Thursday, August 12, 2010

ஒருவன் ஒருத்தி என்றால் - பரத்தை எதற்கு?


‘போகும் பொன்னி ஆறும் - இனி ஆகும் காலம் நூறும் - போவோமா - ஊர்கோலம்’ - என்று சின்னத்தம்பியில் பாடினவர் குசுபு. வருஷம் 16இல் - கார்த்திக்குடன் - முதல்படம். தளதள இளமையில் - எதுவும் அறியாப் பருவத்தில் - அவர் பேச்சும் நடிப்பும் படத்துக்குப் புதுமை சேர்த்தன. அதற்கேற்ப - ஒரு பணக்காரக் கேரளத்து நாயர் வீட்டில் சூட்டிங். ஓடி ஒளிய - கொஞ்ச - கெஞ்ச - நிறைய இடம் உண்டு.

கற்பு என்பது

மாமேதை குசுபு ஒரு கருத்து சொன்னார் - கற்பு என்பது திருமணத்துக்குப் பிறகு இருந்தால் போதும் என்று - தமிழகம் கொந்தளித்தது. தமிழ் மக்கள் திருடர்கள் - பொய்யர்கள் - என்பது என் கருத்து. வெளிப்படையாக பல கணவர் வாழ்க்கை வாழும் கேரளப் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். ஒருவன் ஒருத்தி என்று நாடக மாடும் தமிழர்கள் பற்றி எனக்கு மரியாதை குறைவுதான். திருவள்ளுவர் கூட - ஒருவன் ஒருத்தி கொள்கையைப் பெரிதுபடுத்துகிறார். அதே சமயம் பரத்தை கலாச்சாரம் இருப்பதையும் ஒப்புக்கொள்கிறார். ஒருவன் ஒருத்தி என்றால் - பரத்தை எதற்கு?

விதைப்பதே ஆண்வேலை

பரிணாமத்தின் உச்சியில் இருக்கும் ஆணுக்கு விதைப்பதும், பெண்ணுக்குக் கருவுருவதும் வேலை. பெண் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொண்டு கருவுறலாம். ஆண் - பெண் ஒன்று - இரண்டு எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் கருவுறச் செய்யலாம். திருவள்ளுவர் - ஒருவன் ஒருத்தி உறவை உயர்த்திப் பேசுவது 1. குழந்தைகளின் பாதுகாப்புக்காக, 2. பெண்களின் பாதுகாப்புக்காக எல்லோருக்கும் பெண்டாட்டி என்பதுதான். யாருக்கும் பெண்டாட்டி இல்லை என்பது - ஒது பாதுகாப்பற்ற நிலை. குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பாதுகாப்பான சூழல்தான் முதல் தேவை. இதில் திருவள்ளுவர் - பெண்களின் கடமையை அதிகமாக்குகிறார். ஆண் எப்படியாவது ஒழியட்டும் பெண்ணாகிய நீ கற்போடு இரு; அதுதான் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்று. ‘தற்காத்துத் - தற் கொண்டான் பேணி’ தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்கிறார். 1. உன்னைக் காப்பாத்திக்கோ, 2. உன் கணவனைப் பராமரி,

3. நல்ல பெயரை எடு, 4. எதற்கும் எப்பவும் கலங்காதே. இதை நோண்டிப்பார்த்தால் - புருஷன் காரன் - எப்படியும் திரிவான். நீதான் குடும்பத்தின் விளக்கு. உன் குழந்தைகள் வளர வீடு என்று ஒன்று இருக்க - நீ தான் முதன்மை என்பதாகும். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இது மனுநீதிக் கருத்துதான்.

மதர் இந்தியா - முதல் - கண்ணகி வரை

மதர் இந்தியா - என்று சினிமா கணவன் - வயல் வேலையில் கால் நொண்டியாகி ஊரைவிட்டு ஓடிவிடுகிறான். அம்மாதான் - தன் நிலத்தை, தன் இரண்டு குழந்தைகளை உருவாக்கிக் கொண்டு வருகிறாள். ஒரு மகன் - பெண்களைக் கெடுப்பவனாக மாறும்போது அவனைச் சுட்டுத்தள்ளவும் தவறுவதில்லை. தேவடியாள் கூட ஓடிப்போகும் கோவலனை - என்ன ஆனாலும் என் கணவன் என்று கண்ணகி ஏற்கிறாள். ‘தேரா மன்னா’ என்று அரச சபையில் தன் வழக்கில் தானே வாதிடுகிறார். மதுரையை அழிக்கிறார். இதில் எல்லாம் கணவனைப் புறக்கணிக்காத - பெண்டிரே குடும்பத்தின் அடித்தளம் என்பது தெளிவாகிறது.

