Tuesday, July 04, 2006

கற்பை விற்று கண்ணகிக்குக் கோயில்

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறத் துடிக்கிறது. நம்முடைய ஜனநாயக ராஜாக்கள், இந்தியாவை ஏலக் கடையாக்கி இருக்கிறார்கள்.
பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி _ என்.எல்.சி.யின் பத்து சதவிகிதப் பங்குகளை விற்கப் போகிறார்களாம். அதேபோல், ஒரிசாவில் செயல்படும் தேசிய அலுமினிய ஆலையின் (நால்கோ) பத்து சதவிகிதப் பங்குகளை விற்கப் போகிறார்களாம். ஏலத்திற்கு முதல் மணி அடித்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு நிறுவனங்களுமே லாபத்தில் நடைபெறும் பொதுத்துறை நிறுவனங்கள். சென்ற ஆண்டு மட்டும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 704 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. நாட்டின் உயிர் நாடியான மின்சாரத்தையும் உற்பத்தி செய்து தருகிறது. அதேபோல், நால்கோ நல்ல லாபத்தில் நடைபெறுகிறது.
நெய்வேலி என்.எல்.சி.யில் மொத்தம் 31 ஆயிரம் பேர் பணி செய்கின்றனர். இவர்களில் 19 ஆயிரம் பேர் நிரந்தர ஊழியர்கள். இரு பிரிவுகளாகச் செயல்படும் நால்கோவில், ஏறத்தாழ எட்டாயிரம் பேர் பணி செய்கிறார்கள்.
‘எங்களால் பணி செய்ய முடியவில்லை. எனவே, இந்த ஆலைகளைத் தனியாருக்கு விற்று விடுங்கள்’ என்று, இந்த ஆலைத் தொழிலாளர்கள் கோரவில்லை. இந்த ஆலைகள் நட்டத்திலும் முழிக்கவில்லை.
புதிய ஆலயங்களான பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்காக, இவர்களை மக்கள் ஆட்சிக்கு அனுப்பவில்லை.
‘லாபத்தில் நடைபெறும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கமாட்டோம்’ என்ற கோட்பாட்டை ஏற்றுத்தான், இவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். அந்த அம்சமும் அடங்கிய குறைந்த பட்சத் திட்டத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டதால்தான், இடதுசாரிக் கட்சிகள் இவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றன.
எவருமே ஏற்றுக்கொள்ளாத போது, இவர்கள் எதற்காக பொதுத்துறை நிறுவனங்களைத் தவணையில் விற்கத் தவிக்கிறார்கள்?
நெய்வேலி என்.எல்.சி.யின் 51 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க, வாஜ்பாய் அரசு முன் வந்தது. இன்றைக்கு தி.மு.க. கூட்டணியில் இருக்கும் அத்தனை கட்சிகளும் அதனை எதிர்த்துப் போராடின. ஏன்? காங்கிரஸ் கட்சியும் குரல் கொடுத்தது. ஒரு கடுதாசி எழுதி மத்திய அரசிற்கு எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு, இந்தக் கட்சிகள் ஓய்ந்து விடவில்லை. அதனையே சாதனையாகச் சந்தனம் பூசிக்கொள்ளவில்லை.
தமிழகத்தின் மனஉணர்வுகளுக்கு மதிப்பளித்து, நெய்வேலி என்.எல்.சி.யைக் கூறுபோட்டு விற்கும் திட்டத்தை வாஜ்பாய் கைவிட்டார்.
ஆனால், அப்படி அவரை விற்கும்படி நிர்ப்பந்தித்தது யார்? ‘விரைவில் விற்றுத் தொலை’ என்று இன்றைக்கு மன்மோகன் சிங் அரசிற்குக் கட்டளை பிறப்பிப்பது யார்? என்றைக்கு மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி ஏற்றாரோ அப்போதே, ‘நெய்வேலி என்.எல்.சி.யை விற்று விடு’ என்று அவருக்கு மட்டுமல்ல, நிதி அமைச்சரையும் நிர்ப்பந்தித்தனர். ஐக்கிய முன்னணி அரசு அதனை ஏற்றுக் கொண்டது.
இங்கே அரசியல் நீரோட்டத்தை நிதானமாகப் பார்க்க வேண்டும். வாஜ்பாய் அரசு, என்ன கொள்கை கோட்பாடுகளைச் செயல்படுத்தியதோ, அதனை அப்படியே மன்மோகன் சிங் அரசு செயல்படுத்துகிறது. ஒரே வேறுபாடு என்னவெனில், மன்மோகன்சிங் அரசு மதச் சார்பற்ற அரசு. அதனால்தான் அவர் பிரதமராக இருக்கிறார்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனப் பொன் விழாவிற்கு, பிரதமர் மன்மோகன் சிங் வந்தார். ‘நெய்வேலி என்.எல்.சி. நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்காதீர்கள்’ என்ற கோரிக்கை எழுந்தது.
அன்றே சேலத்தில் நடந்த நெடுஞ்சாலைத் திட்ட விழாவிலும், மன்மோகன் சிங் கலந்துகொண்டார். ‘நெய்வேலி என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்கவேண்டாம் என்று, நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் சொல்லியிருக்கிறேன்’ என்று அந்த விழாவில் அவர் குறிப்பிட்டார்.
இப்போது மீண்டும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் விற்பனைக்கு என்று அறிவித்திருக்கிறார்கள். அதன் சூத்திரதாரி நிதி அமைச்சர் சிதம்பரம்தானா? அப்படி நாம் வரையறை செய்யமாட்டோம்.
‘பொதுத் துறை நிறுவனங்களை இழுத்து மூடு. தனியாருக்கு விற்பனை செய்’ என்று, அன்றைக்கு வாஜ்பாய்க்கு உத்தரவு போட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள்தான், இன்றைக்கு சட்டாம்பிள்ளைத்தனம் செய்கின்றன. அதனை அன்றைக்கு வாஜ்பாய் ஏற்க மறுத்தார். மன்மோகன் சிங் _ சிதம்பரம் _ அலுவாலியா கூட்டணி அதனை ஏற்க முன்வந்திருக்கிறது. இதுதான் உண்மை.
‘தனியார் மயம், தாராள மயம் என்ற கோட்பாட்டை என்றைக்கு ஏற்றுக் கொண்டாயோ, அன்றைக்கே உனக்குச் சுதந்திரமாகச் சுவாசிக்க உரிமை இல்லை’ என்று உலக வங்கிகள் வாதாடுகின்றன. ஏமாந்தால் அந்த வங்கிகள், இந்தியாவின் இதயத்தையே ஏலம் கேட்கும்.
அமெரிக்காவின் ஆளுகையில் உள்ள எல்லா சர்வதேச நிதி நிறுவனங்களும் தங்கப் பலி பீடம்தான். அதில் வாஜ்பாயும் தலைகொடுத்தார். தப்பித்தார். மன்மோகன் சிங்கும் தலை கொடுக்கிறார். ஆனால், அதனை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அந்த முரண்பாட்டு முனையில்தான், மன்மோகன் சிங் அரசு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
லாபம் கொழிக்கும் நெய்வேலி என்.எல்.சி.யையும், நால்கோவையும் விற்று, நலிந்த ஆலைகளை உயிர்ப்பிக்கப் போகிறோம் என்று காரணம் சொல்கிறார்கள். அதாவது, கற்பை விற்று கண்ணகிக்குக் கோயில் கட்டப்போகிறோம் என்கிறார்கள்.
இந்தியத் தொழிலதிபர்களும் செல்வந்தர்களும் வங்கிகளை ஏமாற்றி இன்னும் கட்டாமல் இருக்கின்ற தொகை, ஒரு லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் என்று ஒரு கணக்குச் சொல்கிறார்கள். அந்தப் பக்கத்தை லேசாகக் குண்டூசியால் குத்தினால் போதும். நலிந்த நிறுவனங்களை நிமிர வைக்க, தேவைக்கு அதிகமாகவே வரவு வரும். அதனை விடுத்து மூலதனத்தை விற்று பொரி கடலைக் கடை வைக்க முயற்சிக்கிறார்கள்.
இது தனியார் மயக் கொள்கையைப் பின் வாசல் வழியாகக் கொண்டு வருவதற்கான தந்திரமாகும். அர்ஜென்டைனா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகள், அமெரிக்க உலக வங்கியின் நிர்ப்பந்தத்திற்கு அடி பணிந்து, பொதுத்துறை நிறுவனங்களைப் படிப்படியாக விற்பனை செய்தன. இன்றைக்கு மீள முடியாத கடனில் தத்தளிக்கின்றன.
முன்னர் திருச்சி பாரத் மிகு மின்கலத் தொழிற்சாலையின் (பெல்) பத்து சதவிகிதப் பங்குகளை விற்க முன் வந்தனர். தமிழகத்தின் ஒன்றுபட்ட எதிர்ப்பு, அவர்களுடைய முயற்சியைத் தகர்த்தது.
அதேபோல், இப்போது நெய்வேலி அனலோடும் நால்கோ கனலோடும் விளையாட, மன்மோகன் சிங் அரசு முயற்சிக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு நெருக்கடி என்றால், மன்மோகன் சிங் அரசிற்கு நெருக்கடி என்று அர்த்தம்.
இடதுசாரி சக்திகளின் எச்சரிக்கை, அதற்கு அபாய அறிவிப்புச் செய்திருக்கிறது.
கலைஞரின் அறிவிப்பு அதற்குக் கட்டியங் கூறியிருக்கிறது.
சோலை

10 comments:

பாலசந்தர் கணேசன். said...

மிக குறைந்த அளவில் பங்குகளை விற்பது தவறில்லை. ஆனால் இவர்கள் படிபடியாக தனியார் மயமாக்கி விடுவார்கள். தனியார் மயமாதல் தவறில்லை. ஆனால் நமது நாட்டில் ஊழல் மிக அதிகமாக உள்ளதால், இலாபம் மட்டுமே கணக்காக கொண்டுள்ள தனியார் மயமாதலை அச்சத்தோடுதான் பார்க்க வேண்டி உள்ளது.

Unknown said...

மிகக் குறைந்த அளவில் பங்குகளை விற்ப்பது அரசின் சுமைகளை குறைக்க உதவலாம் ஆனால் ஒரு லாபமீட்டும் நிறுவணத்தை தனியாருக்கு தாரைவார்க்க வேண்டிய கட்டாயம் எதுவும் இப்போதில்லையே?

குழலி / Kuzhali said...

//மிகக் குறைந்த அளவில் பங்குகளை விற்ப்பது அரசின் சுமைகளை குறைக்க உதவலாம் ஆனால் ஒரு லாபமீட்டும் நிறுவணத்தை தனியாருக்கு தாரைவார்க்க வேண்டிய கட்டாயம் எதுவும் இப்போதில்லையே?
//
SPIC நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் முத்தையா வசம் சென்றது நினைவுக்கு வருகின்றது

Unknown said...

ஆம் தனியார் வசம் ஸ்பிக் போனபிறகு அது என்னவெல்லாம் ஆனது என்பதும் உலகறிந்ததே. அரசு பொதுத்துறை நிருவணமாக இருக்கும் போதிலேயே ஊழல்கள் தலைவிரிக்கும் என்பது உண்மை அதைவிட அது தனியாருக்கு போனால் அரசியல் தலைகள் அதிலும் ஒரு லாபி உருவாக்கி அதிகார மட்டத்தில் உயர வழிதேடுவார்கள்

நன்றி குழலி (கொஞ்ச நாளா சரியாக எழுதுவதில்லை)

Unknown said...

//லாபத்தில் நடைபெறும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கமாட்டோம்’ என்ற கோட்பாட்டை ஏற்றுத்தான், இவர்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்.//

எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய உள்ளூர் கட்சிகள் மத்தியில் தன் பங்குக்கு கிடைக்கும் ரொட்டித்துண்டுக்காக அமைதியாய் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க விடுங்கள் அவர்கள் மத்திய அரசு சேதுசமுத்திரம் போட்டாலும் எதிர்ப்பார்கள் கருணாநிதி கண்ணகிக்கு சிலை வைத்தாலும் எதிர்ப்பார்கள்.

