Monday, January 12, 2015

நெகிழ வைத்த திரைப்படங்கள் -6 The Stoning of Soraya M

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆண்களின் சமூகத்தாலும், ஆண்களின் பொய்களாலும், அவர்களின் கடவுள்களாலும், மதத்தின் பெயராலும், கற்பு என்ற பெயராலும் அடக்குதலுக்கும் அச்சுறுத்தல்களும் உள்ளாக்கப் பட்டுக்கொண்டிருக்கும்  கோடிக் கணக்கான பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கும் திரைப்படம்தான் இந்த . The Stoning of Soraya M 1986ல் ஈரானில் நடந்த உண்மைச் சம்பவம் புத்தகமாக வெளிவந்து பின்னர் திரைப்படமாக்கப் பட்டது.

The Stoning of Soraya M.


தனது கார் ஈரானின் உள்ளடங்கிய கிராமமான குபையாஹ் வில் நின்று போய்விட அதை சரிசெய்யப் போகும் ஈரானிய-ப்ரெஞ்ச்சு பத்திரிகையாளரான ஃப்ரொடொன் ஸ்பாஜெமை சந்திக்கும் சாரா என்னும் பெண் தன் உறவுக்கார பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து உண்மைகளை சொல்வதுதான் படத்தின் மொத்தக் கதையும்.

ஸொரயாவுக்கு இளம் வயதிலேயே அலி என்பவனோடு திருமணம ஆகி இரண்டு ஆண் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன, அலி ஈரானின் சிறையில் கண்காணிப்பளாராக ஒரு உயர்ந்த பதவி , வகிக்கும் கிராமத்தில் கொஞ்சம் செல்வாக்குள்ள ஆள், சிறையில் மரண தண்டனை பெற்ற ஒரு டாக்டரின் விடுதலைக்காக லஞ்சமாக மெஹ்ரா என்ற டாக்டரின் 14 வயது மகள்  அலிக்கு பேரம் பேசப்படுகிறாள். ஸொராயாவை மிரட்டியும் அடித்தும் தன் இரண்டு மகன்களை தாய்க்கு எதிராகவே திருப்பி விட்டும் விவாகரத்து கேட்கிறான் அலி. ஆனால் தன் மகள்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து ஸொராயா மறுத்து விடுகிறாள்.

இந்த விவாகரத்து விஷயத்தில் கிராமத்தின் முல்லாவும் அலிக்கு எப்படியாவது உதவி செய்தே ஆகவேண்டும் என்று முயற்சிக்கிறார். காரணம் முல்லா முல்லா ஆவதற்கு முன்பு ஈராணிய ஷா ஆட்சிகாலத்தில் மனித உரிமை மீறல்களை செய்த ஒரு ஆள் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அலி முல்லாவை மிரட்டுகிறான். வேறு வழியில்லாத முல்லா ஸொராயாவிடம் சென்று எல்லா பஞ்சாயத்துப் பண்ணும் மத குருமார்களைப் போலவே அவனை விட்டுவிடு எனக்கு ஆசை நாயகியாக இரு என்று சொல்லி பேசிக் கொண்டு இருக்கும் போது அங்கே வரும் சாராவுக்கும் முல்லாவுக்கும் பிரச்சினை ஆகி விடுகிறது.

இதற்கிடையே ஸொரயா கோபித்துக்கொண்டு சாராவின் வீட்டில் இருக்கும்போது அதே ஊரில் கார் மெக்கானிக்காக இருக்கும் ஹஷீமின் மனைவி இறந்து போக ஹஷீமுக்கு வீட்டு வேலைக்காரியாக ஸொரயாவை ஊர் வழக்கப் படி மேயரும், முல்லாவுமே பணிக்கு அமர்த்துகிறார்கள். ஏற்கனவே ஸொராயாவை விவாகரத்து செய்ய முடியாத கோபத்தில் இருக்கும் அலி தன் மனைவிக்கும் ஹஷீமுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக குற்றம் சாட்டி அதற்கு சாட்சியாக ஹஷீமையே மகனை அனாதை ஆக்கிவிடுவேன் என்று மிரட்டி  திருப்புகிறான்.  கிராமத்தின் மேயரான இப்ராகிமும் இதற்கு துணை போகிறார்.

இந்த திட்டங்கள் எல்லாம் தெரிந்த சாரா ஸொராயாவுக்கு ஆதரவாக எவ்வளவோ போராடிப் பார்த்தும் அந்த ஊரின் தீர்ப்பின் படி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் படும் ஸொராயா கல்லால் அடித்துக் கொலைசெய்யப் படுகிறாள். அலிக்கும் மெஹ்ராவுக்கும் திருமணம் நடக்கவில்லை, காரணம் சிறையில் இருக்கும் டாக்டர் கொலை செய்யப் படுகிறார். 

படம் முழுக்கவே ஆண்களின் உலகம் எத்தனை கொடூரமானதாகவும், சுயநலத்தோடும், பெண்களை எப்படியெல்லாம் வஞ்சித்துக் கொண்டும் இருக்கிறது என்பதற்கு  ஒட்டு மொத்த வெளிப்பாடாக இருக்கிறது. தன் தாய்க்கு எதிராகவே கையை ஓங்கிக் கொண்டு வரும் மகனை ஆதரவோடு பார்க்கும் தந்தையும், மகன் அடிக்க வருவதை பார்த்து கலங்கிப் போய் இருக்கும் ஸொராயாவுமே காலம் காலமாய் பெண் என்பதால் மட்டுமே ஒடுக்கப் பட்டும் அடக்கப் பட்டும் கிடக்கும் கோடிக் கணக்கான பெண்களின் கதையைச் சொல்லிவிடுகிறது.

ஒட்டுமொத்த ஆண்களின் ஒற்றை சாட்சியாக அலியும், பெண்களின் ஒடுக்கப் பட்ட குரலாக ஸொராயாவும் படம் முடியும் வரை பயணிக்கிறார்கள். மதத்தின் பெயரால் மட்டும் அல்ல ஒட்டு மொத்த  ஆண் குலத்தாலும் அடங்கிக் கொண்டும் கொலையாகிக் கொண்டும், தற்கொலை செய்து கொண்டும் பாலியல் வன் கொடுமைமைக்கு ஆளாகிக் கொண்டும் இருக்கும் எல்லா பெண்களுமே ஸொராயாக்கள்தான். தங்கள் சுயநலத்துக்காகவும் மதத்துக்காகவும் பெண்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கும் ஆண்கள் எல்லாமே அலிகள் தான்.

படத்தின் உயிர் நாடியாக கதையைச் சொல்லும் சாரா ஆங்காங்கே அடக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் பெண்களின் வலிகளை உலகமெங்கும் உரக்கச் சொல்லும் குரலாக படம் முழுக்கவே ஒலித்துக் கொண்டிருக்கிறார்.  கொஞ்சமே கொஞ்சம் மனசாட்சி இருக்கும் ஆண்கள் என்று படத்தில் யாருமே இல்லை, அது உண்மையும் கூட. பெண்களுக்காக குரல் கொடுக்கும் எல்லா ஆண்களுக்கும் பின்னால் ஏதாவது ஒரு சுயநலம் கொஞ்சமாவது ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு படத்தில் வரும் மேயர் இப்ராகிமும், ஹஷீமுமே சாட்சி. 

ஸொராயாவாக நடித்திருக்கும்  Mozhan Marno  வின் கண்களே படத்தில் பாதி பாரத்தை சுமக்கின்றன, அந்த பேரழகான கண்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சோகமும் வலியும் உலகப் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் அநீதியின் குரலாக காலமெங்கும் ஒலிக்கும்.