சின்ன தம்பி’யின் பிரம்மாண்ட வெற்றி

சின்ன தம்பியில் குசுபுவும், பிரபுவும் - அந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினார்கள். தமிழ்த் திரைப்படங்களில் - சின்னதம்பி ஒரு மைல்கல் என்றால் அது மிகை இல்லை. இந்தப்பட வெற்றிக்குப் பிறகு குசுபு - சிவாஜி கணேசன் வீட்டுக்கு போகவும் அனைத்துப் பிரபு உறவினர்களுடன் பழகவும் செய்தார். சிவாஜி கூட ‘குச்பு குச்பு’ என்று இந்த அம்மையாரைக் கொஞ்சினார்.

பிரபு மட்டுமே

சில பத்திரிகையாளர்கள் ‘சின்னத்தம்பி’க்குப் பிறகு குசுபுவைப் பேட்டி கண்டார்கள். 1. உங்கள் வாழ்வில் முக்கிய ஆண் யார்? 2. நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? 3. யாரைத் திருமணம் செய்து கொள்வீர்கள் - என்று இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் குசுபு ஒரே விடைதான் தந்தார் - பிரபு - என்று. இதுதான் பிரபுவின் மனைவியை உசுப்பி இருக்கவேண்டும். முன்பே மனைவியாக வாழ்ந்து ஒன்றிரண்டு குழந்தைகளைத் தந்த தன் கணவனை - இன்னொருத்தி சொந்தம் கொண்டாடினால் எப்படி இருக்கும்? நடிப்பு வேறு. வாழ்க்கை வேறு.

உண்மையைச் சொன்னார்

‘கற்பு’ பற்றிய பேட்டியில் - தன் வாழ்க்கை அனுபவத்தை வைத்து - ‘திருமணத்துக்குப் பின் பெண் கற்போடு இருந்தால் போதும்’. முன்னால் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என்கிற மாதிரி ஒரு கருத்தைச் சொன்னார். சுகாசினி கூட - இந்தக் கருத்தை ஆதரித்தார். சினிமா உலகில் இது சர்வ சாதாரணம். பொய்யே வாழ்வாக - இரட்டை வாழ்க்கை வாழும் - பார்ப்பனத் தலைமை - தமிழ்மக்கள் - ஆகா எம் கற்பை - இப்படி சிரிப்புச் செய்தி ஆக்கலாமா - என்று தாண்டிக் குதித்தார்கள். குசுபு - இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. சில தீவிரத் தமிழர்கள் குசுபு மீது வழக்கும் போட்டார்கள். வழக்கில் - குசுபு நிலைப் பாட்டில் தப்பில்லை - என்று தீர்ப்பு வந்தது. தமிழ் மாவீரர்கள் - மேலும் கீழும் மூடிக் கொண்டார்கள்.

தி.மு.க.-வில் குசுபு

இப்ப செய்தி குசுபு தி.மு.க.வில் சேர்ந்தார் - என்பது, அதாவது மிக வெற்றிகரமான தொடர்களை ‘ஜெயா டிவி’யில் செய்து கொண்டிருக்கும்போதே, இந்த முடிவு. தொடர்களைச் செய்யும்போதே - குசுபுவின் மிகப்பெரிய பங்களிப்பு - இன்று என்ன சோளி அணிந்தார் என்பதே இவருடைய பேச்சு - கருத்து பற்றியாரும் கவலைப்படவில்லை. ரவிக்கை பற்றியே ஆண்களும் பெண்களும் பேசி மாய்ந்து போனார்கள். குசுபுவுக்கு அரசியல் தெரியுமா? குசுபு - எம்பி - ஆவாரா? அமைச்சர் ஆவாரா? யார் யார் எல்லாம் குசுபுக்குத் தலைவர்கள் - இப்படி எல்லாம் கேள்விகள், விவாதங்கள்.

மனு நீதிக் காட்டுமிராண்டிகள்

பெண்ணுக்கென்று உடம்பு இருக்கிறது; அறிவு இருக்கிறது; தன் உடம்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது அவள் செய்ய வேண்டிய முடிவு; தன் அறிவை எப்படி உபயோகிப்பது என்பது அவளுடைய முடிவு; அவள் ஒரு மனித சென்மம். அவளுடைய ஆசைக்கும் திட்டத்துக்கும், செயலுக்கும் விளைவுக்கும் அவள்தான் பொறுப்பு. அதில் மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்வது அநாகரிகம். ‘குழந்தையாகத் தந்தையை - குமரியாகக் கணவனை - கிழவியாக மகனைச் சார்ந்து வாழப் பெண் கடமைப் பட்டவள்’ என்கிறது மனுநீதி. நீ யாரடா - அதைச் சொல்ல?

- சங்கமித்ரா

No comments: