Friday, January 30, 2015

நெகிழ வைத்த திரைப்படங்கள் -7 Der Untergang (Downfall)

பொதுவாகவே சரித்திரங்கள், இரண்டாம் உலகப் போர், உண்மைக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட திரைப்படங்கள் எப்போதும் என்னைக் கவருபவை. சில படங்கள் படு அயோக்கியத் தனமாக உண்மையைக் கொலைசெய்து வரலாற்றுத் திரிப்பில்  ஈடுபட்டாலும் சில முத்துக்களும் ஆங்காங்கே கிடைக்கத்தான் செய்கின்றன அப்படியான முத்துக்களில் ஒன்றுதான் இந்த Downfall (Der Untergang- German, 2004). நிறைய வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலும் நேரடி சாட்சிகளின் அடிப்படையிலான ஆதாரங்களைக் கொண்டும் உருவான இப் படம் நம்மை இரண்டாம் உலகப் போரின் கடைசி தினங்களுக்கு கொண்டு செல்கிறது.

Downfall.
இரண்டாம் உலகப் போருக்கு முன்னாலிருந்து  ஹிட்லரின் தற்கொலை வரை ஹிட்லரிடம் அந்தரங்க உதவியாளராக இருந்த ஃப்ராடி ஜங் (Traudi Jung (1920-2002) தான் இளம் வயதில் ஹிட்லரிடம் உதவியாளராகச் சேர்ந்ததை நம்மோடு சொல்ல ஆரம்பிக்கிறது கதை. படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஃப்ராடி ஜங் தோன்றியிருக்கிறார்.

ஹிட்லரின் பிறந்த நாள் 1945 ஏப்ரல் 20ம் தேதி  நள்ளிரவில் தங்களுக்கு மிகச் சமீபத்தில் குண்டு வெடிப்பதைக் கேட்ட  ஃப்ராடி ஜங்கும் அவரின் உடன் பணிபுரிவோரும் எழுந்துகொள்ள ஹிட்லரும் விழித்துக் கொண்டு ஆர்ட்டிலரி தாக்குதல்கள் எங்கு எப்படி எவ்வளவு தூரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று கேட்க ஆரம்பிக்கிறார். ஜெனரல் பர்ஹ்டாஃப் பெர்லினில் இருந்து 12 கிலோமீட்டர்களுக்கு அப்பால் ரஷ்யாவின் படை வந்துகொண்டிருப்பதையும் தெரிவிக்கிறார்.

பிறந்தநாள் நிகழ்வின் போது ஹிட்லரின் எஸ்.எஸ் ஆர்மியின் ஜெனரலான ஹென்ரிச் ஹிம்லரும் ஹெர்மன் ஃபாக்லீனும் சீக்கிரமே பெர்லின் மேற்குக் கூட்டணிப் படைகளிடம் விழுந்துவிடும் என்றும் அதற்கு முன் ஹிட்லர் பெர்லினை விட்டு வெளியேறிவிடுவது நல்லது என்றும் தெரிவிக்கிறார்கள். ஆனால் பெர்லினுக்குள் நுழையும் வேளையில் ரஷ்யப் படைகள் அழிக்கப் படும் என்றும் இல்லாவிட்டால் பெர்லின் என்னோடு சேர்ந்தே விழும் என்றும் கூறி வெளியேற மறுத்துவிடுகிறார் ஹிட்லர். இதற்குப் பின்னால் ஹிட்லருக்குத் தெரியாமல் ஜெர்மனி சரணாகதி அடைவது பற்றி கூட்டணிப் படைகளுக்கு தகவல் அனுப்பி வைக்கிறார் ஹிம்லர்.

ஹிட்லரின் எஸ்.எஸ் படையில் மருத்துவராக பணியாற்றும் டாக்டர் எர்ன்ஸ்ட்டுக்கு மற்றுமொரு போர்முனைக்கு போகும் படி கட்டளை வருகிறது ஆனால் பெர்லினின் மைய்யப் பகுதியில் இருக்கும் மக்களுக்கும் போர் வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் மருத்து விடுகிறார். பின்னர் ஹிட்லரின் மறைவிடத்துக்கு அருகிலேயே இருக்கும் ஒரு மறைவிட மருத்துவமணையில் உள்ள காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் தொடர்கிறார்.

ஹிட்லரின் அமைச்சர்களும், ஈவா ப்ரானும் பெர்லினை விட்டு வெளியேறிவிடவும் வேறெங்காவது ஒரு மறைவிடத்தில் இருந்து அரசியலைத் தொடரலாம் என்றும் தெரிவிப்பதையும் மறுத்து விடுகிறார் ஹிட்லர். மேலும் போரின் அடுத்த நகர்வாக 9ம் படையையும் 12ம் டிவிஷனையும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போரைத் தொடங்கும்படியும் அதன் மூலம் பெர்லின் செம்படையின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் நம்புகிறார்.