படத்தின் கொலைக் காட்சியீன் போது ஒலிக்கும் அல்லாஹ்ஹூ அக்பர் என்ற ஒலியைத் தவிற்த்துவிட்டுப் பார்த்தால் இது மத்திய கிழக்குகளில் மதத்தின் பெயரால் நடக்கும் அநீதி என்பதை தாண்டியும் படத்தை இன்னொரு பரிமாணத்துக்கு கொண்டு செல்கிறது.

எல்லா முயற்சிகளுக்கும் பின்னால் தண்டனை அளிக்கப் படுவதற்கு முன்னால் ஸொராயா கூடியிருக்கும் ஆட்களை பார்த்து 

" எனக்கு ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? உங்களால் எப்படி முடிகிறது, நான் உங்களில் ஒருத்தி இல்லையா? உங்களுக்கு தாய் அல்லவா நான், நான் மகள் இல்லையா? நான் உங்கள் மனைவி இல்லையா, உங்கள் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேனே?, உங்கள் பக்கத்து வீட்டுக் காரிதானே நான்? "

என்று கேட்பது அந்த கூட்டத்திடம் மட்டும் அல்ல , படம் பார்க்கும் எல்லோரிடத்திலும்தான், கடைசியில் ஸொராயாமேல் எறியப்படும் கற்கள் எல்லாம் பார்வையாளர்களான நம் மேலேயே வந்து விழுகிறது. படம் முடிகையில் ஒட்டு மொத்த படுகொலையையும் வன் கொடுமைகளையிம் வேடிக்கை பார்க்கும் உலகச் சமுதாயம் போல வேடிக்கை காட்டவரும் கோமாளிகள் கூட்டம் ஒன்று வேடிக்கை பார்ப்பதோடு ஸொராயா கொல்லப் படுவதுதான் நிஜம்.  

இந்த உலகம், அலிகளுகாகவும், ஹஷீம்களுக்காகவும், முல்லாக்களுக்காகவும் படைக்கப் பட்டது, அங்கே ஸொராயாக்களுக்கும், சாராக்களுக்கும் இடமில்லை. என்னும் உண்மை உங்களை படம் முடிந்து பல நாட்களுக்கு துரத்திக் கொண்டே இருக்கும்.

தமிழ் சினிமாக்களில் எல்லாம் இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் அந்நிய நாட்டிடம் மண்ணு அடிமையாய்க் கிடக்கே என்ற ஒற்றை வரி வசனத்தால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாகவே கிடக்கும் பெண்களின் வலியை கடந்து அதை நியாயமும் செய்யும்  ஜெயமோகன்கள்  ஆகச் சிறந்த ஆட்களாக இருப்பது நம் திரை மொழியின் சாபக் கேடு"




























Wednesday, January 07, 2015

ராம லட்சுமனர்கள்தான் ரைட் பிரதர்ஸ் !

இரண்டு நாட்களுக்கு முன்னால் வாஷிங்டன் போஸ்டில் " இந்தியர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்னே விமானங்கள் கண்டுபிடித்துவிட்ட்டார்கள்" என்று அறிவியல் காங்கிரஸில் பேசிய ஆட்களை மேற் குறிப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டார்கள் அதன் பின்னூட்டங்களில் இத்தனை ஆண்டுகளாய் கொஞ்சமாய் கொடி கட்டிப் பறந்த இந்துத்துவ வாந்திகளின் மானத்தை காற்றுக்கு மேலே கிரகங்கள் தாண்டியெல்லாம் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சர்வதேசத்தினர்.



 ஏற்கனவே நாசா எடுத்த மணல் திட்டை ராமனின் பாலம் என்று பாஜக ஆட்சியிலும் அதன் பின்னரான காங்கிரஸ் ஆட்சியிலும் ஊதி ஊதியே தமிழகத்தின் வளத்தை குறுக்கியும் அதன் பின்னர் அமைந்த தற்போதைய ஆட்சியில் சிங்கள இனவாத அரசுக்கு உதவிசெய்யும் விதமாக பல்லாயிரம் கோடிகள் கொட்டிக் கொடுக்கும் வருமான வழியை அடைக்கவேண்டாம் என்ற நல் எண்ணத்தாலும் சுப்பிரமணியன் ஸ்வாமி போன்ற நாசகார சக்திகள் மூலம் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்த பாஜக இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் கூட தன் முட்டாள்தனங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது.

7000 ஆண்டுகளுக்கு முன்னர் விமானம் அதுவும் கிரகம் விட்டுக் கிரகம் ( காலக் கிரகமடா) போகும் எந்திரங்கள் கொண்டிருந்த ஆட்கள் என்ன டேஷுக்காக ராமரின் வானரப் படையும் அந்த மூன்று கோட்டு அணிலும் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்? சரி கட்டியதுதான் கட்டினீர்கள் எங்கள் கரிகாலன் கட்டிய அணையைப் போல கொஞ்சம் திடமாகவாவது கட்டித் தொலைத்திருக்கக் கூடாதா என்றால் அதுவும் இல்லை. கடல் அழிப்பில் ஒழிந்து போனதாம் . எந்த எஞ்சினியரிங் காலேஜில் ராமர் பட்டித்தாரோ யாருக்குத் தெரியும்? 

உங்கள் அறிவியல் ஞானமெல்லாம் என்ன லட்சணம் என்பது உலகுக்கே தெரிந்த ஒன்று. பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இன்று வரை ஆறு மாதங்களுக்கு மேலாக ஒரு டேஷையும் பிடுங்காமல் இப்படி இந்துத்துவ கொடிகளை மட்டுமே தூக்கிக் கொண்டு திரிந்தால் உலகம் காரித் துப்பாதா? துப்பத்தான் செய்யும் செய்கிறதுதான். 

7000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே விமானம் கண்டுபிடித்தோம் என்பதெல்லாம் உங்களின் கற்பனையாக கிடந்துவிட்டுப் போகட்டும் ஆனால் 7000 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் இங்கே இல்லவே இல்லை என்றுதானே சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்? 

சிந்துச் சமவெளி நாகரீகம் முதல் , ஆதிச்சநல்லூர் அகழ்வுகள் வரை இதைத்தானே சொல்கிறார்கள்? உங்களுக்கு மட்டும் எங்கிருந்தய்யா வந்தது 7000 ஆண்டு பாரம்பரியம் எங்களின் நாட்டில்?.  இந்த லட்சணத்தில் நீங்கள் இதை இந்துக்களின் தேசம் என்கிறீர்கள்? 60000 மனைவிகளைக் கொண்ட தசரதனுக்கு நாளைக்கு ஒன்றென்றால் கூட கூடி வாழ பல்லாண்டுகள் ஆகுமே சாமி என்ற என் தாத்தன் பெரியாரின் கேள்விக்கே இன்று வரை உங்களால் பதில் சொல்ல முடியவில்லையே?

ரோம், எகிப்து, சீனா, சிந்து, திராவிட, நாகரிங்கள் எல்லாம் ஒற்றை ஆவணங்களையாவது கொண்டு எங்களின் இருப்பை நாங்கள் யார் என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறதே உங்களுக்கு அப்படி ஏனய்யா ஒன்றுமே கிடைக்கவில்லை? ராவணன் கட்டிய கோவில் , அசோகவனம் என்ற சிதிலங்களை காட்டவாவது இலங்கையில் கொஞ்சம் கிட்டி இருக்கிறது என்கிறார்கள் வரலாற்றாளர்கள், திராவிட நாகரீகம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை, கல்வெட்டுக்களாகவும், அகழ்வாய்வின் மிச்சங்களாகவும் ,சங்க இலக்கியங்களாகவும் எங்களிடம் ஏகப் பட்ட பாடல்கள் உண்டு, ஆதாரபூர்வமாகவே. உங்களிடம் கீதையும், ராமாயணத்தையும் விட்டால் கோவணத் துணிகூட மிஞ்சவில்லையே? 

திப்புசுல்தான் தான் ராக்கெட் விட்ட முதல் இந்தியன் என்கிறது 1000 ஆண்டுகளுக்குள் ஆன வரலாறு, வெடி மருந்தைக் கண்டுபிடித்தது சீனா என்று உலகமே ஏற்றுக் கொள்கிறது. 7000 ஆண்டுகளுக்கு முன் ஏரோப்ளேன் கண்டு பிடித்தது நாங்கள்தான் என்று நீங்கள் சொல்லும் போதே உலகம் தன் சகல துவாரங்களையும் திறந்து சிரிக்க ஆரம்பித்து விடுகிறதே ஏன் என்று கொஞ்சமாவது சிந்தித்தீர்களா? 

உங்கள் இலக்கியம் வரலாறு எல்லாமே எங்கள் மேல் செலுத்தவென்றே உங்களால் உங்கள் சனாதன பயமுறுத்தல்களால் எங்கள் மேல் தினிக்கப் பட்டு மக்கள் மாக்களாய் இருந்ததால் கடவுள்களின் பேரைச் சொல்லி இதிகாசங்கள் புராணங்களைச் சொல்லி வயிறு வளர்த்த ஆட்களால் உண்டானது என்று எங்களுக்கு தெரிந்து பல்லாண்டுகள் ஆயின ஆனலும் ஆட்சியும் அதிகாரமும் எதையும் சொல்லி ஏமாற்றும் திறனும் உங்களிடம் இருக்கிறது என்பதாலேயே ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எங்களிடம் ஏரோப்பிளேன் இருந்ததென்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்!!

குஜராத்தின் கடல் எல்லையில் துவாரகா என்ற இடம்தான் துவாரகை என்ற மகாபாரத வரலாற்றின் இடம் என்று சொல்லி ஒரு கடலாய்வு செய்தீர்களே என்ன ஆயிற்று என்ற சர்வதேசத்தின் கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதிலே இல்லை. மாட்டை புனிதமாக்கியது போல நாட்டை புனிதமாக்கும் உங்கள் செயலால் மானம் கப்பல் ஏறிக் கொண்டிருக்கிறது. ஆன்மீகத்தைத் தாண் ஆண்டுகொண்டீர்கள் அறிவியலைக் கொஞ்சம் மிச்சம் வைய்யுங்கள்.

இப்படியே போனால் உங்கள் அமைச்சர்களில் யாராவது ராம லட்சுமனர்கள்தான் ரைட் பிரதர்ஸ் என்று சொன்னாலும் சொல்வார்கள்!!


Tuesday, January 06, 2015

வெட்கமாக இல்லையா திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களே?

ஆராயப் படாமலேயே  மக்கள் முதல்வர் என்ற பெயரில் ஒரு அசிங்கம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று குற்றவாளி என தீர்ப்பும் சொல்லப் பட்டு தன் வீட்டை விட்டு எதற்காகவும் வெளியேற முடியாத  சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கூட இழந்த ஒரு கட்சியின் தலைமை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அரசாங்க நடவடிக்கைகளில் பங்கு கொள்வதும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் சுயமரியாதைப் பேரொளிகளில் ஒருவராக இருந்த பன்னீர்செல்வத்தின் பெயரைத் தாங்கி நிற்பவருமான பினாமி முதல்வர் இன்று வரை கூட மக்கள் முதல்வரின் வழிகாட்டுதலுக்கு இனங்க என்று அறிவிப்புகள் செய்வதும் தமிழகம் இதுவரை காணாத கேலிக் கூத்து.

இந்தியத் தலை நகரில் முதல்வர்களின் கூட்டம் அங்கே செல்லும் பினாமி முதல்வர் கூடவே தன் துணைக்கென்று ஜெயலலிதாவின் புகைப் படம் அடங்கிய கோப்பை கொண்டு செல்கிறார். எல்லா ஊடகங்களிலும் வெளியாகிறது இந்தப் படம். ஒரு தலை முறைக்கு முன்னால் திராவிட இயக்கங்கள் என்றாலே கோவனத்தை அவிழ்க்காமலே மூத்திரம் போன ஆட்கள் எல்லாம் தமிழகம் என்றாலே நகைக்கிறார்கள்.

இன்று வரை நீங்கள் முதல்வர் அறையில் அமர்ந்ததில்லை, உங்கள் வீட்டுக்கு முன்னால் முதல்வர் என்ற பெயர்ப் பலகை இல்லை, உங்கள் படம் தாங்கிய அரசாங்க காலண்டர், நாட்குறிப்பு இல்லை, உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன் யார் நீங்கள்?

அம்மா என்ற பெயருக்கு ஏதும் தடையில்லை ஆனால் இரட்டை இலைக்கு , இயற்கை காட்சிக்கு தடை என்றதும் நாடளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மறைத்த ஸ்டிக்கர்கள் இன்று இல்லை. சுய உதவிக் குழுக்களை முடக்கும் மோடியின் அரசாங்கத்துக்கு எதிராக பினாமி முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார். நாடாளும் மன்றத்தில் மோடி. கூடவே சுத்திக் கொண்டிருக்கும் செவ்வாழைகள் பதில் சொல்லும் வேளையில் அடுத்த பயணம் அண்டார்டிகாவா ஆர்டிக்கா என்ற சிந்தனையில். மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரும் இந்துத்துவ தீவிரவாதிகள்  கூடவே மோடி பீரங்கியை களம் இறக்குகிறார்கள்.



மாண்புமிகு முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களே!!

கோட்சேவுக்கு சிலை, கோவால்கருக்கு மணி மண்டபம், என்று திராவிட இயக்கத்தின்  முக்கிய கொள்கையான சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனீய பனியாக்களின் ஆதிக்கங்களை ஒரு வார்த்தை கூடச் சொல்ல முடியாமல் ஏற்றுக் கொண்டு குனிந்த தலை கவிழாமல் ஆட்சியை அதிகாரத்தை யாருக்காகவோ ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் பன்னீர் செல்வம் அவர்களே?

எங்கெல்லாம் அமைதியும் அடங்கிப் போகும் அடிமைப் புத்தியும் இருக்குமோ அங்கெல்லாம் பார்ப்பனீயம் தன் அகன்ற அலகுகளால் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிடும். உங்கள் அடிமைத் தனம் என்பது உங்களோடு மட்டும் அல்ல உங்கள் தலைமையை தேர்வு செய்த என்னை அடங்காத கோடிக் கணக்கான தமிழர்களையும் சேரும் முதல்வர் பதவி என்பது வேண்டுமானால் உங்கள் கட்சித் தலைமை கொடுத்த ஒன்றாக இருக்கலாம் சட்ட மன்ற உறுப்பினர் என்பது மக்களின் தேர்வு.

ஒரு டீக்கடைக் காரர் என்று உங்களை கிண்டல் செய்த ஆட்களுக்கு மத்தியில் உங்களின் விசுவாசத்தை போற்றிக் கொண்டிருந்த ஆட்களுள் நானும் ஒருவன். ஆனால் உங்களின் விசுவாசம் என்பது வெறும் கட்சியின் தலைமைக்காக என்பதைக் காணும் போது கண்கள் கலங்கிடத்தான் செய்கிறது. உங்களுக்கு இப்போதிருக்கும் பதவி என்பது யாரோ எவரோ பிச்சை போட்டதல்ல என்பதை உணருங்கள். மக்களின் தேர்வால் சட்டமன்ற உறுப்பினர் ஆன ஒருவரை முதல்வராக்குவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்த உரிமை.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான பேரைக் கொன்ற விவகாரத்தில் தன் கறைகளைக் கழுவத் துணியாத மோடி இன்று முதல்வர், பிரதமர் என்ற பதவிகளை அலங்கரித்துக் கொண்டே தன் இந்து பாசிச வெறியை தேசமெங்கும் பரப்ப பர பர பயணத்துக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டே அத்வாணி வாஜ்பாய் போன்ற ஜாம்பவான்களை கண்காணாத இடத்துக்கு பின் தள்ளிக் கொண்டிருக்கும் வேளையில் கேவலம் விசுவாசத்துக்காக ஜெயலலிதாவின் பின்னால் போய் வரலாற்றை எழுதும் ஆட்களுக்கு கூச்சம் ஏற்படுத்தாதீர்கள்.

உங்களின் மேல் யாருக்கும் விருப்போ வெறுப்போ இல்லை என்பதுதான் உங்களின் பலம், பலவீனம், ஆனால் உங்களிடம் விசுவாசத்தை தவிற வேறொன்றும் இல்லை என்பதை அறியத் தெரிகையில் வெறும் அயற்சிதான் எஞ்சுகிறது. முதலில் உங்கள் கட்சி ஆபிமானங்களை எல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு மக்கள் பணியாற்ற வாருங்கள்.

கொஞ்சமாவது உங்கள் கட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கும் திராவிட என்ற பெயருக்கு முழு அர்த்தம் தெரியுமானால், அந்த திராவிடச் சொல்லுக்கும் முந்தைய நீதிக் கட்சியின் வரலாறு தெரியுமானால் நீதிக் கட்சியின் முழு அர்த்தமான சுயமரியாதை இயக்கத்தின் போராட்டங்களை அறிவீர்கள் என்றால்  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் மக்களின் முதல்வரின் பினாமியாக இல்லாமல் உண்மையில் மக்களின் முதல்வராக எஞ்சி இருக்கும் உங்களின் ஆட்சிக் காலத்தையாவது கழிக்கப் பாருங்கள்.

பயணக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கல்விக் கடன் கிடைக்காத அவலம், மின் வெட்டு, நில அபகரிப்பு, காணாமல் போன மலைகள், சட்டம் ஒழுங்கு
, உள் கட்டுமானம், மத தீவிரவாதங்கள் என  நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏகப் பட்டவை கிடக்கின்றன உங்கள் முன்னால். ஜெயலலிதாவின் வழக்கை அவர் பார்த்துக் கொள்வார், கட்சியும் கூட அவரின் கட்டுப் பாட்டில்தான் இருக்கும்.

உங்களுக்கு தமிழக முதல்வர் என்னும் மிகப் பெரிய பணி காத்துக் கிடக்கிறது.

நான் சொல்ல வந்ததில் நூற்றில் ஒரு பங்கையாவது சொல்லியிருக்கிறேன் என்ற மகிழ்வோடு.

வாழ்த்துக்கள் திரு. பன்னீர் செல்வம் அவர்களே!!





Wednesday, December 31, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள் -5 The Tin Drum

சில திரைப்படங்கள் காணும் போது உங்களை வெறும் நெகிழ்வுக்குள் ஆழ்த்தி விட்டு வேறெந்த கேள்விகளையும் கிளப்பாமல் சும்மா இருந்துவிடும், சில படங்கள் புதிய புதிய கதவுகளை திறந்துகொண்டே இருக்கும். சில படங்கள் விளிம்பு நிலை மனிதர்களின் கதையைச் சொல்கிறேன் என்று கிளம்பி அவர்களை கழிவிறக்கத்துக்குள்ளான மனிதர்களாய் சித்தரிப்பதோடு முடிந்து விடும். இல்லை நகைச்சுவையாக்கி பழி வாங்கி இருக்கும். 

ஆனால் சில படங்கள் மட்டும்தான் விளிம்பு நிலை மனிதர்களின் உணர்வுகளை நமக்கு உணர்த்துவதோடு சமுதாயத்தின் மீதான மதிப்பீட்டின் மீது நாம் கட்டி வைத்திருக்கும் பிம்பங்களை கேள்விக்குள்ளாக்கி அதன் மேல் தன் தாக்கத்தையும் விட்டுவிட்டுப் போகும். அப்படியான ஒரு படம்தான் இது.

The Tin Drum (1979)


இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் டான்சிங் (Danzing) என்னும் நகரத்தில் நடக்கிறது கதை, ஆஸ்கார் என்னும் சிறுவன்  முதலில் போலந்தில் இருந்து வந்து ஜெர்மானியர்களால் தேடப்பட்டு தன் பாட்டியை தாத்தா மணந்து கொண்ட கதையைச் சொல்லி பின் தன் தாயின்  (அக்னெஸ்) இரண்டு பேர் (ஜான் ப்ரொன்ஸ்கி, ஆல்ஃபிரட் மாட்செரத்)  மீதான காதலையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது வயிற்றில்தான் இருக்கிறான் . 

ஆஸ்காரின் மூன்றாவது வயதில் தன் தந்தைகளுள் ஒருவரான (?)  ஜான் ப்ரொன்ஸ்கி (ஆம் ஆஸ்காரின் தந்தை யார் என்பது கடைசி வரை சொல்லப் படவே இல்லை. ஆஸ்காரின் தாய் இரண்டுபேரையுமே காதலிக்கிறாள்.ஆனால் ஆல்ஃபிரட் மாட்செரத்தை மணம் முடிக்கிறாள் ) ஆஸ்காருக்கு ஒரு ட்ரம்மை பரிசாகக் கொடுக்கிறார். ஆஸ்காரின் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தன்னைச் சுற்றி நடக்கும் முறை தவறிய பெரிய மனிதர்களின் நடவடிக்கைகளால் மனம் வெறுத்த ஆஸ்கார் தான் பெரிய மனிதனாகவே ஆகக் கூடாதென்ற முடிவை எடுக்கிறான்.

பெரியவனாகவே ஆகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக நிலவரை ஒயின் செல்லரை கீழே தள்ளி விட்டு தானும் விழுகிறான் அதுவும் அந்த ட்ரம்மை மிகப் பத்திரமாக வைத்துவிட்டு. பின்னர் மருத்துவர்களால் காப்பாற்றப் பட்டாலும் தன் வளர்ச்சியை அவன் உடல் நிறுத்திவிடுகிறது. (Dwarf). 

பின்னர் அவனின் உலகமே அந்த ட்ரம் மட்டும்தான். தன்னைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களை பெரிய மனிதர்களின் சின்னத்தனங்களை காணும் போதெல்லாம் பறையடிப்பது போல தன் எதிர்ப்பை அந்த டரம்மின் மூலமாகவே தெரிவித்துக் கொண்டிருக்கிறான். ஆஸ்காரின் ட்ரம்மைப் பிடுங்க முயற்சி செய்யும் போது அவனிடம் இருந்து வெளிப்படும் உச்ச சத்தம் கண்ணாடிகளை உடைக்கும் வலுக் கொண்டது என்று ஒரு நாள் தெரிய வருகிறது.

ஆஸ்காருக்கு வயதாகிக் கொண்டே போனாலும் அவன் வளர்சியில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்காரின் தாய் தன் இன்னொரு காதலனை (ஜான் ப்ரொன்ஸ்கி) காண்பதற்காக போலந்தின் (?) ஒரு நகருக்கு ஆஸ்காருடன் போய் அங்கே இருங்கும் ஒரு பொம்மைக் கடையில் விட்டுவிட்டு போகும் போது தன் தாயின் இன்னொரு காதலை தெரிந்துகொள்ளும் ஆஸ்கார் மணிக்கூண்டின் உச்சியில் இருந்து ட்ரம்மை ஒலிக்கச் செய்து தன் எதிர்ப்பை தெரிவிக்கிறான்.

இதன் பின் தான் கற்பம் ஆனதால் இன்னொரு குழந்தை வேண்டாம் என்றோ இல்லை தன் காதல்களால் விளைந்த மோசங்களாலோ ஆஸ்காரின் தாய் வெறும் பச்சை மீன்களை தொடர்சியாகச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள ஆஸ்காரின் தந்தை(?)  தன் உறவுக்கார பெண்ணான மரியாவைக் கொண்டு வந்து தன்னோடு வைத்துக் கொள்கிறார். ஆனால் ஆஸ்காருக்கும் அந்தப் பெண்ணுக்கும் , ஆஸ்காரின் தந்தைக்குமே ஒரு காதல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே மரியாவுடன் ( வேறு வேறு நேரத்தில் ) உடலுறவு கொள்ள அதன் பின் மரியா கர்பமாக குழந்தைக்கு யார் தந்தை என்ற குழப்பம் வேறு. 

இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் போரில் பங்கெடுக்க இயலாத குள்ளர்களின் சர்கஸ் கூடாரத்தில் தான் முன்பே பார்த்த ஆட்களோடு சேர்ந்து போர் முனைக்குச் சென்று வீரர்களை மகிழ்வாக்கும் வேலை செய்யப் போகும் ஆஸ்கார் அங்கே தன்னைப் போல ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பிக்கிறான்.  அந்தக் காதலும் போரின் முடிவில் புட்டுக் கொண்டு போகிறது குண்டு வீச்சில் கொல்லப் பட்டுகிறாள் அந்த பெண்.

போர் என்பதும் அதன் பின்னால் ஆன தோல்விக்குப் பின்னரும் தன் தந்தைகளுள் ஒரு ஆளான ஜான் ப்ரோன்ஸ்கியின் தபால் ஆஃபீஸில் சண்டைகளுக்கு நடுவே தன் இருப்பை நிலை நிறுத்த போராடுகிறான் ஆஸ்கார்.

தனக்குப்( ? ) பிறந்த மரியாவின் குழந்தைக்கு மூன்று வயதில் நானும் ஒரு ட்ரம் கொடுப்பேன் அதன் பின் வளராமல் இருக்க வேண்டிய ரகசியமும் சொல்லிக் கொடுப்பேன் என்று சொல்லும் ஆஸ்கார் (?)ஆல்ஃபிரட்டின் (?) குழந்தை குர்ட்ஸ் வீசிய கல்லில் மரணமடைந்த ஜான் ப்ரோன்ஸ்கியின் சவக் குழியில்   மூன்று வயதில் தொட்ட ட்ரம்மை வீசி வளர விரும்பி ஆஸ்கார் வளர ஆரம்பிப்பதோடு முடிகிறது படம்.

இதில் நெகிழ என்றோ அழுகைக்கு என்றோ எந்த காட்சியும் இல்லை ஆனால் எல்லா காட்சிகளிலும் தன் இருப்பை வெளிப்படுத்தவென்றே ஒரு ட்ரம் இருக்கிறது. பறை என்றோ முரசு என்றோ சொல்லிக் கொள்வோம் ஆனால் 2007ல் இந்த படம் பார்க்கும் போது உலகப் படங்கள் மேல் இத்தனை ஆர்வம் இல்லாமல் இருந்ததாலோ என்னவோ இத்தனை பாதிக்கவில்லை இப்படம்.

இந்த தொடரை ஆரம்பித்த பின்னால் எந்த படங்களை எல்லாம் நான் கண்டு நெகிழ்ந்து அழுது கிடந்திருக்கிறேன் என்று பார்கையில் இந்தப் படமும் வந்தது நினைவில்.  மீண்டும் பார்க்கும் போது ஆஸ்காரின் எல்லா நடவடிக்கைகளுக்கும் பின்னால் இருக்கும் சமூக அவலங்களின் மேலான பறை அறிவித்தல் எல்லா சமூக விளிம்பு மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறதது.  உடல் ரீதியாக ஒடுக்கப் பட்ட குள்ளர்கள், ஜெர்மனியை சுத்தம் செய்கிறோம்  என்று கொன்றொழிக்கப் பட்ட இன சுத்திகரிப்பின்  பெயரால் நாட்ஜிக்களின் வரலாறில் இடம் பெறாமல்  போன பல்லாயிரம் பேர்களின் ஒற்றை சாட்சியாக படம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஆஸ்காரின் டின் ட்ரம்.















Monday, December 29, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள் -4 The Boy in the Striped Pajamas


ஜெர்மனியை ஹிட்லர் ஆண்டு கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் காலத்தில் நடக்கிற கதை.

The Boy in the Striped Pajamas (2008)




சீக்ரட் சர்வீசஸ் அல்லது சுருக்கமாக எஸ்.எஸ் என அழைக்கப் பட்ட ஹிட்லரின் நாட்ஜி ராணுவத்தில் கமாண்டராக இருக்கும் தன் தந்தையின் பணி உயர்வின் காரணமாக தன் தாய் , சகோதரி, வேலைக்காரி சகிதமாக  யூதர்களை இன ஒழிப்பு செய்யவென்றே உண்டாக்கப் பட்ட கான்ஸன்ட்ரேஷன் கேம்புகளுக்கு அருகிலேயே ராணுவம் ஒதுக்கித் தந்த ஒரு வீட்டில் குடியேறுகிறான் எட்டு வயது சிறுவன் (ப்ரூனோ). கேம்பில்  தன் வேலை என்னவென்று குடும்பத்தில் யாரும் அறிந்து விடாமல் ரகசியம் காக்கிறார் தந்தை,

கேம்பில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் போது ப்ரூனோ சும்மா சுற்றிப் பார்க்கப் போன இடத்தில் கேம்பில் இருக்கும் ஒரு யூதச் சிறுவனோடு (ஷ்யூல்ட்ஸ்)  யாருக்கும் தெரியாமலேயே நட்பு கொண்டு விடுகிறான். நடுவில் இரண்டு பேரையும் பிரித்து வைத்திருக்கும் மின் வேலியின் அர்த்தம் தெரியாமலேயே. தினசரி வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள். ப்ரூனோ வீட்டுக்குத் தெரியாமல் தின்பண்டங்கள் கொண்டு வந்து கொடுக்கிறான்.

இதனிடையே ப்ரூனோவின் தாய் தன் வீட்டில் வேலை செய்யும் ஒரு லெப்டினென்ட் மூலம் கேம்பில் இருந்து வரும் புகையும் அதன் துர் நாற்றம் குறித்தும் கேட்கப் போய் அங்கே நடைபெற்று வரும் படுகொலைகளை குறித்து தெரிந்து கொண்டு தன் கணவனோடு சண்டை பிடிக்கிறாள். இதை சொன்னதற்காக லெப்டினென்ட் போர் முனைக்கு அனுப்பப் படுகிறான். லெப்டினென்ட்டுக்கும் ப்ரூனோவின் அக்காவுக்கும் ஒரு ரகசிய காதல் வேறு ஓடுகிறது.

போர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் ப்ரூனோவின் தாத்தாவும் பாட்டியும் குண்டுவீச்சில் இறந்து விட குடும்பத்தோடு அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட முடிவு செய்கிறார் தந்தை. கிளம்பும் நாளுக்கு முந்தைய நாள் யூதச் சிறுவனின் தந்தை கேம்பில் காணாமல் போய்விட நானும் நாளை வந்து உன்னோடு தேடுகிறேன் என்று சொல்லும் ப்ரூனோ கிளம்பும் நாளில் கேம்புக்குள் யூதர்களின் உடை அணிந்துகொண்டு யூதச் சிறுவனின் தந்தையை கண்டு பிடிக்க உதவுவதற்க்காக கேம்புக்குள் செல்லும் இடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக விஷ வாயுக் குளியலில் மரணமடைந்துவிடுவதோடு படம் முடிகிறது.

