Sunday, June 26, 2011

அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம்

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக்குறைய இரண்டு மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு அடக்கப்பட்டு, தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும்.

தி.மு.க. தோன்றுவதற்கான வரலாறு

அது தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் திராவிடர் என்ற சொல் சூத்திரர் என்ற சொல்லுக்குப் பிரதிச் சொல்லாகக் கருதப்படும் சொல்லாக இருப்பதாய்க் கருதப்பட்டு வந்ததால், அப்பெயரைக் கழகத்திற்கு வைக்க ஆந்திரர்கள் ஆட்சேபித்ததால் அக்கழகத்திற்கு தென் இந்தியர் விடுதலைக் கழகம் என்பதாகப் பெயரிட்டுத் (South Indian Liberal Federation) துவக்கினார்கள்.

என்றாலும், துவக்க காலத்தில் ஜமீன்தார்கள், செல்வவான்கள், படித்த கூட்டத்தினர் ஆகியவர்களே முன்னின்று முக்கியமானவர்களாக இருந்து துவக்கப்பட்டதால் இம்மூன்று குழுவினர்களின் நலனே அதற்கு முக்கியக் கொள்கையாக இருக்கவேண்டி வந்தது. ஆட்சியையும், பதவியையும் கைப்பற்றுவதிலேயே அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய தாயிற்று.

ஆரம்பத்திலேயே பார்ப்பனர்களின் தொல்லை

இந்த முயற்சி பார்ப்பானுக்குப் பெருங்கேடாய் முடியக்கூடியதாயிருந்ததால் இம்முயற்சிக்குப் பார்ப்பனர்கள் கூண்டோடு எதிரிகளாய் இருந்து இந்த ஸ்தாபனம் வெற்றிகரமாய்த் தொண்டாற்ற முடியாமல் தொல்லைக்குள்ளாக் கப்பட்டு தக்கபலன் ஏற்படச் செய்யாமல் தடுக்கப்பட்டு வந்தது.

என்றாலும், இந்த ஸ்தாபனம் ஏற்பட்டதன் பயனாய் பார்ப்பனர் வேறு நாம் வேறு என்பதையும், பார்ப்பனர் தென்னிந்தியர்களுக்கு, திராவிடர்களுக்கு அரசியல், சமுதாய நல்வாழ்வுத் துறைக்கு பரம்பரை எதிரிகளும், தடங்கல்களுமாவார்கள் என்பதையும் திராவிட மக்கள் ஒவ்வொருவருக்கும் விளங்கும்படிச் செய்துவிட்டது.

திராவிடர்களின் நிலை

ஆனால் திராவிடர்கள் பாமரர்களாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும், 100க்கு 100 பேரும் இருந்து வந்ததால் தாங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணரமுடியாமல் இருக்கும்படி ஆரியர்களின் கடவுள், மதம் சாஸ்திரம் பாரத ராமாயணப் பற்று, முதலியவைகள் செய்துவிட்டபடியால் வெறும் பதவி உத்தியோகம், தனிப்பெருமை ஆகியவற்றி லேயே பற்றுக்கொண்டு சமுதாய வளர்ச்சியை முக்கியமாய்க் கருதாமல் போய்விட்டது.

அண்ணாவின் தலைமை

பிறகு அந்த ஸ்தாபனம் அரசியலில் பெருந்தோல்வியுற்றதன் பயனாய் சமுதாயத் தொண்டுக்கு என்றே துவக்கி நல்ல நிலையில் நடந்துவந்த சுயமரியாதை இயக்கத்துடன் அந்த ஸ்தாபனம் இணையும்படியான நிலைக்கு வந்ததன் பயனாய் தென்னிந்தியர் விடுதலை ஸ்தாபனம் என்கின்ற பெயர் மாற்றமடைந்து திராவிடர் கழகம் என்கின்ற பெயருடன் நடந்து வந்தது. இதில் பிளவு ஏற்பட்டதன் காரணமாய் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரால் மேற்சொன்ன தென்இந்தியர் விடுதலை ஸ்தாபனம் (ஜஸ்டிஸ் கட்சி) அண்ணாவின் தலைமையில் சுமார் 18 ஆண்டு பொறுத்து தமிழ்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றி சமுதாயத்தின் முன்னேற்றத் தொண்டையே முக்கியமாய்க் கொண்டு இன்று தமிழர்களுக்கு ஆரியர் - பார்ப்பனர் அல்லாத தமிழர் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வருகிறது.

தி.மு.கழகத்தின் அரும்பெரும் சிறப்பு

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவிலேயே பார்ப்பனர் தவிர்த்த மற்ற திராவிடர் சமுதாயத்திற்கு, சிறப்பாக சமூகத் துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும்படியான நிலையில் இருந்து வருகிறது.

இதன் தொண்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், முதலில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இரண்டாவது, அரசியல் பதவிகளில் எல்லாவற்றிலும் தமிழர்கள் (விகிதாசாரம் பெறாவிட்டாலும்) அமரும் நிலை ஏற்பட்டது.

மூன்றாவதாக, கல்வித்துறையில் கல்வி பெற்ற மக்கள் எண்ணிக்கை உயர்ந்தது.

நாலாவது, இன்றைய ஆட்சி தனித்தமிழர் - திராவிடர் ஆட்சி என்று சொல்லும்படி இருப்பது.

அய்ந்தாவது பார்ப்பனன் என்றால் நமக்கு, தமிழனுக்கு சமமான பிறவியே அல்லாமல் எந்த விதத்திலும் உயர்ந்த பிறவி அல்ல என்பதை தமிழனின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் விளங்கி இருப்பது முதலியவைகளாகும்.

அடிப்படைக் கொள்கையில் வெற்றி

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகத்தைப் போலவே சமுதாயத்துறையில், அதன் அடிப்படைக் கொள்கையில் வெற்றிப்பாதையில் மாபெரும் வெற்றிப் பாதையில் செல்லுகிறது என்று சொல்லத்தக்க வண்ணம் இருந்து வருகிறது.

ஆகவே, திராவிடர் கழகமோ, திராவிடர் முன்னேற்றக் கழகமோ தனது இலட்சியத்தை - கொள்கையைச் சிறிதும் குற்றம் குறையின்றி வெற்றி வழியில் பின்பற்றித் தொண்டாற்றி வருகிறது.

இதை உலகிற்கு ஒரு புதுமை என்றுதான் சொல்லவேண்டும்.

உலகில், குறிப்பாக இந்தியாவில் - சமுதாயத் துறையில் இதுபோல் தொண்டாற்றிய - தொண்டாற்றும் வெற்றி ஸ்தாபனம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும்.

குறிப்பாக இந்த ஸ்தாபனத்தின் தொண்டால் தமிழர்கள் பார்ப்பனர்களை அடையாளம் கண்டுகொண்டார்கள் என்றும் சொல்லலாம்.

------------------------ தந்தை பெரியார் - "விடுதலை" - 11.03.1971

Saturday, June 18, 2011

அதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி

இந்தியா முழுவதிலும் 2011இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன்முடிவின் முதல் கட்டமாக மொத்த மக்கள் தொகை 120 கோடிக்கும் அதிகம் என அரசினால் அறிவிக்கப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பின்போதே உள்சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் சங்கங்களும், அரசியல் கட்சிகளும், மேல்சாதியினரும் கோரினர். அதை ஏற்கெனவே செய்திருந்தால், மீண்டும் ஆயிரக்கணக்கான கோடி உருபாவைச் செலவு செய்து, இரட்டிப்பு வேலையை மேற்கொள்ள வேண்டிய பணிச்சுமை ஏற்பட்டிருக்காது. ஆட்சியிலிருப்பவர்களில் மேல்சாதியினர் - பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினரின் உயர்கல்வி முன்னேற்ற அளவு, அரசுப் பணிகளில் பெற்ற பங்கின் அளவு இவற்றைத் தெளிவாக அறிந்திடவும். அவர்களுக்குச் சரியான பங்கு கிடைக்கவில்லை என்று அறிந்தால் - அதை அடைய அவர்கள் போராடுவார்கள் என்பதையும் கருதியே - முதல் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கை எடுக்க முடியாது என்று மறுத்தனர்.

இப்போது, 19.05.2011இல் கூடிய இந்திய அமைச்சரவை - சாதி, மதம், ஏழ்மை யை அளக்கும் அளவுகோல் இவற்றைப் பற்றிய விவரங்களை அறிவதற்கு, 2011 சூன் முதல் திசம்பர் முடிவுக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்புச் செய்ய முடிவெடுத்து அறிவித்துள்ளது.

அதன்படி கணக்குப் பதிவு செய்கிற பொறுப்பை மாநில அரசுகள் ஏற்றுச் செய்ய வேண்டும் என்றும்; அவர்கள் ஊராட்சிப் பணியில் உள்ளவர்கள், கணக்குப் (கர்ணம்) பிள்ளைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கு அமர்த்தப்படுவோர் ஆகி யோரைக் கொண்டு வீடுதோறும் கணக்கு எடுக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருக் கிறார்கள்.

கணக்கெடுப்பில் எதை எதைப் பற்றி அறிய முயற்சிப்பார்கள்?

1. மண்சுவர்களை வைத்து வைக்கோல் கூரைபோட்ட வீடுகளில் குடியிருப்போர்;

2. 16 வயதுக்கு மேல் 59 வயது வரை உள்ள சம்பாதிக்கும் வயதினர் இல்லாத குடும்பங்கள்;

3. வயதுவந்த ஆண் இல்லாத - பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பங்கள்;

4. ஊனமுற்றவரைக் கொண்ட குடும்பங்கள்;

5. வயதுவந்த - சம்பாதிக்கத் தகுந்த உடல்நலத்தோடு உள்ள குடும்பங்கள்;

6. 25 வயதுக்கு மேற்பட்ட - படிப்பறிவு அற்றவர்களைக் கொண்ட பட்டியல் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள்; மற்றும்

7. சொந்த நிலம் இல்லாத - அற்றைக் கூலிக்கு உடலுழைப்பு வேலை செய்வோர் குடும்பங்கள் என்பவைதான் இப்போது ஏழ்மையை அளப்பதற்கான அளவுகோல் களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள எழுத்தறிவு இல்லாதவர், உயர் கல்வி பெற்றவர்-பெறாதவர், அரசு அல்லது தனியார் துறையில் உத்தரவாதமுள்ள வேலை பெற்ற ஆண்-பெண் விவரம், அவரவர்களின் உள்சாதி கல்வியிலும் அரசு வேலையிலும்; ஆட்சி மன்றங்களிலும், சட்ட அவை களிலும் பெற்றுள்ள இடப்பங்கின் அளவு ஆகியவற்றை அறிய முடியாது; முடியாது. அவற்றையெல்லாம் அறியவும் பதிவு செய்யவும் கூடாது என்பதுதான், இந்திய உயர்சாதி ஆளும் வகுப்பினரின் நோக்கம். ஏனென்றால், அரசே அப்புள்ளி விவரங்களைத் தந்து விட்டால், அவையே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கையில் கிடைத்த போராட்டக் கருவிகளாக ஆகிவிடும். அக்கருவிகளைக் கொண்டு அவர்கள் போராடினால், எந்த முகத்தைக் காட்டி இந்திய அரசோ, மாநில அரசுகளோ ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைப் புறக் கணிக்க முடியும்? முடியாது. எனவே தான், இந்த “ஏழ்மையை அளந்தறியும்” கணக்கெடுப்பு ஊர்ப்புற அளவில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது நகர்ப்புறத்திலும் “ஏழ்மைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின்” கணக்கை எடுப்பது மட்டும்தான் முதல் தடவையாக மேற்கொள்ளப்படுகிறது.

உள்சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு என்பது - 1931க்குப் பிறகு முதன்முதலாக இப்போதுதான் எடுக்கப் படுகிறது. அது ஏன் 1951இல் எடுக்கப்படவில்லை? அதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி அடங்கி யிருக்கிறது.

என்ன சூழ்ச்சி அது?

1941 போர்க்காலம். எனவே சரிவரக் கணக்கு எடுக்கப் படவில்லை.

1941 வரையில் இந்திய அரசும், மாகாண அரசுகளும் “பதிவு பெற்ற அரசு அலுவலர்களின் காலாண்டுப் பட்டியல்” என ஒன்றைக் காலாண்டுதோறும் வெளியிட்டனர். அதில் அலுவலரின் பெயர், படிப்பு, பதவியின் பெயர், வயது இவற்றுடன் கூட, அவரவர் உள்சாதியின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது.

1920 வரையில், “பிராமணன்”, “சூத்திரன்” என்ற இரண்டு வகுப்புப் பிரிவுகளையும் அத்தகைய பட்டியலில் அச்சிட்டனர்; அத் துடன் அந்தந்த வகுப்பில் உள்ள உள் சாதியையும் அச்சிட்டனர். அதைப் பார்த்தவுடன் பார்ப்பனரும், மேல்சாதிக்காரரும்மட்டுமே - எழுத்தர் பதவிக்கு மேல் உள்ள எல்லாப் பதவிகளிலும் பெரிய எண்ணிக்கையில் இருப்பதை உணர முடிந்தது. இத்தகைய பட்டியலை 1950 வரையில் நான் பார்த்தேன்.

இந்த மேல்சாதி ஆதிக்கம் தெரியாமல் இருக்க வேண்டித்தான், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 1951 முதல் உள்சாதியைப் பதிவு செய்வதைக் கைவிட்டார்கள், இந்திய ஆட்சியில் ஆதிக்கம் செய்த பார்ப்பனர்கள். இதுவே உண்மை.

இப்போது, ஊரகப்புறங்களில் -

1. தொலைபேசி இணைப்பு வைத்திருக்கிற - குளிரூட்டிப் பெட்டி வைத்திருக்கிற - (வேளாண் செய்பவர்) ரூபா 50 ஆயிரம் பணம் வைத்திருக் கிறவர் ஒரு பிரிவாகவும்;

2. திக்கற்றவர்கள், தோட்டி வேலை செய்வோர், ஒரு பிரிவாகவும்; ஆதிப்பழங்குடிகள் ஒரு பிரிவாகவும் கொள்ளப்பட்டு, இவர்களில் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் கணக்கு எடுக்கப்படும்.

மற்றும் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட ஏழு அளவு கோல்களைக் கொண்டு ஏழ்மையின் அளவு அறியப் படும்.

வரப்போகும் 12ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் (1912-1913 முதல் 2016-2017) இப்புள்ளி விவரங்களைப் பயன்படுத்தித் தீட்டப்படும்.

ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே இருப்போர் அளவு 46 விழுக்காட்டுக்குமேல் இருக்கக்கூடாது என்று ஓர் உச்ச அளவை அரசே வைத்துக் கொண்டது. இது 50 விழுக்காடு வரை இருக்கலாம் என்று சேக்சானா குழு கூறுகிறது.

‘விளக்கெண்ணெய் செலவானது தான் மிச்சம் - பிள்ளை பிழைத்தபாடு இல்லை’ என்கிற பழமொழிக்கு ஒப்ப, 80 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 சூன் முதல் எடுக்கப்படப் போகும் உள்சாதிவாரிக் கணக்கு, இந்திய மேல்சாதி ஆளும் வகுப்பினர் - ஒடுக்கப்பட்ட வகுப்பி னரின் வாயில் மண்ணைத் திணிப்பதற்கே பயன் படும்.

ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சாதி வேறுபாடு - கட்சி வேறுபாடு பாராமல் இந்திய அரசின் மோசடியான, பாதி கிணறு தாண்டும் சூதைப் புரிந்து கொள்ளுங்கள்.

- வே.ஆனைமுத்து--சிந்தனையாளன்

Saturday, June 11, 2011

ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு,

மாணவர்களுக்குப் படிப்பும் பரீட்சையும் முடிந்து கோடை கால விடுமுறை கிடைத்திருக்கிறது. இவ் விடுமுறையில் திராவிட மாணவர்கள் மகத்தான இன எழுச்சி சேவை செய்ய வேண்டியிருக்கிறது. படிக்கும் வேளையில் அரசியல் விவகாரங்களில் தலையிட்டு, தீவிரமாகக் கலந்து தொண்டாற்றுவதென்பது மாணவர்களின் உடனடியான லட்சியமாகிய தேர்வு என்பதைப் பாதிக்குமாதலால், கல்லூரியிலுள்ள காலத்தில் நம் மாணவர்கள் படிப்பிலேயே கவனமாயிருந்து வந்தனர். அவ்வப்போது ஓய்வு கிடைத்த சமயங்களில் சமுதாய வளர்ச்சிக்கான சிறுசிறு சேவைகளை மட்டுமே சிலர் செய்துவந்தனர்.

இப்போது பல மாணவர்களுக்கு மூன்று மாத ஓய்வும், பலருக்கு இரண்டு மாத ஓய்வும் கிடைத்திருக்கிறது. இந்த ஒய்வை நமது திராவிட சமுதாயத்தின் உரிமைப் போராட்டக் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டியது மாணவர்களின் கடமையாகும்.

கோடை விடுமுறையின்போது தேர்ச்சி பெற்ற சில மாணவர்கள் மட்டும் பல ஊர்களுக்குப் பிரசாரத்திற்காக அனுப்பப்படுவர். ஆனால் இவர்களே எல்லாக் கிராமங்களிலும் சென்று பிரசாரம் செய்து விட முடியாதாகையால், இதர திராவிட மாணவர்கள் அவரவர் ஊர்களைச் சுற்றிலுமுள்ள கிராமங்களுக்குச் சென்று நம் இயக்கத்தின் லட்சியங்களையும், சமுதாயத்தில் நமக்குள்ள சீர்கேடான நிலையையும் விளக்கிக் கூற வேண்டியது அவசியம் எனக் கருதுகிறோம். அத்துடன் இயக்கப் பத்திரிகைகளையும், வெளியீடு களையும் ஒவ்வொரு கிராமத்திலும் பரப்ப வேண்டியது இன்றியமையாத வேலையாகும்.

இறுதிக் கட்டத்தையடைந்திருக்கும் ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, இனி எக்காலத்திற்குமே நம்மை நசுக்கக்கூடிய மற்றொரு ஆபத்தான அடிமைத்தனத்தில் சிக்கிக் கொள்வதும், நம் நேஷனுக்கு உரிய பரம்பரைப் பெருமையையும் சுயேச்சையையும் இழப்பதுமே நம் கதியானால், மாணவர்களாகிய உங்களுடைய கல்வியும், பட்டங்களும் என்ன பலனைத் தரப் போகின்றன?

இது 10ஆம் தேதி நடைபெற்ற லாகூர் இஸ்லாமியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவின்போது இடைக்கால சுகாதார இலாகா மந்திரியான தோழர் கஜ்னாபர் அலிகான் கூறியிருப்பது.

இவ்வார்த்தைகளை திராவிட மாணவர்களும் தங்களுக்குப் பொருத்தமாக அமைத்துக் கொள்ளலாம். இதே கேள்வியை நம் மாணவர்களும் தம்மைத்தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

நம் இனம் எல்லாத் துறைகளிலும் பின்னணியில் கிடக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்கின்றோம்; நாள்தோறும் அனுபவிக்கின்றோம்; சங்கடப்படுகின்றோம். பணச் செருக்கினாலும், அறிவு விளக்கமில்லாத காரணத்தினாலும், சுய நலத்தினாலும், நம்மவர்களில் ஒரு சிலர் இந்த இழி நிலையை உணராமலிருக்கலாம். அவர்கள் கிடக்கட்டும்; நாளடைவில் உணர்வார்கள்; உணருமாறு செய்வோம்.

பின்னணியிலுள்ள நம் இனம் முன்னேறாவிட்டால் அதன் விளைவுகளுக்குத் தலை கொடுக்க வேண்டியவர்கள் யார்? வயது சென்ற வைதீகர்களல்லர். ஏட்டிக்குப் போட்டி பேசி பொழுது போக்கும் சுகவாசிகளல்லர். பிற்காலக் குடிமக்களான, இப்போதைய மாணவர்களே யாவர். நம் எதிர்ப்பு சக்திகளோ பலம் பொருந்தியவை. பழைமை, வழக்கம், கடவுள், சாஸ்திரம், ஜாதி ஆசாரம், புண்ணியம், ஆகிய உயர்ந்த மதில் சுவர்களைத் தற்காப்புக் கோட்டைகளாகக் கொண்டவை. நம் இழிவை நீக்கிக் கொள்ளும் முயற்சியில் இக்கோட்டைகளைத் தாண்டியோ, தகர்த்தெறிந்தோ செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த வேலைக்கு ஏற்ற கல்வி, அறிவு, துணிவு, சுயநலமின்மை, மாசற்ற மனம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவர்கள்தாம், மாணவர்கள். எனவே, இப்போது கிடைக்கும் கோடை விடுமுறையை வீணாக் காமல் திராவிட மாணவர்கள் கிராமந்தோறும் அணி அணியாகச் சென்று, நம் கழகக் கொள்கைகளை அமைதியான முறையில் விளக்கிக்கூறி, ஒவ்வொரு பெரிய கிராமத்திலும், ஒரு கழகத்தை நிறுவுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.

மாணவர்கள் படித்துத் தெரிந்து கொண்ட சரித்திரம், விஞ்ஞானம், பொருள் நூல், தத்துவம் ஆகிய எல்லாம் தங்கள் பிறப்புரிமையைப் பெறுவதற்குக் கூட துணை செய்யாவிடில், அவைகளைக் சுற்றதனால் ஆய பயன் என்ன?

நம் கழகத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். நூற்றுக்கணக்கான புதிய கிளைச் சங்கங்களை அமைக்க வேண்டும். திக்கெட்டும் நமது சீரிய கொள்கைகள் தூவப்பட வேண்டும். பல்வேறு இயக்கங்களில் சிதறிக் கிடக்கும் திராவிட சக்தியை ஒன்று திரட்ட வேண்டும். ஹிந்து மதம் என்ற ஆரிய இருட்டறைக்குள் தடுமாறிக் கொண்டு கிடக்கும் பாமர மக்களை, ஜாதி - மத, உணர்வற்ற வெறும் மனிதனான திராவிடன் என்ற சூரிய வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். இக்காரியங்களைச் செய்வதில் திராவிட மாணவர்கள் தாம் சோர்வோ, அலட்சியமோ, மன வெறுப்போ இல்லாமல் தொண்டாற்ற முடியும். இவைகளைச் செய்வது, தம் தம் குடும்பத்திற்காகவே என்ற உண்மையை உணர வேண்டும்.

நம் முன்பு உள்ள வேலைகளையோ, எழுத்தால், பேச்சால், அளவிட்டுக் கூற முடியாது. நமக்குள்ள பிரசார இயந்திரமோ, மிக மிகச் சிறிது. நமது பொறுப்பும் லட்சியமுமோ மிகப் பெரிது. ஆதலால் திராவிட மாணவர்கள் இந்த 2-3 மாதங்களுக்குச் செய்யும் சிறு சேவைகூட நல்ல பலனைத் தரும் என்பதில் நமக்கு நம்பிக்கையுண்டு.



--------------------------- தந்தை பெரியார் - "விடுதலை" 15.4.1947

Wednesday, June 01, 2011

நாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை.


நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றெதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப் பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும். அதே நிலைமை இன்றும் இருக்குமானால் நாம் கண்டிப்பாகப் பதவிகளை வெறுத்தே ஆக வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம். (விடுதலை 23.8.1940)

பதவியில் இருப்பது என்பது, எப்போதும் பதவியில் இல்லாமல் இருப்பவர்களைவிட இருப்பவர்களுக்குச் சற்றுப் பலம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பதவியில் இல்லாதவர்கள் கட்டுப்பாடற்றவர்களாய், கோழை களாய், தனிப்பட்ட சுயநலக்காரர்களாய் இருப்பார்களானால் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் அதிகப் பலம் என்று சொல்ல வேண்டும். ஆதலால் நம் எதிரிகள் பதவியில் இருக்கும் போது நாம் கட்டுப்பாடும் மான உணர்ச்சியும் கொண்டு வீரர்களாக, தன்னலமற்றவர்களாக இருப்போமானால் எதிரிகளை வீழ்த்துவது வெகு எளிதான காரியமாகும். (விடுதலை 19.1.1946)

நாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை. வேறு கட்சி முளைக்கவும் இடம் இல்லை. பல கட்சிகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் அவை எல்லாம் ஒரே கொள்கையும் ஒரே நோக்கமும் கொண்டவைகளாகவே மக்களை ஏய்க்கப் பல பெயர்களால் இருந்து வருகின்றன. அதாவது பொறுக்கித் தின்று வயிறு வளர்க்க வேண்டும்; பதவி வேட்டையாடிப் பெரு வாழ்வு வாழ வேண்டும் - இவை இரண்டும்தான் கொள்கையும் நோக்கமுமாக இருந்து வருகின்றன. அரசியல் சடடத்தையோ ஆட்சி முறையையோ தவறு என்று சொல்ல அரசியலின் பேரால் கட்சியே இல்லாமல் போய்விட்டது. இது மாத்திர மல்லாமல் நடப்புத் திட்டத்தைக் குறை கூறக்கூட நம் நாட்டில் கட்சிகள் கிடையாது. இதனால் அரசாங்கம் எதேச் சாதிகார அரசாங்கமாக இருக்க நேரிட்டுவிட்டது. (விடுதலை 15.9.1957)

முன்பெல்லாம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்களைக் கொல்லத் தேவர்கள், பார்ப்பனர் களுக்கு ஆபத்து என்றால் உடனே மோகினியை விடுவார்கள். அதே மோகினிகள்தான் எம்.எல்.ஏ., எம்.பி. பதவியும் பர்மிட் வழங்கும் அதிகாரமும்; வேறொன்றுமே இல்லை. (விடுதலை 4.10.1958)

யார் ஒருவன் நல்லவன் ஒழுக்கசீலன் யோக்கியன் என்று போற்றப்படுகிறானோ, அவனை அயோக்கியனாக்க வேண்டுமென்றால் அவனைச் சட்டசபைக்கு அல்லது லோக்சபைக்கு அனுப்பினால் போதும். அவன் எப்பேர்ப்பட்ட அறிவாளியாகவோ புத்திசாலியாகவோ யோக்கியனாகவோ இருந்தாலும் தேர்தலில் பிரவேசித்தவுடனேயே அவன் அயோக்கியத்தனங்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. தேர்தல் ஆசை வந்து விட்டால் அன்று முதல் அவன் பித்தலாட்டத்தைக் கற்றுக் கொள்கிறான். போக்கிரித்தனம், மகாபித்தலாட்டம் இவைகளைக் கற்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் நம் நாட்டு அரசாங்க முறை அப்படி அமைந்து விட்டது. (விடுதலை, 25.12.1955)

அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்பு பெற்ற பிள்ளைகளே தவிரத் தனித்தனி விசயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ, எப்படி உடைத்தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும் பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். (குடிஅரசு 29.12.1935)

இந்தியாவின் அரசியல் கொள்கை சரியானபடி வளராதிருப்பதற்கு மூலக் காரணம் சமுதாயத்திலிருந்து வரும் கோளாறு என்றே கூறுவோம். சமுதாயத்திலிருந்து வரும் தாரதன்மை, வித்தியாசம் ஒழியாதவரை இந்நாட்டில் எத்தகைய அரசியல் கொள்கையும் நிலைத்திருக்க முடியாது. (குடிஅரசு 8.8.1937)