தமிழன் நலம் காக்கும் தி.மு.க, பா.ம.க,ம.தி.மு.க ,கம்யூனிஸ்ட் அப்புறம் இந்த விஜயகாந்த் எல்லாரும் ஒரு ஆக்ரோச போராட்டம் அல்லாவா நடத்தி இருக்க வேண்டும்.

மக்களுக்கு சுயமாகப் போராடத் தெரியாது. அரசியல் கட்சிகள் அவர்களின் கூட்டணி இலாபத்தை கணக்கில் வைத்தே எதுக்குப் போராடலாம் என்று தீர்மானிப்பார்கள்..

இதுவே சுமங்கலியின் கேபிள் விசயமாக இருந்திருந்தால் கலைஞர் என்ன செய்வார் என்று அனைவருக்கும் தெரியும்..

இந்த வை.கோ வாவது தனது எம்.பி களைக் கொண்டு ஒரு ஆதரவு வாபஸ் போராட்டம் நடத்தலாம்.ஆட்சியில்தான் பங்கு இல்லையே ?

தமிழனுக்கு எவரும் உதவப் போவது இல்லை.

Unknown said...

இது தமிழனுக்கு மட்டுமேயான விவகாரமில்லை மொத்த இந்தியாவும் அதனால் பயன்பெறுகிறதே. ஆனால் எவரும் எதிர்ப்பை தெரிவிப்பதாக தெரிவதில்லை. ஆலோசனைகளை மட்டும் சொல்கிறார்கள் ஆலோசனை செய்வதும் தறுவதும் தவறில்லை. ஆனால் அவை விற்பனையை தடுக்குமா? இப்போது விற்பனை செய்வதை தடுப்பது எப்படி என்பதற்கு தான் அலோசனைகள் தேவை.

Unknown said...

//இது தமிழனுக்கு மட்டுமேயான விவகாரமில்லை மொத்த இந்தியாவும் அதனால் பயன்பெறுகிறதே. //

அனைவரும் பயன் பெறுவது உண்மை. இருந்தாலும் வேலை வாய்ப்பு ,நம் பகுதியில் உள்ள பொதுத் தொழிற்சாலை என்ற எண்ணத்தில் சொன்னேன்.

//இப்போது விற்பனை செய்வதை தடுப்பது எப்படி என்பதற்கு தான் அலோசனைகள் தேவை.//

உடன்படுகிறேன்.போராட வேண்டும்.

Unknown said...

போராடலாம் ஆனால் சிண்டு மத்திய அரசின் கையில் இருப்பதால் போராடினாலும் அவர்கள் வழிக்கு வந்தாலே காரியம் கைகூடும். வழக்குகள் மேலும் சிக்கலை உருவாக்கும் முடிவை தராது பார்ப்போம் என்ன செய்கிறார்கள் நம் ஏவலர்கள் என்று

பாலசந்தர் கணேசன். said...

ஆமாம் குழலி அவர்களே, இவர்கள் படிப்படையாக(10 இல் ஆரம்பித்தாலும்) தனியாருக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து விடுவார்கள். என்னுடைய கருத்துக்கு உங்கள் உதாரணம் பலம் சேர்க்கின்றது.

Unknown said...

படிப்படியாகவோ அல்லது ஒரேமுறையிலோ பங்குகளை விற்ப்பதன் மூலம் (அதாவது பத்து சதவிகித பங்குகளை சுமார் நூறு கோடிக்கு விற்றுவிடுவதென்பது தற்போதைய முடிவு) பத்தை இருபதாக்கு இருபதை முப்பதாக்கு இன்னும் கொஞ்சம் அசந்தால் நூறையும் தாரைவார் இருக்கவே இருக்கு பண முதலையின் பலிபீடம். இதுதான் தற்காலங்களில் ஆளும் அரசுகளின் மனோபாவமாக இருக்கிறது அது காங்கிரசோ பிஜெபி யோ எல்லோரும் ஒரு குட்டையில் ஊரிய மட்டைகள்