ஜெர்மனியின் நாட்ஜிக்களுக்கு, யூதர்களின் மேல் இருந்த வெறுப்பை எந்த காட்சிப் படுத்துதலும் இன்றி வசனங்கள் மூலமே சொல்லியிருப்பது படத்தின் பெரும் பலம். சிறுவன் ப்ரூனோ பள்ளிக் கூடத்தில் இருந்து மகிழ்ச்சியோடு வெளிப்பட்டு நண்பர்களோடு ஓடி வரும் போது சடக்கென தன் வீட்டைக் கண்டதும் சோகமே உருப்பெற்று படக்கென முகம் சோர்வதாக இருக்கட்டும், புதிதாகப் போன இடத்தில் வீட்டு வேலை, தோட்ட வேலை  செய்யும் முன்னாள் டாக்டரான யூதக் கிழவர் பாவெலைப் பார்த்து வருத்தப் படுவதாக இருக்கட்டும் ,  கேம்பின் உள்ளே இருக்கும் ஷ்யூல்ட்ஸ்சை கண்டதும் சந்தோசப் படுவதாகட்டும் ப்ரூனோவாக நடித்திருக்கும் ஆஷா பட்டர்ஃபீல்டு அட்டகாசம் செய்கிறான்.

கேம்பில் இருக்கும் சிறுவன் ஷ்யூல்ட்ஸ் ஆக நடித்திருக்கும் பெல்லா ஃபெச்ட்ஸ்பம்க்கு   மிக அழுத்தமான பாத்திரம், எளிதில் உணர்வுகளைக் காட்டாத முகம் என்று ஒரு யூதச் சிறுவனாகவே மாறியிருக்கிறான் லெப்டினன்டால் முகத்தில் அடிபட்டு ப்ரூனோவை பார்க்காமலேயே தலை கவிழ்ந்து பேசும் இடங்கள் அற்புதமான நடிப்பு. உண்மையில் இந்த யூதச் சிறுவன் தான் படத்தின் கதாநாயகன்.

படம் முழுக்கவே மிகச் சில கதாபாத்திரங்களே என்றாலும் படத்தின் காட்சிகளும் வசனங்களும் இசையும் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கின்றன. ஜெர்மனியின் யூத வெறுப்பை முன்பே புரிந்து கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு படத்தின் சில இடங்கள் நுணுக்கமாக புரியும் உதாரணமாக கேம்பின் புகைக் கூண்டில் இருந்து புகை வரும் போது ஏன் துர் நாற்றம் வருகிறது என்று ப்ரூனோ தன் தந்தையிடம் கேட்கும் போதும் , துர் நாற்றம் குறித்து லெப்டினன்ட் ப்ரூனோவின் தாயிடம் சொல்லும் போதும் வரலாற்றின் காலகட்டம் தண்டியும் நாம்  ஒரு இன ஒழிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி விடுகிறோம்.

இரண்டு சிறுவர்களுக்குள் இருக்கும் அன்பும் நட்பும், வளர்ந்த மனிதர்களிடையே சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை எள்ளி நகையாடும் விதமாக குழந்தைகளின் இன்னொரு உலகத்தை நமக்குள் கொண்டு வருகிறது.

படம் முடிகையில் இரண்டு சிறுவர்களுமே கேம்பின் உள்ளே மாட்டிக் கொண்டு உயிர் விடப் போகும் நேரத்தில் கைகளை ஒன்று சேர்த்துக் கொள்கிற இடம் ஒரு கவிதை. கடைசியில் வழக்கமான சினிமாக்களில் காட்டுவது போல் இறந்தவர்களின் உடல்களைக் காட்டாமல் வரிசையாக தொங்கிக் கொண்டும் இறைந்தும் கிடக்கும் கோடிட்ட நீல நிற பைஜாமாக்களை காட்டியதற்காகவே, ஜான் பாயினின் நாவலை படமாக்கிய இயக்குனர் மார்க் ஹெர்மனுக்கு ஒரு பூங்கொத்து.

மேல்ஜாதிகளால் கீழ் ஜாதிகள் ஒடுக்கப் படுவதன் வலி உணர்ந்த, இனத்தின் பெயரால் கொத்துக் கொத்துக்களாக கொல்லப்பட்ட மனிதர்களை கண்டுணர்ந்த அதற்காக வருத்தப் படும் எல்லாருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்.

படம் குறித்த தகவல்களுக்கு 

முழு படத்தையும் காண 

Friday, December 26, 2014

கோட்சேவின் பெயரால் விருது கொடுப்போம் !

நாதுராம் வினாயக் கோட்சேவை தெரியாதவர்கள் காந்தியைக் கொன்ற இந்து மகா சபை உறுப்பினர் என்றால் உலகுக்கே தெரியும். காந்தியைக் கொன்றதன் மூலம் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டும் விதமாக தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டது தொடங்கி சாவர்கர், மாளவியாக்களின் அங்கீகரிக்கப் பட்ட பிரதிநிதி அல்லவா கோட்சே.



பாஜகவின் ஆட்சியை இந்து மத வெறியர்களின் ஆட்சி, பஜகோவிந்தங்களின் ஆட்சி, காவிகளின் ஆட்சி என்று விமர்சித்தால் நம்மை ஏதோ தாலிபான்களின் அளவுக்கு வெறுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் இந்த இடைச்சாதி இந்துக்கள். அவர்கள் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாக எழுதுபவனின் அறிவைச் சோதிக்கும் விதமாக சில நண்பர்கள் அறிவாளித்தனமாக நம்மை சொறிய ஆரம்பித்து விடுகிறார்கள்.

கோட்சே பற்றியோ மாளவியா பற்றியோ வாஜ்பாய் பற்றியோ அத்வானி பற்றியோ ஏன் மோடியைப் பற்றியோ சொல்ல ஒன்றுமே இல்லை. பாபர் மசூதி இடிக்க முக்கிய காரணமான அத்வானி, வெள்ளைக்கார துரைகளுக்கு உளவு வேலை பார்த்த வாஜ்பாய், குஜராத் கலவரங்களின் பிதா மகன் மோடி, பூரண இந்துத்துவ நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று முழங்கிய மாளவியா குறித்து நல்லவிதமாக எதாவது இருந்தால் அல்லவா இவர்கள் நம் எழுத்தை விமர்சிக்க முடியும்?

கோட்சேவுக்கு கோவில் கட்டுகிறார்கள் காந்தியின் நினைவு நாளில் திறக்கப் போகிறார்களாம், கூடவே, இந்திராவைக் கொன்ற சீக்கியருக்கும், அதற்கு காரணமான பிந்தரன் வாலேவுக்கும், ராஜீவைக் கொன்ற தனுவுக்கும் சிவராசனுக்கும், பிரபாகரனுக்கும் சிலைவைக்கப் போகிறோம் என்று யாராவது கிளம்பினால் என்ன ஆகும் என்று நினைக்கும் போதே பயந்து வருகிறது.

வாஜ்பாயிக்கும் , மாளவியாவுக்கும் பாரத ரத்னா கொடுக்கிறார்களாம் கொடுக்கட்டும் இன்னும் இருக்கும் மிச்ச சொச்ச ஆட்சியின் சொற்ப நாட்களிலும் அமித் ஷாவுக்கும் , கலைஞரின் தலைக்கு விலைவைத்த ராம்விலாஸ் வேதாந்திக்கும் இன்னபிற பார்பனீய, இந்து வெறி எதிர்ப்பாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கும் எச்ச ராஜாக்களுக்கும் கொடுத்துக் கொள்ளட்டும்.

காவிகளின் வேர் ஆழ ஊன்றிக் கிடக்கும் இந்நாட்டில் இன்னும் ஆயிரம் ஆயிரம் கூத்துக்களும் அரங்கேறப் பார்ப்பதென்னவோ உண்மைதான் ஆனால் இவர்களின் கையில் ஆட்சி கிடைத்த பின் ஊடகங்களால் ஊதிப் பெருக்க வைக்கப் பட்ட ஶ்ரீமான் மோடியின் தர்பார் என்னவோ காத்தாடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

நாட்டை வளப்படுத்தும் பொருளாதார மேதைகள் இல்லாத சுகாதாரத்துக்கான செலவில் கூட 6000 கோடிகளை குறித்து வல்லபாய் பட்டேலுக்கு பல்லாயிரம் கோடிகளில் சிலை வைக்கத் துடிக்கும் ஆட்களின் கைய்யில் அல்லவா ஆட்சி இருக்கிறது.? பாவம் அவர்கள் மட்டும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட புத்திசாலிகள் அல்லவா?

காஷ்மீரிலும் ஜார்கண்டிலும் வெற்றி பெற்று விட்டோம் என்றூ கொக்கரிக்கிறார்கள் ஆனால் காஷ்மீரில் வென்ற தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் டெப்பாசிட் கூட பறிபோன விஷயத்தை மூடி மறைக்கிறார்கள்.

கல்வி, மருத்துவம், சுகாதாரம், உள் கட்டமைப்பு என்று எந்த ஒரு அரசு, மக்கள் நலம்  சார்ந்த கொள்கைகளும் இல்லாமல் , வாஜ்பாயி , அத்வானி மோடி அமித்ஷா என்ற பிம்பங்களின் தயவில் ஆட்சிக்கு வந்தவர்களிடம் கோட்சேவுக்கும் மாளவியாவுக்கும் வாழ்த்துக்களும் வீர வணக்கங்களும் தவிற வேறென்ன எதிர்பார்க்க முடியும். பஜகோவிந்தங்களின் ஆட்சி என்பது இன்னும் கொஞ்ச நாட்களின் முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்கப் போகிறது என்பதை கருப்புப் பண விவகாரம், பெட்ரோல் விலை, ஊழல் எதிர்ப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு என்று எல்லாவற்றிலும் பார்த்துவிட்டொம்.

கூட இருந்தே கோஷ்டி காணம் பாடி என்னவோ திமுகவும் காங்கிரசும் மட்டும்தான் ஊழலின் வித்து, ஈழத்தின் எதிரி என்பதாய் பரப்புரைகளை வெளியிட்டு வஞ்சம் தீர்த்துக் கொண்ட செவ்வாழைகள், கொஞ்சம் கொஞ்சமாய் புளி மூட்டைக்குள் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்
விளக்கத்துக்கு வினவின் கட்டுரை படியுங்கள்.

திராவிடம் என்றாலே உச்சா போய்க்கொண்டு ஆர் எஸ் எஸ்ஸின் பெயரைக்கூட தமிழகத்தில் உச்சரிக்க பயந்துகொண்டிருந்த எச்ச. ராஜாக்கள் எல்லாம் இன்று ரங்கராஜ் பாண்டேக்களின் தயவால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கோட்சே புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கூடவே கொங்கு ஈஸ்வரன் என்ற ஜால்ராவும்.

அத்வானிக்கு கோவையில் குண்டு வைத்தார்கள் என்று உண்மைக் குற்றவாளிகள் என்று யாராவது கிடைத்தால் அவர்களுக்கும் சிலைவைப்போம் என்று கிளம்பினால் அப்போதும் இந்த மகா சபைகள் மவுனம் காத்து வரவேற்கும் என்று நம்புவோமாக.

பாஜக என்னும் ஆட்சியில் இருக்கும் ஒரு முகத்தை வைத்துக் கொண்டு காவிகள் தங்களின் எல்லா ஆசைகளையும் இந்த ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றிக் கொள்ள துடிப்பது என்பது பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுப்பதற்குச் சமம் என்பதை யாராவது சோக்களோ, இல்லை பத்ரிக்களோ அவர்களிடம் சொன்னால் பரவாயில்லை. பொன்முட்டை கிடைக்காவிட்டால் அவர்களுக்கு நஷ்டம் இல்லை, நம் உயிரல்லவா போகிறது.

சிறுபான்மை மக்களின் நலனுக்கு எதிராகவே எப்போதும் நடக்கும் பாஜக சங் பரிவாரங்களின் சங்கறுக்கும் வேலை தொடங்கும் முன் விழித்துக் கொள்வோம் இல்லாவிட்டால் வரலாற்றை திரித்து எழுதும் பஜகோவிந்த பன்னாடைகள் கோட்சே பெயரில் ஒரு விருதை உண்டாக்கி காந்திக்கு கொடுத்து விடுவார்கள்.



Monday, December 22, 2014

நீங்கள் இந்துவா இல்லை இந்தியனா?

இந்த காவிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியாயிற்று, தமிழ் தேசியம் பேசுவோரின் இனத் தூய்மையை விட இந்து தேசியம் பேசும் தொகாடியாக்களின் பேச்சு ஆயிரம் மடங்கு அதிகம் வன்மம் கக்குவதாக மாறிக் கொண்டே போவது  மத்திய கிழக்கின் இசிஸ், இசில், தாலிபான், அல்கொய்தாக்களின் வளர்ச்சி போல ஒரு புற்று நோய் போல உலக சமூகத்தை அச்சத்துக்குள் தள்ள ஆரம்பித்திருக்கிறது.

இன்று கூட December 22, 2014 இந்தியாவில் இந்து மக்கள் தொகையை 100 சதவீதம் ஆக்குவோம் என்று வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா கொக்கரித்திருக்கிறார். இவர்கள் சொல்லும் இந்து நாடென்பது முதலில் யாரையெல்லாம் உள்ளடக்காது என்பதற்கு ஏகப்பட்ட ஆவணங்கள் உண்டு, சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒட்டு மொத்த சிறுபான்மையினர் அல்லாத இந்துக்களின் தேசமாக ஆக்கப் போகிறார்களாம்.

கூடவே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் என்ற ஒன்றையும் கொண்டு வரப் போகிறார்களாம். நாசூக்காக "கட்டாய" என்றை சொல்லைச் சேர்த்துக் கொண்டுவிட்டார்கள். யார் வேண்டுமானாலும் எந்த சிறுபான்மை ஆட்கள் மேல் வேண்டுமானலும் என்னை இவர் "கட்டாயப்" படுத்தி மதம் மாற்ற முயல்கிறார் என்று குற்றம் சாட்ட ஏதுவாக. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவியை இழந்த ஜெயலலிதா இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து பின்வாங்கினார் என்பதெல்லாம் மோடி மஸ்தான்கள் அறிவார்களோ இல்லையோ?

இதைத்தானே மத்திய கிழக்கில் இஸ்லாமியத்தின் பெயரால் செய்கிறார்கள்? சிங்கள பவுத்தத்தின் பெயரால் இலங்கை இனவாத அரசாங்கம் செய்கிறது? பங்களாதேஷ், பர்மா, ஆப்பிரிக்க நாடுகள் சூடான் இஸ்ரேல் எல்லாம் இதைத்தானே செய்தன? ஜெர்மனி இதைத்தானே செய்தது? பிறகென்ன வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவுக்கு?

