் அப்போது இவர்கள் மூவருக்கும் அடைக்கலம் தந்து உதவியிருந்தார். இப்படி மற்றவர் நிழலில் அண்டிப் பிழைப்பதைவிட, காசிக்குச் சென்றால் காலாட்டிக்கொண்டே மடங்களில் பிழைப்பு நடத்தலாம் என பிராமண நண்பர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில்தான் ராமசாமி அவர்களுடன் புறப்பட்டுக் காசிக்கு வந்திறங்கினார். ஆனால், காசியிலோ கதை வேறு மாதிரியாகத் திரும்பியது. நல்ல பசி நேரம்! ராமசாமி ஏக எதிர்பார்ப்போடு உற்சாகமாக நண்பர்களுடன் வேகமாக மடத்தினுள் நுழைந்தார். ஆனால், மடம் அவரை மட்டும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஒரு கை அவரை வலுக்கட்டாயமாக வெளியே பிடித்துத் தள்ளியது. ''நீ பிராமணன் இல்லை. அதனால் உன்னை அனுமதிக்க முடியாது'' என்று மடத்து நிர்வாகிகள் திட்டவட்டமாகக் கூறினர். அப்போதுதான் ராமசாமி உணர்ந்தார், தன்னைப் பிடித்து வெளியே தள்ளிய கை மனிதனுடையது அல்ல; மதத்தினுடையது என்று! இத்தனைக்கும் அது ஒரு செட்டியாரின் மடம். பிராமணர்கள் சாப்பிட்டால் மட்டும்தான் தனக்குப் புண்ணியம் என்பது அந்தச் செட்டியாரின் மூட நம்பிக்கை. ராமசாமிக்கோ வயிற்றில் பசித் தீ! கண்களிலோ நீர். ஆத்திரமும் ஆவேசமும் உள்ளுக்குள் புரண் டது. அதைவிட பசி அவரை அதிகமாகப் புரட்டி எடுத்துக்கொண்டு இருந்தது. வேறு வழியில்லை. திரும்பிப் பார்த்தார். மடத்து வாசலில் குவியலாக எச்சில் இலைகள். இனி, மான அவமானம் பற்றி யோசிக்க அவகாசம் இல்லை என முடிவு செய்தார். ஆம்... இன்று எத்தனையோ தமிழர்கள் வயிறார உண்பதற்குக் காரணமான பெரியார் எனப்படும் ஈ.வெ.ராமசாமி, அன்று எச்சில் இலைகளின் முன் கண்ணீரோடு அமர்ந்தார். 'மனிதனை மனிதன் ஏன் வெறுக்க வேண்டும்? எது அவர்களிடத்தில் வெறுப்பை ஏற்படுத்துகிறது?' என உள்ளுக்குள் ஓராயிரம் கேள்விகள் பிறந்தன. அன்று அவருடைய வயிறு நிறைந்தது. ஆனால், மனம் பள்ளத்தாக்காக வெறுமையில் உழன்றது.

காசியில் இனி பிழைப்பு ஓட வேண்டுமானால் பிராமணனாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டார் ராமசாமி. மொட்டை அடித்துக்கொண்டார். தாடி, மீசையை மழித்துக்கொண்டார். நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்தார். ஏற்கெனவே செக்கச் சிவந்த மேனி. கேட்கவா வேண்டும்..! பூணூல் அணிந்ததும் அசல் பிராமணனாகவே மாறிவிட்டார் ராமசாமி. வழியில் தென்பட்ட ஆசாமிகளெல்லாம் சாமி எனக் கையெடுத்துக் கும்பிட்டனர். கச்சிதமான வேஷத்துக் கேற்ப ஒரு சைவ மடத்தில் வேலையும் கிடைத்தது. கருக்கலிலேயே எழுந்து குளித்து முடித்து பூ பறிக்கும் வேலை. பூ பறிப்பது சுலபமான வேலைதான்; ஆனால், விடிகாலையிலேயே குளித்தாக வேண்டுமே, அதுதான் பிரச்னை! ஒரு நாள் நம்மவர் கங்கைக் கரையில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் தலைக்குத் தண்ணீர் தெளித்துக்கொண்டு, குளித்ததாகப் பேர்பண்ணிவிட்டுக் கிளம்பியபோது கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். அவர் பிராமணர் இல்லை எனத் தெரிய வர, அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டார். தொடர்ந்து பசியும் பட்டினியுமாகக் காசி வீதிகளில் தெருத்தெருவாக அலைந்தார். பிச்சை எடுத்தார். முன்னோர் கடன் கழிப்பதற்காக கங்கைக் கரையில் பிண்டம் வைக்கப்பட்ட உணவை எடுத்து உண்டார்.

'சாதாரண மனிதர்களுக்கு இங்கே மரியாதை இல்லை; வஞ்சகர்களும், பித்தலாட்டக்காரர்களும், காம வியாபாரிகளும், போதைப்பொருள் கடத்து பவர்களும் மட்டுமே இங்கு குப்பை கொட்ட முடியும்' என் பதை உணர்ந்தார் ராமசாமி. ஒருகட்டத்தில் காசியை விட்டுப் புறப்பட்டு ஆந்திரா வந்து, ஒரு நண்பரின் வீட்டில் தங்கினார். வீட்டு நினைவு ஒருபுறம், மனைவி நாகம்மையின் நினைவு ஒருபுறம் என மனதை அலைக்கழிக்க, தூக்கம் வராமல் புரண்டுகொண்டு இருந்த ஓர் இரவில், வாசல்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. வீட்டுக்காரரானசுப்பிரமணிய பிள்ளை எழுந்துபோய்க் கதவைத் திறந்தார். வந்தவரின் குரல் ராமசாமியின் காதுகளில் விழுந்து, முதுகுத்தண்டை சில்லிட வைத்தது. சட்டென எழுந்து கதவருகே சென்றார் ராமசாமி. வாசலில் நின்றுகொண்டு இருந்தவர் அப்பா வெங்கட்ட நாயக்கர். சட்டென அவருக்குத் தன் மகனை அடையாளம் தெரியாவிட்டாலும், அடுத்த நொடியே சுதாரித்துப் புரிந்துகொண்டு, ''ராமா, என்னை மன்னிச்சுடுடா! இனிமே உன்னைத் திட்ட மாட்டேன்டா!'' எனக் கதறியபடி தன் மகனை ஆவேசமாக இழுத்து அணைத்துக் கொண்டு குலுங்கினார் வெங்கட்ட நாயக்கர்.



-(சரித்திரம் தொடரும்)

-பெரியார் 3

'கட்சி மாறுகிறவன் அயோக்கியன், அயோக்கியன்,
மகா அயோக்கியன்!'

-பெரியார்

'இனி, ராமசாமியைத் திருத்த முடியாது. படிப்பு கால் வீசைக்கும் ஏறாது!' எனப் பள்ளிக்கு முழுக்குப் போடவைக்க வெங்கட்ட நாயக்கரும் சின்னத் தாயம்மாளும் முடிவெடுத்தனர்.

ராமசாமியின் எடக்குமடக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்.





''இந்த நாயக்கருக்கு என்ன ஆச்சு! பள்ளிக்கோடம் போய்க்கிட்டிருந்த பயலைக் கூட்டியாந்து கடையில கணக்கெழுத உட்கார வெச்சிருக்காரே! சின்ன புள்ளைக்கு என்ன விவரம் இருக்கப்போவுது!'' என்று பலரும் பலவிதமாகத் தங்களது வியாபார பேட்டைக்குள் புதிதாக முளைத்திருக்கும் சிறுவனைப் பார்த்துக் கேலி பேசியதற்கு ஒரு காரணம் இருந்தது. வெங்கட்ட நாயக்கரின் மண்டிதான் ஈரோடு பஜாரிலேயே பெரிய மண்டி. மிளகாய், தனியா, மஞ்சள், வெல்லம், கருப்பட்டி போன்ற மளிகைச் சாமான்களை மூட்டை மூட்டையாக வாங்கிச்செல்ல வியாபாரிகளும் வண்டிக்காரர்களும் எப்போதும் கூட்டம் கூட்டமாக மண்டி முன் கூடி யிருப்பர்.

காலையிலேயே ஏலம் ஆரம்பித்துவிடும். கூடியிருக்கும் வியாபாரிகள் மத்தியில், கையில் மணியை ஆட்டிக்கொண்டே உரக்கக் கூவி ஏலம் விடுவதில் தொடங்கி, மூட்டைகளில் விலாசம் எழுதி, குறிப்பிட்ட வாடிக்கை யாளர்களிடம் சாமான் சேர்ந்து விட்டதா என்பது வரை கவனித் துக்கொள்ள வேண்டும். இத்தனை பெரிய பொறுப்பை இந்தச் சிறுவன் தாங்குவானா என்ற எண்ணம் அனைவருக்கும்!

ஆனால், நடந்ததோ வேறு! மண்டியில் கால்வைத்த சில நாட்களிலேயே வியாபாரத்தில் வெளுத்து வாங்கினான் சிறுவன் ராமசாமி. கையில் மணியைப் பிடித்துக்கொண்டு வியாபாரிகள் முன் அவன் நின்றால், பஜாரே களைகட்டும். காரணம், ராமசாமி ஏலத்தினூடே அடிக்கும் கிண்டலும் கேலியுமான பேச்சுகள்தான். பேச்சோடு பேச்சாக, விலையையும் சாமர்த்தியமாகக் கூட்டிவைத்து, வியாபாரத்தில் வெங்கட்டாவையே மிஞ்சிவிட்டார் ராமசாமி. மகனது திறமைகளைப் பார்த்து, நாயக்கருக்கு எக்கச்சக்க பூரிப்பு!

வியாபாரம் இல்லாத நேரங்களிலும், கடை முன் எப்போதும் கூட்டம் இருக்கும். பெரும்பாலும் வண்டியோட்டிகளும் சுமை தூக்கும் தொழிலாளிகளும்தான். நாயக்கர் மகன் என்ற மரியாதை காரணமாக, ராமசாமி எதைச் சொன்னாலும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அவர்களைப் பொறுத்தவரை ராமசாமி ஒரு கதாநாயகன். அவர்களைத் தொடர்ந்து சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, கடைக்கு வரும் மதவாதிகளையும், பிராமணர்களையும், இன்ன பிற பெரிய மனிதர்களையும் வம்புக்கு இழுப்பார் ராமசாமி.

''என்ன சாமி... உங்க ராமாயணத்துல ராமர் ஒரு மகாவீரர்தானுங்களே?''

''ஆமாம்! அதுக்கென்ன இப்போ?''

''அப்புறம் எதுக்காக அவர் வாலியை மறைஞ்சிருந்து தாக்கணும்?''

''அது வந்து... வாலி ஒரு அசுரன்! அவன் யாரைப் பார்த்தாலும் அவங்க பலத்துல பாதி பலம் அவனுக்கு வந்துடும்!''

''அப்படின்னா, ராமனைவிட வாலி பலசாலின்னு ஒப்புக்கறீங்க. அப்படித்தானே?''

''அது வந்து... புராணத்துல என்ன சொல்றதுன்னா..?''

''அதெல்லாம் எனக்கு வேணாம் சாமி! ஒரு அவதாரமா இருந்தும், ராமரால வாலியை ஜெயிக்க முடியலைன்னா, அப்ப வாலிதானே உண்மையான பல சாலி? நீங்க அவரைத்தானே கும்புடணும்? அதை விட்டுட்டு எதுக்காக ஒரு பயந்தாங்குள்ளியைக் கடவுளா மாத்துறீங்க?''

இப்படியான எடக்குமடக்குக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் எதிரே நிற்பவர் திணறுவதைப் பார்த்து, சுற்றிலும் அமர்ந்திருக்கும் வண்டியோட்டிகள் மத்தியில் பலத்த சிரிப்புச் சத்தமும் கைத்தட்டல்களும் எழும். கேள்வியால் திணறியவரும் சுதாரித்து, ''என்ன நாயக்கரே! உங்க பையன் பலே புத்திசாலியா இருப்பான் போலிருக்கே! என்னையே கேள்வி கேட்டு மடக்கிப்பிட்டான்!'' எனச் சமாளித்துச் சிரித்தபடியே அந்த இடத்திலிருந்து நழுவிச் செல்வார்.

காலங்கள் உருண்டன. இப்போது வெங்கட்ட நாயக்கர் ஈரோடு முனிசிபல் சேர்மன். இந்த நிலையில், இளைய மகன் ராமசாமி பற்றிச் சமீபகாலமாக அவர் கேள்விப்படும் தகவல் எதுவும் அவ்வளவாகச் சரியாக இல்லை. பையனுக்கு வயதோ இருபது ஆகிவிட்டது; இனியும் தாமதித்தால், நாடகக்காரிகளுக்கே மொத்தச் சொத்தையும் எழுதிக் கொடுத்துவிடுவான் ராமசாமி என்று பயந்தார் வெங்கட்ட நாயக்கர். ''சொந்தத்துல ஏதாவது பொண்ணு இருந்தா, உடனே பாரு! சட்டுபுட்டுனு ஒரு கால்கட்டு போட்டுடலாம். நம்ம ராமசாமிக்கு வயசாகுதுல்ல!'' என மனைவியிடம் அறிவுறுத்தினார்.

சேலம் தாதம்பட்டியில், உற வில் ஒரு பெண் இருப்பது நினை வுக்கு வந்தது. பெயர்கூட நாகம் மாளோ, என்னவோ. வயது பதின்மூன்று இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணின் அப்பா ரங்கசாமி, ஒரு ஹெட்கான்ஸ்டபிள். இப்போதிருக்கும் தங்களது மிராசு, ஜமீன் போன்ற அந்தஸ்துக்கு முன் அவர்களின் குடும்பம் ஏணி வைத்தால்கூட எட்டாது என முடிவெடுத்தனர். ஆனால், தன் மகனின் உள்ளத்தில் அந்த நாகம்மாள் ஏற்கெனவே குடியேறி, சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டாள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

பிற்பாடு விஷயம் தெரிய வந்து, மகனின் எண்ணத்தை மாற்ற என்னென்னவோ செய்து பார்த்தார். எதுவும் பலிக்கவில்லை. இறுதியாக, நாகம்மாள் எனும் அந்த அற்புதப் பெண்மணி, தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் அடியெடுத்து வைக்கும்விதமாக, தன் மனதுக்குப் பிடித்த ராமசாமியோடு மாலை மாற்றிக்கொண்டார்.

கல்யாணம் ஆன அடுத்த நாளே, சின்னத்தாயம்மாள் தன் மகனின் சுபாவங்களை விலாவாரியாக எடுத்துக் கூறி, ''அவனைப் பக்திமானாகவும் ஒழுக்கமான குடும்பத் தலைவனாகவும் மாற்ற வேண்டியது உன் பொறுப்பு!'' என்று கட்டளை இட்டார்.

ராமசாமியோ, தன் மனைவியை எப்படியாவது அம்மாவின் பூஜை கோஷ்டியிலிருந்து பிரித்து, தன்னைப் போல முற்போக்கான சிந்தனைகொண்டவளாக மாற்றிவிட வேண்டும் எனும் முனைப்பில் இருந்தார்.

அதன் முதல்கட்டமாக மனைவியும் அம்மாவும் என்றைக்கெல்லாம் விரதம் மேற்கொள்கிறார்களோ, அன்று பார்த்துத் தனக்கு அசைவ உணவு சமைக்க வேண்டுமென அடம்பிடிப்பார். மனைவியின் தாலியைக் கழற்றித் தன் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, தாலி இல்லாமல் வாழ அறிவுறுத்துவார். நாகம்மை எப்படியும் தன் மகனைத் திருத்தி வழிக்குக் கொண்டுவந்துவிடுவாள் என எண்ணியிருந்த சின்னத்தாயம்மாள், மெள்ள மெள்ள நாகம்மையே சீர்திருத்தப் பெண்மணியாக மாறிவருவதைக் கண்டு, ''அவளாச்சு, அவ புருஷனாச்சு!'' எனும் முடிவுக்கு வந்தார்.

இப்படியாக, புதுமையும் குதூகலமுமாக நாகம்மாளும் ராமசாமியும் சந்தோஷ மண வாழ்க்கையில் நீச்சலடித்துக்கொண்டு இருந்தபோது, அவர்கள் வாழ்வில் யாரும் எதிர்பாராத விதத்தில் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. நாகம்மைக்கும் ராமசாமிக்கும் பிறந்த பெண் குழந்தை ஒன்று ஐந்தே மாதத்தில் இறந்து, குடும்பத்தினரைப் பெரும் சோகக்கடலில் ஆழ்த்தியது!



-(சரித்திரம் தொடரும்)

thanks to vikatan.com ajayan bala

பெரியார் 2

தீர்க்கதரிசனம்!

'இனி வரும் நாளில் கம்பியில்லாத் தந்தி சாதனம்
ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்!'

பெரியார்

வாழ்க்கை ஒரு பல்கலைக்கழகம். அதன் மிகச் சிறந்த வகுப்பே பால்ய காலம்தான்!

இப்பருவத்தில் நம் மனம் எதிர்கொள்ளும் அனுபவங்களும், அதன் தொடர்பாக உண்டாகும் ஏக்கங்களும், உணர்வுத் தாக்கங்களும்தான் பிற்காலத்தில் ஒரு பிரமாண்ட கட்டடத்தைத் தீர்மானிக்கும் கான்க்ரீட் கம்பிகளாக நீண்டு, நமது ஒட்டுமொத்த வாழ்வையும் வடிவமைக்கும் சக்திகளாகச் செயல்படுகின்றன. இயல்பாக எல்லாக் குழந்தைகளுக்கும் ஏழு வயது வரை கிடைக்கக்கூடிய தந்தையின் அரவணைப்பும், தாயின் பாசமும், பின்னாளில் 'பெரியார்' என அனைவராலும் கொண்டாடப்பட்ட அன்றைய சிறுவன் ராமசாமிக்குக் கிடைக்கவில்லை.

மண்டிக்கடை வெங்கட்ட நாயக்கர் எனும் ஓரளவு வசதியான தந்தைக்குப் பிறந்தும், பசியும் பட்டினியுமாக வளர்ப்புத் தாயின் வீட்டில் வளர்ந்த அவரது பிஞ்சு மனம் எப்படியெல்லாம் வேதனைப்பட்டதோ, யாருக்குத் தெரியும்? ஆனால், வயிற்றுக்குத்தான் வாழ்க்கை வஞ்சனை செய்ததே தவிர, மனசுக்குக் கடுகளவும் குறை வைக்கவில்லை. வளர்ப்புத் தாயின் அநியாய செல்லம், கட்டுப்பாடில்லாத துணிச்சலையும் தைரியத்தையும் ஊட்டி வளர்த்தது. இதனாலேயே ராமசாமியின் பேச்சிலும் செயலிலும் எக்கச்சக்கமான துடுக்குத்தனம்! வீட்டுத் திண்ணையில் ராமசாமி காலாட்டிக்கொண்டு அமர்ந்திருப்பதை தூரத்தில் பார்த்துவிட்டாலே போதும்... அந்தத் தெரு வழியாக குடுமியும் குடையுமாக நடந்துவரும் பெரிசு கள் வழியில் ஏதேனும் சந்து பொந்து தென்படாதா என வேட் டியை இறுக்கப் பிடித்துக்கொண்டு ஓடத்துவங்கிவிடுவர். 'சரி, வீட்டில் இருந்தால்தானே வம்பு! திண் ணைப் பள்ளிக்காவது போகட்டும்' எனத் தன் மகனை அந்த வளர்ப்புத் தாய் அனுப்பி வைக்க, அங்கேயும் கேலி, கிண்டல், வேட்டி அவிழ்ப்பு, அட்டகாசம்! வாத்தியார் எதையெல்லாம் செய்யாதே எனச் சொல்கிறாரோ அதை மறுவிநாடி செய்துவிட்டுத்தான் மறுவேலை!



இப்படியாக ராமசாமி வறுமையிலும் 'செம்மையாய்' காட்டுச்செடியாக வளர்ந்துகொண்டு இருந்த சமயத்தில், அங்கே மண்டி வெங்கட்ட நாயக்கரின் வாழ்க்கை கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. வியாபாரத்தில் அவர் தொட்ட உப்பு, புளி, மிளகாய் எல்லாம் தங்கமாக மாறி, சின்னத்தாயம்மாளின் கழுத்தையும் கைகளையும் இடுப்பையும் அட்டிகை யாகவும் வளையல்களாகவும் ஒட்டியாணமாகவும் அலங்கரித்தன. ஏற்கெனவே வைணவ ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பதில் ஊறித்திளைத்த சின்னத்தாயம் மாளுக்கு இப்போது சொல்லவா வேணும்? வீட்டில் தினசரி பூஜைதான்... புனஸ்காரங்கள்தான்! பிராமணர்கள் கூட்டமாக வருவதும், அவர்களை வரவேற்று உபசரித்து, தம்பதி சகித மாய் சாஷ்டாங்கமாக அவர்கள் காலில் விழுந்து வணங்கி, சேவை செய்து, அதனாலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் ஆகிவிட்டதாகக் கற்பனை செய்துகொண்டு மகிழ்வதுமே வழக்கமாகிவிட்டிருந்தது. இத்தருணத்தில்தான் சின்னத் தாயம்மாளுக்கு தான் தத்துக் கொடுத்த இளையமகன் ராமசாமி பற்றி ஞாபகம் வந்திருக்கிறது. 'நமக்குதான் இப்போது வசதி வந்துவிட்டதே! சிறியவன் ராமசாமியை அந்த விதவைத் தாயிடமிருந்து அழைத்துக்கொண்டு வந்து விடுங்கள். நாமே வளர்ப்போம்' என்று சொல்ல, மறுபேச்சில்லாமல் புறப்பட்டவர்தான் வெங்கட்ட நாயக் கர்.

