Wednesday, January 14, 2015

பதவிக்காக..


சுஜாதாவின் பதவிக்காக நாவலை ஒரே மூச்சில் இரண்டாவது முறையாக இன்று படித்து முடித்தேன். தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த அரசியல் நாவல்களுள் ஒன்றான இது எத்தனை முறை படித்தாலும் அலுப்பதே இல்லை..

தன்ராஜின் இடைத்தேர்தல் வெற்றியிலும் சின்னப்பனின் தோல்வியிலும் தொடங்கும் நாவல் எத்தனை சித்துவிளையாட்டுகள், சாதுர்யங்கள், சதிகள், திடீர் திருப்பங்கள் அரசியலில் சாத்தியமோ அத்தனையும் தொட்டுச் செல்கிறது. 1987-88 அரசியல் காலத்தைக் கொண்டு பார்கையில் இது அப்போதைக்கு ஒரு துணிச்சலான நாவலாக இருந்திருக்கலாம்.

நாவலில் எங்குமே தன்ராஜின் வேகம் குறையவில்லை. மாறாக ஆறுமுகனாருக்கும் அரங்கராமானுஜத்துக்கும் நடக்கும் பதவிப் போட்டியில் பலிகடா ஆக்கப் படாமல் சாதுர்யமான வழி நகர்த்தல்கள்,

திலகவதியோடு திருமணம், ஜமுனாவோடு இன்னொரு வாழ்கை என்று கதைதான் ஆனால் சுஜாதாவின் எல்லா நாவல்களின் கதாநாயகன்களிலும் , அவன் கொலைத் தொழில் திருட்டுத் தொழில் செய்பவனாக இருந்தால் கூட (உதா: என்றாவது ஒரு நாள், மேகத்தை துரத்தினவன்) இருக்கும் அதே ஒரு துளி நேர்மை ஒட்டிக் கொண்டிருக்கும் காதாநாயகன் நம் தன்ராஜ்.

காவல்துறையின் அசுர பலம் அரசாங்கத்தின் உளவுக் கண்கள், மத்திய அரசு மாநில அரசின் மேல் செலுத்தும் அழுத்தம், வெறுப்பு விருப்புகளுக்காக மட்டுமே மாநிலத்தில் அரசியல் தலையீடு அதற்கு வர்மா என்ற ஒரு புத்திசாலித்தனமான குள்ளநரி கவர்னர் என்று கதை எல்லா தளங்களிலும் தட தடக்கிறது. சென்னையிலும் தமிழகத்திலும் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் பதவிக்கு வரத் துடிக்கும் அரசியலை அழுத்தமாக பதிவு செய்கிறது நாவல்.

பாலியல் தொழிலாளி கம் நடிகை கௌரியின் கொலையில் ஒரு சாட்சியாக நுழையும் சாவித்திரி, ஐபிஎஸ் கோகுல் போலீஸின் நேர்மை அநியாயங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சியாக கூடவே வருகிறது. சாவித்திரியின் சக பத்திரிகையாளனின் செல்லக் காதல் இளமை , நட்புக்கு ஒரு சாட்சி.

ஒரு மாநில அரசை மத்திய அரசு என்னவெல்லாம் செய்யலாம் ஒரு முதல்வர் , மாநிலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்று அதன் உச்சம் வரை சென்று பார்க்கிறது நாவல். கவர்னர்கள் நினைத்தால் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசின் துணைகொண்டு ஆட்டிப் படைக்கலாம் என்பதை விரிவாகவும் தெளிவாகவும் சொல்கிறது நாவல். நமக்கும்தான் வந்து வாய்க்கிறார்களே ஆட்டுக்குத் தாடி போன்ற கவர்னர்கள் என்று நமக்குத் தோன்றுவதை தவிற்க முடியவில்லை.

இதெல்லாவற்றையும் விட ஜமுனாவின் கணவனாக வரும் கோவிந்தராவ்..... எமகாதகன். சாருவின் வார்த்தைகளில் சொன்னால் பெட்டிஷ் பெட்டிஷ். ஜமுனாவுக்கும் தன்ராஜுக்கும் இடையில் இருக்கும் காதலை கண்டு கொண்ட பின்னரும் அதை மனதுக்குள் வைத்துக்கொண்டே ஒன்றுமே தெரியாதவன் போல ஜமுனாவை அன்பாலேயே அடித்து துவைத்து கொல்லும் கிராதகன். அவன் செய்வதை அவன் அளவில் அது நியாயமாகத்தான் படுகிறது. 

ஜமுனாவும் பிறந்து இருபதே நிமிடத்தில் இறந்த குழந்தையும் பொட்டில் அறைய தன்ராஜ் விரக்தியின் உச்சியில் முதல்வர் பதவி வேண்டாம் என்க மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத அரங்கராரும், ஆட்சிக்கு வந்த ஆறுமுகமும் அதையும் காப்பாற்ற முடியாத நிலையில் தேர்தலுக்குள் தள்ளி விடுகிறார் கவர்னர்.

இதை அப்போது நாவலாக இல்லாமல் தொடராக படித்தவர்களுக்கு வாரா வாரம் கண்டிப்பாக காத்திருப்பது ஒரு தண்டனை போல் இருந்திருக்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் தடக் படக்கென்று நகர்வதை படிக்கும் போது உணரமுடிகிறது. 

ஒரு அரசியல் சினிமா ஆவதற்க்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கும் நாவலை இதுவரை யாரும் சினிமாவாக்காமல் இருப்பதற்க்காக பல கோடி நன்றிகள், இதில் இருந்து கொஞ்சமாய் எடுத்து முதல்வன் ஆக்கியிருக்கிறார் ஷங்கர். அந்த யாருக்கும் அடங்காத ஒரு நாள் முதல்வர். ஒரு கருதான். 

சந்தேகமே இல்லாமல் எந்த இலக்கிய தகுதிகளையும் விட்டுவிட்டுப் பார்த்தால், சுஜாதா ஜனரஞ்சக எழுத்தாளர்களில் முதலிடம் பெற வேண்டிய ஆள்தான்.

1 comment:

bandhu said...

இந்த கதை தொடராக வந்து கொண்டிருந்த பொது கதைக்கு ஏற்றது போல தமிழக சட்டசபை கலவரம் நடந்ததும் அதை சரியாக சுஜாதா உபயோகித்துக் கொண்டதும் என்றும் ஆச்சர்யப் படுத்துபவை!