அப்படி என்ன செய்துவிட்டார்கள் என்று வாதம் செய்ய வரவேண்டாம் இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்தவர்கள் ஆட்சியும் அதிகாரமும் மிருக பலத்தோடு கிடைத்தவுடன் பேசவும் ஆரம்பித்து விட்டார்கள். இனி மீதம் ஒன்றும் இல்லை 

செய்ய வேண்டியது மட்டுமே பாக்கி. 

இனத் தூய்மைவாதம், மதத் தூய்மைவாதம் எல்லாம் போய் வரலாற்றை திரித்தும் எழுத ஆரம்பித்திருக்கிறது காவிகளின் கூடாரம். காந்தியும் தேசபக்தர், காந்தியைக் கொன்ற கோட்சேவும் தேச பக்தர் என்று! இவர்களிடம் இருந்து வேறென்ன வார்த்தைகள் வரும்? கீதையை இந்தியாவின் தேசிய நூலாக்குவோம் என்று முழங்கியவர்கள் தானே?.

நமக்கு வாய்த்த பிரதமர் பற்றி சொல்லவே தேவையில்லை. எப்படியும் ஐந்தாண்டுகளுக்குள் தன் கால் படாத தேசமே உலகில் இருக்கக் கூடாதென்ற முன் முடிவோடு பறந்துகொண்டே இருக்கிறார். அவருக்கு அதானிகளும் அம்பானிகளும்தானே முக்கியம்?. அடுத்ததாக செவ்வாய் கிரகத்தில் நிலக்கரி கிடைக்கும் என்றால் அதானி குழுமத்தோடு அங்கும் போய் ஒரு ஒப்பந்தம் போடுவார் என்று நம்புவோம்.

அரசாங்கத்தை வழி நடத்தவும், மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் எந்த கொள்கையும் அற்ற கட்சிகள் வெறும் மதம், தன் கட்சி சார்ந்த கொள்கைகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துகொள்ளலாம் என்றிருந்த இந்திய மக்கள் ஆறே மாதங்களுக்குள் கசப்பு மருந்தை சுவைக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

உண்மையில் காவி கட்சிகளின் கொள்கைதான் என்ன என்று கேட்டால் எல்லோரும் அது, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி,சிவசேனா, பாஜக, இந்து முன்னனி என்று எவனைக் கேட்டாலும்  . ராமர் கோவில், சேது சமுத்திரத்தை காப்பாற்றுவது, படேல்களுக்கும், சாவார்கர் களுக்கும் சிலை வைப்பது உலகின் ஒரே இந்து நாடு என்ற பெருமையை நேபாளிடம் இருந்து பிடுங்கிக் கொள்வது என்று பதில் இப்படித்தான் இருக்கிது. ஆட்சியாளர்கள் வெறும் போட்டோஷாப் உத்திகளைக் கொண்டே குஜராத்தை ஜப்பான் ஆக்கிக் காட்டி இந்தியாவை வென்றவர்கள் ஆயிற்றே இன்னும் சில நாட்களின் ராமர் கோவிலை அயோத்தியில் கட்டியேவிட்டதாகக் கூட காட்டுவார்கள் படம்.

பாஜகவும் அதன் கூட்டாளிக் கட்சிகளும் எப்படியெல்லாம் பிற்போக்குத் தனமாக சிந்திப்பவர்கள் என்பதற்கு இந்தியர்கள் எல்லாம் ராமனின் பிள்ளைகள் என்று உளரிக் கொட்டிய சாத்வி நிரஞ்சன் ஜோதி ஒருவரே போதும் இப்பேர்பட்ட ஆட்களை எல்லாம் மத்திய அமைச்சர் ஆக்கி அழகு பார்க்கும் பெருமை பாஜகவுக்கு மட்டுமே சேரும், சொல்லி வைத்தார் போல சட்ட சபைகளில் ஆபாசப் படங்கள் பார்ப்பது என்பதும் இவர்களின் பொழுதுபோக்கு , பெண்களை தெய்வமாகக் கொண்டாடுவோம் என்பதும் இவர்களின் பொழுதுபோக்கு.

குஜராத்தில் திட்டம் போட்டு கலவரங்கள் நடத்திவிட்டு அதை ஒரு விபத்து என்றும் ஒரு நாய் தான் செல்லும் வண்டியில் அடிபட்டு இறந்துவிட்டால் வருந்துவேன் என்று சொன்ன ஒரு ஆளைத்தானே நாம் பிரதமராக்கி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம்?.

கோத்ரா முதல் உத்திரப் பிரதேச கலவரங்கள் வரை தன் ரத்தக் கறைகளை கழுவாமல் அதையே ஆதாரங்களாக வைத்து ஒரு ஆளும் தேசிய கட்சியின் தலைவராக அமித் ஷா வரமுடியும் என்கிறபோது பாபா ராம்தேவ்களும் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று செய்து தொலைக்கப் போகிறார்களோ என்று பயமாய் இருக்கிறது. 

அத்வானி போகும் இடமெல்லாம் குண்டு வெடித்துக் கொண்டிருந்தது, நல்லவேளையாக தேர்தலில் ஜெயித்துவிட்டு அத்வானியும் ஓரங்கட்டப் பட்டுவிட்டதால் இனி அப்படி நடக்காது என்று நம்புவோம். மோடியின் கூட்டங்களில் இனி குண்டுகள் வெடிக்குமோ என்னமோ எல்லாம் அந்த அமித் ஷாக்களுக்கே வெளிச்சம். 

காவி பயங்கரவாதம் என்பதென்னவோ வடநாட்டுக்கு மட்டும் என்று நினைத்துக் கொண்டு இங்கிருக்கும் திரவிடக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் வாக்கு கிடைத்தால் போதும் என்பதற்காகவும் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து பதவியைச் சுவைத்தால் போதும் என்பதற்காகவும் ஒரு கூட்டணியை அமைக்குமேயானால் அந்த பிழையை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. காரியம் ஆனபின்னால் காலை வாரி விடும் கயவர்கள் நிறைந்த இடம் என்பதை சு,சாமி தன் ஒவ்வொரு டிவீட்டிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார், மான ரோஷம் இல்லாமல் இன்னும் பாஜகவில் ஒட்டிக்கொண்டிருக்கும், ராமதாஸ்களும், விஜயகாந்த் களும் விரைவில் அரசு உப்பை ஓருபிடி தனியே தின்றாவது உணர்ச்சி பெறட்டும்.

சமூகநீதி சமத்துவம் என்று வாய்கிழியப் பேசும் ராமதாஸ் பாஜகவின் கொள்கையை தன் கொள்கையாக மாற்றி நாட்கள் பல ஆயின என்றாலும் திராவிட மண்ணில் காவி பயங்கரவாதம் இடம் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதே எல்லாருடைய ஆவலும், அதற்குள் அன்புமணிக்கு ஏதும் மந்திரிப் பதவி கொடுத்து காரியத்தை பாஜக கெடுத்துவிடாது என்று நம்புவோம்.  

எங்கெல்லாம் மத பயங்கரவாதம் தலைதூக்குகிறதோ அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவார்கள் என்பதற்கு உதாரணமாக ஏகப் பட்ட நாடுகளைச் சொல்லலாம்.நாமும் அப்படி நாசமாய்த்தான் போகவேண்டுமா என்பதை இந்தியர்கள் சிந்திக்கவேண்டும். 

திராவிடம் பேசும் ஆட்களுக்கு இந்தியர்கள் மேல் என்ன அக்கரை என்று கேட்கும் ஆட்களுக்கு நாங்கள் திராவிடர்கள் அதனால்தான் இந்துக்களின் முகமூடிகளை கழட்ட முயற்சி செய்கிறோம். 

நீங்கள் இந்துவாக இருக்கவேண்டுமா இல்லை இந்தியனாக இருக்க வேண்டுமா?