அடுத்தநாளே ஹிட்லரின் படைத் தலைவர்களுல் ஒருவரான ஹார்மஸ் கெர்ப்ஸ் வந்து 9 மற்றும் 12ம் படை அணிகளின் எண்ணிக்கை குறித்தும் அவை எந்தப் பக்கத்திலும் நகர முடியாதபடி சூழப் பட்டுள்ளதையும் தெரிவிக்கிறார்கள். பின்னர் தன் படைத் தலைவர்கள் அமைச்சர்கள் முன்னிலையின் எல்லோரையும் துரோகிகள் என்றும் மோசடிப் பேர்வழிகள் என்றும் திட்டித் தீர்க்கிறார். அதன் பின் பெர்லினை விட்டு வெளியேறவேண்டும் என்ற மற்ற அனைவரின் கோரிக்கையையும் நிராகரித்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார் ஹிட்லர்.

ஹிட்லரின் கொள்கைப்பரப்பு அமைச்சர் ஜோஸப் கோயபல்ஸ் போர்க்களத்தில் இருந்து வெளியேரும் பொதுமக்களைக் கொல்லும் படி ஆணையிடுவதை ஜெனரல் மொன்க்ஃஹே எதிர்க்கிறார். போர்க்களத்தில் இறக்கும் பொதுமக்களைப் பற்றி தமக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தெரிவிக்கிறார் கோயபல்ஸ். (நமக்கு போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் ஞாபகம் வருகிறது.)

போரில் ஜெர்மன் தோல்வி நிச்சயம் ஆனதும் ஹிட்லர், ஈவா, இருவரும் தங்களின் கடைசி கடிதத்தை தயாரிக்கிறார்கள். போர் வீரர்களைத் தவிர்த்து தங்களோடு இருப்பவர்கள் இருக்கலாம் போக விரும்புவோர்கள் போகலாம் என்றும் ஹிட்லர் அறிவிக்கிறார்.  ஃப்ராடி ஜங்குக்கு ஒரு சயனைடு பேழையைத் கொடுக்கிறார். ஈவாவை பெர்லினை விட்டு வெளியேரச் சொல்லும் ஈவாவின் தங்கைக் கணவன் பெர்லினைவிட்டு தப்பிச் செல்கையில் பிடிபட்டு மரணதண்டனைக்குள்ளாகிறான்.

போரின் கடைசி நாட்களில் தன் நிதானம் இழக்கும் ஹிட்லர் ஹெர்மன் கோரிங் ஹிட்லருக்குப் பின்னால் தனக்கு போர் நடத்த அனுமதி வேண்டும் என்று கேட்டு ஒரு தகவல் அனுப்ப அதைக் கண்டு கொதிக்கும் ஹிட்லர் ஹெர்மனைக் கைது செய்ய உத்தரவிடுகிறார்.  ராபர்ட் ரிட்டர் வான் க்ரிம்மை அழைத்து லுட்வாஃபேவின் கமாண்ட்டர் இன் சீஃப் ஆக நியமிக்கிறார் ஹிட்லர்.
அதன் பின்னர் தன் குடும்பத்தோடு வெளியேர வேண்டி அனுமதி கேட்கும் டாக்டர் எர்னஸ்டுக்கு ஹிட்ட்லர் அனுமதி மறுக்க எர்னஸ்ட் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறார்.

ஹிட்லரின் மறைவிடத்தில் இருந்து 400 மீட்டர் தூரம் வரை கூட்டணிப் படைகள் முன்னேறி விட்டதை அறிந்த ஹிட்லர் ஈவா ப்ரானை திருமணம் செய்து கொள்ளும் முன்னர் ஃப்ராட்டியிடம் தன் கடைசி கடிதத்தை எழுதச் சொல்கிறார். பின்னர் கோயபல்ஸையும் அவரின் குடும்பத்தையும் பெர்லினை விட்டு வெளியேறிப் போய்விடும் படியும் கேட்டுக் கொள்கிறார் ஆனால் கோயபல்ஸ் மறுத்துவ்விடுகிறார். ஈவா ப்ரானும் ஹிட்லரும் திருமணத்துக்குப் பிறகான விருந்து முடிந்ததும் தன் அந்தரங்க பணியாளர்கள் அனைவரிடமும் தங்களின் கடைசி வணக்கத்தையும் வாழ்த்தையும் கூறி விடைபெற்றுக் கொண்டு அறைக்குள் சென்று தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

பின்னர் இருவரின் உடலும் ஹிட்லரின் விருப்பப் படி மெய்க் காவலர்களால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப் படுகிறது. அதன் பின்னர் கோயபல்ஸும் மனைவியும் குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொன்றுவிடுகிறார்கள். கோயபல்ஸ் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார்.   பெர்லின் ரஷ்ய கூட்டணிப் படையிடம் தோல்வி அட்டைந்ததை அறிந்த பல ராணுவ அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், ஃப்ராடி கடைசி நேரத்தில் பெர்லினை விட்டு வெளியேறிச் செல்வது என்ற முடிவெடுத்து வெளியேறிவிடுகிறார்.