பேச்சுத் துணைக்குக்கூட ஆளின்றி தனிமரமாகவே வாழ்ந்து வந்த அந்த விதவைத் தாயின் வாழ்க்கையில், மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு ஓரளவுக்காவது அர்த் தம் இருந்திருக்குமானால், அது ராமசாமி எனும் குழந்தை வந்த பிறகுதான். அவன் சிறுவனாக வளர்ந்து பல சேட்டைகள் செய் தாலும், அவை அனைத்தையும் தன் வறுமையையும் மறந்து ரசித்தார். அதனால்தான் வெங்கட்ட நாயக்கர் தன் வீட்டு முன் வந்து நின்றபோது அவருக்கு திக்கென்றிருந்தது. நாயக்கர் ஒன்பது வயது ராமசாமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு தெருவில் நடந்து சென்றபோது, தன்னால் முடிந்தவரை போராடிப் பார்த்தார்.ஆனால், அந்த விதவைத் தாயின் வேதனையைப் பொருட் படுத்துகிற மனநிலையில் வெங்கட்ட நாயக்கரும் இல்லை; சிறுவனான ராமசாமிக்கும் அதைப் புரிந்துகொள்ளும் வயசு இல்லை. ஈரோட்டில் தனது பணக்கார வீட்டுக்குள் நுழைந்த பிறகுதான், ஒரு அந்நியத் தன்மையை ராமசாமியால் உணரமுடிந்தது. சின்னத்தாயம்மாள் மகனிடம் என்னதான் பாசத்தைக் கொட்டியபோதும், ராமசாமியால் அதனை ஏற்கமுடியவில்லை. நன்கு உரமேறி வளர்ந்து வரும் ஒரு மிளகாய்ச் செடியைப் பிடுங்கி, அதற்குச் சம்பந்தமே இல்லாத வேறு வகை மண்ணில் நடும்போது, அந்தச் செடியின் வேர்கள் படும் வேதனை மனிதர்களின் அறிவுக்கு எட்டுவதில்லை. ராமசாமிக்கும் இந்தப் புதிய வாழ்க்கை அப்படியாகத்தான் இருந்தது. என்னதான் அந்த விதவைத் தாயின் வீட்டில் வறுமை மண்டிக் கிடந்தாலும், அங்கே ஒரு சுதந்திரம் இருந்தது. காலையில் எழுந்தவுடன் குளிக்கவேண்டும், பல் துலக்கவேண்டும் போன்ற கட்டாயங்களோ கட்டளைகளோ அங்கே இல்லை. இங்கே எல்லாமே தலைகீழ்! காலையில் விடிந்தும் விடியாததுமாக சின்னத்தாயம்மாள் தலைக்குக் குளித்துவிட்டு, பூஜை அறையில் சாம்பிராணி புகை போட்டு மணி அடிப்ப தும், பீரோவில் இருக்கும் நகைகளை அள்ளி உடம்பு முழுக்க மாட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துபோகும் சாமியார்களின் காலில் விழுந்து வணங்குவதும், ராமசாமிக்கு செயற்கையாகவும், மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத அநாவசிய, அர்த்தமற்ற காரியங்களாகவும் தோன்றின. கிராமத்தில் சட்டை இல்லாமல், குடிக்கக் கஞ்சி இல்லாமல், தெருவில் கிடப்பதைப் பொறுக்கித் தின்று, மரம் செடி கொடிகளுடன் காடு மேடு கம்மாங்கரைகளில் இஷ்டம் போல ஆடித் திரிந்த வாழ்வில் ஓர் உண்மை இருந்தாற்போல் சிறுவன் ராமசாமிக்குப்பட்டது. இதனாலேயே தன் தாயாரான சின்னத்தாயம்மாள் செய்யும் எல்லாக் காரியங்களையும் கேள்வி கேட்கத் துவங்கினான். இதை எதற்குச் செய்கிறாய், அதனால் என்ன பலன், ஏன் வெளியாள் வந்து போனதும் வீடு முழுக்கத் தண்ணீர் தெளிக்கிறாய், ஏன் அவர்கள் வந்ததும் ஓடிப்போய் காலில் விழுகிறாய்..? கேள்விகள்... கேள்விகள்..!

'அவங்கெல்லாம் சாமிடா! அப்படியெல்லாம் பேசக் கூடாது!'

'அப்படியா? அப்படின்னா பூஜை அறையில போட்டாவுக்குள்ள இருக்கிற சாமியெல்லாம், முன்னாடி வெச்சிருக்கிற சோத்தைச் சாப்பிட மாட்டேங்குது! இந்த சாமிங்க மட்டும் சம்மணம் போட்டு ஒரு வெட்டு வெட்டுதே, அது எப்படி?'

இது மாதிரியான எடக்குமடக்கான கேள்விகளைக் கேட்டு, அவற்றுக்குப் பதில் சொல்ல முடியாமல் சின்னத் தாயம்மாள் திண்டாடுவதைப் பார்க்கப் பார்க்க ராமசாமிக்கு குஷியாக இருக்கும். அதோடு நில்லாமல், வீட்டுக்கு வரும் பெரிய மனிதர்களிடமும், பிராமணர்களிடமும் ராமசாமி ஏடா கூடமான கேள்விகளைக் கேட்டு அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவான்.

'அய்யா! எங்க அப்பா வெங்கட்டா ஏன் இன்னொரு கண்ணாலம் கட்டிக்கலை?'

'அடப்பாவி! பொண்டாட்டி உசுரோட இருக்கும்போது இன்னொரு பொண்டாட்டியா? அது மகா பாவம்டா!'

'அப்படின்னா, போட்டாவுல இருக்கிற சாமியும் பக்கத்துக்கு ஒண்ணா ரெண்டு பக்கமும் நிறுத்திக்கிட்டு அதே பாவத்தைதானே செய்யுது?! அப்புறம் எதுக்கு நாம அதை வுழுந்து வுழுந்து கும்புடணும்?'

'நாயக்கர் மவனாச்சேனு பார்த்தேன். இல்ல, அங்கேயே நாலு சாத்து சாத்தியிருப்பேன். முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள என்ன கேள்வி கேக்குது பாத்தீங்களா?' எனப் பொருமிக்கொண்டே பெரிசுகள் நாயக்கர் வீட்டைவிட்டு வேகமாக வெளியேறுவது வாடிக்கையானது!

இதனிடையே சின்னத்தாயம்மாளுக்கு பொன்னுத்தாய், கண்ணம்மாள் என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனாலும், ராமசாமியின் மேல் பாசம் குறையவில்லை. என்னதான் குழந்தை துடுக்குத்தனமாகப் பேசினாலும், வயது ஏற ஏற எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தார்.

உண்மையில், வயது ஏற ஏற அவர் சரியாகவேதான் வளர்ந்தார். ஆனால், மற்றவர்கள்தான் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டனர்.

இங்கேயும், 'வீட்டிலிருந்தால்தானே வம்பளப்பு! பள்ளி சென்றால் ஒழுங்காகிவிடுவான்' எனப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைத்தனர். இம்முறை ஆங்கிலப் படிப்பு. ஆனால், குமாஸ்தாக்களை உற்பத்தி செய்யும் பள்ளிக்கூடத்தால், ராமசாமியின் குண விசேஷங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில் ஒரு சமூகத்துக்கே அறிவொளி வழங்கப்போகும் மாணவனை நாம் வதைத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதே தெரியாமல், வதைத்து எடுத்தனர். ஒரு கட்டத்தில், ராமசாமியின் கை கால்களில் விலங்கும் மரக்கட்டையும் போட்டுப் பூட்டி, வகுப்பறையில் உட்காரவைக்கும் அளவுக்குப் போய்விட்டது. அது உண்மையில் ஒரு பள்ளிக்கூடத்துக்கும் மாணவனுக்கும் இடையிலான முரண்பாட்டின் விளைவு அல்ல. கெட்டித்துப் போன ஒரு சமூகத்துக்கும் அதன் மடத்தனத்தை அடித்து நொறுக்கவிருக்கும் கலகக்காரனுக்கும் இடையில் பின்னாளில் நிகழவிருக்கும் போரின் முதல் பேரிகை அது!



-(சரித்திரம் தொடரும்)

thanks to vikatan.om ajayan bala

Sunday, April 13, 2008

பெரியார்


''ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான்
என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன்
துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை!''

-தந்தை பெரியார்

உலகமே அறிவியல் மற்றும் தொழில் துறைகளில் பத்து குதிரை சாரட்டுகளில் பறந்துகொண்டு இருந்த 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலம்! மார்க்சும் ஏங்கல்சும் தங்களது நெருப்புரைகளால் அறிவுலகில் பெரும் தீயை ஏற்படுத்தி, ஐரோப்பாவையே அதிர வைத்துக்கொண்டு இருந்த நேரம். இதன் எந்தச் சலனமும் இல்லாமல், உலக வரைபடத்தில் இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கோடியில், தாங்கள் யாரென்றே அறியாத பெருங்கூட்டமொன்று இருந்தது. அறியாமை அவர்களின் கண்களைக் கட்டியிருந்தது. மதம் அவர்களது மூளையை அடைத்திருந்தது. சாதி முதுகில் அமர்ந்து அவர்களை முழுவதுமாகக் குனியவைத்திருந்தது. அவர்களது இந்த நிலை, அப்போது ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர்களுக்கும் சில ஆதிக்கச் சக்திகளுக்கும் வசதியாக இருந்தது. வீதிகளில் அரசர்களைப் போலக் கை வீசி நடந்து வரும் அவர்களைக் கண்டதும், இவர்கள் தங்கள் தலையில் கட்டிய துண்டை அவசரமாக அவிழ்த்துக் கக்கத்தில் சுருட்டிவைத்துக்கொண்டு 'எசமான்' எனக் குனிந்து கும்பிடு போடுவார்கள். ஆனால் எந்தச் சூரியனும் வீதி பார்த்து உதிப்பதில்லை; எந்தக் காற்றும் சாதி பார்த்து வீசுவதில்லை. சாதியின் பெயரால் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, மனிதனை மனிதன் இழிவு செய்யும் போக்கு மட்டும் இங்கே தொடர்ந்துகொண்டு இருந்தது. அது மட்டுமா... பெண்ணடிமை, பால்ய விவாகம் மற்றும் இன்ன பிற மூட நம்பிக்கைகளும் மக்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டு இருந்தன. இம்மக்களை மீட்டு சாதி, மதம் என்னும் நோய்களை விரட்டி, மானமும் அறிவும் ஊட்டி, தன்னுணர்வுமிக்க தமிழர்களாக மாற்ற யாரேனும் தோன்றிட மாட்டார்களா எனப் படித்த பண்பாளர்கள் பலர் உள்ளூரக் கொந்தளித்துக்கொண்டு இருந்தனர். சாதாரண ஒரு மனிதரால் இது சாத்தியமாகாது. துணிச்சல், அதிகாரம், செல்வாக்கு, அந்தஸ்து, பண பலம் இவற்றுடன் தன்னிகரற்ற சிந்தனை ஆற்றல், அதனை வெளிப்படுத்தும் சொல்வன்மை, வாதங்களை அடித்து நொறுக்கும் தர்க்க ஞானம், எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத்தின் மீதான பேரன்பு, எந்தச் சந்தர்ப்பத்திலும் எதையும் இழக்கத் துணியும் தியாக உள்ளம், தொண்டு மனப்பான்மை என இவை அத்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு மகத்தான மாமனிதராக அவர் இருந்தால் மட்டுமே தமிழர்களின் வாழ்வைச் சீர்படுத்த இயலும் என்கிற நிலை.



இந்தச் சூழலில்தான், ஈரோடு எனும் வணிக நகரத்தில், 1879 செப்டம்பர் 17ம் தேதியன்று, தமிழர் தம் வாழ்வில் விடிவெள்ளி ஒன்று உதித்தது. அவர்தாம் 'பெரியார்' எனத் தமிழரால் அன்புடன் அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி!

பெரியாரின் தந்தையார் பெயர் வெங்கட்ட நாயக்கர். ஈரோட்டில், வெறும் வெங்கட்ட நாயக்கர் என்றால் பலருக்கு அப்போது தெரியாது. கல்தச்சு நாயக்கர் என்றால், உடனே சொல்லிவிடுவார்கள். ஏனென்றால், அவரது தொழில் அப்படி. கற்களில் சித்திர வேலைப்பாடுகள் செய்வதில்தான் அவருக்கு அப்போது பிழைப்பு.

வெங்கட்ட நாயக்கரின் பூர்வ கதை, கொடுமையானது. அவருக்குச் சிறு வயதிலேயே அப்பா இல்லை. யாரோ குழந்தை பாக்கியம் இல்லாத ஓர் ஏழைப் பெண்ணால் எடுத்து வளர்க்கப்பட்டவர்.மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியது கிடையாது. தன் சிறு வயதிலிருந்து 18 வயது வரை கல் உடைக்கும் கூலித் தொழிலாளியாகவே பிழைப்பு நடத்தி வந்தவர் அவர். கல்யாணத்துக்குப் பின், வாழ்க்கையில் கொஞ்சம் வசதி கூடியது. மனைவியாக வாய்த்த சின்னத்தாயம்மாள், சேலம் தாதம்பட்டியைச் சேர்ந்தவர். ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கல்யாணத்துக்குப் பின்பு கணவருடன் அவரும் கூலிவேலைக்குப் போகவேண்டி வந்தது. தினமும் 6 அணாவுக்கும், 8 அணாவுக்கும் உயிரை வருத்தி வேலை செய்யும் இந்தப் பிழைப்புக்குப் பதிலாக, சொந்தமாக கட்டை வண்டி ஒன்று வாங்கி ஓட்டினால் என்ன என்று யோசித்தார் வெங்கட்ட நாயக்கர்.

ஆசைப்பட்டபடியே அதுவும் நடந்தது. ஆனால், ராவெல்லாம் புருஷன் வண்டி ஓட்டப் போய்விட, வீட்டில் சின்னத்தாயம்மாள் மட்டும் தனியாக இருக்கவேண்டி வந்தது. இது அவரின் அப்பாவுக்கு மிகுந்த மனக் கஷ்டத்தை ஏற்படுத்த, உடனே மாப்பிள்ளையைக் கூப்பிட்டு, சொந்தமாக ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்குமாறு சொல்லி, கொஞ்சம் பணமும் கொடுத்தார்.

அடுத்த நாளே, வெங்கட்ட நாயக்கர் சிறிய தட்டுக்கடை முதலாளியாக மாறிவிட்டார். கடை போட்ட சில நாட்களிலேயே வெங்கட்ட நாயக்கருக்கு வியாபாரத் தந்திரங்கள் அத்துபடியாகின. சீக்கிரமே அந்தக் கடையை ஒரு நல்ல விலைக்குக் கைமாற்றிக் கொடுத்துவிட்டு, ஈரோடு பஜாரில் மிகப் பெரிய மளிகைக்கடையை வாங்கினார். ஈரோடு பஜாரில் மளிகைக் கடை வெங்கட்ட நாயக்கர் என்றால், படுபிரசித்தம் என்கிற அளவுக்கு வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்.

அங்கவஸ்திரம், பட்டு ஜிப்பா, விரல்களில் மின்னலடிக்கும் மோதிரங்கள், பெரிய கல் வீடு, இரண்டு ஏக்கர் நிலம் என கடும் உழைப்பும் புத்தி சாதுர்யமும் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிட்டன.

வாழ்க்கை வசதியாக மாறினாலும், சின்னத்தாயம்மாளுக்குக் குழந்தை இல்லாத பாரம் மனசை அழுத்திக்கொண்டு இருந்தது. மூன்று குழந்தைகள் பிறந்து, அடுத்தடுத்து இறந்து போய்விட, குழந்தை வரம் வேண்டி, கோயில், குளம் எனத் தீவிரமாக ஏறி, இறங்க ஆரம்பித்துவிட்டார். இந்தச் சமயத்தில், அவர் ஓர் ஆண் குழந்தைக்குத் தாயானார். அந்தக் குழந்தை தனக்குச் சாமி தந்த வரம்தான் என மெய்சிலிர்த்து, குழந்தைக்குக் கிருஷ்ணசாமி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். அதன் பிறகு கேட்க வேண்டுமா..? சின்னத் தாயம்மாளுக்கு 24 மணி நேரமும் கோயில், குளம், அர்ச்சனை, மடி, ஆசாரம், பூஜை, புனஸ்காரம் இவையே வாழ்க்கையாகிப்போனது. இந்தச் சமயத்தில்தான், அவருக்கு இரண்டாவதாகவும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பக்திப் பரவசம் மேலிட, அந்தக் குழந்தைக்கு ராமசாமி என்று பெயர் சூட்டினார். அவர்தான் நம் பெரியார்!

எந்தச் சாமியை அவர் பின்னாளில் தன் வாழ்நாள் முழுக்க மறுத்துப் போராடினாரோ, அந்தச் சாமியின் பெயரையே அவர் வாழ்நாள் பூராவும் சுமக்க நேர்ந்ததுதான் வாழ்க்கையின் விசித்திரம்!

பின்னாளில் இந்த மகன் தனது ஆசார அனுஷ்டானங்களையும் பக்தி நெறிகளையும் முழுவதுமாக அடித்து நொறுக்கப் போகிறான் என்பதை சின்னத்தாயம்மாள் முன் கூட்டியே உணர்ந்துதானோ என்னவோ, சிறு வயதிலிருந்தே தன் இளைய மகன் ராமசாமியிடம் அவ்வளவாக அன்பு பாராட்டாமல், மூத்த மகனையே கொண்டாடிக் கொஞ்சினார். ஏனோ, ஒரு கட்டத்தில், இனி இந்தப் பிள்ளையே தனக்குத் தேவையில்லை என்று, தன் உறவுக்கார விதவைப் பெண் ஒருத்திக்குத் தத்து கொடுத்துவிட்டார்.

சிறு வயதிலேயே தாய் தந்தையரைப் பிரிந்து வாழ நேரிட்டதன் விளைவாக, சிறுவன் ராமசாமிக்குள் தீராத ஒரு வெறுப்பு உணர்ச்சி நெஞ்சில் குடி கொள்ள ஆரம்பித்தது. அதன் பலனாக, கடும் போக்கிரியாக வளர ஆரம்பித்தார்.



அவரை வளர்த்த அந்த விதவைத் தாயின் குடும்பச் சூழல் மிகவும் வறுமை என்பதால், பசிக்கு உணவின்றித் தெருத்தெருவாக அலைந்து, கிடைப்பதைத் தின்று, கண்டவரிடம் வம்பு வளர்த்து, காட்டுச்செடியாக வளர்ந்தார். என்னதான் ராமசாமி ஊர் வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டு வந்தாலும், அந்த வளர்ப்புத் தாய்க்கு மகனென்றால், அத்தனை பாசம்! யாரேனும் ''ராமசாமி என் பிள்ளையை அடித்துவிட்டான். அவனைக் கண்டித்து வளர்க்கக் கூடாதா?'' எனப் புகார் செய்தால், ''அவன் அப்படித்தான் அடிப்பான். வேண்டுமானால், உன் பிள்ளையை வீட்டிலேயே பூட்டிவைக்க வேண்டியதுதானே!'' எனப் பதில் கேள்வி கேட்டு விரட்டியடிப்பார். அம்மாவுக்கும் பிள்ளைக்கும் அப்படி ஓர் அன்னியோன்யம். ராமசாமிக்கு யாராவது கையில் சிக்கிவிட்டால் தீர்ந்தது கதை. தன் பேச்சைக் கைதட்டி ரசிக்கத் தோதாக ஆளும் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான். வயது வித்தியாசமில்லாமல் அவர்களை கிண்டல் செய்து ஓட ஓட விரட்ட ஆரம்பிப்பான். பேச்சு வெறும் வேடிக்கையாக இல்லாமல், அதில் அதிசயிக்கத்தக்க புதிய கருத்துக்களும் இருக்கும் என்பதால் எப்போதும் ஒரு கூட்டம் அவனுடன் கூடியிருக்கும். வளர்ப்புத் தாய்க்கு அது சற்று பெருமையாக இருந்தாலும், நாளை இவன் எப்படி ஆவானோ என்ற கவலையும் எழும்.

அன்று காலை... வாசலில் நிழலாட, வெளியே வந்து பார்த்தார் அந்தத் தாய். வீட்டு வாசலில் வெங்கட்ட நாயக்கர் நின்றிருந்தார்!


Thanks to vikatan.com
-(சரித்திரம் தொடரும்)

Tuesday, April 01, 2008

மூர்த்திதான் போலி டோண்டு

மூர்த்திதான் போலி டோண்டுவாக இருக்கும் என்று ஜிகே என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். எந்த மூர்த்தி என்று கேட்டேன், மனுசன் வாயைத் திறக்கவில்லை, உட்டுவோமா?
வரிசையாக சொன்னார், நோட் பண்ணிக் கொண்டேன்.

சத்திய மூர்த்தி,
சுந்தர மூர்த்தி,
மந்திர மூர்த்தி,
சூரிய மூர்த்தி,
சம்பந்த மூர்த்தி,
சாம்ப மூர்த்தி,
தட்சினா மூர்த்தி,
காருண்ய மூர்த்தி,
கருணா மூர்த்தி,
வேத மூர்த்தி,
கிருஷ்ண மூர்த்தி,
குரு மூர்த்தி,
கலிய மூர்த்தி


இந்த மூர்த்திகளில் உங்களுக்கு யாரைப்பிடிக்கலையோ அவர் தான் போலி டோண்டு.
ஏப்ரல் ஒண்ணுக்கு ஏதாவது எழுதச் சொல்லி குசும்பனிடமிருந்து போன் வந்தது.
ஜிகே, நோ டென்சன் ப்ளீஸ் ஏப்ரல் காமடிக்குத்தான் இது.

இன்னிக்கு முட்டாள் தினமா? டிபிசிடி, புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.