Saturday, February 27, 2010

பெரியார் 25


தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!

தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!

தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!

தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!

தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!

இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!

'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!

அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!

'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!

நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!

95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

-ப.திருமாவேலன்

Monday, February 15, 2010

வன்னியர்கள் மீது பாய்ந்த கைவிரல் ரேகைப் பதிவு ஆணை

விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆணை, கள்ளர் சமூகத்தினருக்கு மட்டுமல்லாது, வன்னியர் சமூகத்தினருக்கும் இருந்தது. குறிப்பாக தென்னாற்காடு மாவட்டத்தில் ‘படையாட்சி’ என்று அழைக்கப்பட்ட வன்னியர் சமூகத்தினர் காவல் நிலையங்களில், அன்றாடம் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று சில பார்ப்பன போலீஸ் அதிகாரிகள், அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்ற அவசர தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இதை காங்கிரசார், தங்களின் சாதனைபோல அப்போதே பொய் பிரச்சாரம் செய்துள்ளனர். இந்த வரலாற்றுச் செய்திகளை 1935 ஆம் ஆண்டு ‘விடுதலை’ ஏட்டிலும், ‘குடிஅரசு’ இதழிலும், ‘தென்னாற்காடு ஜில்லா படையாட்சிகள்’ எனும் தலைப்பிலும் பதிவாகியுள்ளது. செய்தியை இங்கு வெளியிடுகிறோம்.

சமீபத்தில் நடக்கப் போகும் தென்னாற்காடு ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரியார்கள், மற்ற இடங்களில் உண்மையை மறைத்தும், உள்ளதைக் குறைத்தும் கூறிப் பொய்ப் பிரச்சாரம் செய்த மாதிரி, தங்களுடைய ஒழுங்கீனமான சுயநலப் பிரச்சாரம் செய்ய முற்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் செய்த சூழ்ச்சிகளைக் குறித்து நமது நிருபர் எழுதிய விவரங்களை வேறொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம். அவற்றால், சுயநலக் கூட்டத்தார் ஜஸ்டிஸ் கட்சியினரைத் தோற்கடிக்க எவ்வளவு தூரம் முயற்சி செய்கிறார்களென்பது விளங்கும். தம்முடைய பிரச்சாரத்திற்காக, எவ்வளவு கேவலமான முறைகளையும் அனுசரிப்பார்களென்பது, அவர்களுடைய முழுப் பொய்ப் பிரச்சாரத்தினால் புலப்படுகின்றது. சில வாரங்களுக்கு முன், படையாட்சி வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் குற்ற பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அரசாங்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

க்ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களான படையாட்சிகள் ஏன் குற்றஞ் செய்யும் வகுப்பினரோடு சேர்க்கப்பட்டார்கள்? அதற்குக் காரணமென்ன? காரணம் சில பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்கள். அவர்களுடைய ‘ரிப்போர்ட்டு’களில் அவ்வகுப்பினரை குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டு வருதல் மிக அவசியம் என்று எழுதியதனால், அரசாங்கத்தார், தவறாக அப்படிப்பட்ட உத்தரவை வெளியிட்டார்கள். அந்த உத்தரவு படையாட்சி வகுப்பினரிடையே பெருத்த பரபரப்பை உண்டு பண்ணியது. அவர்களுடைய சுயமரியாதைக்கும், கௌரவத்திற்கும், அரசாங்க உத்தரவு இடையூறு செய்ததைக் கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் கண்டிக்கப்பட்டது. அந்த அவமரியாதையான உத்தரவை ரத்து செய்வதற்குத் தென்னாற்காடு ஜில்லா போர்டு தலைவர், ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் அவர்கள் பிரயாசைப்பட்டு வெற்றி பெற்ற விஷயம் அந்த ஜில்லாவாசியான படையாட்சிகளுக்குத் தெரிந்திருக்குமென்று நம்புகின்றோம்.

சென்னை சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியினர் ஒருவரால் அவசரத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவ்வுத்தரவை ரத்து செய்யும் விஷயமாக அரசாங்கத்தார் கவனிப்பதாக வாக்குறுதியளித்ததின் பேரில், தீர்மானம் ‘வாப்பீஸ்’ வாங்கிக் கொள்ளப்பட்டது. பின்னர், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களின் முயற்சியால், அரசாங்கத்தார் பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்களுடைய ‘ரிப்போர்ட்’டுகளின் மேல் தாங்கள் அம்மாதிரி உத்தரவிட்டது தவறென்று உணர்ந்து, படையாட்சிகளின் கிளர்ச்சியின் உண்மையை அறிந்து, உத்தரவை ரத்து செய்தார்கள்.

இவ்வுத்தரவு ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது. காங்கிரஸ்காரர்கள் தான் சட்டசபையில் இதை விவாதித்து ரத ்து செய்வதற்கு உதவி செய்தார்கள் என்று சுயநலக் கூட்டப் பத்திரிகைகள் சில கூறுவது எவ்வளவு பொய்யான விஷயம் என்பதை படையாட்சிகள் அறிவார்கள் என்று நம்புகிறோம். படையாட்சிகள் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களில் மிகப் பழங்குடி மக்கள். அவர்களைப் பற்றிப் பார்ப்பனர்கள் பரிந்து பேசுவதும், அவர்களுடைய நன்மைக்காகப் பாடுபடுவது போலப் பாசாங்கு செய்வதும், மக்களை ஏமாற்றி ‘ஓட்’டுப் பறிப்பதற்கேயாகும். காங்கிரஸ் என்ற போர்வையை மேல் போர்த்திக் கொண்டால், படையாட்சிகளை ஏமாற்றிவிடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

சதாகாலமும் பொய், ஏமாற்றுதல், மானக்கேடான செயல்களைச் செய்து, வேலை சம்பாதித்தல், புல்லிய செய்கைகளின் மூலம் வயிறு வளர்த்தல் முதலிய குற்றங்களை இரவு பகலாகச் செய்து வரும் பார்ப்பனர்களை, குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டியிருக்க, தமிழ்நாட்டின் விவசாய விருத்திக்குக் கற்றூண் போல் விளங்கி, பழமையும் பெருமையும் பொருந்திய க்ஷத்திரிய வீரத்தையும், தேக பலத்தையும் நாட்டின் செழுமைக்கு உபயோகிக்கும் படையாட்சிகளைக் குற்ற பரம்பரை வகுப்பினராகச் சேர்த்தது எவ்வளவு தவறான விஷயம். இத்தவறுதலுக்குக் காரணம் பார்ப்பனர்கள் என்பதை யுணர்ந்து, அவ்வுத்தரவு ரத்து செய்ததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சி என்பதறிந்து, சமீபத்தில் நடைபெறப் போகும் தேர்தலில் சுயநலக் காங்கிரஸ் கூட்டத்தை முறியடிப்பார்கள் என்று நம்புகிறோம்.

‘விடுதலை’

‘குடி அரசு’ மறு பிரசுரம் - 08.12.1935

Saturday, February 13, 2010

தங்கர்பச்சான்,சீமான்:தமிழ்ப்பாசிஸ்ட்கள்



தமிழ் நடிகைகள் குறித்த தங்கர்பச்சானின் ‘அரிய’ கருத்து, திருமணத்திற்கு முன்னான பாலுறவு குறித்த குஷ்புவின் கருத்து போன்றவைகளுக்கு அடுத்தபடியாக ஜெயராமின் பேச்சு இப்போது தமிழ் ‘இன உணர்வைக்’ கிளப்பியிருக்கிறது. இன்று காலையில் ஒரு தமிழ்த்தேசிய நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது, ‘ஜெயராமுக்கு மன்னிப்பு, சீமானுக்குக் கைது - இதுதான் திராவிட நீதியா?’ என்று. ஜெய்ராம் பேசிய கருத்துக்காக தமிழகக் காவல்துறை அவரைக் கைதுசெய்யமுடியாது, ஜெய்ராம் மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் (தொடரப்பட்டிருக்கிறது). ஆனால் நாம் தமிழர் இயக்கம் ஜெய்ராம் வீடு புகுந்து நிகழ்த்திய வன்முறைக்கு நிச்சயம் காவல்துறை கைதுநடவடிக்கை எடுத்துத்தானாக வேண்டும். ஆனால் இந்த வித்தியாசங்களைக் கூட உணர முடியாதளவு நிதானத்தை இழந்துள்ளனர் தமிழ்த்தேசியவாதிகள். நிதானம் இழப்பதும் எதார்த்தங்களைப் பரிசீலிக்கத் தவறுவதும் அவர்களுக்கு ஒன்றும் புதியதல்லவே!

'தாக்கரே பெருமகன்' என்று மும்பையில் சீமான் பேசியதற்கு மேலும் அர்த்தத்தின் அடர்த்தியைக் கூட்டியிருக்கின்றனர் அவரது தம்பிமார்கள். ஜெயராமின் கருத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று எதுவுமேயில்லாது எடுத்தவுடனே வீடு புகுந்து அடிப்பது ஒன்றுதான் வழி என்றால் அந்த வன்முறை யார் மீது வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்பதை நாம் உணரவேண்டும். பெரியாரைக் கைவிட்ட சீமான் சிவசேனாவின் வழி நோக்கி அடியெடுத்து வைப்பது கருத்தியல் இயல்புதான்.

நிச்சயமாக இந்த கட்டுரை ஜெயராமின் கருத்துக்களை நியாயப்படுத்தவில்லை; ஆனால் ஜெயராமின் சொற்களுக்குப் பின்னாலிருந்தது வெறுமனே இனவாதத் திமிரல்ல என்பதை அடையாளப்படுத்த முனைகிறது. மேலும் ஜெயராமுக்கு எதிராய்க் குரலுயர்த்தும் இனவாதிகள் மற்றும் ஊடகங்களின் அறிவுநாணயம் மற்றும் அரசியல் யோக்கியதை குறித்துக் கேள்வி எழுப்ப விரும்புகிறது.

ஜெய்ராம் மலையாளச் சேனலில் அளித்த நேர்காணலை வைத்து முதன்முதலாகப் பரபரப்பைக் கிளப்பியது குமுதம்தான். வேலைக்காரிகள் குறித்த ஜோக்குகளையும் படங்களுக்கான கமெண்டில் நடிகைகள் குறித்த அருவெறுப்பான வார்த்தைகளையும் உதிர்க்கும் குமுதத்திற்கு இதுகுறித்து எழுதுவதற்கு ஏதாவது யோக்கியதை உண்டா? குமுதம் திடீரென்று பேசும் இனவாதத்தின் பின்னுள்ள லாபம் என்ன?

ஜெய்ராம் குறித்து முதலில் கண்டனத்தைத் தெரிவித்தவர் வழக்கம் போல், ‘என்ன சார் நடக்குது இங்க?’ தங்கர்பச்சான்தான். ஆனால் இதே தங்கர்பச்சான்தான் ‘நடிகைகள் விபச்சாரிகள்’ என்ற ‘முற்போக்குக் கருத்தை’ச் சொன்னவர். அவர் சொன்னது நவ்யா நாயர் என்னும் மலையாள நடிகை குறித்துத்தான். ‘எம்மினப் பெண்ணை எப்படி வேசி என்று சொல்லலாம்?’ என்று கேரளா அன்று கொதித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? குமுதத்தின் வேலைக்காரி ஜோக்குகளில் அவமானப்படுத்தப்படுபவர்கள் எல்லாம் ‘தமிழ் வேலைக்காரிகள்’தானே? சீமான், பச்சான் மாதிரியான தமிழ்த்தேசிய இயக்குனர்களின் படங்களில் தமிழ்ப்பெண்களுக்கான இடமென்ன? எப்போதாவது பெண்களின் உரிமைகள் குறித்தும் சுயமரியாதை குறித்தும் அங்கீகாரம் குறித்தும் அவர்களின் படங்கள் பேசியிருக்கின்றனவா? ‘என் சேலைக்கு அவிழ்ந்து விழ நேரம் என்னைக்கு?’ என்பதுதானே அதிகபட்சம் இவர்கள் படத்துப் பெண்கள் ஆண்களை நோக்கி கேட்ட கேள்வி?

தமிழ்த்திரைப்படங்கள் தமிழ்ப்பெண்களைச் சித்தரித்தது ஒருபுறமிருக்கட்டும். தமிழ்ச்சினிமா மலையாளப் பெண்களை எப்படி சித்தரித்திருக்கிறது? இடுப்பு வரை முண்டு கட்டிய பாலுணர்வு தீனிப்பண்டங்களாகத்தானே அவர்களைச் சித்தரித்திருக்கிறது. ‘தாராளமா மனசு இருந்தா கேரளான்னு தெரிஞ்சுக்கோ’ (ரன் படப் பாடல்) என்ற வரிகள் மலையாளப் பெண்களை இழிவுபடுத்தவில்லையா? எத்தனை படங்களில் மலையாளப் பெண்களுக்கான கேரக்டர்களில் ஷகீலாவும் மும்தாஜிம் வந்து ‘கவர்ச்சி விருந்து’ படைத்திருக்கிறார்கள்? இதற்குப் பெயர் இனவாதமில்லையா? மலையாள சினிமா எப்படி தமிழர்களையும் தமிழ்ப்பெண்களையும் இழிவாகப் பார்க்கிறதோ அதேபோல்தான் தமிழ்ச் சினிமாவும். ‘மற்றமை’ குறித்த வெறுப்புணர்ச்சியும் இனவாத அடிப்படைவாதமுமே இதற்குக் காரணம்.

அரசியல் தெளிவும் அறிவுநாணயமும் உடைய யாரும் தங்கர்பச்சான், சீமான் வகையறாக்களோடு கைகோர்த்து ஜெயராமை எதிர்க்க முடியாது. இப்படி ஒரு கேள்வியை எழுப்பிப் பார்ப்போம். ‘ஜக்குபாய் திருட்டு விசிடியாக வெளியானதை ஒட்டி நடந்த கண்டனக்கூட்டத்தில்’ கமல்ஹாசன் இப்படிப் பேசினார், "திருட்டு விசிடி மூலம் கிடைக்கும் பணம்தான் மும்பை குண்டுவெடிப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது". ஏன் ‘நாம் தமிழர்’ இயக்கம் முஸ்லீம்களை இழிவுபடுத்தியதைக் கண்டித்து கமல்ஹாசனுக்கு எதிராகப் போராடவில்லை? 'முஸ்லீம்கள் நாம் தமிழர் இல்லை' என்கிறாரா சீமான்?

இப்போது ஜெயராமின் கருத்துக்கு வருவோம். ஜெயராமின் கருத்துக்களில் நிச்சயம் இனவாதம் இருந்தது. ‘கேரளப்பெண்களின் தாராள மனசைச் சொன்ன’ தமிழ் இனவாதத்தைப் போன்றதொரு மலையாள இனவாதம்; மேலும் பெண்களைப் பாலியல் நுகர்வுப்பண்டமாய்ப் பார்க்கும் ஆணாதிக்கத் திமிர்; உழைக்கும் பெண்களை இழிவாய்க் கருதும் வர்க்கத்திமிர் - இவையெல்லாம் சேர்ந்துதான் ஜெயராமின் வார்த்தைகளாக உருமாறின. ஆனால் தமிழினவாதிகள் மற்ற இரண்டு திமிர் குறித்துப் பேசமாட்டார்கள். ஏனென்றால் அந்த திமிர் அவர்களுக்கும் சொந்தமானது. ஜெய்ராம் வேலைக்காரிகளை அவமானப்படுத்தினார் என்றால் ஹேர்டிரஸ்ஸர் என்னும் உழைக்கும் பெண்ணிற்கான பேட்டா பிரச்சினையை முன்வைத்த நடிகையை ‘விபச்சாரி’ என்றவர்தானே தங்கர்பச்சான்?

ஜெய்ராம் வீட்டின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கும் சிவசேனாவின் பாசிச நடவடிக்கைகளுக்கும் இடையேயான ஒப்புமைகள் என்ன? மராட்டியத்தில் சிவசேனாவின் வன்முறைகள் தமிழர்கள், தொழிலாளிகள், முஸ்லீம்கள் என்று தொடர்ந்து விரிந்து இப்போது மராட்டியர் அல்லாதோரான வட இந்திய கூலித் தொழிலாளர்கள் வரை வந்து நின்றிருக்கின்றது. இந்தப் பாசிசத்தின் அடிப்படை, தொடர்ச்சியாக எதிரிகளைக் கட்டமைப்பதும், அவர்களின் மீதான வன்முறையை உணர்ச்சிகரமான வெகுமக்கள் அரசியலாக்குவதும்தான். அதற்கு இடையூறான மாற்றுக்குரல்கள் தமது சொந்தப் பிரிவினரிடம் இருந்து வந்தால் கூட (உதாரணம் சச்சின் டெண்டுல்கர்) அவர்களின் மீதான வன்முறையாகக் கூட மாறக்கூடும்.

இரண்டாவதாக இந்தப் பாசிசத்திற்கு எப்போதும் கருத்தியல் பலம் இருப்பதில்லை. மாறாக உணர்ச்சிவயப்பட்ட சொல்லாடல்களும், வெறுப்பின் அரசியல் மட்டுமே இவற்றின் நடவடிக்கைகளுக்கு பலம் கூட்டும்; மார்க்சியம், பெரியாரியம் மாதிரியான எல்லாவிதக் கருத்தியல் அடிப்படைகளை நீக்கம் செய்த தூய இனவாதத்தை இந்தப் பாசிசம் ‘வெற்றிகரமாக’ முன்வைக்கும். மேலும் பாசிசம் ஒரு சில கருத்தியல் அடிப்படைகள் இருப்பதாக பாவனை செய்தபோதும் கூட, தன் வன்முறைக்கு நியாயம் சேர்க்கும் கூறுகள் தனக்கு முற்றிலும் எதிரான ஒரு தளத்தில் இருப்பதாக நம்பினால் கொஞ்சமும் வெட்கமின்றி அதை உயர்த்திப் பிடிக்கும். பால்தாக்கரே புலிகளை ஆதரித்ததையும், சீமான் பசும்பொன் முத்துராமலிங்கத்தை ஆதரித்ததையும் இங்கு ஒப்பு நோக்கலாம். மேலும் பாசிசத்தின் பிரதான கூறு ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று மனித குலப்போராட்டங்கள் இதுவரை கண்டடைந்த எல்லா வழிமுறைகளையும் புறங்கையால் நிராகரித்துவிட்டு, நேரடி வன்முறைக்கு முன்னுரிமை அளிப்பதுதான். இதுதான் ஜெய்ராம் வீட்டின் மீதும் நிகழ்ந்தது.

ஆனால் இங்கே இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இதேநாட்களில் சென்னையில் நடைபெற்ற ‘அனைத்து இந்திய வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கான மாநாட்டில்’ ஜெயராமின் கருத்துக்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டன. ஜெயராமுக்கான கண்டனமும் தெரிவிக்கப்பட்டன. நமது குரல் இந்த கண்டனங்களோடு இணையவேண்டுமே தவிர, நமது கைகள் உழைத்துச் சோர்ந்த இந்த கரங்களோடு இணைய வேண்டுமே தவிர தங்கர்பச்சான், சீமான் மாதிரியான தமிழ்ப்பாசிஸ்ட்களோடு அல்ல.
- அங்குலிமாலா

Monday, January 11, 2010

ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?

எனக்கு, ‘ஏதாவது எழுதலாமா’ என்ற உணர்ச்சி வந்தது. உடனே,‘என்ன எழுதலாம்?’ என்று யோசித்தேன். காகிதம், பேனா எடுத்து எழுத ஆரம்பித்தேன்.“ ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?” என்பது பற்றி எழுதத் தோன்றிற்று.

“ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?” என்று எழுதுகின்ற நான், ‘நான், ஏன் காங்கிரசில் சேர்ந்தேன்?’ என்பதைத் தெரிவிக்கவேண்டியது அவசியமாகும். அதற்குமுன், எனது சரித்திரத்தையும் ஒரு சிறிது எடுத்துக்காட்டுவது அவசியமாகும்.
நான் 1879-இல் பிறந்தவன். 1887 வரையில், நான் ஒரு வீட்டுக்கு குழந்தைப் பருவத்திலேயே சுவீகாரமாய், வாய்ப் பேச்சில் கொடுக்கப்பட்டு, அங்கு வளர்ந்து வந்தவன். காரணம் என்னவென்றால், என் தமையனார் பெரியவர்; அவர் காயலாக் குழந்தை; தபசு செய்து வரம் இருந்து பெற்ற பிள்ளை; அதைக் காப்பாற்ற, என்னைக் கொடுத்துவிட்டார்கள். என்னை சுவீகாரம் பெற்றவள், என் தகப்பனாருக்கு - சிறிய தகப்பனார் மனைவி; சிறிது பூமியும், ஒரு வீடும், கொஞ்சம் பணமும் உடையவள்; அன்றியும், அவள் ஒரு விதவை. அந்தஅம்மாள் என்னை வெகு செல்லமாய் வளர்த்து வந்தாள்.

நான், சிறிது ‘சுறுசுறுப்பான சுபாவமுள்ள’ சிறுவன்; அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள், சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம். ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்; மற்றொன்று, மானாவமானமில்லாமல் சங்கதிகளை கீழ்த்தரத்தில் பேசுவதில் சிரிக்க நேருவது மற்றொரு விதம். நான்அதிகமாக, வேடிக்கைக் குறும்புத்தனமாய் சங்கதி பேசுவது வழக்கம். ஆதலால், அது இரண்டாம் தரத்தைச் சேர்ந்தது. வெகு தாராளமாக, கொச்சையாக சங்கதிகளை, பச்சையாகப் பிரயோகம் செய்யும் பழக்கம் என்னிடம் உண்டு. இதை ரசிக்கிறவர்களே கூட்டமாக என் சுவீகார வீட்டில் காணப்படுவார்கள்.
சுவீகாரத் தாய் என்னை அடக்கினாலும், மற்றவர்கள், ‘சிறு குழந்தைகள், அப்படித்தான் இருக்கும்; அடிக்காதே’ என்பார்கள். நான் செல்லமாக வளர்க்கப்படுகிறேன். ஆதலால், அதிகமாக அடிக்கமாட்டார்கள். என்னைப் பார்க்க என் தகப்பனார் அடிக்கடி வீட்டிற்கு வருவார். அவரிடம் இதைச் சொல்லுவார்கள். அவருக்கு கோபமும், சிரிப்பும் வரும். ஏனென்றால், என் பேச்சு ஆபாசமாயிருந்தாலும், அதில் சிறிது அதிசயம், அர்த்தபுஷ்டி என்பதும் இருக்குமாம். அதனால், உள்ளே சிரித்துக்கொண்டே என்னைக் கண்டித்துவிட்டுப் போய்விடுவார்.

இந்த நிலையில் என்னை படிக்கப் போட்ட பள்ளிக்கூடம், ஒரு ஓலைச்சாலைக் குடிசு. 16 அடி நீளம், 8 அடிஅகலம் இருக்கும். அதில் சுமார் 50 பிள்ளைகள் படிப்பார்கள். 5 வயது முதல் 13 வயதுவரை வயதுள்ளவர்கள். வீட்டில் காலித்தனம், தெருவில்வம்பளப்பு - கலகம், பள்ளியில் சுட்டித்தனம், வளர்ப்பில் செல்லம் (செல்வம்) இவைகளால் நான் கற்றது, வாயாடித் தனம்தான் என்று சொல்வார்கள். இந்த வாயாடித்தனம், வெட்கமில்லாமல் - பயம் இல்லாமல் - செல்ல வழி கிடைத்துவிட்டால், அது எங்கு போய் நிற்கும். . . ? சொல்ல வேண்டுமா. . . ? என் தமையனார் நல்ல வளப்பம் பெற்று, உடல் நலம் அடைந்த உடன் என் தாயார் பிடிவாதத்தால், என் சுவீகாரம் ரத்தாக்கப்பட்டு, நான் தகப்பனார் வீட்டிற்கே அழைத்துக்கொள்ளப்பட்டு - அங்கு சென்றதும் இரண்டொரு வருடம் முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் படிக்க வைக்கப்பட்டு - அங்கும் வாத்தியாரால் என்னை வைத்து சமாளிக்க முடியாமல் - நாலாவது வகுப்பு ‘ப்ரைமரி பரீட்சை’ அதாவது, ஒரு ரூபாய் பணம் கட்டி, அம்மை குத்திக்கொண்டு பரீட்சை எழுதுவது, பெரிதும் சிலேட்டிலேயே, பரீட்சை எழுதிக் காட்டவேண்டும். இந்த பரீட்சை பாசானால் கணக்கு மணியம், அட்டெண்டர் முதலிய வேலைக்குப் போகலாம்.

நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்ததால் அங்கு எனக்கு செவுடிப் (தமிழ்க் கணக்கு) பாடமிருந்தாலும் முனிசிபாலிடி பள்ளியில் 4-வது பரீட்சை பாசாகி (என் பேர், செயிண்ட் ஜார்ஜ் கெஜட்டில் வந்து) விட்டதாலும், வாத்தியாருக்கு என்னைப் பள்ளியில் வைத்து சமாளிக்க முடியாமற் போனதாலும், என் தகப்பனாருக்கு, என்னை மேலும் படிக்க வைக்க முடியாமல், ‘இதுவே போதும்’ என்று கருதி எனது 10 அல்லது 11-வது வயதில் பள்ளியை நிறுத்தி, தன் மண்டிக் கடைக்கு - மூட்டைகளுக்கு விலாசம் போடவும், வண்டிச் சரக்குகளுக்கு விலை ஏலம் கூறவுமான வேலையில் போட்டுவிட்டார்கள்.

எங்கள் கடைக்கு, அந்தக் காலத்தில் “குறைந்தது தினம் 50 வண்டி சரக்குகளுக்குக் குறையாமல் 100 வண்டி வரையில் மஞ்சள், மிளகாய், தானியப்பயிர் வகைகள், எண்ணெய், கைராட்டை நூல், வெல்லம், கருப்புக்கட்டி (பனை வெல்லம்) முதலியவைகள் வரும். இந்த வண்டிகளுக்கு வண்டிக்கு இரண்டு பேருக்குக் குறையாமல் வருவார்கள். வியாபாரத்திற்கு, வாங்குவதற்கும் பலர் வருவார்கள். எனக்கு இந்த வெளியூரிலிருந்து வருகிறவர்களிடம் பேசுவதும், அவர்களுக்கு வேண்டிய சில்லரைச் சவுகரியம் செய்து கொடுப்பதும் எனது வேலையாக இருந்தது.

‘நான் மண்டி முதலாளி மகன்’ ஆகிவிட்டதால், என்னிடம் அவர்களுக்கு ஒரு பற்றுதல் ஏற்படுவது இயற்கை; ஆதலால், நேரப்போக்காகவும் இருந்ததால் அங்கும் பேச்சு வளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. இந்தப் பேச்சு வளர்ச்சியடைய, அடைய, தர்க்கவாதமும் கூடவே வளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. ‘இயற்கை வாயாடிக்கு சிறிது சட்ட ஞானமும் இருந்தால், அவன்தான் கெட்டிக்கார வக்கீல்’ என்று சொல்லப்படுவது வழக்கம். அதிலும், கொஞ்சம் பகுத்தறிவு உணர்ச்சியிருந்தால், உண்மையிலேயே கெட்டிக்காரனாவான். யோக்கியமானவனா, அயோக்கியமானவனா என்பது வேறு விஷயம்; அவன் நிச்சயமாக கெட்டிக்காரப் பேச்சாளியாவான். எனக்கு, எப்படியோ பேசுவதில் ஆசை ஏற்பட்டு, இந்தப்படி கெட்டிக்காரப் பேச்சாளியாக நான் ஆகவேண்டுமென்பதற்காக, ‘வேண்டுமென்றே’ குயுக்தி, தர்க்கம், மனதறிந்து எதிர்ப்பு பேசுவது இந்த மாதிரியாக பேச ஆரம்பித்து, பிறகு இப்படிப் பேசுவது என்பது எனக்குச் சுபாவமாக ஆகிவிட்டது.

எங்கள் கடையில் நான் இப்படிப் பேசுவது தவிர, எங்கள் வீடு அந்தக் காலத்தில் அதாவது 1890-இல் சிறிது பணக்கார வீடு என்று ஆகி இருந்ததால், வைணவ மத விஸ்வாசமுள்ள பாகவதர் வீடாகவும் இருந்ததால், கோயில், உற்சவம் முதலியவைகளில் சிறிது சிரத்தை எடுத்து செலவு செய்யும் வீடாகவும் இருந்ததால், சதா சந்நியாசிகள், மத பக்தர்கள், பாகவதர்கள், புராணீகர்கள், வித்வான்கள், சொந்தமாக வந்து பயன்பெற்றுப்போகவும், 4 நாள், 8 நாள் தங்கிப் போகவுமான வீடாகவும் ஆகிவிட்டதால், இவர்களிடமும் வம்பளத்தல், தர்க்கம் பேசுதல் ஆகிய வசதி அதிகமாகிவிட்டது. எனவே, கடையில் கிராமத்தாரிடமும், சந்தை வியாபாரிகளிடமும் பேசுவது மாத்திரமல்லாமல், வீட்டில் மத பக்தர்கள், வித்வான்களிடமும் பேசுவதுமாக நேரிட்டுவிட்டதால் பின்கண்ட இவர்களிடம் பேசுவது மத எதிர்ப்பு, சாஸ்திர எதிர்ப்பு, புராண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு என்கிற அளவுக்குப் போய்விட்டது. இதுவே, என்னை ஜாதி, மதம், கடவுள் என்கின்ற விஷயங்களில் நல்ல முடிவு ஏற்படும்படி செய்துவிட்டது.

இதன் காரணமாக எனக்குப் பார்ப்பனீயத்தில் ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. பார்ப்பனர் உயர் வாழ்வில் எனக்கொரு பொறாமையும் ஏற்பட்டுவிட்டது; என்றாலும், பார்ப்பனருடன் நெருங்கிப் பழகுவதில் சிறிதும் எனக்கு அசவுகர்யமோ, பார்ப்பனர் என்னைப்பற்றி தவறாக நினைக்கும் தன்மையோ ஏற்பட்டதில்லை என்றே சொல்வேன்.

சாதாரணமாக எனக்கு 1900 - த்திலேயே ‘பார்ப்பனர் - தமிழர்’ என்ற உணர்ச்சியுண்டு. பேசும்போது, இந்தப் பிரிவு எனக்கு அடிக்கடி ஏற்படும்; என்றாலும், நான் பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாகவே இருந்தேன். என் தகப்பனார், பார்ப்பனருக்கு ரொம்பவும் தர்மம் செய்வார்; அடிக்கடி சமாராதனை செய்வார். இது எனக்கு வருத்தமாக இருக்குமென்றாலும், பார்ப்பனர்கள் நான் பேசுவதைக் குற்றமாக எண்ணமாட்டார்கள்.

----------------

நூல்:- ”தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை” பக்கம் 1-4

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

Friday, January 08, 2010

புரட்சியின் நிறம் கறுப்பு


'சீர்திருத்தம் என்பது ஓட்டை, உடைசலை அடைக்கிற வேலை. எல்லாவற்றையுமே தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் உண்மையான புரட்சி!'- புரட்சியின் நிறம் சிவப்பு என்பதைக் கறுப்பு என்று மாற்றிக் காட்டிய கலகப் பேராசான் பெரியாரின் வார்த்தைகள் இவை. சாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, சமத்துவப் பொதுவுடமைச் சமுதாயம் ஆகியவைதான் பெரியாரின் செயல்பாட்டு அடிப்படைகள். இந்தியாவில் எத்தனையோ பேர் இந்த அநீதியான சாதி அமைப்புக்கு எதிராகப் போராடினார்கள் என்றபோதிலும், முதன்முதலாக பெயருக்குப் பின்னால் சாதி போட்டுக்கொள்ளும் பழக்கத்தை ஒழித்த பெருமிதத்தை தமிழ்நாட்டுக்கு உருவாக்கித் தந்தவர் பெரியார். இன்று திருமணப் பத்திரிகைகள் தவிர, பொதுவெளியில் சாதிப் பெயர்கள் இல்லை என்றால், அதற்குக் காரணம் பெரியார்.


சுய மரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டுக்கான அழைப்பிதழே புரட்சிகரமாக இருந்தது. 'தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபசாரிகள் என்று தங்களைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார். திருமணம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பதால், 'திருமணம் என்பதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும்' என்றார். 'தாலியும் நீண்ட கூந்தலும் பெண் அடிமைச் சின்னங்கள்' என்றவர், கிராப் வெட்டிக்கொள்கிற பெண்களுக்குப் பரிசு வழங்கு வதாகவும் அறிவித்தார்.

ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பொதுவான பெயர் இட வேண்டும். கற்பு என்பது எவ்வளவு அயோக்கியத்தனமோ அதேபோல் விபசாரம் என்பதும் அயோக்கியத்தனம் என்றெல்லாம் எழுதியதும் பேசியதும் அவருக்கே மட்டுமான தைரியம். கலகத்தின் உச்சிக்கே போனவர், 'பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரங்கள் இல்லை. அவர்களுடைய கர்ப்பப் பைகளை அகற்ற வேண்டும்' என்றார். தன் முதல் மனைவி நாகம்மாள் இறந்தபோது வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், 'நாகம்மை தான் நம்பிய ஆணாதிக்கத்துக்கு 100 சதவிகிதம் உண்மையாக இருந்தார். ஆனால், நான் பேசிய முற்போக்குக்கு அந்தளவு உண்மையாக இருந்ததில்லை' என்று தன்னை வெளிப்படையாகத் தமிழ்ச் சமூகத்தின் முன் விமர்சனத்துக்காகக் கிடத்தினார்.

சாதி, மதம், கடவுள், காதல், திருமணம், குடும்பம், குழந்தைப்பேறு, ஒழுக்கம், தேசியம், மொழிப்பற்று என இதுவரை கட்டியமைக்கப்பட்ட புனிதங்கள் அனைத்தையும் போட்டு உடைத்தார். தேசியக் கொடி, அரசியல் சட்டம், காந்தி சிலை, பிள்ளையார் சிலை, ராமன் படம் என யாரும் கைவைக்கத் தயங்குகிற புனிதங்களைக் கொளுத்தினார், செருப்பால் அடித்தார். 'நமது மொழி, சாதி காப்பாற்றும் மொழி'யாக இருக்கிறது என்று சொன்ன பெரியார், அதனாலேயே 'தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி' என்றார். 'அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல்' என கடுமையாக விமர்சித்தார்.

இறுதிக் காலத்தில் உடல்நிலை வாட்டியபோதும் மூத்திரப் பையுடன் தமிழனின் சூத்திர இழிவுபோக்க தமிழ்நாடு முழுக்கச் சுற்றிவந்தார். 'இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈ.வே.ராமசாமி என்னும் பிற்போக்குக்காரன் இருந்தான் என்று உலகம் பேசும். ஏனெனில், உலகம் அந்த அளவுக்கு முற்போக்காகச் செல்லும்' என்றார். ஆனால், அந்தக் கலகக்காரருக்கு முன்னும் பின்னும் அப்படியானதொரு நெருப்பு கிளர்ந்தெழவே இல்லை. பெரியார் ஆசைப்பட்டபடி, பெரியாரைத் தாண்டிச் செல்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்கும்!

- ரீ.சிவக்குமார்

Monday, December 07, 2009

முதல்வருக்கு கோவணாண்டி உசுப்பல் கேள்வி...


தமிழகத்தின் தன்னிகரற்ற ஒரே தலைவர், நிரந்தர அரசியல் சாணக்கியர், தமிழக முதல்வர், கலைஞரய்யாவுக்கு... மறுபடியும் வணக்கம் போடுறான், இந்த கோவணாண்டி!

'என்னடா இவன், போன தடவைதான் சுத்திச்சுத்தி அடிச்சான். மறுபடியும் நம்மளையே சுத்தறானேனு கோவப்படாதீங்க. அதுக்கான அவசியத்தை உண்டாக்கினதே நீங்கதான். எங்க கோவணாண்டிக பாஷையில சொல்றதுனா... 'வினையை விதைச்சவன் வினையை அறுக்கணும், தினையை விதைச்சவன் தினையை அறுக்கணும்'.

'எங்க பொழப்பு பொசுங்கப் போகுது, காப்பாத்துங்க... காப்பாத்துங்க'னு ஆரம்பத்துல இருந்தே கதறுனோம். அப்பயெல்லாம் கண்டுக்காம இருந்துட்டு, கடைசியில கருமாதிக்கு வந்து மவுனமா அழுகுற கதையா... 'கேரள முதல்வர் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை'னு முல்லை-பெரியாறு விஷயத்துல அற்புதமா ஒரு அறிக்கை விட்டிருக்கீங்க பாருங்க... அங்கதாங்கய்யா... நீங்க நிக்கறீங்க... அடச்சே, உக்கார்ந்திருக்கீங்க (என்ன சரியா?).


'அணையோட நீர்மட்டத்தை உயர்த்தச் சொல்லி, உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், அதை நிறைவேற்றாம... சட்டசபையைக் கூட்டி ஒரு சட்டத்தைப் போட்டிருக்கார் கேரள முதல்வர்'ங்கறதுதானே அவரோட தைரியம்னு நீங்க சொல்றது?

அவரும் ஒங்கள மாதிரி மனுஷன்தானே... ஒங்கள மாதிரி ஒரு முதல்வர்தானே... அவருக்கு மட்டும் எங்கிருந்துங்கய்யா வந்துச்சு.. அத்தனை தைரியம்? அது ஏன்... இங்க மட்டும் இல்லாம போச்சு?

இத்தனைக்கும் கூட்டணி ஆட்சிங்கற பேருல பல வருஷமா மாத்தி மாத்தி காங்கிரஸ§ம் கம்யூனிஸ்டும் ஆண்டுக்கிட்டிருக்கற மாநிலம்தான் கேரளா. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்கிற மாதிரி, ஒரு எம்.எல்.ஏ. ஸீட் இருந்தாலே அங்கெல்லாம் பெரிய ஆளு. ஒடனே அமைச்சராயிடலாம். அந்த அளவுக்கு கோஷ்டி கானம் நிறைஞ்ச ஊரு. ஆனா, ஒரு பிரச்னைனு வந்துட்டா... அதெல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு, 'எண்ட தேசம், கேரள தேசம்'னு ஒரே குரல்ல கூவ ஆரம்பிச்சுடறாங்க.

ஆனா, இங்க என்ன நிலைமை?

'இலங்கைத் தமிழனுங்களுக்காக பதவியை ராஜினாமா பண்ணுவோம்... பாம் போடுவோம்... பட்டையைக் கிளப்புவோம்...'னு சொல்லிக்கிட்டே இருந்தோமே ஒழிய... ஒரு நாளும் துணிச்சலான நடவடிக்கையில இறங்கல.

''காவிரித் தண்ணிக்காக கர்நாடகாவை ரெண்டுல ஒண்ணு பார்ப்போம்...''

''முல்லை- பெரியாறு விஷயத்துல கேரளவுக்கு மரண அடி கொடுப்போம்''

இப்படி மூலைக்கொருத்தரா கூவிக்கிட்டிருக்கீங்களே தவிர, ஒரு நாளாச்சும் இங்க இருக்கற அரசியல் கட்சிங்கள்லாம் ஏதாவது ஒரு பிரச்னையில ஒண்ணா நின்னிருக்கோம்னு நெஞ்சுல கையை வெச்சு சொல்லுங்க பார்ப்போம்.

சமீபத்துல வந்த பார்லிமென்ட் எலக்ஷனப்ப... 'தமிழ்நாடு ஒட்டுமொத்தமா தேர்தல புறக்கணிப்போம். அதன் மூலமா நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவோம். அதுக்குப் பயந்து இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாத்தும்'னு அருமையா ஒரு யோசனை வெச்சாரே 'கறுப்பு எம்.ஜி.ஆர்.' விஜயகாந்த். அதுக்கு காது கொடுத்திருந்தா... இன்னிக்கு இலங்கையில இப்படியரு ரத்த ஆறு ஓடியிருக்குமா?