1945ல் போரின் கடைசி நாட்களை மட்டுமே படம் விவரிக்கிறது. மாபெரும் படை பலத்துடனும், மக்களின் முன்னால் உரையாற்றியும் கர்ஜித்த ஹிட்லரின் கடைசி காலம் அத்தனை வேதனையும் வலியும் நிரம்பியதாக இருந்திருக்கிறது. ஹிட்லரின் பின்னால் அணிவகுத்து நின்றவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே விசுவாசத்தின் அடையாளமாக தோன்றுகிறார்கள்.

பல்லாயிரம் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லருக்குள் இருக்கும் கடைசிக் கால நெருக்கடிகளும், அவரின் வேதனையும் அவரைச் சுற்றி கோபத்தை மறைத்தபடி  இருந்தவர்களின் இயலாமையையும் அப்படியே நமக்கு உணர்த்துவதில் இயக்குனரும் நடிகர்களும் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஹிட்லரின் உதவியாளர்கள், ஜெனரல்கள், சமையல்காரர்கள் என எல்லோருக்கும் ஹிட்லரின் மேல் இருக்கும் அன்பு கடைசி வரை மாறுவதே இல்லை.  ஒரு மாபெரும் இனப் படுகொலையாளனாக உலகுக்குத் தெரிந்த ஹிட்லரின் மறுபக்கம் இப்படி ஒருவருக்குமே தெரியாமல் போகக் காரணம் ஹிட்லரோடு சேர்ந்தே அவர்களும் மரணமடைந்ததுதான் போலும். 

குறிப்பாக ஹிட்லரின் மரணத்துக்கு முன்னால் ஈவா ப்ரான் மகிழ்ச்சியோடு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும், எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் முகத்தின் ஒரு பக்கம் ஒரு மறைமுகச் சோகம் ததும்புவதும் நமக்குள் என்னவோ செய்கிறது. ஹிட்லர் தன் பணியாளர்களோடு கடைசி விடைபெரும் போது அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அவர்களுக்குள் என்ன மாதிரியான அன்பு இருக்கிறது என்பதை எல்லாம் அற்புதமாக காட்சிப் படுத்தி இருக்கிறார்கள்.

ஹிட்லரின் மரணத்துக் பின்னால் கோயபல்ஸின் மனைவி தன் ஆறு குழந்தைகளுக்கும் தூக்க மருந்தைக் கொடுத்து பின்னர் அவர்கள் தூங்கிய பின்னர் ஒவ்வொருவர் வாயிலும் சயனைடு குப்பிகளை வைத்து உடைத்து மரணத்தின் வாசலுக்குள் தள்ளிவிடும் காட்சியும் ஒரு நிமிடம் இந்தக் குழந்தைகள் என்ன செய்தன? என்ற கேள்வியை விதைக்கின்றது. பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப் பட்ட யூதக் குழந்தைகளும் கூடவே.

இத்தாலியின் முசோலினி போரில் தோல்வியை நெருங்கிக் கொண்டிருந்தபோது தப்பிக்க முயற்சிசெய்து பிடிபட்டு கொலை செய்யப் பட்டார் அது போல் ஏன் ஹிட்லருக்கு நடக்கவில்லை என்பதற்கெல்லாம் இப் படத்தில் பதில் இருக்கிறது. போரில் கடைசி காலத்தில் ஹிட்லர் இல்லாத ஜெர்மனியை யாரும் நினைக்கக் கூட இல்லை. எல்லாம் ஹிட்லர், விசுவாசம் இனப் பாசம், ஹிட்லர் முசோலினியைப் போல பெர்லினை விட்டுப் போகவும் இல்லை,  

ஹிட்லரின் கடைசி தினங்களுக்குள் நீங்களும் கொஞ்சம் வாழ விரும்பலாம், எத்தனை பெரிய கொடுங்கோலனுக்கும் வாழ்கை என்பது கடைசி காலங்களில் ஒரே மாதிரியாகவும் தனிமையிலும் கழியும் அது எப்படி என்பதைப் பார்க்க ஆவல் இருக்காதா என்ன?




 

No comments: