Tuesday, August 12, 2008

'காலக் கெரகமும்' சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தும்

தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கலைத் தாகத்தைத் தீர்த்து வைக்கும் முகமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'குசேலன்' தமிழ்த் திரைப்படம் தமிழகம், புதுவை, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பிரச்சனைகள் ஏதுமின்றி வெளியாகி விட்டது.

கர்நாடகத்தில்,

'அன்பும் பாசமும் மிக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் அவர்களுக்கு, வணக்கம்! ஒகனேக்கல் பிரச்சனையின் போது, தமிழகத்தில் திரைப்பட நடிகர் - நடிகையர் உண்ணாவிரதம் இருந்தனர். அந்தக் கூட்டத்தில் நான் பேசியது, கன்னட மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

யாரையும் புண்படுத்துவது எனக்குப் பிடிக்காது. அதுதான் என் வாழ்க்கையின் குறிக்கோளும் கூட. ஒரு கலைஞன் நாடு, மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்டவன். எல்லோருக்கும் பொதுவானவன். நான் நடித்துள்ள திரைப்படங்களை கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல்,
கன்னடியர்களும் பிற மொழியினரும் பார்க்கிறார்கள்.

எனவே, யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் 'குசேலன்' படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட கன்னட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க அன்புடன்,
ரஜினிகாந்த்.'

என்று, கிட்டத்தட்ட அவர் மன்னிப்புக் கேட்டு / வருத்தப்பட்டு எழுதிய 'சாதுர்ய பல்டி'க் கடிதத்தின் அடிப்படையில் தான், அங்கே திரையைத் தொட முடிந்திருக்கிறது. திரைப்படத்தில் கதாநாயகியைக் காப்பாற்ற அவர் அடிக்கும் அந்தர் பல்டிகளையும் தாண்டி, இப்போது சாத்வீகமாக அடித்திருக்கும் இந்தக் கடித பல்டியின் அவசியமென்ன எனும் கேள்விக்கான பதில், எல்லோருக்குமே தெரிந்தது தான்!

இதன் மூலம், சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்தின் உண்மை முகம் வெளிப்பட்டு இருக்கிறது! ஒரு சூப்பர் ஸ்டார், படங்களுக்கு வெளியேயும் நடித்து வந்திருக்கிறார் என்பதை அவராகவே தெளிவுபடுத்தியிருக்கிறார்! மேலே சொன்ன மாநிலங்களைத் தவிர, அமொ¢க்காவிலும், ஜப்பானிலுமாக ஆக மொத்தம் உலகம் முழுவதும் 900 திரையரங்குகளில் நட்பைப் போற்றும் அப்படம், காட்சிகளாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது.

படம் வெளியாகும் முன்பே, அப்படம் வெற்றியடைய மதுரை ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட பக்தி மயம். அடுத்த படமான ரோபோவுக்கு பறவைக்காவடி எடுப்போம் என்று இப்போதே கங்கணம் கட்டிக் கொண்ட நேர்த்திக் கடன். திரையரங்குகளின் கட்டிட உயரத்துக்கும் மேலாக, ஒட்டுகள் போட்டு உயர்த்தப்பட்ட ரஜினிகாந்தின் முழு உருவப்படங்கள் வைத்தது போன்ற பில்ட் - அப்புகள். நாளிதழ்களிலும்., ஒரு சில உள்ளூர் சேனல்களிலும் தினம் தினம் இதே செய்தி தான். படத்திற்கான முன்னோட்ட விளம்பரங்கள் தான், இவை!

இங்கே மட்டுமல்ல, அமொ¢க்காவிலும் நடந்தது இந்தக் கூத்து. ஜப்பானில் நடந்தது பற்றியத் தகவல்களைத் திரட்ட முடியவில்லை!

வறுமைக்கும் தா¢த்திரத்திற்கும் அடையாளமாக்கப்பட்டு, வர்க்க ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையில் நட்பாக ஆச்சரியப்படுத்தப்பட்டு புராணக் கதையில் உலவி வரும் பொருளாதார வக்கற்ற சுதாமா என்ற 'குசேலன்' பெயா¢ல், பெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கிறது, இப்படம். சுதாமாவுக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆனால் தன்னைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய ஏழை நிறுவனமான கவிதாலயா, தனது ஏழை நண்பர்களில் ஒருவரான விஜயகுமார் ஆகிய குசேலர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கிருஷ்ணா¢ன் வடிவமாக அவதானித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகவே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்!

"கதைப்படி, அவர் பத்து நிமிடங்கள் தான் படத்தில் வருவதாக முதலில் இருந்தது. இது, சூப்பர் ஸ்டார் படமல்லவா? ரஜினிகாந்த்தின் குறைநேரப் பிரவேசத்தை எப்படி ரசிகர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியும்? அவரவர் வீட்டில் அடுத்த நேரத்திற்கு அடுப்பு எரியாதே! தமிழ்நாடே பட்டினிக் கிடந்து... சோமாலியா போல் தமிழ்நாட்டு மக்கள் எலும்பும் தோலுமாக ஆகிவிட்டால்... நயன்தாரா போன்ற கொழு கொழு நடிகைகளுடன் சூப்பர் ஸ்டார் ஆடிப் பாடி நம்மை மகிழ்விக்கும் காட்சிகள் பயனில்லாமல் போய் விடுமே? அப்படியாகி விடலாமா? அதன் பின்பு நாமெல்லாம் தமிழர்களா? என்ற கேள்வி எழுந்து, ஐ.நா. சபையில் விவாதிக்கத் தொடங்கி விடுவார்களே எனும் ஐயப்பாட்டில் தான், பத்து நிமிடங்களை அறுபது நிமிட நேரமாக அதிகா¢த்து, தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சில் மட்டுமன்றி உலகத் தமிழர்களின் நெஞ்சில் பால் வார்த்துள்ளேன். குறிப்பாக, கன்னட தமிழ் ரசிகர்களின் நெஞ்சையும் குறிவைத்தே பால் வார்த்துள்ளேன்'' என்று அப்படத்தின் இயக்குநர் அம்மா - தாலி சென்டிமென்ட் புகழ் பி. வாசு சொல்லி, நம்மையெல்லாம் ஆசுவாசப் படுத்தியிருக்கிறார்.

இல்லையென்றால்... இந்நேரம் தசாவதாரம் படத்தின் கடைசிக் காட்சியில் ஏற்படும் பிரளயம் போல் ஏதாவது ஏற்பட்டு, தமிழர்களெல்லாம் அழிந்து போய்விட்டிருப்பார்கள். நல்லவேளை... அவரது நாசூக்கான விளம்பரப் பேட்டி, நம்மையெல்லாம் காத்துவிட்டிருக்கிறது.

அப்பப்பா... குசேலனுக்குத் தான் எத்தனையெத்தனை விளம்பரங்கள்? கோயமுத்தூர் ஏர்டெல்லிலிருந்து அம்பானி மைந்தர்களின் பிக் மியூஸிக் வரை. அத்தனையும் விளம்பரங்கள் தான்! அது சரி...விளம்பரங்கள் தானே ஒரு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. அது, சூப்பர் ஸ்டார் படமாகவே இருந்தாலும்! விளம்பரங்களால் மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்திவிட முடியுமா?

அதற்கு பதில் இங்கே இருக்கிறது!

"தொழில் நுட்பத்திலேயும், நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறியிருக்கு. ஆனா... 'சப்ஜெக்ட்' தான் 'அட்வான்ஸ்' ஆகல்லே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி, படத்தை ஓட்டப் பாக்கறாங்க. என்னங்க வெட்கக் கேடு இது? இதுவா முன்னேற்றம்?"

நாடக மேடையையும் நடிப்புக் கலையையும் சமூக சீர்திருத்தங்களுக்கும், நாத்திகப் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தி வெற்றி கண்டவர், பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதா. 1964-ம் ஆண்டில் ஆனந்த விகடனுக்கு அளித்த ரகளைப் பேட்டியில், "தமிழ்ச் சினிமா இந்த முப்பது வருஷத்திலே முன்னேறி இருக்கா?" என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, அவர் சொன்ன பதிலின் ஒருபகுதிதான், இது!

ஆம்... 1964-ம் ஆண்டின் நிலைமையிலிருந்து (அதற்கு முன் என்ன வாழ்ந்தது என்று கேள்வியும் எழுப்பலாம்) 2008-ம் ஆண்டு வரையிலும் கூட தமிழ்ச் சினிமா மாறவில்லையென்பது, காலத்தின் கொடுமையும் ரசிகர்களின் மாறாத மனோபாவமுமே ஆகும். அதுவே திரையுலகின் வெற்றியாகவும் இருந்து வருகிறது!

நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இருபெரும் திலக துருவங்களுக்குப் பின், தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த் என்ற சிவாஜிராவ் கெய்க்வாட் நடித்து வருகிறார். பிற நடிகர்களுக்கு வழங்கப்பட்டது போலவே அவருக்கும் ஒரு பட்டம் அளிக்கப்பட்டது. அதுதான் சூப்பர் ஸ்டார் எனும் பட்டம். அந்த சூப்பர் ஸ்டார் பட்டம், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ரஜினிகாந்த் என்ற பெயருக்கு மாற்றாக திரையுலகின் உள்ளேயும் வெளியேயும் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு நான்கு படங்கள் வரை, தனது ஸ்டைலைப் போலவே வேகவேகமாகக் கொடுத்து வந்த சூப்பர் ஸ்டார், பாட்ஷா படத்தின் வெற்றிக்குப் பின், நிலை நிறுத்திக் கொள்ளும் வாழ்வியலின் தத்துவத்திற்கேற்ப நிதானத்திற்கு வந்தவராக இருக்கிறார். அவரது படம் வெளியாகும் தினம், மற்றெல்லா நாட்களைப் போல இல்லாமல், அது ஓர் உன்னத தினமாக அவரது ரசிகர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்களுக்கு அந்த தினம் தான் தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம், ஏன் கதிமோட்சமும் கூட!

சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் நடித்தத் திரைப்படம் வெளிவராத தீபாவளியை, ரசிகர்கள் துக்க தீபாவளியாக அனுஷ்டித்தக் 'காலக் கெரகமும்' நடக்கவே செய்தது. ஆண்டாண்டு காலமாய்த் திரைப்படங்களை குதிரை ரேஸைப் போலவும், மஞ்சுவிரட்டு போலவும் ஆர்வமுடன் ஓடவிட்டு கலெக்ஷனைக் 'கல்லா'க்கட்டி வந்த போட்டியிலிருந்து, அவரது படங்கள் தற்போது சுயமாகவே விலகிக் கொண்டுள்ளன. கால இடைவெளி அல்லது நீண்ட நாள் தயாரிப்புக்கு இலக்காகி, தனித்த ஓட்டங்களுக்கு அவை தயார்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பிற ரசிகர்களின் பார்வையிலும் அந்தத் திரைப்படங்கள் கவனம் பெற்று வசூலில் பின்னியெடுக்கின்றன. இது, ஒருவித யுக்திதான்!

அந்த நிலையிலும், சூப்பர் ஸ்டாரின் பாபாவும் சிவாஜியும் வசூலை அள்ளிக் குவிக்கவில்லை என்பதன் காரணம், நடிகவேள் எம்.ஆர். ராதாவின் பதிலிலேயே இருக்கிறது! ஆனாலும், பொதுமையிலிருந்து விலகி, அவரது படங்கள் வெளியாகும் நாட்கள், தனித்த பூகம்ப நாட்களாக மாறிவருவதை பூடகமாகவே கருத வேண்டியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் திரைப் பா¢மாணத்தின் மூலமான பொதுமையை, கி.பி., கி.மு., போல, பாட்ஷா படத்துக்கு முன்பு, பாட்ஷா படத்துக்கு பின்பு என்றே கணக்கிட முடிகிறது. அதற்கு முன்பான அவரது படங்களில், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும் போன்ற படங்களில் தான், அவர் அப்படங்களின் இயக்குநர்களின் உதவியால் நடிப்பு வேலையை திறம்படச் செய்திருந்தார். அதனால் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருதும் வாய்ப்பு உள்ளது. பிற படங்களில் அவர், 'யாரடி நீ மோகினி?' படப்பாடலுக்கு உத்தமபுத்திரனாக விரைத்துக் கொண்டு நடித்த சிவாஜி கணேசனின் பாணியைத்தான், சற்றே மாற்றி வேகநடையில் செய்து வந்திருக்கிறார். இதனாலேயும் கூட அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டிருக்கும் சாத்தியங்களும் உண்டு. எப்படியாயினும் தமிழ்த் திரையுலகின் அழிக்க முடியாத சாகச சாதனைப் பட்டியலில், அவரது பெயர் சூப்பர் ஸ்டாராகவே பிளாட்டின எழுத்துக்களால் பொதியப்பட்டுவிட்டது.

தமிழ்த் திரையுலகின் மன்னாதி மன்னனாக - எம்.ஜி.ஆர். இல்லை - சூப்பர் ஸ்டார் மாறிவிட்ட பின்பு, அவரது வாய்ஸ்க்கு மதிப்பு இருப்பதாக நம்பப்பட்டு வருவது, தமிழ்நாட்டின் கேடுகளில் மிக முக்கியமானக் கேடாகும். 1996 மற்றும் அதற்குப் பின்பானத் தேர்தல்களில் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் காரணியாக அவர் வரையறுக்கப்பட்டு வருவது, வேறூன்றி கிளைபரப்பிய அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் கட்சியின் மீதும் தங்களின் மீதுமன்றி, மக்களின் மீதும் நம்பிக்கையின்மையைத் தான் வெளிப்படுத்துகிறது. புள்ளி விவரக் கணக்கில் சாதுர்யம் மிகுந்த தலைவர் கூட வாய்ஸ்க்காக ஏங்குவது கேலிக்கூத்துதான்!

அப்போதும் கூட, கூட்டணிக் கட்சிகளின் வாக்கு சதவீதங்கள் தான் முத்திரைகளாகப் பதியப்பட்டன என்பது தெரிந்திருந்தும், வாய்ஸ் தேடி ஓடும் கொடுமை அரசியல் கட்சிகளிடம் இன்னும் இருக்கவே செய்கிறது.

காவிரிப் பிரச்சனைக்கு, ஒட்டு மொத்தமாக நெய்வேலியில் திரண்ட நடிகர்களுக்கு எதிர்ப்பாக, மறுநாள் சென்னையில் மேடைபோட்டு தனித்து உட்கார்ந்து, பட்டினி வேஷம் கட்டி, தன்னைத் தமிழகத்தின் விடிவெள்ளியாக பிரகடனப்படுத்திக் கொண்டது; நதி நீர்ப் பிரச்சனையைத் தீர்க்க, தனது சொந்தப் பணத்தில் ஒருகோடி தருவதாக அறிவித்தது; அதை இதுவரைக்கும் தராமல், 'அஸ்க்கு... புஸ்க்கு' காட்டுவது; புலி வருது புலியாக பன்னெடுங் காலமாக அரசியலில் குதித்து, மக்களின் நல்வாழ்வைக் கெடுப்பேன் என்று தவணை முறையில் பயமுறுத்துவது; அதைச் சொல்லிச் சொல்லியே தனது ரசிகர்களை உசுப்பேற்றிவைத்திருப்பது தான், அவரது சூப்பர் ஸ்டார்த்தனம்!

அவரது வாய்ஸ்க்கு, மக்கள் செவி சாய்க்கிறார்களா எனும் கேள்வி தான் அவரை இத்தனைக் காலமும் யோசிக்க வைத்து, அவ்வப்போது மலையேறச் செய்து வருகிறது. அந்த மலையேறலை நிதர்சனப்படுத்த அவர் எடுத்த பாபா, கல்லா கட்டும் அருள் தராமல் மலையிறங்கிப் போய்விட்ட சம்பவம், தான் கடந்து வந்த பெரும்பான்மை வழியைத் தேடி சூப்பர் ஸ்டாரை மறுபடியும் ஓட வைத்தது.

என்ற போதும், அவர் தான் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார். அதன் பின்பு வெளியான படையப்பாக்களும் சந்திரமுகிக்களும் சிவாஜிக்களும் அதன் வெளிப்பாடுதான்! அகத்தியனின் 20 + வயதுடைய மகள் விஜயலட்சுமியுடன் ஜோடி கட்டப் போகும் 60 வயதைத் தொட்டு விட்ட, நாட்டில் அதிகமாகச் சம்பளம் பெறும் மூத்த நடிகர் அவர். குசேலனுக்கு முன்பாக நடித்த சிவாஜி படத்துக்கு, அவர் வாங்கிய சம்பளம் கொஞ்சம் தான். சுமார் ரூபாய் 15 கோடியாம்!

இதுதான் தமிழனின்... தமிழ்நாட்டின்... வக்கு!

கஞ்சி குடிக்காமல், உழைத்தக் களைப்பைப் போக்க டாஸ்மாக் போகாமல், தமிழக மக்கள் டிக்கெட் வாங்கிப் படம் பார்த்ததில் தானே அவருக்கு இவ்வளவு சம்பளம் தயாரிப்பாளர்களால் கொடுக்க முடிகிறது? அதை அவர் நன்றியுடன் வைரமுத்துவின் வா¢களால் எப்படிப் பாடுகிறார் தெரியுமா? "வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா... ஆயிரம் தடைக்கல்லும் படிக்கல்லப்பா...!"

அப்படி அவர் படிக்கல்லில் ஏறச் சிந்தும் ஒவ்வொரு வேர்வைத் துளியும் தமிழக மக்களின் இளிச்சவாய்த்தனத்தாலே தங்கக்காசு ஆனதை, அவர் மறைக்கவே இல்லை. அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன்(?) பட்டுள்ளதாக கூறிக் கொள்ளும் அவர், ஒகனேக்கல் பிரச்சனையில், பேசியப் பேச்சை நினைவுபடுத்திக் கொள்ள, திரைப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சி போல, நாம் சற்று சுற்றிச் சுற்றிச் சுற்றி... பின்னுக்குப் போக வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பாக, கர்நாடகத்தில் இயங்கிவரும் அத்தனை சாதிய அமைப்புகளும் அங்குள்ள மாநில மற்றும் தேசிய கட்சிகளும் ஒட்டு மொத்தமாய்க் குரல் கொடுத்தன. அதைக் கண்டித்து சென்னையில் தமிழ்த் திரைப்படத் துறையினர் உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் தமிழ் மண்ணில் முத்தெடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'கர்நாடக - தமிழக மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால் சிலர் இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் தூண்டி விடுகின்றனர். குடிக்கிறத் தண்ணியிலே பிரச்சனைக் கிளப்புறவங்களை உதைக்க வேண்டாமா?' என்று ஆவேசமாகப் பேசினார்.

இந்தப் பேச்சைக் கேட்டு, தமிழ் மக்கள் புளகாங்கிதப்பட்டு, "சூப்பர் ஸ்டாரு... சூப்பர் ஸ்டாரு தான்..." என்று பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாமல் பாடியதென்னவோ உண்மை தான்! 'கர்நாடகத்து ஆளா இருந்தாலும், பொழைக்க வந்த மண்ணுக்கு ஏத்துக்கிட்டுப் பேசறாரே!' என்று அகமகிழ்ந்து போனதும் உண்மை தான்! அதே வேளையில், 'அங்கே உக்காந்துக்கிட்டு டமாரம் வாசிக்கிறியா!... வாடி, ஒம்படம் இங்கே வரணும்ல்ல?' என்று அப்போதே கர்நாடக அமைப்புகள் அறைகூவல் விட்டன. கர்நாடக அமைப்புகளுக்கு, அறைகூவலை செயல்படுத்துவதற்கான நேரம், இது!

மோசமான நடவடிக்கைளில் ஈடுபடும் அவை, குசேலனை திரையிட விடாமல் ரகளை செய்யவும் தயாராகவே இருந்தன. இந்நிலையில் தான், சூப்பர் ஸ்டார் கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபைக்கு மேலே சொன்ன கடிதத்தை எழுதியிருக்கிறார்.

கடிதம் எழுதுவதற்கு அப்படியென்ன அவசியம் வந்துவிட்டது? தமிழக மக்களுக்கு ஆதரவாகப் பேசிவிட்டால், அதன் பின்னால் கர்நாடகத்தில் தன் படங்களை ஓட்ட முடியாது என்று தெரியாத அப்பாவி விரல் சூப்பியா நம் சூப்பர் ஸ்டார்?. எல்லாம் அவருக்குத் தெரியும். இருந்தும், ஏன் பேசினார்? கர்நாடக மக்கள் மறந்து விடுவார்கள் என்றா? இல்லை, படம் முடியும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றா?

இல்லவே இல்லை... எல்லாமே தொழில் தந்திரம்!

அந்தத் தந்திரம் தான், கடிதம் கொடுத்துப் படத்தை ஓட்டுங்கள் என்று சொல்ல வைக்கிறது. 'பாடம் கற்றுக்கொண்டேன்' என்று தன் பொய் முகத்துக்கு ஒப்பனை போட்டுக் கொள்கிறது. பாடம் கற்றுக்கொண்டேன் என்றால் யாரிடமிருந்து? சோறு போடும் தமிழ் ரசிகனிடமும் தமிழ் நாட்டிலிருந்துமா? இல்லை, தொழில் முடங்கிப்போய்விடும் பயத்தை உருவாக்கிய கன்னட வெறியர்களிடமிருந்தா?

சொல்லுங்கள்... சூப்பர் 'பல்டி' ஸ்டார்... மன்னிக்கவும்... சூப்பர் ஸ்டார் அவர்களே!

இங்கே தமிழர்களுக்கு ஆதரவாக உணர்ச்சிப் பொங்க பேசிவிட்டு, இப்போது அடித்திருக்கும் பல்டி, தமிழ்நாட்டிலுள்ள அத்தனை பேரும் 'கேனைக் கிறுக்கன்' என்று அவர் நினைத்திருப்பதால் தானே! வாழும் இடத்தில் காலூன்றிக் கொள்ள அவர் அப்போது பேசியதும், தான் பிறந்த மண்ணில் தனது படம் ஓட அவர் மன்னிப்புக் கேட்பதும் நிச்சயம் பெருந்தன்மையினால் அல்ல என்பது, இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. அவரது நிஜ முகம் வெளிப்பட்டிருக்கிறது. அவர் போர்த்தியிருந்த பசுந்தோல் பொருந்தாமல், கோர முகம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

கர்நாடகத்தில் அவர் படம் திரையிடப்படவில்லையென்றால்... இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட்டுகளும் பாரதிய ஜனதா கட்சியினரும் காங்கிரஸ¥ம் ஒண்ணும் மண்ணுமாக கைக் கோர்த்துக் கொள்வார்களோ? இல்லை... இலங்கையில் சிங்கள இனவாத அரசு வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் சமரசமாகிப் போய் விடுமோ...? இல்லை... புஷ்தான், பின்லேடனுடன் கை கோர்த்துக் கொண்டு மியாமி பீச்சில் காற்று வாங்கப் போய்விடுவாரோ?

தமிழ் மக்கள் மீது பற்று கொண்ட சூப்பர் ஸ்டார், 'கர்நாடகால என் படத்தைத் திரையிட விடாட்டிப் போங்க!' என்று சொல்லியிருந்தால்...'சபாஷ், சூப்பர் ஸ்டார்!' என்று விசில் அடித்திருக்கலாம். ஆனால் மண் பாசத்தில், அவர் பல்டியல்லவா அடித்திருக்கிறார்? பிரச்சனைக்கு முன்பே விநியோகஸ்தர் நியமிக்கப்பட்டு விட்டிருந்தால், நஷ்ட ஈடு கொடுத்து சரிக் கட்டியிருக்கலாமே! திரையிட்ட தோல்விப் படங்களுக்கு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தவர் தானே...இந்த சூப்பர் ஸ்டார்!

அவரது பல்டியை அதே திரையுலகில் இருக்கும் சத்யராஜ், 'எனது படத்துக்கு இந்த நெருக்கடி வந்திருந்தால்... விநியோகஸ்தருக்கு நஷ்டஈடு தந்திருப்பேன். ஆனால் ஒகனேக்கல் விஷயத்தில் உடும்புப் பிடியாக இருப்பேன்!' என்றதற்கு, அவர் பச்சைத் தமிழன் என்பதும் ஒரு காரணமாகும்! ஆனால் இவர் வியர்வை சிந்தி, அதைத் தங்கக் காசுகளாக மாற்றிக் கொள்ள வந்தவர் தானே?

இதைத் தவிர, இந்த சந்தடியில் வேறு பல கூத்துகளும் தமிழ்கூறும் நல்லுலகில் நிகழ்ந்து தொலைக்கின்றன. தமிழுக்கும் சுயமா¢யாதைக்கும் நேற்று சாயங்காலம் வரைக்கும் முட்டுக் கொடுத்து வந்த இயக்குநர் சீமான் போன்றவர்கள், 'இது தொழில். அதை மனசுல வைச்சு நிதானமா யோசிச்சுப் பாக்கணும்!' என்று புதுசாக ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது அவர்களையே கேலி செய்து கொள்வது போலத் தான் இருக்கிறது. பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்? சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்து ஒரு படம் செய்யக் காத்துக் கிடப்பவர்கள் தானே!

கவலைப்படாதீர்கள் சூப்பர் ஸ்டார் அவர்களே... சொரணை கெட்ட தமிழர்கள் தான் நாங்கள். இந்த விளம்பரச் சந்தடியில் குசேலன் வெற்றிப் படமாகியிருக்கும். உங்களது அடுத்தப் படம், ரோபோவாக இருந்தாலும் சரி கீபோவாக இருந்தாலும் சரி... நீங்கள் தங்கக்காசுகளை அள்ளிக் கொள்ள, அதையும் வெற்றிப் படமாக்கித்தர நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

"ஒண்ணு சொல்றேன் கேளுங்க... நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாத்தான் தமிழ்ப் பட உலகம் உருப்படும். அப்போ தான் முதலாளிங்க புது ஆசாமிகளாப் போட்டு நல்ல கதைங்களா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள் தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?" பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதா, 1964-ம் ஆண்டில் ஆனந்த விகடனுக்கு அளித்த அதே ரகளைப் பேட்டியில் அதே கேள்விக்குச் சொன்ன பதிலின் பிற்பகுதி தான், இது!

இன்றைக்கு மட்டுமல்ல... அடுத்த தலைமுறைக்கும் பொருந்தும் பதிலாகவே அது, இருக்கிறது!

ரஜினிகாந்த் என்ன பாடம் கற்றுக் கொண்டார் என்பது தெரியவில்லை. அவரும் அதைச் சொல்லவில்லை. ஆனால் தமிழர்களாகிற நாம், தொடர்ந்து பாடம் கற்றுக் கொண்டே வருகிறோம். ஏனென்றால், அந்த அளவுக்கு மக்குகள் நாம்!

நன்றி: கீற்று டாட் காம்

2 comments:

Thekkikattan|தெகா said...

நல்லா இருக்கீகளா? ரொம்ப நாளாச்சே...

இம்பூட்டுப் பெரிய பதிவா படிக்கிறேஏஏன்.. :)

Anonymous said...

hiyo.. hiyo.. Thamaasu.. Thamasu.. 'Rajini' nnu peru potta thaan padiappanga appideenu.. en ippidi ularugireergal...

Unalga mathiri ethana peru pazhithallum.. thalaivarari onnum seiya mudiyathu...