ஆனா, பதவி ஆசையில ஆளாளுக்கு ஓடியாடி, கடைசியில இலங்கைத் தமிழனுங்களுக்கு சாவு மணி அடிச்சுட்டீங்க எல்லாருமா சேர்ந்து!

கிட்டத்தட்ட அதே கதைதான் இப்பவும். ஏற்கெனவே காவிரிப் பிரச்னையில எல்லாமே காலியாகிடுச்சு. இந்த முல்லை-பெரியாறு விஷயத்துலயாவது எல்லாரும் கைகோத்து நிப்பீங்னு பார்த்தா... ஆளாளுக்கு தெற்கயும் வடக்கயும் அரசியல் பண்ணிக்கிட்டு நிக்கறீங்க.

இப்படிப்பட்ட கேவலமான அரசியலையே பார்த்துப் பார்த்து வளர்ந்ததால சூடு-சொரணை, மானம்-மரியாதை இதையெல்லாம் எப்பவோமூட்டைக்கட்டி வெச்சுட்டான் தமிழ்நாட்டுக் குடிமகன். கறிக்கும்-பிரியாணிக்கும், காசுக்கும்-சரக்குக்கும் எதையும் விக்க துணிஞ்சுட்டான். ஒரு கன்னத்துல அறைஞ்சா, மறு கன்னத்தை மட்டுமில்ல... ஒடம்பு மொத்தத்தையும் காட்டிக்கிட்டு நிக்கறான்!

இவங்களையெல்லாம் இப்படி மாத்துனது யாரு? மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க. அந்தப் புண்ணியத்துல உங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கு.

முல்லை-பெரியாறு அணையை அழிக்குறதுக்கு திட்டம் போடுறாங்க மலையாளிகனு தெக்க இருக்க சனங்க, சம்சாரிக, அரசியல் கட்சிக, பொதுநல அமைப்புக அறிக்கை, ஆர்ப்பாட்டம்னு அலறுனதை மௌனமா பாத்துகிட்டிருந்தீங்க. முப்பது வருஷ போராட்டத்தை உச்ச நீதிமன்றத்தோட ஒரே உத்தரவு மறுபடியும் ஆரம்ப நிலைக்கே கொண்டு வந்தப்பவும் மௌனமாத்தான் இருந்தீங்க.

செய்றதெல்லாம் செஞ்சுட்டு, 'ஜனநாயக நாட்டுல உச்ச நீதிமன்றம்தான் பெருசு. அதோட தீர்ப்பைத் தடுத்து தடைச் சட்டம் போட்டு தண்ணிய தடுக்கறாரு அச்சுதானந்தன். நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பாக்குது. கண்டிக்க வேண்டிய உச்ச நீதிமன்றம் மௌனம் சாதிக்குது. இனி யாருகிட்ட போயி முறையிடுறதுன்னே தெரியலை'னு உடன்பிறப்புக்கு உருக்கமா கண்ணீர் வுடுறீங்க.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா..? அதைப்படிச்சுட்டு ஒங்க ஒடம்பிறப்புகளே நக்கலா சிரிச்சு, சிரிச்சு வயிறே புண்ணாப்போச்சாம்.

'கேரள அரசு புதுசா சட்டம் போட்டதைக் கண்டிக்காம, பிரச்னையை அஞ்சு நீதிபதிங்க விசாரிச்சு முடிவெடுப்பாங்க'னு சொல்லிடுச்சே உச்ச நீதிமன்றம்னு கொதிச்சு போய் சொல்லியிருக்கீங்க. ஆனா, நவம்பர் 10-ம் தேதியன்னிக்கு உச்ச நீதிமன்றத்துல இப்படியரு உத்தரவு கொடுக்குறதுக்கு முன்ன, தமிழ்நாடு அரசு சார்பா வாதாடுன வக்கீல் பராசரன்கிட்ட, 'இந்த உத்தரவுக்கு ஒப்புக்கிறீங்களா’னு நீதிபதிக கேட்டிருக்காங்க. அவரு மறுத்திருக்காரு. இடையில எங்கிருந்து உத்தரவு வந்துச்சோ தெரியல... மத்தியானம் நீதிமன்றம் கூடுனதும் 'ஒப்புக்குறோம்'னு சொல்லி, முல்லை-பெரியாறு விஷயத்துக்கு மங்களம் பாடியிருக்காங்க நம்ம ஆளுங்க. காலையில, 'ஒப்புக்க மாட்டேன்'னு சொன்னவரு, மதியம் எப்படி ஒப்புக்கிட்டாரு?

இப்ப இவ்வளவு வேதனைப்பட்டு முழம் நீளத்துக்கு அறிக்கையை விட்டுக்கிட்டிருக்கற நீங்க, அன்னிக்கே 'ஒப்புக்க முடியாது'னு சொல்லியிருக்க வேண்டியதுதானே..? அதைவிட்டுட்டு, இப்ப அழுது புலம்புறது யாரை ஏமாத்த..?

'விட்டு கொடுத்தவங்க, கெட்டுப் போறதில்லை’னு சொலவடை சொல்வாங்க. ஆனா, விட்டுக் கொடுத்ததால கெட்டுப் போன வரலாறுதான் தமிழகத்தோட வரலாறு. 1956- ல தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரா இருந்த காமராஜர் இந்திய தேசியம் பேசிகிட்டிருந்ததால தமிழ்நாட்டுல இருந்த தேவிகுளம், பீர்மேடு இதெல்லாம் நம்மை விட்டு போயிடுச்சு. இப்படி கைவிட்டு போன பகுதியில மட்டும் சின்னதும், பெருசுமா இருபதுக்கும் மேல வற்றாத ஆறுக இருக்கு. இப்ப இந்த தண்ணி முழுசும் வீணா அரபிக் கடலுக்குத்தான் போகுது.

1980-ல முதலமைச்சராயிருந்தா எம்.ஜி.ஆர்., தமிழ்நாட்டு போலீஸ்கிட்டயிருந்த முல்லை-பெரியாறு அணை பாதுகாப்பு பொறுப்பை, கேரள போலீஸ§க்கு தாரை வார்த்தாரு. இப்ப என்னாச்சு..? நம்ம இன்ஜினீயரையே அணைக்குள்ள நுழைய விடாம துரத்தியடிக்குது கேரளா.

உச்ச நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் அணையோட மட்டத்தை உயர்த்தறதுக்குண்டான வேலைகளைப் பார்க்காம, தேர்தல்ல ஜரூரா இருந்தாங்க கொடநாட்டு அம்மா. இப்ப என்னடான்னா... 'எல்லாத்துக்கும் காரணம் கருணாநிதிதான்' விடிஞ்சா, பொழுதுபோனா கூப்பாடு போடுறாங்க.

'பிறக்கும் குழந்தை இறந்து பிறந்தால், அதை வாளால் கீறி புதைக்கும் வீரம் செறிந்தது தமிழர்களின் வரலாறு’’னு சொல்லுவாங்க. அந்தத் தமிழர்களோட தலைமகன்னு சொல்லிக்கறீங்க... ஆனா, கேரளாவுக்கு இருக்குற துணிச்சல்ல கால்வாசிக்கூட இல்லாம, வாளெடுக்கறதுக்கு பதிலா தாள்ல புலம்புறீங்களே... இதுதான் தமிழனோட வீரமா..?

இப்படி எல்லா அரசியல்வாதிகளாலயும் இருக்கற ஒவ்வொண்ணையும் இழந்துகிட்டே இருக்கறதுதான் எங்களோட புதிய வரலாறு.

'வந்தாரை வாழவைக்கும் தமிழனமே... நீ சொந்த நாட்டானையே சுரண்ட ஆரம்பித்தது எப்போது'னு சினிமா வசனம் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். அப்படித்தான் இப்ப எல்லா அரசியல்வாதிகளையும் பார்த்து கதற ஆரம்பிச்சுருக்கான் அப்பாவி தமிழன். அவனோட வயித்தெரிச்சலும், விவசாயிகளோட வேதனையும் இதுக்குக் காரணமானவங்களை நிச்சயம் சும்மா விடாது. வரலாற்றுல 'கருப்புப் பக்கங்கள்'லதான் ஒங்க எல்லாரையும் குறிக்கப்போகுது காலம்.

ஆனா... 'வந்தவனும் சரியில்ல... வாய்ச்சவனும் சரியில்ல'னு சொல்ற மாதிரி எதுவுமே சரியில்லாத நாட்டுல நாதியத்த விவசாயிக... யாருகிட்ட போயி முறையிடுறதுனுதான் தெரியல.

இப்படிக்கு
கோவணாண்டி

Tuesday, September 29, 2009

பன்றி காய்ச்சல் Vs மகாவிஷ்ணு


பன்றியை இந்து புராணங்கள் - மகா விஷ்ணுவின் அவதாரம் என்று புகழ் கின்றன. ஆனால், ஒரு சக ‘இந்து’வை ‘பன்றி’ என கூறி விட்டால் அதற்காக எந்த இந்தும் மகாவிஷ்ணுவுக்கு ஒப்பிட்டதாக பெருமைப்படுவது இல்லை. திருப்பி அடித்து விடுவான். பன்றி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு பன்றி விரும்பி சாப்பிடும் “உணவை”யே படைக்கலாமா என்று கேட்டால், உடனே மதத்தைப் புண்படுத்துகிறார்கள் என்று ஓலமிடத் தொடங்கி விடுவார்கள்.





இப்போது பத்திரிகைகளில் கதா நாயகன் ஒவ்வொரு நாளும் மகாவிஷ்ணு தான்! உலகம் முழுவதும் ‘மகாவிஷ்ணு’ வைக் கண்டு நடுங்கிக் கொண்டிருக்கிறது. மகாவிஷ்ணு, காய்ச்சல் அவதாரம் எடுத்து மக்களின் உயிரோடு திருவிளையாடல் நடத்து கிறான். அதற்காக மக்கள் பகவான் வந்து விட்டார் என்று கூறி மகிழ்ச்சிக் கூத்தாட தயாராக இல்லை. ‘மகாவிஷ்ணு’ காய்ச்சலை அதாவது, பன்றி காய்ச்சலை விரட்டி அடிப்பதற்கு மருந்துகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மகாவிஷ்ணு (பன்றி) காய்ச்சல் - தொற்று நோய். இந்தத் தொற்று நோய்களையெல் லாம் தடுப்பதற்கு நமது முன்னோர்களே பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்திருந்த தாகவும், அதுதான் ‘நமஸ்தே’ என்று கும்பிடு போடும் பழக்கம் என்றும் ஒரு பார்ப்பனர் ‘இந்து’ ஏட்டில் (ஆக. 23) ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

“மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவான” இந்துவும் அதை வெளியிட்டிருக்கிறது. ஒருவருக் கொருவர் கை குலுக்காமல், கும்பிடு போடும் பார்ப்பன கலாச்சாரம் ‘தீண்டாமை’யின் மறுவடிவம்தான். நாட்டில் தொற்று நோய்கள் பரவா திருக்க ‘தீண்டாமை’யைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவதன் மூலம் ‘தீண்டாமை nக்ஷமகரமானது’ என்று சங்கராச்சாரி கூறுவதை நியாயப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். எப்போதோ வந்து போகும் தொற்று நோய்களுக்காக சமூகம் ஒருவரையொருவர் ‘தீண்டாமல்’ வாழ்வதே சிறந்த தத்துவம் என்று கூறி, இந்து பார்ப்பனியத்தை நியாயப்படுத் தும் எல்லைக்குப் போய் விடுகிறார்கள்.

எங்கேயாவது விமான விபத்துகள் நடந்தால் கூட அதற்காகத்தான் ‘கடல் தாண்டக் கூடாது’ என்று, ‘இந்து தர்மம்’ ஏற்கனவே கூறியிருக்கிறது என்று இவர்கள் கூறினாலும், வியப்பதற்கு இல்லை. தகாத உறவுகளால் ‘எய்ட்ஸ்’ பரவுகிறது என்பதால்தான் நமது முனிவர்கள் இல்லறத்தையே வெறுத்தார்கள் என்று கூறி, இனி, திருமண மில்லாத வாழ்க்கையே சிறந்தது என்று இவர்கள் கூறுவார்களா, என்று எவரும் கேட்டுவிடக் கூடாது. ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளாமல் தூர நின்று, ‘கும்பிடு போட்ட’ காலங்களில் பிளேக் நோயும் காலராவும் பரவி, ஊர் ஊராக பிணங்கள் விழுந்தனவே. அதற்கு என்ன காரணமாம்! இத்தகைய அபத்தங் களை கட்டுரையாக வெளியிடும் மவுண்ட் ரோடு ஆங்கில “பன்றி”கள் (அதாவது மகாவிஷ்ணுவின் மாற்றுப் பெயர் என்று அறிக!) ‘தீண்டாமை’யை நியாயப்படுத்துகின்றனவா? இதற்காக ‘தீண்டாமை’ தடுப்புச் சட்டத்தின் கீழ் எவராவது இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதற்கு நாம் பொறுப்பு அல்ல. தன்மானமுள்ளவர்கள் நாட்டில் இல்லாமலா போய் விடுவார்கள்?